ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம்— 7
மாறன் சென்றதிலிருந்து நந்தினிக்கு தீவிர சுய அலசல்தான்.. கடந்த மூன்று மாதமாக தன் மனம் அவன் பக்கம் சாய்ந்துவிட்டதென்று நந்தினிக்கும் தெரிந்திருந்ததுதான். ஆனால்.. இப்படி மாறனைப் பார்த்ததும்.. யாரிடமும் வெளிப்படுத்தாத மனக் குமறல்கள் எல்லாம் அவனிடம் பேசி ஆறுதல் அடையும் அளவிற்கு தாம் அவனை நினைத்திருக்கிறோமா என்பதுதான் அவளின் தற்போதைய யோசனை.
அன்று என்னை புருசனாக ஏற்றுக்கொள்ள பழகிக்கோ.. என சொல்லி சென்றவன்.. பிறகு நான்கு மாதம் தொடர்பில்லாமல் இருக்கவும்.. அம்மும்மா சொன்னமாதிரி யாரையும் சீக்கிரம் நம்பிடக்கூடாது.. வந்தால் பேசவேக் கூடாது.. என்றுதான் திடமாக நினைத்திருந்தாள். ஆனால் அவனை பார்த்ததும்.. நம் மனம் எப்படி சட்டென்று மாறியது..? என்ன மாயம் செய்தானோ.. இப்படி யாரிடமும் பகிராத ரகசியங்களையெல்லாம் நாம் அவனிடம் பகிர்ந்துகொண்டோமே.. போ.. என சொல்லியும்.. உள்ளே வந்ததுமில்லாமல்.. சட்டமாய் கட்டிலில் அமர்ந்து தன் தலையணையை எடுத்து மடிமீது வைத்துக்கொள்கிறான்.. உரிமையாக அடுப்படி வரைக்கும் வருகிறான்..
தாம் அம்மும்மாவைப் பற்றி சொல்லும்போது.. அவனின் முகமும் வேதனையை காட்டியதே.. தன் வேதனையை அவனால் தாங்கமுடியவில்லையா..? தன்னை அவ்வளவு நேசிக்கிறானா..? கண்டதும் காதல்ங்கிறதெல்லாம் உண்மைதானா..? எப்படி பார்த்த முதல் நாளே தம்மிடம் காதல் சொன்னான்..? எதனால்..? ஒருவேளை தம் அழகில் ஈர்க்கப்பட்டுவிட்டானா..? என நினைத்தவள்.. கண்ணாடி முன் நின்று தன்னையே முதன்முதலாய் பார்ப்பவள்போல் பார்த்திருந்தாள் தன் முகத்தை. அட..‚ இவ்ளோ அழகாவா நாம இருக்கோம்..? என அந்த நிமிடம்.. அவ்வளவு பெருமை அவளின் முகத்தில்.
சென்னையில் பல இடங்களில் பல காதல் ஜோடிகளை பார்த்திருக்கிறாள். பொது இடம் என்று கூட நினைக்காமல்.. வரம்பிற்கு மீறிய நெருக்கத்தோடும்.. குறைந்த பட்சம் கை கோர்த்தபடியாவது ரோட்டிலும் பீச்சிலும் நிறையபேரை பார்த்திருக்கிறாள். ஆனால்.. இவன்.. சிறிதாய் ஒரு தொடுகை கூட இல்லாமல்.. எப்படி இப்படி அனுதினமும் அவனை நினைக்க வைக்கிறான்..? இப்படித்தான் காதல் ஒருவரை பைத்தியமாக்கிவிடுகிறதா..? அதனால்தான் தன் அம்மும்மா தன் காதலனை மறக்கமுடியாமல் தன் வாழ்க்கையை தியாகம் செய்துகொண்டார்களா..? என்று காதல் ஆராய்ச்சியில் சிறிதுநேரம் ஆழ்ந்தவள்.. எது எப்படிபோ.. இனி தம்மாலும் இளா இல்லாமல் வாழ முடியாது.. என்ற நிலையை உணர்ந்தாள்..
ஒருவேளை இளாவின் வீட்டினில்.. தன் பிறப்பின் உண்மை தெரியவரும்போது தன்னை ஏற்றுகொள்ள மறுத்தால்.. இளா என்ன செய்வான்..? பெற்றோருக்காக தன்னை விட்டுவிடுவானா..? நம்மால் நம்ம அம்மாவை மீறி எதுவும் செய்யமுடியாது என்பது போலத்தானே.. அவனும் அவனின் பெற்றோருக்கு அடிபணிவான்.. எனில்.. அவனின் பெற்றோர் தன்னையோ.. இல்லை தன் அம்மாவையோ அப்பன்பேர் தெரியாதவள்.. என்பதுபோல அவமானப்படுத்தினால்..? என யோசிக்கும்போது அவளின் சந்தோசமெல்லாம் வடிந்துவிட்டது.
அந்த பயத்தோடே கடந்த பத்து நாட்களாக மாறன் தினமும் இரவு போனில் அழைத்தும் அவனின் அழைப்பை ஏற்காமல் இருந்தாள்.
[the_ad id=”6605″]
இன்று அவளின் பிறந்த நாள்.. இதுதான் அவளின் அம்மாவை விட்டு தனித்திருக்கும் முதல் பிறந்தநாள். அமுதா சென்னைக்கு அழைத்தார்.. பள்ளியில் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால்.. வரமுடியாது என வருத்தத்தோடு சொன்னவள்.. அவளின் அம்மாவை இங்கே கூப்பிடும் எண்ணம் தொண்டை வரை வந்தாலும்.. நம்மை பார்க்காமல் அவர்களும் வருத்தத்தில்தான் இருப்பார்கள்.. வருவதென்றால் நாம் கூப்பிடாமலே வந்திருப்பார்கள்.. நாம் வருந்துவது தெரிந்தால்.. அம்மாவும் நிம்மதியாக இருக்கமாட்டார்கள்.. என நினைத்தவள்.. தான் லீவ் போட்டதை கூட தன் அம்மாவிடம் சொல்லவில்லை.
சென்னையிலும்.. பெரிய ஆர்பட்டமாகவெல்லாம் பிறந்தநாள் கொண்டாடமாட்டாள்.. பதிலாக.. வருடாவருடம் தன்னுடை பிறந்தநாளில் யோசிப்பதே.. யாருமில்லாமல் தன்னை பெற்றெடுத்து.. எப்படி அவர்களையும் பார்த்துக்கொண்டு.. தம்மையும் பார்த்திருப்பார்கள்.. என்பதை நினைக்கும் போதே மனம் வாடிவிடும் நந்தினிக்கு.. ஆனால் அமுதா நந்தினியை அதை யோசிக்க விடமாட்டார்.. நந்தினியின் பிறந்த நாளன்று மட்டும் இருவருமே புத்தாடை அணிந்துகொள்வார்கள்.. அருகிலுள்ள கோவிலுக்கு அழைத்துசெல்வது.. நந்தினிக்கு பிடித்ததை வாங்கி தருவது.. என்று அவளின் அம்மாவின் அன்பும்.. ஆசியுமே அவளை உற்சாகப்படுத்தும். இன்று அவளின் அம்மும்மாவின் அணைப்பை மனம் வெகுவாய் தேட.. அவர்கள் அருகில் இல்லாமல் போகவும்.. மனம் மாறனைத்தேட.. மாறனுக்கு அழைத்தாள்.
‘ஹேய்… ராஜி.. இரு ஒரு நிமிசம்..” என கிசுகிசுத்தவன்.. ‘போன் செய்தா அட்டன் பண்ண மாட்டியா..?” என குரலை உயர்த்தினான்.
‘அது..” என்று நந்தினி இழுக்கவும்.. ‘நான் இப்ப சோபிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை வீட்ல இருக்கேன்.. பக்கத்தில நிறைய பேர் இருக்காங்க.. என்னால இப்ப ப்ரீயா பேச முடியாது.. நான் அப்புறம் பேசட்டுமா..?” என்றான் கனிவாகவே.
நந்தினி அமைதியாக இருக்கவும்.. ‘என்னாச்சி ராஜி..? உடம்பு ஏது சரியில்லையா..? எதாவது பேசு..” என்றான் பதட்டத்தோடு.
‘நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீ அங்க என்னன்னு பாரு.. நான் வைக்கிறேன்..” என்று கட்செய்துவிட்டாள். ஆனால் குரலில் அப்படி ஒரு சோர்வு.
மாறனுக்கு மனமே அடையவில்லை. எதற்கு போன் செய்தாள் என சொல்லாமலே கட்செய்துவிட்டாளே.. ஏன் அவ்ளோ சோர்வா பேசினா..? அவங்க அம்மா எதாவது சொல்லியிருப்பாங்களோ.. என்ற யோசனையில் வெளியிலேயே அமர்ந்திருந்தான்.
‘சாப்பிட வாங்க தம்பி..” என்று முரளியின் அம்மா அழைக்கவும் உள்ளே போனான். ‘மாறா.. ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று சுமதி கேட்கவும்..
‘நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா வெளில போகனும்மா.. நீங்க சாப்டுட்டு வரிங்களா..? நான் கிளம்பறேன்..” என்றான் தயக்கத்தோடு.
‘மாப்பிள்ளை வீட்ல தப்பா நினைச்சுக்குவாங்க மாறா.. சாப்பிட எவ்ளோ நேரம் ஆகும்..? வா.. சாப்பிட்டதும் நீ கிளம்பு.. நாங்க பின்னாடி வந்திடறோம்..” என்றார் ராமு.
மனமே இல்லாமல் சாப்பிட உக்காரவும்.. ‘என்னாச்சி மாறா..?” என்றார் ராஜன்.
‘ராஜய்யா.. பத்துநாளா உங்க பொண்ணுக்கு போன் செய்தேன்.. அப்பவெல்லாம் அட்டன் பண்ணாம இருந்துட்டு.. இப்ப அவளே கால் பண்ணினா.. நாம இங்க இருக்கிறதா சொல்லி.. அப்புறம் பேசறேன்னு சொன்னேன்.. சரி.. அங்க முதல்ல பாருன்னு சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டா. என்னன்னு தெரியல.. அவ குரலே சரியில்ல.. அதான் யோசனையா இருக்கு..” என்று சாப்பாட்டை கிளறிக்கொண்டிருந்தான்.
‘இன்னைக்கு ஸ்கூலாச்சே மாறா.. அப்ப ஸ்கூல்ல எதாவது பிரச்சனையா இருக்குமோ..” என்று ராஜனும் பதற..
‘ஆமாம்ல.. இன்னைக்கு ஸ்கூலாச்சே..” என்றவன்.. மீண்டும் நந்தினிக்கு அழைத்தான்.
உடனே அழைப்பை ஏற்றவள்.. ’ம்ம்..” என்றாள்.
‘என்ன ராஜி பேசிட்டிருக்கும்போதே வச்சிட்ட..? இன்னைக்கு ஸ்கூல் போகலையா.? உடம்பேது சரியில்லையா..?” என்றான் பதட்டமாய்.
‘எக்சாம் நடந்திட்டிருக்கு.. இன்னைக்கு என் சப்ஜக்ட் இல்ல.. அதான் லீவ் போட்டுட்டேன்..” என்றாள் உற்சாகமின்றி.
‘சரி.. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில இங்கயிருந்து கிளம்பிடுவேன்.. இன்னைக்கு எங்கையாவது வெளில போலாமா..?” என்றான்.
‘ம்ஹ_ம்.. நான் வரமாட்டேன்..” என்று அவசரமாக மறுத்தாள்.
‘ஏன்..?”
‘ப்ச்ச்.. இந்த ஊர் சுத்துறதெல்லாம் வேணாம்.. என் அம்மும்மாக்கு பிடிக்காது..” என்றாள் ஸ்டிரிட்டாக.
‘சரி.. ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்..” என்றான்.
‘சரி..” என வைத்துவிட்டாள்.
பிறகு பத்தே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தவன்.. பெரியவர்களிடத்தில் எதுவும் சொல்லாமல்.. முரளியிடம்..
‘முரளி.. எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட்டா கிளம்பனும்.. தப்பா நினைக்க வேண்டாம்..” என சொல்லி
‘அப்பா நான் கிளம்பறேன்.. நீங்க பொறுமையா வாங்க.. நிவி அம்மாகிட்ட சொல்லிடு..” என அவசரமாய் சொல்லும் போதே.. தன் மகளுக்கு என்னவோ ஏதோ என நினைத்து..
‘நானும் வரேன் மாறா..” என்று ராஜன் சொல்ல.. ‘இல்ல.. ராஜய்யா.. நீங்க இங்க கொஞ்சம் பாருங்க..” என்று முடித்துக்கொண்டு கிளம்பினான்.
கால் டாக்சியில்தான் சென்றுகொண்டிருந்தான். அவள் குரலின் பேதம் சாப்பிட்டிருக்கமாட்டாள் என்ற சந்தேகம் வரவும்.. போகும்போதே நந்தினிக்கு அழைத்து ‘நான்வெஜ் சாப்டுவியா..” என கேட்க..
‘சாப்பிடுவேன்.. ஆனா.. இன்னைக்கு சாப்பிட மாட்டேன்..” என்றாள்.
மாலை நான்கு மணிபோல்.. மாறன் அவளின் வீட்டிற்க்கு வரவும்.. வெளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
‘ஏன் டல்லா பேசின..? உடம்பு சரியில்லையா..? அதனாலதான் ஸ்கூல் போகலையா..?” என மாறன் கேட்கவும்தான் மாறன் வந்திருப்பதை உணர்ந்தவள்.. சுற்றிலும் பார்த்தாள். யாரும் இல்லை என்றதும் அவளின் முகத்தினில் நிம்மதி தெரியவும்..
‘நீ ஆறு மணிக்கு மேல வருவேன்னு நினைச்சேன்.. என்ன இப்படி திடீர்ன்னு வந்து நிக்கிற..? நளினி ஆன்டிக்கு தெரிஞ்சா அம்மும்மாகிட்ட சொல்லிடுவாங்க.. கிளம்பு கிளம்பு..” என அவசரப்படுத்தினாள்.
‘நளினி ஆன்ட்டி யாரு..?” என்றான்.
‘அவங்க இதே ஊர்தான்.. என் அம்மாவோட சின்ன வயசு பிரெண்ட். வேலைமுடிஞ்சி இந்தபக்கமாத்தான் அவங்க வீட்டுக்கு போவாங்க.. ஒரு சில நேரம் நான் வீட்டுக்குள்ள இருந்தா கூட.. உள்ள வந்து விசாரிச்சிட்டு போவாங்க.. இப்ப அவங்க வர நேரம்தான்.. உன்னை இங்க வச்சி பார்த்தாங்கனா பிரச்சனையாய்டும்..” என்று நந்தினி பேசிக்கொண்டிருக்கும் போதே வீட்டினுள் சென்றிருந்தான்.
நந்தினி உள்ளே வரவும்.. ‘இப்படி எதாவது பிரச்சனை உனக்கு வரும்ன்னுதான் நம்ம கல்யாணம் வரைக்கும் இங்க அடிக்கடி வரக்கூடாதுன்னு நினைச்சேன்.. போன்ல அவ்ளோ டல்லா பேசுற.. உன்னோட குரல்தான் என்னை இங்க உடனே வரவச்சது.. எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம்.. முதல்ல சாப்பிடு..” என்று கொண்டு வந்திருந்த பார்சலை நீட்டினான்.
‘என்னது இது..?” என்றாள்.
‘உனக்கு சாப்பிட வாங்கி வந்தேன்..”என்றான்.
நந்தினிக்கு உடனே கண்கலங்கியது.. ‘நான் மதியம் சாப்டுட்டேன்.. எனக்கு இப்ப பசியில்ல..” என்று முகம் திருப்பினாள்.
அவள் முகத்தை தன்பக்கம் திருப்பியவன்.. ‘சரி பசிக்கும்போது சாப்டுக்கலாம்.. நீ ஏன் டல்லா இருக்க..?” என்று அவளின் நெற்றியை தொட்டுப்பார்த்தான். அவளின் நெற்றி சில்லென்று இருக்கவும்.. நிம்மதி அடைந்தவன்.
‘நீ மதியம் சாப்டிருக்கமாட்ட.. வந்து சாப்பிடு..” என்றான்.
[the_ad id=”6605″]
‘இல்ல.. நான் நைட் சாப்டுக்கிறேன்.. “ என மறுக்க.. அந்த நேரம் அவளின் போன் அடிக்கவும்.. உற்சாகமாய் எடுத்தவள்..
‘அம்மும்மா..” என்று ஆழ்ந்து அழைத்தாள்.. குரலில் கலக்கம் இருந்தது.
‘நந்து குட்டி.. உன்னால இன்னைக்கு தனியா இருக்க முடியாது.. நான்தான் இங்கவான்னு.. சொன்னேன்ல..? பரிச்சை இருக்கு.. வரமுடியாதுன்னு சொல்லிட்டு.. ஏன் இன்னைக்கு ஸ்கூல் போகல..? கோவிலுக்காச்சம் போனியா இல்லையா..?” என்றார் பரிதவிப்பாக.
‘கோவிலுக்கு போனேன் அம்மும்மா.. அங்க பூஜைக்கு லேட்டாய்டுச்சா.. கூடவே கொஞ்சம் சலுப்பாவும் இருந்திச்சி.. அதனாலதான் ஸ்கூலுக்கு போகல..” என்று.. தன் அன்னையின் பரிதவிப்பை உணர்ந்து.. இயல்பாகவும்.. உற்சாகமாகவும் பேசினாள்.
‘சரி நந்துகுட்டி.. இன்னைக்கு நைட்டுக்கு சமைக்காத.. உனக்கு ரொம்ப பிடிச்ச.. பன்னீர்கிரேவியும்.. பட்டர்நானும்.. ஆர்டர் செய்திருக்கேன்.. எட்டு மணிக்கு உனக்கு கிடைச்சிடும்.. அது சாப்டுக்கோ சரியா..? நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.. நைட்டுக்கு கால் பண்றேன்..” என்று கட்செய்தார்.
‘இன்னைக்கு என்ன ஸ்பெசல்..? கோவிலுக்கெல்லாம் போயிருக்க..?” என்றான்.
அவள் அமைதியாக தலைகுனியவும்.. ‘என்ன ராஜி..? எதாவது பிரச்சனையா..? அந்த முத்துயேது எதாவது சொன்னானா..?” என மாறன் பதற..
‘அது.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. அம்மும்மாக்கு உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சிருக்கு.. நளினி ஆன்ட்டிகிட்ட சொல்லி விசாரிக்க சொல்லியிருப்பாங்க போல.. நீங்க உண்டு.. உங்க வேலை உண்டுன்னு இருப்பிங்களாம்.. உங்கப்பாம்மா ரொம்ப நல்லமாதிரியாம்.. உங்கக்கா.. தங்கை.. ரெண்டுபேருக்குமே உங்க வீட்ல பார்த்துதான் கல்யாணம் செய்து வச்சிருக்கிங்க.. இப்ப நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னா.. அப்பா பேர் தெரியாத என்னை.. உங்கப்பாம்மா ஏத்துக்குவாங்களா..?” என்றாள் வருத்தத்தோடு.
‘அப்போ.. என்மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா..?” என்றான் சிறு கோபத்தோடு.
‘அம்மும்மாவும் இப்படித்தான அவங்க காதலனை நம்பியிருப்பாங்க..” என்று கண்கலங்கினாள்.
‘ப்ச்.. என்ன ராஜி இது..? உங்கம்மாவே நானாத்தான் அவங்களை விட்டுட்டு வந்துடேன்னு சொல்லியிருக்காங்கன்னு நீதான சொன்ன..? அது எந்தளவுக்கு உண்மைன்னு நமக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை உங்கம்மா சொல்றது உண்மையா இருந்தா.. அவங்க செய்ததும் தப்புதான..?” என மாறன் பேசப்பேச.. அமைதியாகவே கேட்டிருந்தாள். ஆனால் முகம் சோர்வாகத்தான் இருந்தது.
‘சோபனாக்கு அடுத்தமாசம் கல்யாணம்னு டேட் பிக்ஸ் பண்ணியிருக்கோம்.. இனிமே எதை நினைச்சும் நீ வருத்தப்படாத.. யாருக்கும் பயப்படவும் கூடாது. யாராவது உன்னை எதாவது கேட்டா.. ஆமாம்.. நான் மாறனைத்தான் கல்யாணம் செய்துக்கப்போறேன்னு தைரியமா சொல்லு.. அது யாராயிருந்தாலும் பரவாயில்ல..‚ சோபி கல்யாணம் முடிஞ்சதும் உன் அம்மும்மாகிட்ட.. எங்கப்பாம்மாவோட போய் நம்ம கல்யாணம் பத்தி பேசி முடிச்சிடறேன்…‚” என்றான் உறுதியாக.
அவளின் முகத்தில் சற்று தெளிவு வரவும்.. ‘அப்ப.. என்மேல நம்பிக்கையில்லாமத்தான் என்னை அவாய்ட் பண்ணனும்னு நினைச்சி.. என் போனை அட்டன் பண்ணாம இருந்தியா..?” என்றான் முறைப்போடு.
‘அவாய்ட் பண்ணனும்னு இல்ல.. இனிமே நானே நினைச்சாலும் உன்னை என்னால அவாய்ட் பண்ணமுடியாது. நீ சொன்னமாதிரி உன்னை என் புருசனாவே மனசுல பதிச்சிட்டேன் போல.. அதுனாலதான் உங்கப்பாம்மா சம்மதிக்கலைன்னா என்ன பண்றதுன்னு பயமாவே இருக்கு..” என்று தன்னிலை மறந்து நந்தினி விளக்கம் கொடுக்க.. மாறனின் பார்வை மாறியிருந்தது.
நந்தினி குனிந்திருக்கவும்.. ‘என்னன்னு மனசுல பதிச்சிருக்க..? சரியா காது கேக்கல.. இன்னொரு முறை சொல்லு..” என்று அவளின் முகத்தை குனிந்து பார்த்தான் சிரிப்போடு.
பிறகுதான் சுய உணர்விற்க்கு வந்தவள்.. ‘ம்ம்.. செடி நடலாம்னு நினைச்சா.. பொண்டாட்டிக்கு கை வலிக்குமேன்னு நினைச்சி.. தானே பள்ளம் தோண்டி வைக்கிற அளவுக்கு.. ஒரு அடிமை புருசன் எனக்கு கிடைக்கமாட்டான்னு சொன்னேன்..‚” என்று சிரித்தாள்.
‘அடிங்க.. அவன்னா சொல்ற..? உன்னை…” என்று அவளருகில் நெருங்கி நின்று அவளின் முகம் நோக்கி தன் முகம் தாழ்த்த.. நந்தினி முத்தம் ஏது கொடுத்திடுவானோ என்ற பயத்தில்.. தன் வாயை தன் கைகொண்டு இருக்கிபொத்த.. சுவற்றோடு பல்லிபோல் ஒட்டியிருந்தவளின் இருபுறமும் தன் கையை வைத்து அவள் நகர முடியாதபடி நின்றவன்.. அவளின் நெற்றி.. காதுமடல்.. கன்னம் வரை தன் வாய் கொண்டு மென்மையாய் ஊதிக்கொண்டே.. அவளின் கழுத்து பகுதியை கடந்ததும்.. படபடத்தவள்.. தன் கைகளை குறுக்கே வைத்து.. பட்டென திரும்பினாள் அவனின் மார்பில் உரசியபடியே..
அவளின் உரசலில் சற்றே நிலை தடுமாறியவன்.. தன்னையும் நிலைபடுத்தி.. அவளையும் மேற்கொண்டு சோதிக்காமல்..
‘ரொம்ப ஆசைப்படாத.. கல்யாணத்துக்கு முன்னாடி தப்பான எண்ணத்தோட.. உன்னை தொடவே கூடாதுன்னு முடிவு செய்திருக்கேன்.. இதுல எங்க முத்தமெல்லாம் கொடுக்கிறது..? நான் ரொம்ப நல்ல பையனாக்கும்..‚” என்று தன்னை தானே பெருமையாய் பேசி அவளை வம்பிளுத்தான்.
எதை கொண்டு அடிக்கலாம் என்று நந்தினி சுற்றிலும் கண்களை சுழற்ற..
‘பேச்சு பேச்சா இருக்கும்போது.. அடிதடி கூடாது.. சொல்லிபுட்டேன்..‚” என்று வடிவேல் பாணியில் பயந்தவன் போல் மாறன் சொல்ல.. லேசாய் சிரித்தாள்.
அவளின் சிரிப்பில் சந்தோசமடைந்தவன்.. ‘நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கும்..‚ இப்படி ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு தனியா இருக்காத.. அதனாலதான் கண்டதையும் யோசிக்க தோணுது..” என்றான் அன்புக் கட்டளையாய்.
நந்தினி சரி என்பதுபோல் தலையசைக்க.. ‘சாப்பிடு.. நான் கிளம்பறேன்..”
[the_ad id=”6605″]
பார்சலை பிரித்தவள்.. தன் கையில் எடுத்த சாப்பாட்டை அவன் வாயருகே நீட்ட.. ஆச்சர்யத்தோடு அவன் பார்க்க.. மாறன் சங்கடப்படுகிறோனா.. என நினைத்தவள்.. பிறகு ஸ்பூன் எடுத்து வந்து.. அதில் உணவெடுத்து மீண்டும் நீட்ட..
‘ஸ்பூன் வேண்டாம்.. கையிலயே கொடு..” என்றான்.
மாறன் சொல்லவும்.. மீண்டும் அவள் அவன் வாயருகே சாப்பாடோடு அவள் கை செல்ல.. அதனை பட்டும்படாமலும் வாங்கிக்கொண்டான். பிறகு அவள் சாப்பிடும்போது..
‘இன்னைக்கு எனக்கு பர்த்டே.. உனக்கு கொடுக்கிறதுக்கு எதுவும் வீட்ல இல்ல.. அதான் நீ வாங்கி வந்ததையே கொடுத்தேன்..” என நந்தினி சாதாரணமாக சொல்லிக் கொண்டே மீண்டும் அவள் வாயருகே உணவினை எடுத்து செல்ல.. அவளின் கைபிடித்து.. தன் வாயில் தானே திணித்துக்கொண்டான். அவளின் ஐந்து விரல்களும் அவனின் வாயில் இருக்க.. சற்று நேரம் நந்தினியையே ஆழ்ந்து பார்த்தவன்..
தன் வாயில் இருந்து விடுவித்த கையை.. தன் கைக்குள் வைத்து..
‘உனக்கு என்ன வேணும்.. சொல்லு..?” என்றான் தவிப்பு கலந்த அன்புப்பார்வையோடு.
‘நீ பீல் பண்ணாத.. அம்மும்மா சொன்னாங்கன்னுதான் கோயிலுக்கு கூட போனேன்.. எனக்கு பர்த்டேன்னாலே.. நான் பிறந்தப்ப யாருமில்லாம என் அம்மா.. எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பாங்கன்னுதான் எனக்கு எப்பவும் தோணும்.. அதனால.. பர்த்டேல்லாம் அதிகம் கொண்டாடமாட்டேன்.. அம்மும்மாக்காக புதுடிரெஸ் மட்டும் போட்டுப்பேன்..” என கண்கலங்கினாள்.
எப்பொழுது எழுந்தான்.. பக்கத்தில் வந்தான் என்றே புரியவில்லை.. மாறனின் ஆதரவு நிறைந்த அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் நந்தினி. ‘முடிஞ்சி போனதை பத்தி யோசிச்சா வருத்தம்தான் மிஞ்சும்..” என அவளை தேற்றினான்.. பின் அவளின் அன்னை ஆர்டர் செய்த இரவு உணவு அவளைத்தேடி வர.. அதை பெற்றுக்கொண்டவள்.. அவளின் அம்மாவின் பெருமையே பேசிக்கொண்டிருக்க.. பொறுமையாகவும்.. பெருமையாகவும்.. கேட்டுக்கொண்டிருந்தவன்.. பிறகு நந்தினியை சாப்பிடவைத்து.. இரவு ஒன்பது மணிவரை அவளோடே இருந்து.. நந்தினிக்கு தூக்கம் வரவும்தான் கிளம்பினான் இளமாறன்.