அத்தியாயம் – 6–2
நந்தினியின் வீட்டின் பின்புறம்.. வேலாயுதம் வயலில் ஒரு மரத்தடியில் போனை நோண்டிக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேல் நின்றுகொண்டிருந்தவனுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் பறந்து கொண்டிருக்க.. அப்பொழுதுதான் சோர்வாக தன் ஆக்டிவாவில் வந்திறங்கியளைப் பார்த்தவன்.. நந்தினி வீட்டின் பூட்டை திறந்து உள்ளே போனதும்.. மாறன் அவளின் வீட்டிற்கு வந்து.. லேசாய் திறந்திருந்த கதவை மெல்ல தட்டினான்..
‘யாரு..?” என்றாள்.
‘ மாறன்.. நான் உள்ளே வரப்போறேன்..” என்று கூடுதல் தகவலையும் சொன்ன நொடி.. கோப முகத்தோடு வந்து அவன் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தும் தோரணையில் முறைத்துப் பார்த்தாள்.
நான்கு மாதம் கழித்து சந்திப்பதால் எப்படி ரியாக்ட் செய்வாள்.. என்ற யோசனையோட வந்தவன்.. அவள் முகத்தில் கோபத்தை பார்த்ததும்.. ராஜய்யாவிடம் செய்ததுபோல் கதவை தாளிட்டுவிட்டால் என்ன செய்வது என்று நெடிப் பொழுதில் யூகித்து.. முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் கதவை இருக்கிப் பிடித்திருந்தான்.
கதவை சாத்த முடியாமல் கோபமாய் அதிலிருந்து கையை உதறி.. ‘யார் நீ..? இங்க எதுக்கு வந்திருக்க..? கிளம்பு முதல்ல..” என்று உள்ளே சென்றாள்.
உள்ளே போய் அவளை பார்க்க.. சேரில் உக்கார்ந்திருந்தாள். அருகிலிருந்த கட்டிலில் உக்கார்ந்தவன் அதிலிருந்த தலையணையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு..
‘எங்கே.. இப்ப கதவை தாழ்போடு பார்ப்போம்..‚” என்றான் சின்ன சிரிப்போடு.
மீண்டும் அவனை முறைத்து.. வெளியே வந்து திண்ணையில் உக்கார்ந்தாள். கட்டிலில் இருந்த போனை பார்த்தவன்.. ‘ம்ம்.. போனெல்லாம் புதுசா வாங்கிட்ட போல.. ஆமா.. இதுல அம்மும்மான்னு ஒரு நம்பர் இருக்கே.. அது உங்க அம்மாவா..? அதாவது.. என் அத்தையா..? அச்சோ.. நான் தெரியாம கால் பண்ணிட்டேன்.. கால் போய்ட்டிருக்கு.. அட்டென் பண்ணினாங்களா.. என்ன பேசட்டும்..? ம்ம்.. குட் ஐடியா.. உன்னை எனக்கு கட்டிதர சொல்லி பொண்ணு கேட்டுடறேன்..” என்று பேசிக்கொண்டே அவளின் அம்மாவின் நம்பரை குறித்துக்கொண்டான். அவளுக்கு அழைப்பு வரவும்.. அது தன்னுடைய ரிங்டோன் என்பதால் பதறி உள்ளே வந்தாள்.
‘ம்ம்.. இந்தா..“ என்று போனை கொடுத்தவன்.. அவள் மீண்டும் வெளியில் போகாமல் இருக்க.. எழுந்து கதவருகே வந்து நின்றுகொண்டு.. ‘நான்தான் கால்செய்தேன்.. பதறாத..” என்றான் புன்சிரிப்போடு.
‘நான் உன்கிட்ட பேசவிரும்பலை.. போ இங்கயிருந்து..” என்றவளின் குரல் தேய்ந்திருந்தது. அவளின் உரிமையான கோபம்.. மாறனுக்கு சந்தோசத்தை கொடுக்க..
‘இந்த நாலுமாசத்தில ஒரு ஐஞ்சாறு நாள்தான் நான் வீட்ல இருந்தேன். அதுவும் நைட் வந்துட்டு காலைல கிளம்பிடுவேன்.. கொஞ்சம் பிசி.. வெளிலயே சுத்திட்டிருந்தேன்.. அதான் உன்னை வந்து பார்க்கமுடியலை..” என்றான்.
அவனின் காரணம் கேட்டு கோபம் குறைந்தாலும்.. ‘இதெல்லாம் எனக்கு தெரியவேண்டிய அவசியமில்ல போ..” என்றவளின் குரலில் கோபத்தோடு சற்று உரிமையும் வந்திருக்க.. தலைகுனிந்தாள்.
‘சரி.. என்னைப் பத்தி உனக்கு தெரிய வேணானாம்னா பரவாயில்ல.. உன்னைப் பத்தி எனக்கு தெரியனும்.. சொல்லு..‚” என்றான் இலகுவாய்.
‘சொல்லமாட்டேன்..” என்று வெடுக்கென சொல்லி முகம் திருப்பினாள்.
‘சரி.. சொல்லவேண்டாம்.. நானே தெரிஞ்சிக்குவேன்..” என்று அவளின் பக்கத்தில் வந்து.. தன் மொபைலால் அவளின் தாடையை தொட்டு அவள் முகத்தை நிமிர்த்த.. அது கலங்கியிருந்தது.
‘ப்ச்ச்.. அழாத..” என்றான் கெஞ்சும் தோரணையில்.
‘வர நேரமில்லைன்னாலும் ஒரு போன் கூட பண்ணல..” என்றாள் சன்னக்குரலில்.
[the_ad id=”6605″]
பரவாயில்லையே.. அதுக்குள்ள கோபம் போய்டுச்சே.. என நினைத்தவன்.. ‘உன் நம்பர் எனக்கு தெரியாதே..” என்றான் பாவமாக.
‘ஊர்சுத்த நேரமிருக்கு.. அப்படியே கிளம்பும்போது வந்து என் நம்பரை வாங்கிக்க நேரமில்லையா..?” என்றாள் சற்றே குரலுயர்த்தி.
‘பக்கத்திலயே மளிகை கடையிருக்கு.. காலங்காத்தால எல்லாரும் வரப்போக இருப்பாங்க.. பகல்ல நீ ஸ்கூல் போய்டுவ.. அதோட.. நீ தனியா இருக்க.. இங்க வச்சி என்னை பார்த்தாங்கனா.. உனக்கு தேவையில்லாத கெட்ட பேர் வந்திடும்ன்னுதான் வரலை.” என்றான் சமாதானமாய்.
‘இப்ப மட்டும் வராதா..?”
‘முடிஞ்ச வரைக்கும் வராத மாதிரி பார்த்துக்கலாம்னுதான் வரல.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்.. என் தங்கைக்கு வரன் முடிவாகியிருக்கு.. கொஞ்ச நாள்லையே அவளுக்கு கல்யாணம் முடிச்சிடுவோம். அதுக்கப்புறம் உன்னை கல்யாணம் செய்துக்கிறதுதான் எனக்கு முதல் வேலை.” என்றான்.
கல்யாணம்.. என்ற சொல்லில் மனம் குளிர்ந்தாள். அது அவள் முகத்திலும் தெரிய.. ‘எங்க வீடு ரொம்ப பழசு.. இப்ப விழவா.. அப்ப விழவான்னு இருக்கு.. நல்லா யோசிச்சி சொல்லு.. வீடு கட்டிட்டு உன்னை கல்யாணம் செய்துக்கவா..? இல்ல கல்யாணம் முடிச்சிட்டு வீடு கட்டிக்கலாமா..?” என்றான் மலர்ந்த முகத்தோடு.
‘ரொம்ப அவசரப் படாத.. உனக்கு என்னோட இந்த வெளித்தோற்றம்தான பிடிச்சிருக்கு.. என்னோட பின்னனி தெரிஞ்சாலும் உனக்கு என்னை பிடிக்குமா..? அப்படியே உனக்கு பிடிச்சாலும் உங்கப்பாம்மாக்கு பிடிக்குமான்னு தெரியாது… அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் பேசற..” என்றாள். சொல்லும்போது அவளின் முகம் வாடியிருக்கவும்..
‘இதென்ன வெளித்தோற்றம்.. உள்தோற்றம்ன்னுகிட்டு..? என்னோட பின்னனி தெரிஞ்சுகிட்டா நீ என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்க..? உனக்கு என்னை பிடிச்சிருக்கு.. எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு.. அவ்ளோதான்..‚ அதோட விடு..‚ மத்தபடி இந்த கல்யாணத்துக்கு யார் சம்மதிக்கலைன்னாலும்… பேசி சம்மதம் வாங்கவேண்டியது என் பொறுப்பு.. அது உங்கப்பாம்மான்னாலும் சரி.. எங்கப்பாம்மான்னாலும் சரி..‚” என்றான் உறுதியாக.
‘ம்ம்.. அங்கதான் பிரச்சனையே.. உனக்கு உங்கப்பாம்மா இருக்காங்க.. ஆனா.. எனக்கு..” என்றவளுக்கு கண்ணில் கண்ணீர் குளம் கட்டியது.
‘ப்ச்ச்.. என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தான தெரியும்..” என்றான் தெரியாதவன் போல்.
‘இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்ல.. ஆனா உன்கிட்ட சொல்லனும்னு தோணுது.. மூனுமாசமாவே நீ எப்ப வருவன்னு பார்த்திட்டிருந்தேன்..” என்றாள் ஏக்கத்தோடு.
‘அதான் இப்ப வந்திட்டேன்ல.. சொல்லு..” என்றான் கனிவாக.
‘நான் உன்கிட்ட இதை சொன்னதுக்கப்புறம்.. என்னை உனக்கு பிடிக்காமையோ.. இல்ல உங்கப்பாம்மாக்கு பிடிக்காமையோ.. வேற எந்த காரணத்துக்காகவோ.. நீ என்னை கல்யாணம் செய்துக்கலைன்னாலும் பரவாயில்ல.. ஆனா.. இதைப்பத்தி எப்பவும் வேற யார்கிட்டயும் பேசாம இருப்பியா..? என் அம்மும்மாக்கு என்னால எந்த தலைகுனிவும் வரக்கூடாது..” என்றாள் தளர்ந்த குரலில்.
‘முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்க..‚ யார் எதிர்த்தாலும் சரி.. நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்கப்போறதில்ல.. உன்னோட வேதனை என்னோடதும்தான்ற நம்பிக்கை உனக்கிருந்தா மட்டும் சொல்லு..‚ இல்லன்னா சொல்லவேணாம்..” என்றான் சிறு கோபத்தோடு.
அவனின் உரிமையான கோபத்தில் மனம் தெளிந்தவள்.. ‘அது.. அம்மும்மா.. அங்க சென்னையில எல்லார்கிட்டயும்.. அவங்க லவ் மேரேஜன்னும்.. அது அவங்க வீட்லயிருந்தவங்களுக்கு பிடிக்கலைன்னும்.. கொஞ்ச நாள்லயே வரதச்சனை கொடுமையால என் அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டதாவும்தான் சொல்லியிருக்காங்க. ஆனா.. உண்மை அதுயில்ல..” என்றவள்.. தன் பேகில் இருந்து வாங்கிவந்த பால்பாக்கட்டை எடுத்துக்கொண்டு உள் ரூமிற்கு சென்று பாத்திரம் எடுக்கவும் அதிலேயே தெரிந்தது அவளின் தடுமாற்றம்.. எனினும் அமைதிகாத்து அவளையே பார்த்திருந்தான். ஒருவித கலக்கத்தோடு பாலை அடுப்பில் வைத்தவள்..
‘நான் எங்கப்பாக்கு பொறக்கல.. எங்கம்மாவோட காதலனுக்கு பிறந்தவள்.. அவர் இப்ப.. எங்கம்மா கூட இல்ல.. நான் பிறக்கிறதுக்கும் முன்னாடியிருந்தே..” என்றவளின் குரலில் அத்தனை வருத்தம்.
‘எங்கம்மா தனி ஆளாதான் என்னை வளர்த்தாங்க..” என்று ஒருவழியாக சொல்லிமுடித்தாள். இந்த நான்கு வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்க்குள் அடுப்பில் வைத்த பாலே காய்ந்திருந்தது.
பால் பொங்கி வரவும்.. அவளருகில் வந்து அடுப்பை அணைத்தவன்..
‘அப்படின்னா..?” என்று அவளின் அம்மா எங்கிருக்கிறார்கள்.. என்பது போன்ற பல விபரங்கள் அவளின் வாய்மொழியில் தெரியவேண்டி.. அவளை ஊன்றிப்பார்த்தான். ஆனாலும்.. தன் பார்வையால்.. அவளின் கலக்கம் அதிகரிப்பதை உணர்ந்தவன்..
‘எல்லாமும் சொல்லு ராஜி.. அது எதுன்னாலும் பரவாயில்ல.. எனக்கு உன்னை முழுசா தெரியனும்…” என்றான் அக்கறையோடு.
‘என்னை அப்படி கூப்பிடாத..” என்று கடுமையாய் எச்சரித்தாள்.
‘ஏன்..? உன் பேர் ராஜநந்தினிதான..? அதை சுருக்கித்தான ராஜின்னு சொன்னேன்..?”
‘ப்ச்ச்.. எனக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காது. இதுவரைக்கும் யாரையும் அப்படி கூப்பிட நான் அனுமதிச்சதில்ல..” என்றாள் இருகிய முகத்தோடு.
‘அதான் ஏன்..?”
‘அம்மும்மா மனசு கஷ்டப்படும்னு இதுவரைக்கும் எங்கம்மாகிட்ட கூட நான் கேட்டதில்ல.. ஆனா.. எனக்கு அந்த ராஜ..ங்கிறதில ஒரு சந்தேகம்.. அது என் அம்மாவோட காதலன் பேரா இருக்குமோன்னு.. அதனாலதான் எனக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்கிறதில்ல.. நீ நந்தினின்னு கூப்பிடு..‚” என்றாள் கட்டளையாக.
‘ஆனா.. எனக்கு உன்னோட ராஜநந்தினின்ற பேர்.. ஏதோ மன்னர் வீட்டு பொண்ணு மாதிரி.. ஐ மீன்.. ஒரு ராஜா வீட்டு பொண்ணுமாதிரி உன்பேரை சொல்லும்போதே உன்னை இளவரசிமாதிரி நினைக்கத் தோணுது.. எனக்கு இந்த ராஜநந்தினின்ற பேர்தான் பிடிச்சிருக்கு.. நான் ராஜின்னே கூப்டுக்கிறேனே.. ப்ளீஸ்..” என்றான்.
அவள் அமைதியாகவே இருக்கவும்.. ‘உனக்கு உங்கப்பாமேல இருக்கிற கோபம் நியாயமானதுதான்..” எனும்போதே..
‘முதல்ல என்கிட்ட அப்பான்ற வார்த்தையை இனி சொல்லாத.. எனக்கு அப்பா கிடையாது..” என்று கத்தினாள்.
‘ச..ரி..” என்றான் குரலிரங்கியவனாய்.
அவனின் முகத்தை பார்த்தவள்.. யாரோ செய்த தப்புக்கு இவன் மீது கோபப்பட்டு என்ன லாபம்.. என வருந்தி.. ‘அந்தாளு மேல இருக்கிற கோபத்தை கூட என்னால எங்கம்மாகிட்ட காட்டமுடியாது.. ஒரு பைசாக்கு பிரையோஜனம் இல்லாத அந்தாளைப்பத்தி எதாவது சொல்லிட்டேன்னா.. அம்மும்மாக்கு அவ்ளோ கோபம் வந்திடும்.. இப்ப வரைக்கும்..‚” என எரிச்சலாக சொன்னவள்..
‘அவங்க என்னை கைவிடல.. நான்தான் அவங்களை விட்டுட்டு வந்திட்டேன்னு.. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இதே டைலாக்.. இந்த பேச்சு வரும்போதெல்லாம்.. என்னையும் திட்டிட்டு.. அவங்களும் உக்கார்ந்து அழுதிட்டிருப்பாங்க.. அவங்க அழறதை என்னால பார்க்க முடியறதில்ல.. அதுவும் இந்த விசயத்துக்காக..‚
எனக்குன்னு இருக்கிறது என் அம்மும்மா மட்டும்தான்.. இதுக்காக அவங்கிட்ட என்னால கோபப்படவும் முடியலை.. அவங்களை இப்படி தனியா கஷ்டப்பட வச்சவங்களை நினைச்சா.. கோபப்படாம இருக்கவும் முடியலை.. இதைப்போய் யார்கிட்ட சொல்லி அழறது..? இல்ல அழுதுமட்டும் என்ன யூஸ்..? அவங்க லைப் போனது போனதுதான..?” என்று கட்டிலில் உக்கார்ந்தவள்.. தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு மௌனமாய் கண்ணீர் விட்டாள்.
‘அவர் யார்.. என்னங்கிறதைப் பத்தி உன்கிட்ட இதுவரைக்கும் உங்கம்மா சொன்னதே இல்லையா..?” என்றான்.
‘ம்கூம்.. சொன்னதேயில்ல.. அவங்களுக்கு கல்யாணம் ஆகமலே நான் பிறந்ததை மட்டும்தான் சொன்னாங்க.. அதுவும் நான் காலேஜ் போகும்போதுதான் சொன்னாங்க.. அதுக்கு முன்னாடி குழந்தையா இருக்கும்போது.. அப்பா வேற ஊர்ல இருக்கார்ம்பாங்க.. நான் பெரிய பொண்ணானதுக்கப்புறம்.. உங்கப்பாவை பிடிக்காம நான்தான் தனியா வந்திட்டேன்னாங்க.. காலேஜ் போனதுக்கப்புறம்;தான் என்கிட்ட என் பிறப்பை பத்தின உண்மையையே சொன்னாங்க.. சொல்லும்போதே யார் என்னன்னு கேட்ககூடாதுன்னு கண்டிசனோடதான் சொன்னாங்க..
அதோட.. ஒரு வயசுக்கப்புறம்.. எனக்கும் அந்தாளை பார்க்கனும்.. தெரிஞ்சிக்கனும்.. அப்படி எதுவும் தோணினதில்ல.. அதுவும்.. இப்ப கொஞ்ச நாளா.. என் வாழ்க்கையில நான் பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிற ஒரே ஆள் அந்தாள்தான். இப்ப ஏது பார்த்து.. அந்தாளுக்கு வேற குடும்பம் ஏது இருந்து.. அது எங்கம்மாக்கு தெரிஞ்சி.. அதுக்கப்புறம் அவங்க படற வேதனையை என்னால பார்க்கமுடியாது. எப்படியோ.. இந்த மாதிரியான தவ வாழ்க்கைக்கு என் அம்மும்மா பழகிட்டாங்க.. கடைசி வரைக்கும் அந்த நிம்மதியையாவது அவங்களுக்கு நான் கொடுக்கனும்..‚” என்றாள் வேதனையோடு.
அறியாத வயதில் வந்த காதல் என்றாலும்.. இவளின் அம்மாவை நினைத்து ராஜய்யா கண்ணீர் விடுவதும்.. ராஜய்யாவையே நினைத்துக்கொண்டு.. இவளின் அம்மா இதுவரை வாழ்ந்துகொண்டிருப்பதும்.. என நினைத்தவன்.. என்னமாதிரியான புனிதமான காதல் இவர்களுடையது என்றுதான் எண்ணத்தோன்றியது மாறனுக்கு.. பத்து நிமிடத்திற்கு மேல் இருவரும் அமைதியாகவே இருக்கவும்..
‘என்ன..? என் பின்னனி தெரிஞ்சதும்.. இவளை எப்படி கழட்டி விட்டுடலாமான்னு யோசிக்கிறியா..?” என்றாள் எள்ளலாக.
‘ச்ச்சு.. என்ன பேச்சு இது..? எது எப்படின்னாலும் சரி.. இந்த ஜென்மத்துக்கு நீதான் என் பொண்டாட்டி..‚” என்றான் உறுதியாக.
திருப்தியாக மாறனை பார்த்தவள்.. ‘ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. எனக்கென்னவோ அந்தாளு இந்த ஊர்லதான் இருப்பாருன்னு..
ஏன்னா.. எனக்கு வேலைகிடைச்சதும் அவ்ளோ சந்தோசப்பட்ட எங்கம்மா.. வேலை இந்த ஊர்லதான் கிடைச்சிருக்குன்னதும்.. அவங்க முகத்தில அவ்வளவு தடுமாற்றம்.. இரண்டு நாளா வேலைக்கு கூட போகல.. பதட்டமாவேத்தான் இருந்தாங்க.. ஜாயின் பண்றதுக்கு முன்னமே போனாத்தான்மா.. எங்க தங்கறதுன்னு இடம் பார்க்கமுடியும்னு சொன்னதுக்கப்புறம்தான்.. இதுதான் அவங்க அம்மாவோட ஊர்ன்னே என்கிட்ட சொன்னாங்க.. இந்த வீட்டோட சாவியையும் என்கிட்ட கொடுத்தாங்க.
[the_ad id=”6605″]
கொடுக்கும்போதே அங்க போய் உங்கப்பாவை தேடுறதா நினைச்சி யார்கிட்டயும் என்னை பத்தி விசாரிக்காத.. அது எங்கம்மாவோட ஊர்தான்.. நீ நினைக்கிறமாதிரி அங்க யாரும் இல்லன்னாங்க.. அவங்க உறுதியா சொல்றதா நினைச்சிட்டுதான் என்கிட்ட சொன்னாங்க.. ஆனா.. அதை சொல்லும்போது அவங்க தடுமாற்றத்தை நான் உணர்ந்தேன். அவங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னுதான் எனக்கு தெரிஞ்சமாதிரி நான் காட்டிக்கலை..” என்றாள் வேதனையாக.
மாறனின் முகமும் வேதனையை காட்டவும்.. சூழலை இலகுவாக்க.. ‘இரு.. காபி போடறேன்..“ என்று உள்ளே சென்று.. காபியை கலந்து கொண்டே தன்னை சமன்படுத்தியவள்.. சிரித்த முகத்தோடு ஒரு டம்ளரை அவனிடம் நீட்டினாள். வாங்கியவன்.. நந்தினி சிரித்த முகத்தோடிருப்பதை பார்த்து..
‘நீ ரொம்ப நல்லபொண்ணு..” என்றான் குறும்பாக.
‘அப்டியா..?” என்றாள் நக்கலாக.
‘ம்ம்.. பின்ன இல்லையா..? நான் அன்னைக்கு ஒரே ஒருமுறை சொன்னதும்.. என்னை உன் புருசனா மனசுல பதிச்சிட்டல்ல..? அதுவும் நான் சொன்ன டைம்க்குள்ள..” என்றான் கர்வத்தோடு..
அலட்டாமல்.. ‘வேற என்ன பண்றது.. இந்த ஜென்மத்துக்கு இந்த கருவாயன்தான் எனக்குன்னு.. என் டிசைன்ல இருக்குமாட்டங்குது..” என்றாள் சோகமாக.
‘அடிங்க.. நான் கருவாயனா..? என் வாயை நல்லா பாரு..” என்று அவளின் முகத்துக்கு மிக அருகில் தன் உதட்டை குவித்து காண்பித்தான்.
அவனின் வாசனையில் ஒரு கனம் தடுமாறியவள்.. ‘நகரு..” என அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ள.. அவனிடம் அசைவே இல்லை..
‘சரி.. நீ நம்ம எம்.ஜி.ஆர் கலரையே மிஞ்சிட்ட.. போதுமா..?” என்றாள் நக்கலாக.
‘அப்டியா..?” என்றவன்.. மேலும் நூலிடை இடைவெளியில் இம்முறை தன் உடலாலும் அவளை நெருங்கி நின்றான். அசைந்தால் அவன் மீது உரசும் நிலையில் இருக்கவும்…
‘அதையும்.. இதையும் மனசுல பதியவச்சி பழகுன்னு சொல்லிட்டு போய்ட்டு.. நாலு மாசம் கழிச்சி பார்க்க வந்ததுமில்லாம.. உரிமையைப் பார்..” என்று முனகினாள்.
அவளின் கண்கள் சோர்ந்திருந்தாலும்.. மாசுமருவற்ற அவளின் பௌர்ணமி முகம்.. மாறனை வசீகரிக்க.. அன்று நைட்சூட்டிலும்.. சுடிதாரிலும்.. பள்ளி மாணவிபோல் காட்சியளித்தவள்.. இன்று வேலைக்கு சென்று வந்திருந்ததால் மிக நேர்த்தியாக கட்டப்பட்ட சாரியில்.. பருவக்குமரியாக அவனின் மனதிடத்தையெல்லாம் சில்லு சில்லாக்கிக்கொண்டிருக்க..
கையை சுவற்றில் ஊன்றிக்கொண்டு.. அவளின் நெற்றியோடு.. தனது நெற்றியை முட்டியபடி.. அமைதியாய் கண்மூடிய நிலையில்.. சிலமணித் துளிகள் இருந்தவன்.. தன்னை சமன்படுத்தி.. ஒருவழியாக அவளிடமிருந்து தன் நெற்றியை பிரித்து..
‘இப்பவும் இன்னைக்கு போனேன்னா.. திரும்ப உன்னை எப்ப பார்க்க வருவேன்னு எனக்கே தெரியாது.. ஆனா.. இனி டெய்லியும் கால் பண்ணுவேன்.. நீ அட்டன் பண்ணனும்..‚ உனக்கு எந்த டைம் கன்வீனியன்ட்டா இருக்கும்னு சொல்லு..” என்றான்.
சிறு தொடுகைக் கூட அவளை தவறாக தொடக்கூடாது.. என்று உறுதியாய் முடிவெடுத்துதான் இங்கு வந்தான் என்றாலும்.. அவளோடு அவ்வளவு நெருக்கத்தில் இருப்பதாலும்.. வயதின் தாக்கத்தாலும்.. ஏக்கத்தோடும்.. தவிப்போடும் வந்தது அவனின் குரல்.
அவனின் குரலின் பேதம் புரிய.. ‘ஈவ்னிங் செவன்க்கு மேல பண்ணு..” என்றவளின் குரலும் சிரமப்பட்டுத்தான் வெளிவந்தது.
பெருமூச்சொன்றை விடுத்து.. இருவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியவன்.. ‘இந்த வாங்க.. போங்கன்னு.. மரியாதைன்னா.. எதாச்சம் தெரியுமா உனக்கு..?” என்றான் தெளிந்த குரலில்.
‘எல்லாம் தெரியும்.. ஆனா உனக்கு இதுவே போதும்..‚ போ.. போ..” என்றாள் சிரிப்போடு.
இவ சிரிப்பே இப்படித்தானா..? இல்ல நாமதான் இவகிட்ட ரொம்ப மயங்குறோமோ..? என குழம்பியவன்.. இதுக்கு மேல இங்க இருக்கக் கூடாது என்றெண்ணி.. ‘சரி.. நான் கிளம்பறேன்..” என்று வெளியே வந்தான்.
[the_ad id=”6605″]
அவனோடு வந்து கதவருகே நின்றவள்.. ‘உன் குடும்பத்தை பத்தி எல்லாமும் சொன்ன.. ஆனா.. நீ.. வெறும் மாறனா..? இல்ல.. லாடு லபக்கு மாறனான்னு.. சொல்லவே இல்லை..?” என்றாள் நக்கலோடு.
அவளை பொய்யாய் முறைத்தவன்.. ‘ம்ம்.. இளமாறன்..” என்று தன் மீசையை முறுக்கிக்கொண்டே சொல்ல..
‘பரவாயில்லயே.. நீ வெறும் மாறன் இல்லையாட்டங்குது.. லாடு லபக்குதான்..‚”
‘இப்படி எதாவது பேசி என்னை மறுபடி உள்ள வர வச்சிடாத..” என்று சிரிப்போடு சொல்லி தன் வண்டியை நோக்கி நடந்தான்.