ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் – 5
அடுத்து வந்த ஒரு வாரமும் மாறனுக்கு அவனின் வேலையே சரியாக இருக்க.. இன்றுதான் ஞாயிற்றுக்கிழமை ஆதலால்.. சோபனாவும்.. மாறனும் வீட்டை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர். சுமதிக்கு மெலிந்த உடல்வாகு. எனவே எப்பொழுதுமே கனமான வேலைகளை செய்ய விடமாட்டார் இராமன்.. குழந்தைகள் பள்ளி செல்லும் காலங்களில் கூட… எதாவது பண்டிகை நாளென்றால்.. இராமன்தான் வீட்டை சுத்தம் செய்வார். பிறகு வந்த நாட்களில் நிவேதா வீட்டு வேலைகளை கவனித்து கொள்ள.. இராமன் நிம்மதியானார்.
நிவேதாவின் திருமணத்திற்க்கு பிறகு.. சோபனாவின் துணியையும்.. அவளின் அம்மாவின் துணிகளையும் சோபனா துவைத்திருக்க.. மாறனின் துணியையும்.. அவனின் அப்பாவின் துணிகளையும் மாறன் துவைத்துக்கொண்டிருந்தான். ஒரு வாரத்திற்க்கான துணிகளை துவைக்காமல் இருக்கவும் நிறைய சேர்ந்திருந்தது.
‘சோபி.. அந்த அரிசியை கிரைண்டர்ல போடு..” என சொல்லிக்கொண்டே துணிகளை துவைத்துக்கொண்டிருந்தான்.
‘நான் போட மாட்டேன்..” என பிடிவாதமாய் சொல்லி.. சோபனா வீட்டை துடைத்துக்கொண்டிருந்தாள்.
‘அரிசி ஆட்டலைன்னா.. வக்கனையா தோசை எங்கயிருந்து வரும்..?” என்று மாறன் அதட்ட..
‘நீ ஆட்டினாலும் தோசை வரும்.. நான் துணிதுவைச்சிட்டு வீடு துடைக்கிறேன்ல..? நீ துணி மட்டும் துவைச்சிட்டு ஹாயா இருப்பியா..? ஒழுங்கா மாவு ஆட்டு.. அப்பதான் நீ ரெண்டு வேலை.. நான் ரெண்டு வேலைன்னு கணக்கு டாலி ஆகும்..” என்று மாறனோடு சண்டைக்கு கிளம்பினாள்.
சிரித்தவன்.. ‘ஏய்.. குட்டிசாத்தான்.. விடு.. நானே ஆட்டிக்கிறேன்.. என்னை திட்டியே களைச்சி போய்டாத..” என்று மாறன்தான் இறங்கி வந்தான்.
‘ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.. யாருகிட்ட..?” என்று கெத்து காட்டிக்கொண்டே தன் வேலையை முடித்து குளிக்கப் போனாள்.
‘வீட்டு வேலை செய்ய வக்கில்லைன்னாலும்.. வாய்க்கொன்னும் குறைச்சலில்ல..” என்று சிரித்துக் கொண்டே துணிதுவைத்தான்.
சுமதி ரசம் வைத்து வெளியே வரவும்.. ராமு மட்டன் எடுத்து வந்திருக்க..
‘இந்த வறுக்கிறது.. பிரியாணி செய்றது எல்லாம் எனக்கு தெரியாது… சோறு வடிச்சிருக்கேன்.. இதை குழம்பு வைப்பேன்.. அவ்ளோதான்..” என்று வெங்காயத்தை எடுத்து உரிக்க ஆரம்பித்தார். நிவேதா இருக்கும்போதே கறிக்குழம்பு மட்டும் சுமதிதான் வைப்பார். அவரின் கைப்பக்குவம் அனைவருக்கும் பிடிக்கும்தான்.. ஆனால் சுமதிக்கு மட்டும் நிவேதா செய்யும் பிரியாணிதான் பிடிக்கும்.. அதை செய்யதெரியாத ஆற்றாமையில்தான் கடுப்பாக வெங்காயத்தை உரித்துக்கொண்டிருந்தார்.
அடுத்து வந்த ஒரு மணிநேத்திற்குள் அனைத்து வேலைகளையும் முடித்திருக்க.. காலை பதினொரு மணிக்கு மாறன் குளித்து வந்து சாப்பிட உக்கார்ந்தான்.
சாப்பிடும் போது நந்தினியின் நினைவு வரவும்.. அவ சைவமா.? அசைவமா.? ஒரு வேளை அசைவம் சாப்பிடறவளா இருந்தா.. எதாவது கறி.. கிரி.. எடுத்து சமைத்திருப்பாளா..? என்ன பண்றான்னு தெரியலையே.. என்று அவ்வளவு பசியிலும்.. அவளின் நினைவோடு சாப்பாட்டை சிறிது சிறிதாய் கொறித்து கொண்டிருக்கவும்..
‘என்ன மாறா..? குழம்பு நல்லாயில்லையா..?” என்று சுமதி பதட்டமாய் மாறனை பார்க்க..
[the_ad id=”6605″]
ராஜியின் நினைவிலிருந்து வெளிவந்தவன்.. ‘ம்ம்… சூப்பரா இருக்கும்மா..” என்று ரசித்து ருசித்து பெரிய உருண்டையாக வாயில் திணிக்க.. அப்பொழுதும் சுருங்கிய முகத்தோடு சுமதி மாறனை பார்க்க..
‘வேலை பாக்குற இடத்தில ஒரு சின்ன டென்சன்மா.. அதை நினைச்சிட்டிருந்தேன்.. என் அம்மா கைப்பக்குவத்தில வச்ச கறிகுழம்பு நல்லா இல்லாம இருந்திடுமா…?” என்று மாறன் சமாதானப் படுத்தவும்தான் சுமதி முகம் தெளிந்தார். அனைவரும் நன்றாக சாப்பிட்டு கொண்டிருக்க.. சுமதி மட்டும் கொஞ்சமாய் சாப்பிட்டு தட்டை எடுத்து வைக்கவும்..
‘ஏன் ம்மா..?” என்றான் மாறன்.
அதற்கு சுமதி பதில் சொல்லும் முன்.. ’மாறா.. உங்கம்மாக்கு இப்ப கொஞ்ச வருசமாவே இந்த குழம்பெல்லாம் பிடிக்கிறதில்ல.. அவளுக்கு நிவேதா செய்யிற பிரியாணி நினைப்பு வந்திடுச்சி..” என்று இராமு சிரித்துக்கொண்டே கூறவும்…
சிரித்தவன்.. ‘சரி.. கடையில வாங்கிட்டு வரட்டுமா..?” என்றான்.
‘ச்சீ.. ச்சீ.. எனக்கு கடையில வேண்டாம்..” என்று அவசரமாய் சுமதி மறுக்க..
‘அப்பா.. நீங்க போய் இன்னும் கொஞ்சம் கறி எடுத்திட்டு வாங்க.. நான் யூ டியூப் பார்த்து பிரியாணி செய்யிறேன்..” என்று சோபனா குறுக்கிட..
‘அம்மா.. தாயே.. வேணாம் சாமி..” என்று மாறன் பயந்தவன் போல் சொல்ல..
மாறனை முறைத்த சோபனா.. ‘வீட்டு வேலை கூடதான் இவ்ளோ நாள் செய்யாம இருந்தேன்.. இப்போ செய்யிறதில்லையா…?” என்று கோபமாய் கேட்க..
‘அது இல்ல சோபி.. என்னைக்குமில்லாம இன்னைக்கு நீ நிறைய வேலை செய்திட்ட இல்ல..? அதான் உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு சொன்னேன்..” என்று சமாளித்தான்.
‘அதெல்லாம் முடியாது.. நான் இன்னைக்கு பிரியாணி செய்தேதான் ஆகனும்.. அப்பா நீங்க போய் மட்டன் எடுத்திட்டு வரப்போறிங்களா..? இல்லையா..?”என கேட்க..
‘மாறா.. காசு போனா பரவாயில்ல.. என் பொண்ணு ஆசைப்பட்டு கேக்கிறா.. எடுத்திட்டு வந்திடறேண்டா..” என மாறனிடம் இராமன் கேட்க..
அதற்கும் மாறன் சிரிக்க.. ‘அப்போ.. நான் நல்லா செய்யமாட்டனா..? காசு போனா பரவாயில்லன்னு சொல்றிங்க.?” என்று தன் அப்பாவிடம் சோபனா எகிற..
‘அதில்லடா.. நீ புதுசா சமைச்சி கத்துக்கப்போற இல்ல..? அதான்.. இப்ப என்ன..? எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டேவா பிறக்கிறாங்க…? நீ கத்துக்கோடா செல்லம்.. நான் போய் வாங்கிட்டு வரேன்…” என்று சோபனாவை சமாதானப்படுத்தி கிளம்பினார்.
தன் அப்பாவோடான சோபனாவின் செல்ல கோபங்களில்.. நந்தினியை நினைத்தவன்.. இந்த மாதிரியான தருணங்கள் அவளுக்கு கிடைக்காமல் எப்படி ஏங்கியிருப்பாள் என மீண்டும் ராஜியின் நினைவே வலம் வந்தது.
வெளியிலிருந்து.. ‘மாறண்ணா…” என்று ராஜன் காட்டில் வேலை செய்யும் குமாரின் குரல் ஒலிக்க..
‘என்ன குமார்..?” என்றபடி வெளியே வந்தான் மாறன்.
‘ஐயா உங்களுக்கு காலைல இருந்து போன் பண்ணினாங்கலாம்.. உங்க போன சுட்ச் ஆப்ன்னு வருதாம்.. நீங்க வீட்ல இருந்தா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க..” என்றான்.
‘சரி.. நான் பார்த்துக்கிறேன்.. நீ கிளம்பு..” என்று குமாரை அனுப்பிவைத்தவன்.. ராஜனுக்கு போன் செய்தான்.
‘என்ன மாறா..? ஏன் போன் சுட்ச் ஆப்ன்னு வந்தது..?” என்றார்.
[the_ad id=”6605″]
‘இந்த நிவி.. மாமா கூட ஒர்க் பண்றவங்களோட.. பொண்ணு கல்யாணத்துக்காக வெளியூர் போயிருக்காங்க ராஜய்யா.. காலைல ஏழு மணியிலயிருந்து ஒரே போன்.. கறி எடுத்திங்களா..? தோசை மாவுக்கு அரிசி எவ்ளோ ஊறவைக்கனும்.. இப்படி நிறைய..
பாவம் கிசோர் மாமா.. ஒழுங்கா மாமாவோட என்ஜாய் பண்ணு.. சும்மா இங்க போன் செய்திட்டிருக்காத.. நான் எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொல்லியும் கேக்கவே இல்ல.. கால் மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்திட்டே இருந்திச்சா.. அதான் சுட்ச் ஆப் பண்ணிட்டேன்..” என்றான்.
‘ரொம்ப நாள் உங்களோடவே இருந்துட்டாள்ல..? அதான் உங்களை விட்டுட்டு இருக்க முடியாம பாவம் அல்லாடுறா..” என்றார் வாஞ்சையாக.
‘அதை விடுங்கைய்யா.. என்ன விசயமா குமாரை அனுப்பி வச்சிங்க..?”
‘அது வந்து.. என் பொண்ணு வீடு பூட்டியிருக்கு.. அதான் உனக்கெதாவது தெரியுமான்னு கேட்கலாம்ன்னு..” என்று இழுத்தார்.
அருகில் சோபனா இருப்பதால்.. ‘இருங்க..” என்று வெளியே வந்தவன்.. ‘அவ எங்க போயிருக்கான்னு எனக்கு எதுவும் தெரியாதே.. இதுக்கு முன்னாடியெல்லாம் அந்த தெரு பக்கம் நான் அதிகமா போனதே இல்ல.. இப்ப புதுசு புதுசா அந்த பக்கம் போனா.. தேவையில்லாத அவளுக்கு கெட்ட பேர் வந்திடும்னு நான் அந்த பக்கமே போகலை ராஜய்யா..” என்றான்.
ராஜனின் அமைதி கண்டு.. ‘என்ன ராஜய்யா..? எதாவது பிரச்சனையா..?”
‘இல்ல மாறா.. உனக்கு என் பொண்ணை பிடிச்சிருக்கா..? இல்ல.. நான் எதாவது நினைப்பனேன்னு..” என இழுத்தார்.
‘அழகுக்கு அழகாவும் இருக்கா.. தப்பா பேசினவன் கன்னத்தை பதம்பார்க்கிற வீரப் பொண்ணாவும் இருக்கா.. என் ராஜியைப் போய் பிடிக்கலைன்னு நான் சொல்வேனா..? நீங்களே ஒத்துக்கலைன்னாலும்.. இனிமே நான் அவளை விடறதா இல்ல..” என்று சிரித்தான்.
‘ரொம்ப சந்தோசம் மாறா.. ஆனாலும்.. முதல்ல இராமுகிட்ட பேசாம.. உன்கிட்ட இதைப்பத்தி பேசினது தப்புன்னு மனசு குறுகுறுக்குது..” என்றார் சங்கடத்துடன்.
‘இப்ப என்ன..? அப்பாக்கு தெரியாமையா கல்யாணம் செய்துக்கப் போறேன்..? எல்லாரோட சம்மதத்தோடவும்.. அதுவும் அவளோட அம்மும்மா முன்னிலையில வச்சி.. ஊரே மெச்சற மாதிரிதான் என் கல்யாணம் நடக்கும்..‚ அது சரி.. என்ன விசயமா இங்க வந்திருக்காளாம்..? உங்களை கண்டு பிடிக்கறதுக்கா..?” என்றான்.
‘உனக்கு இன்னும் இதுவே தெரியாதா…? என் பொண்ணு என்னை கண்டு பிடிக்க வரலை.. நம்மூர் கவர்ன்மென்ட் ஸ்கூல் இருக்குல்ல..? அங்க வேலை கிடைச்சதால இங்க வந்திருக்கா..” என்றார் பெருமையாய்.
‘ஓ.. ஹோ.. என் பொண்டாட்டி டீச்சரம்மாவா..? அப்ப அழகு.. வீரத்தோட சேர்த்து.. கவர்ன்மென்ட் வேலை வாங்குற அளவுக்கு அறிவும் கொஞ்சம் இருக்குமாட்டங்குது..” என்று சிரித்தான்.
‘பின்ன..? யாரு பொண்ணு அவ..?” என பெருமையாய் சொன்னவர்..
‘இந்த வேலாயுதத்தால என் பொண்ணுக்கு எதாவது பிரச்சனை வருமோன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு மாறா.. கொஞ்சம் பார்த்துக்கோ..” என்றார்.
‘அதெல்லாம் அவ கிட்ட நெருங்கலாம்னு.. யோசிக்ககூட மாட்டாங்க.. நான் அவனுங்களுக்கு வச்ச செக் அப்படி..‚” என்றான் பெருமிதமாய்.
‘ராஜய்யா.. இன்னொரு விசயம்.. கிசோர் மாமாகிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்.. மேட்ரிமானியிலயும் அப்ளை பண்ணியிருக்கேன்.. நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்க.. முதல்ல சோபிக்கு கல்யாணம் முடிக்கனும்.. அவளுக்கு கல்யாணம் முடிக்காம என்னால ராஜியோட பேசக் கூட முடியாதாட்டங்குது..
அன்னைக்கு இரண்டு நிமிசம்தான் அவகூட பேசினேன்.. கல்யாண வயசில தங்கையை வச்சிகிட்டு.. ஒரு வயசு பொண்ணுகிட்ட இப்படி பேசறியேடான்னு.. அதுக்கே தப்பு செய்த மாதிரி மனசு கிடந்து தவிக்குது..” என்றான்.
‘சோபிக்கு மாப்பிள்ளை பார்க்கிறதெல்லாம் சட்டுன்னு பார்த்திடலாம் மாறா.. நீ கவலைப்படாத.. அதுவுமில்லாம நீ இப்படி தவிக்கிற அளவுக்கு என் பொண்ணுகிட்ட தப்பா ஒன்னும் பேசிடல.. அவ நல்லதுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னுதான எச்சரிக்கை பண்ணின..? இது ஒரு தப்பா..?” என்று அவனை சமாதானம் செய்ய..
‘இல்ல.. ராஜய்யா.. கட்டிலை போட உள்ளே போனப்ப.. நான் உன்னைத்தான் கல்யாணம் செய்துக்கப்போறேன்.. நான்தான் உன் புருசன்னு உன் மனசில பதிய வச்சிக்கோன்னு சொல்லிட்டேன்..” என்றான் தயக்கத்தோடு.
‘என்ன சொல்ற மாறா..? இப்படியே சொல்லிட்டியா..? என்ன மாறா இப்படி அவசரப்பட்டுட்ட..? அதுக்கு என் பொண்ணு என்ன சொன்னா..?” என்றார் அதிர்ச்சியாக.
[the_ad id=”6605″]
‘அவசரப் படாம என்ன ராஜய்யா பண்றது..? சோபி கல்யாணம் முடியாம என்னால எதுவும் பண்ணமுடியாது.. ஆனா அவளுக்கு அப்படியில்லயில்ல…? கல்யாண வயசில இருக்கா.. ரொம்ப அழகா வேற இருக்கா.. காலாகாலத்தில நம்ம பொண்ணுக்கு கல்யாணம் செய்திடலாம்னு.. அவங்கம்மா ஏது அவளை கேக்காமயே மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னா..? அதுக்குத்தான் அவளுக்கு நான் மட்டும்தான்னு.. அவ மனசுல அவசரமா பதிய வைக்க வேண்டிய சூழ்நிலையாய்டுச்சி..” என்றான்.
‘நல்ல வேளை.. முத்துவ அடிச்சமாதிரி உன்னை அடிக்காம விட்டா..” என்று பதறினார்.
‘அதுக்குத்தான எல்லாம் சொல்லிட்டு.. அவ யோசிக்கிறதுக்குள்ள வெளில வந்துட்டேன்..” என்று மந்தகாசமாய் சிரித்தான்.
‘ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்..‚” என்று பெருமையாக சொன்னவர்.. ‘சரி மாறா நான் வைச்சிடறேன்.” என்று சிரித்துக்கொண்டே கட் செய்தார்.
எங்க போயிருப்பா..? என யோசித்தவன்.. இரண்டு நாள் ஸ்கூல் லீவ்ங்கிறதால அவங்க அம்மாவை பார்க்க போயிருப்பாளாயிருக்கும்.. என நினைத்தான். மாறனுக்கு ராஜியிடம் அப்படி பேசியது மனதை உறுத்திக்கொண்டேதான் இருந்தது. தன் சகோதரிகளிடம் யாராவது இப்படி பேசியிருந்தால் தான் அமைதியாய் இருந்திருப்போமா..? அதுவும் தனியாக இருக்கும் பெண்ணிடம்.. நம்மை பற்றி என்ன நினைத்திருப்பாள்.? இப்படியாக ஒரு புறம் மனது தவித்திருக்க.. முதலில் ராஜய்யாவிற்க்காக நாம் அவளை திருமணம் செய்ய முடிவெடித்திருந்தாலும்.. அவள் மட்டும்தான் தனக்கானவள் என அவளை பார்த்த அந்த நிமிடமே தோன்ற.. தம் மனதில் சிம்மாசனமிட்டு சட்டமாய் அவள் அமர்ந்து கொண்டதையும் அறிந்திருந்தான். எதனாலும் அவளை இழந்துவிட கூடதென்பதால்..
‘தான்தான் உனக்கு..‚” என்று காதலை கூட அவளிடம் கட்டளையாய் சொல்ல வேண்டியதாயிற்று.. என தன் மனதை தானே சமாதானமும் செய்து கொண்டான்.