ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 6
நான்கு மாதம் முடிந்திருக்க.. பல வரன்களை மாறன் நிராகரித்திருந்த நிலையில்.. சோபனாவிற்க்கு இந்த வரன் திருப்தியாய் மாறனுக்கு தோன்ற… அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க.. இராமுவும்.. சுமதியும் தடுமாற்றமாய் இளமாறனை பார்த்தனர்.
‘ஒரு நிமிசம்..” என் தங்கைகிட்ட கேட்டுட்டு வந்திடறேன்..” என சொல்லி இராமுவை வருமாறு சைகை செய்து உள்ளே போனான்.
இராமுவும் சுமதியும் உள்ளே வரவும்.. ‘ஏன்ப்பா இப்படி தடுமாற்றமா இருக்கிங்க..? உங்களுக்கு இந்த வரன் பிடிக்கலையா..?” என்றான்.
‘இல்லப்பா.. நம்ம நிவியை பக்கத்து ஊர்லயே கொடுத்திருக்கோம்.. நம்ம சோபனாக்கும் அப்படியே பார்த்திருக்கலாமோன்னு தோணுது… சோபிக்கு ஒரு வேலையும் ஒழுங்கா பண்ணத்தெரியாது.. அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு…” என்று கவலைப்பட்டார்.
‘நாமக்கலும் பக்கம்தான்ப்பா.. காலைல கிளம்பினா மதியம் வந்திடலாம்.. பையன் நம்ம சோபி கலருக்கும்.. அழகுக்கும்.. உயரத்திற்கும் ரொம்ப பொருத்தமா இருக்கான். இப்பதான் சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கான்.. ரெண்டு பேரும் ஒரே படிப்புங்கிறதால தொழில்லயும் நம்ம சோபி அவனுக்கு பக்கபலமா இருப்பா.. மாப்பிள்ளை பையனும் சோபியோட படிப்பை கேட்டதுக்கப்புறம்தான் இங்க வரதுக்கே சம்மதிச்சானாம்.
எல்லாத்துக்கும் மேல.. அவனும் நகை.. சீருன்னு எதையும் எதிர்பார்க்கலை.. சோபி அவன் கம்பெனிக்கு உதவியா இருக்கிறதை மட்டும்தான் எதிர்பார்க்கிறான்.. நாமளும் கொஞ்சம் பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணலாம்.. நம்மளை மாதிரி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்ப்பா.. ஒரே தங்கைதான்.. ஒரு வருசத்துக்கு முன்னதான் அவங்க சொந்தத்திலயே கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க.. எனக்கு இந்த சம்மந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு.. சோபிக்கு பிடிக்குதான்னு கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க.. நான் வெளில வெய்ட் பண்றேன்..” என்று வெளியே வந்து மாப்பிள்ளை பையனோடு புதிதாய் அவன் ஆரம்பித்திருக்கும் கம்பெனி விசயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தான்.
பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த இராமுவும்.. சுமதியும்.. மாறனைப் பார்த்து நிறைவான புன்னகை புரியவும்.. ‘வெளில வா சோபி..” என்று சற்று சத்தமாக மாறன் சொல்ல.. சோபனா வெளியே வந்தாள்.
சோபனாவின் முகத்தில் புன்னகையை பார்த்தவன்.. லேசாக புருவம் உயர்த்தி தங்கையின் சம்மதத்தை கேட்டான். சோபனா சிரிப்போடு தலைகுனியவும்.. சரி அவர்களிடம் சோபியை பிடித்திருக்கிறதா என கேட்கலாம் என்று எண்ணும்போதே..
[the_ad id=”6605″]
‘எனக்கு சோபனாவை ரொம்ப பிடிச்சிருக்குங்க..“ என்றான் முரளிதரன்.
முரளியின் பெற்றோர்களை மாறன் பார்க்க.. ‘எங்க மகன் விருப்பம்தான் எங்க விருப்பம் என்று சொல்ல.. பின்புதான் சோபிக்கு என்னென்ன செய்யப்போகிறோம் என்பதையே மாறன் சொன்னான்..
அவர்களின் வீடு இருக்கும் நிலையில்… அவர்கள் இவ்வளவு செய்வார்கள் என்று எதிர்பார்க்காத முரளியின் பெற்றோர் அதிர்ச்சியான பார்வையோடு ராமுவையும்.. சுமதியையும் பார்த்தனர்..
‘நாங்க இதெல்லாம் எதிர்பார்க்கலைங்க..” என்று மாறனிடம் அவசரமாய் முரளி மறுக்க..
‘நீங்க எதிர்பார்க்கலைன்னு எனக்கும் தெரியும் முரளி.. எங்கக்காக்கு நாங்க இதெல்லாம் செய்தோம். இப்ப சோபிக்கு செய்யலைன்னு வச்சிக்கோங்க.. அவ எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா.. அவளுக்கு பயந்துதான் இதெல்லாம்..” என சொல்லி மாறன் சிரிக்கவும்… சோபனா எரிக்கும் பார்வை பார்த்தாள் மாறனை.
சோபனாவின் செல்ல கோபத்தை பார்த்த முரளியும் லேசான புன்னகை சிந்தவும்.. திருப்தியாய் உணர்ந்த ராமு.. ‘பெரிய மாப்பிள்ளைக்கு இன்னைக்கு லீவ் போட முடியலையாம்.. என் பொண்ணுகிட்டயும்.. மாப்பிள்ளைகிட்டயும் இந்த நல்ல விசயத்தை சொல்லிட்டு.. அவங்க சௌகரியத்தையும் கேட்டுட்டு.. நாங்க என்னைக்கு உங்க வீட்டுக்கு வரோம்னு போன் பண்ணிடறோம்..” என்றார் இராமு.
முரளி வீட்டினர் கிளம்பியதும்.. ‘மாறா.. நிவேதாக்கே முப்பத்தஞ்சி லட்சம் செலவு பண்ணியிருக்க.. இப்ப எனக்கு இவ்ளோ தேவையா..? அதுவும் நீ சொன்ன பட்ஜெட் நாற்பது லட்சத்தை தாண்டிடுமாட்டங்குது… என்ன கல்யாணம் முடிஞ்சதும் அப்படியே ஒட்டு மொத்தமா கழட்டிவிட்றலாம்னு பார்க்கிறியா..?” என்று அண்ணனிடம் அக்கறை கலந்த கோபத்தோடு சோபனா கேட்க..
‘அட..‚ கண்டுபிடிச்சிட்டியா..?”என சிரித்தான்.
‘ப்ச்ச்.. எதுக்கு மாறா இவ்ளோ பண்ற..? பணம் அதிகம் இருந்தா.. ஒரு வீடாவது கட்டலாமில்ல..? எனக்கு கில்ட்டியா இருக்கு..“ என சோபனா உண்மையாய் வருந்தவும்..
‘ஹேய்.. நீ கவலைப்படாத சோபி.. இந்த நாலு மாசத்தில என்னோட இன்கம் என்னன்னு தெரிஞ்சா உனக்கு தலைசுத்திடும்.. என்கிட்ட நிறைய பணம் இருக்கு..” என்றான் பெருமையாக.
‘எவ்ளோ வச்சிருக்கேன்னு சொல்லு..” என்றாள் கறாராய்..
‘பைவ் க்ரோர்.. “ என்று அவனின் பெற்றோருக்கு தெரியாமல் கிசுகிசுப்பாக சொன்னான்.
‘என்ன மாறா சொல்ற..? ஐஞ்சு கோடியா..? கொள்ளையேது அடிக்கிறியா..?” என்றாள் பதட்டமாக.
‘பார்த்தியா..? உனக்கு தலை சுத்துது.. இதுவும் கிட்டதட்ட கொள்ளை மாதிரிதான்.. ஆனா.. முதலாளிகளுக்கு தெரிஞ்சே அடிக்கிற கொள்ளை.. கம்பெனி ஆடிட்டிங் இல்லாம.. சில முக்கிய புள்ளிகளோட கணக்கு வழக்கெல்லாம் இப்ப நான்தான் பார்க்கிறேன்.. அவங்ககிட்ட பர்சன்ட்டேஜ் போட்டு வாங்கிடறேன்.. எனக்கு பெரிய லாபம்தான். ஆனாலும் அவங்களுக்கும் லாபம் இல்லாம இவ்ளோ கொடுப்பாங்களா..? சோ.. டோன்ட் வெரி..” என்றான் அசால்ட்டாய்.
சோபனாவின் முகத்தில் இருந்த கலக்கத்தை பார்த்த ராமு..
‘என்ன சோபிம்மா..?” என்றார் பதட்டமாக.
‘ஒன்னுமில்லப்பா…” என்றவன்.. சொல்லாதே என்பதுபோல் தன் தங்கையிடம் சைகை செய்தான்.
‘மாறா.. உனக்குன்னும் கொஞ்சம் வச்சிக்கோடா..” என்றார் தன்மையாக.
‘அப்பா உங்க பையன் ரொம்ப புத்திசாலி.. அதெல்லாம் கோடி கணக்குல சம்பாரிக்கப்போறான்.. நீங்க கவலைப்படாதிங்க..” என்றாள் சோபனா.
இராமுவின் முகம் இன்னும் பதட்டத்தை அதிகரிக்கவும்.. எப்படியும் வீடு கட்டும்போது தன் பெற்றோருக்கு தெரியத்தானே செய்யும்.. என்று ஒரு முடிவிற்க்கு வந்தவனாக..
‘அப்பா.. என்னோட அறிவுக்கு கொடுக்கிற சம்பளம்தான் இதெல்லாம்.. நீங்க ஒன்னும் பயப்படாதிங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. நேர்மையாத்தான் சம்பாதிக்கிறேன்.. சோபிக்கு இன்னும் செய்ய எனக்கு ஆசைதான்.. ஆனா.. முரளி இதுக்கே பயப்படுறாப்ல.. அதனாலதான் கல்யாணத்துக்கு இதுபோதும்.. பின்னாடி முரளியோட பிஸ்னசுக்கு செய்துக்கலாம்னுதான் இவ்ளோ பணம் இருந்தும் அளவோட நிறுத்திக்கிட்டேன்..” என்று அரை மணிநேரத்திற்கு மேல் பொறுமையாய் விளக்கமளித்து சமாதானம் செய்தான்.
‘அப்பா.. யாரோ முருகேசனாம்.. உங்களுக்கு அவரை தெரியுமாமே.. அவரோட நிலம் ஒன்னு ஏழாயிரம் சதுரடி.. விலைக்கு வருதாம்.. ராஜய்யா சொன்னாரு.. அதை வாங்கி.. அங்கையே வீடு கட்டிட்டு போய்டலாமா..?” என்றான்.
‘உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிப் போடு மாறா.. ஆனா வீடு இங்கதான் கட்டனும்.. தலைமுறை தலைமுறையா நம்ம குடும்பம் வாழ்ந்த இடம் இது.. எனக்கு இங்க இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு..” என்றார்.
‘இங்க கட்டினா சின்னதா தான்ப்பா கட்டமுடியும்..” என்றான் யோசனையோடு..
‘மூவாயிரம் சதுரடி நிலம்.. உனக்கு சின்ன இடமா..?” என்று இராமு முறைக்க..
‘இல்லப்பா.. கட்டுறதே கட்டுறோம்.. நல்லதாவே கட்டிடலாம்னுதான்..” என்று புதிதாய் வாங்கப்போகும் இடத்தில் வீடு கட்ட சம்மதம் வாங்கும் தோரணையோடு தன் அப்பாவை பார்த்தான்.
‘சரி.. உனக்கு பிடிச்ச இடத்தில வீடு கட்டு.. உனக்கு கல்யாணம் ஆனதும் நீ அங்க போய்டு.. எங்களுக்கு இங்கையே சின்னதா ஒரு வீடு கட்டிகொடு.. நாங்க இங்கையே இருந்துக்கிறோம்..‚” என்றார் முறுக்கியவராக.
‘என்னப்பா நீங்க.. வீடு கட்றதே உங்களுக்காகத்தான்..‚ உங்களை பெரிய மாளிகையில உக்கார வச்சி பார்க்கனும்னுதான நான் ஆசைப்படுறேன்..” என்றான் புரியவைக்கும் நோக்கோடு.
‘எனக்கு இந்த இடம்தான் பிடிச்சிருக்கு.. அப்புறம் உன் விருப்பம்..‚” என்று இராமு உறுதியாய் சொல்ல.. மாறன் கிட்டதட்ட ஒரு மணிநேரமாக வாதாடினான். ஆனால்.. ஓன்றும் வேலைக்காகவில்லை.
‘சரி.. இங்கையே கட்டலாம்.. கொஞ்சம் சிரிங்க..” என்றான் இறுகிய முகத்தோடு.
‘முதல்ல நீ சிரி..” என்றார் முறைப்பாகவே.
‘ஈஈஈ..” என்று கோபமாய் பல்லைகாட்டி.. பிறகு இலகுவாய் சிரிக்கவும்..
[the_ad id=”6605″]
‘எப்போ கட்ட ஆரம்பிக்கிற..?” என்று ஆவலாக சுமதி கேட்க..
‘அதுதான்மா எனக்கும் யோசனையா இருக்கு.. அப்பா இங்கதான் வீடு கட்டனும்னு சொல்றாரு.. சோபிக்கு உடனே கல்யாணம் வச்சிட்டா அந்த நேரத்தில வீட்டை பிரிச்சி போட்டுட்டு உக்கார்ந்திருக்க முடியாது. பேசாம சோபி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டு வேலை ஆரம்பிச்சிடலாமா..?” என்றான்.
‘சரி.. மாறா..“ என்றவர்… ‘பணம் நிறைய வச்சிருந்தினா.. அந்த இடத்தை வாங்கிடு மாறா.. நீ ரொம்ப ஆசைப்பட்ட இல்ல..? வாங்கினா.. பின்னால என் பேரப்பிள்ளைங்க விளையாடறதுக்காவது ஆகும்..” என்றார்.
பேரப்பிள்ளைகள் என்றதும் மாறனுக்கு ராஜியின் நினைவு வர.. உள்ளுக்குள் வெக்கப்பட்டாலும்.. அதை மறைத்து வழக்கம்போல் புன்னகை சிந்தியவன்..
‘சரிம்மா.. அதுவிசயமாத்தான் நாளைக்கு பேசப்போறேன்.. ராஜய்யாவை கூப்பிட்டுருக்கேன்.. அப்பா நீங்களும் அம்மாவும் ரெடியா இருங்க.. நாளைக்கு காலைல ஒரு எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் அந்த முருகேசனை நேர்ல பார்த்து பேசி முடிச்சிடலாம்..”
‘சின்னைய்யா வந்தா போதும்.. நான் எதுக்கு மாறா.?” என இராமன் கேட்க..
‘முதன் முதலா ஒரு இடம் வாங்கப்போறோம்.. உங்களுக்கு உங்க சின்னைய்யா மட்டும் முக்கியமா இருக்கலாம்.. எனக்கு நீங்க ரெண்டுபேரும்தான் முக்கியம்.. ராஜய்யாவும்தான் வருவார். ஆனாலும் நீங்க ரெண்டுபேரும் வந்தேதான் ஆகனும்..‚” என்று உறுதியாய் சொல்லி தன் யமாகாவை உயிர்பித்தவன்..
ராஜனை சந்தித்து இடம் வாங்குவது.. தன் அப்பா தன்னுடைய பரம்பரை இடத்திலேதான் வீடு கட்டனும் என்று சொன்னது.. பிறகு சோபனாவிற்கு வரன் உறுதியானது என அனைத்தும் சொல்லி.. நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தவன்.. பிறகு நந்தினியின் பேச்சை ஆரம்பித்தான்.
‘ராஜய்யா.. எப்படியும் சோபி கல்யாணம் முடியாம எதுவும் யோசிக்க கூட முடியாதுன்னுதான் நான் ராஜியை பார்க்க போகலை.. அவளை அன்னைக்கு பார்த்ததோட சரி.. இப்பதான் சோபிக்கு முடிவாய்டுச்சில்ல.. அதான் இன்னைக்கு போய் உங்க பொண்ணை பார்த்துட்டு வரலாமான்னு பார்க்கிறேன்.. நீங்களும் வாங்க ராஜய்யா..” என்றான் கெஞ்சல் பார்வையோடு.
‘நான் தினமும் என் பொண்ணை பார்த்திட்டுதான் இருக்கேன்.. அவளை பார்க்கிறதுக்காகத்தான் ஆட்டோவை கூட நிறுத்திட்டு லாவன்யாவையும் மனோவையும் நானே தினமும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப்போறேன்..
ஆனா.. அவதான் என்னை கண்டுக்கவே மாட்றா.. வண்டியில போகும்போது ஒரு முறை அவளை பார்த்து சிரிச்சேன்.. அட பதிலுக்கு சிரிக்கலைன்னா கூட பராவயில்ல.. அந்த முத்து பையன்கிட்ட நமக்காக பேசினாங்களேங்கிற மாதிரி கூட ஒரு பார்வை கூட பார்க்க மாட்றா.. ஒரு ஞாயித்துக்கிழமைல வேற வேலையா அவ வீட்டுப் பக்கம் போறமாதிரி போய்.. அந்த வேலாயுதம் எதாவது பிரச்சனை பண்ணினான்னா சொல்லும்மா.. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்..
அது வரப்போ பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு.. அவ பாட்டுக்கு மூஞ்சியில அடிச்ச மாதிரி கதவை சாத்திட்டு உள்ள போய்ட்டா.. யாராயிருந்தாலும் கொஞ்சம் எட்டியிருன்னு அம்முயேது சொல்லி வளர்த்திருப்பான்னு நினைச்சிக்கிட்டேன்.. அன்னைலயிருந்து என் பொண்ணை நான் தூரயிருந்து பார்க்கிறதோட சரி..” என்று சிறு வேதனையோடு சொன்னார்.
இளமாறன் அமைதியாகவே இருக்கவும்.. ‘சரி.. மாறா.. லாவன்யாக்கு ஸ்கூல் விடற டைம் ஆய்டுச்சி.. நான் கிளம்பறேன்..” என்று ராஜன் கிளம்பினார்.
மாறனுக்கு தன் கல்லூரிப் பருவத்தில் கூட.. திருமண வயதை கிட்டதட்ட கடந்து கொண்டிருக்கும் தன் அக்காவின் நியாபகம்தான் எப்பொழுதும் இருக்கும். அப்பொழுதெல்லாம்.. அவன் வீட்டின் வருமானம் வாழ்க்கையை கடனில்லாமல் நகர்த்துவதற்கே பெரும்பாடு என்ற நிலைதான்.
பிறகு கல்லூரி படிப்பை முடித்து.. மாறன் சம்மாதிக்க ஆரம்பித்திருந்த நிலையில்.. திருமண வயதைத்தாண்டியும் திருமணம் அமையாமல்.. நல்ல வரனை எதிர்பார்த்து தன் அக்கா வீற்றிருக்க.. அதோடு.. பதின்ம வயதை தாண்டி.. நானும் கிட்டதட்ட திருமண வயதை எட்டிவிட்டேன்.. என்று உணர்த்தும் பாவனையில் ஒரு தங்கையும் வீற்றிருக்க.. தன் அக்கா தங்கைகளுக்கு எப்படியாவது சம்பாதித்து நிறைய செய்ய வேண்டும்.. அவர்களுக்கு வசதியான ஒரு வாழ்க்கையை அமைத்துத்தர வேண்டும் என்ன எண்ணம்தான் மாறனுக்கு எப்பொழுதும்..
அதன் பொருட்டாகவோ என்னவோ.. இதுவரை தானும் ஒரு வாலிப வயதில் இருக்கும் ஆண்மகன் என்ற நியாபகம் கூட அவனுக்கு வந்ததில்லை. எந்த பெண்ணையும் இதுவரை ஒரு ரசனையான பார்வை கூட பார்த்ததில்லை.
[the_ad id=”6605″]
ராஜன் தனக்காக பார்த்திருக்கும் நந்தினியை முதன் முதலாக பார்த்த நிமிடமே.. அவள்தான் தன் மனைவி என்று முடிவே செய்துவிட்டான். எனினும் சோபனாவின் திருமணத்திற்காகவும்.. இன்னும் சில காரணங்களுக்காகவும் நந்தினியை பார்ப்பதை கடந்த நான்கு மாதமாக தவிர்த்திருந்தான். இன்று சோபனாவிற்கு திருமணம் முடிவானதும்.. நந்தினியை பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் வலுபெற்றிருக்க.. நான்கு மாதமாக இரவில் தூங்கும்போது மட்டுமே அவனை இம்சித்தவள்.. இன்று மட்டும் காலையில் இருந்தே அவனை இம்சித்திருந்தாள் ராஜநந்தினி.
ஆனாலும் உண்மையில் அவளை பார்க்க.. தனியாக போவது மாறனுக்கு பிடிக்கவே இல்லை. அவள்தான் தன்னவள் என்றாலும்.. ஊராரைப் பொருத்த வரையில்.. தனியாக வசிக்கும் பெண்ணிடம் தாம் போய் பேசுவதை யாராவது பார்த்து.. அவளை தவறாக மற்றவர்கள் பேச தாம் அனுமதிக்கக்கூடாதென்பதும்..
முதன் முதலாய் நந்தினியைப் பார்த்தபோது.. அவளின் அந்த எண்ணை வழிந்த முகமும்.. அதன்பின் அவள் குளித்து வெளிவர.. புத்தம் புதுமலராய் பளிச்சென்று இருந்த அவளின் தும்பை நிற முகமும்.. தினமும் அவனின் தூக்கத்தை கலைத்திருக்க.. இன்று அவளை பார்க்க தாம் தனியாக போனால்.. சிறு தொடுகையோ.. அல்லது லேசான இதழொற்றலோ.. தம்மையறியாமல் அவளை எதாவது செய்துவிடுவோம் என்ற எண்ணமும் ஒன்றுசேர.. அதற்காகத்தான் மாறன் ராஜனை துணைக்கழைத்தான்.
அவர் வர மறுத்ததும்.. மனதிற்கும்.. உள்ளத்து உணர்விற்கும் கடிவாளமிட்டு.. தன்னை சமன்படுத்தி.. தன்னவளின் வீட்டை நோக்கி தன் யமாகாவை செலுத்தினான்.