அத்தியாயம் – 7–2
அடுத்து வந்த வாரத்தில் இருந்து சோபனாவின் திருமணத்திற்கு நகை ஜவுளி வாங்குவதற்கு அனைவரும் கடைக்கு செல்ல திட்டமிட்டிருக்க.. நிவேதாவையும்.. சோபனாவையும் தனியாக அழைத்தவன்.. ‘சோபி.. எனக்கொரு ஹெல்ப் பண்றியா..?” என்றான் தளர்ந்த குரலில்.
‘என்ன மாறா.. பணமேது கம்மியா இருக்கா..? என்கிட்ட இருக்கிற நகையை சோபிக்கு கொடுத்திடலாம்..” என்று நிவேதா பதட்டத்துடன் சொல்ல..
‘ப்ச்.. அது இல்ல.. நிவிக்கா..” என்று தயங்கினான்.
‘நீ எதாவது ஐஸ் வைக்கனும்னாதான நிவியை அக்கான்னு சொல்லுவ..? என்ன விசயம்..?” என்று சோபனா சந்தேகத்துடன் கேட்டாள்.
‘சொல்றேன்.. ஆனா இப்போதைக்கு அப்பாம்மாகிட்ட சொல்லக்கூடாது..” என மாறன் கண்டிசன் வைக்கவும்..
‘மாறா.. நீ ஏதோ பண்ற போல.. ஒழுங்கா என்னன்னு சொல்லு.. அப்பாம்மாகிட்ட சொல்லனுமா வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்..” என்றாள் சோபனா.
‘அப்ப நான் சொல்லமாட்டேன் போ..” என கோபத்தோடு எழுந்தான்.
‘சரி.. சரி.. சரி.. என்னன்னு சொல்லு.. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்..” என்று அவனின் கைபிடித்து உக்காரவைத்தாள் சோபனா.
‘நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்..” என்றான்.
‘என்ன..?” என்று இருவரும் ஒருசேர அதிர்ச்சியோடு கேட்டனர்.
‘ஆமாம்க்கா.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்.. அவளைத்தான் கல்யாணம் செய்துக்கப்போறேன்..” என்றான் உறுதியாக.
‘யார்டா அந்த பொண்ணு..? நம்ம அப்பா ஒத்துக்கமாட்டார் மாறா.. ஏண்டா இப்படி பண்ணின..?” என்று நிவேதா பதறினாள்.
‘அப்பாம்மாவை நான் பார்த்துக்கிறேன் நிவி.. எனக்கு இப்ப ஒரு ஹெல்ப் வேணும்..” என்று சோபனாவை பார்த்தான்.
‘நான் என்ன பண்றது மாறா..?” என்று சோபனா மேலும் பதட்டமானாள்.
‘நீ ஒன்னும் பண்ணவேண்டாம். சாரி எடுக்கும்போது நான் தனியா ஒரு சாரி எடுக்கறேன்.. அந்த சாரியை கொண்டுபோய் நீயும் நிவியும் அவகிட்ட கொடுத்து.. உன் கல்யாணத்துக்கு வரசொல்லி பத்திரிக்கை வச்சிட்டு வாங்க..” என்றான்.
‘என்ன..? நான் மாட்டேன்..” என்று அதிர்ந்தாள் சோபனா. உடனே மாறன் முகம் வாடிவிட..
‘என்னை அப்பா எங்கையும் வெளில போகக்கூடாதுன்னு சொல்லியிருக்கார் மாறா.. வேலையையும் ரிசைன் செய்தாச்சு.. நான் என்னன்னு சொல்லிட்டு வெளில போகறது..?” என்று பதட்டமாய் கேட்டாள் சோபனா.
‘வெளில எங்கையும் போக வேண்டாம். அவ இந்த ஊர்லதான் இருக்கா.. இப்ப ஒரு ஐஞ்சு மாசத்துக்கு முன்னாடிதான் நம்ம ஊர் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சி இங்க வந்தா.. ராஜி உன் பிரண்டோட தங்கைதான்னும்.. அவளை பார்த்துக்க சொல்லி என் பிரண்டு போன் செய்தா.. அதனால அவளுக்கும் பத்திரிக்கை வைக்கனும்னு அப்பாகிட்ட சொல்லிட்டு அவளை போய் பார்த்திட்டு வா.. அப்பதான் கல்யாணத்துல அவளை உன் கூடவே நிற்க வைக்கமுடியும்..” என்று அவளின் வீட்டின் முகவரியையும் சொன்னான்.
‘அடப்பாவி.. நீ இவ்ளோ ப்ளான் போட்டு வச்சிருக்கியா..? பின்னாடி அப்பாக்கு தெரிஞ்சி.. நீங்களும் இதுல கூட்டான்னு என்னைத் திட்டுவாரு மாறா..” என்று சோபனா மறுக்க..
‘எனக்காக இதை கூட நீ செய்யமாட்டியா..? சரி.. போ.. உன் உதவி ஒன்னும் எனக்கு தேவையில்ல..” என்று கோபமாய் அங்கிருந்து ஹாலுக்கு வந்து உக்கார்ந்தான்.
‘என்ன மாறா..? கடைக்கு கிளம்பலையா..? ஏன் உன் முகம் ஒரு மாதிரியிருக்கு..?” என்று கேட்டபடி சுமதி மாறனின் பக்கத்தில் வந்து உக்கார்ந்தார். சேபனாவும்.. நிவேதாவும்.. ரூமிலிருந்து பதட்டத்தோடு வெளியே வரவும்..
‘நான் என் அக்கா தங்கை மேல உயிரையே வச்சிருக்கேன்.. நான் கடைக்கு வராம இருப்பேனா..? நீங்க போய் ரெடியாகுங்க.. நான் பேன்ட் சர்ட் போடறதுதான்..” என்று அழுத்தமாக சொல்லி டி.வி.யை ஆன் செய்து அதில் கவனத்தை செலுத்தினான்.
‘அப்ப எங்களுக்குத்தான் உன்மேல பாசம் இல்லைங்கிறியா..?” என்று சோபனாவும் கோபமாய் கேட்கவும்.. சுமதி பதறினார்.
‘என்ன மாறா ஆச்சி..? ஏன் மூனுபேரும் முகவாட்டமா இருக்கிங்க..?” என்று வெளியில் இருந்து வந்த ராமு கேட்கவும்.. ‘ஏங்க.. நாம வெளில போயிருந்த போது உங்க புள்ளைங்க வழக்கம்போல சண்டை போட்டுகிச்சிங்க பாருங்க..” என்று சுமதி வருத்தப்படவும்..
‘சோபி.. கல்யாணம் ஆகிப் போறப்ப கூட மாறனை வம்பிளுக்காம இருக்கமாட்டியா..?” என்று ராமு சோபனாவை செல்லமாய் முறைத்தார். நிவேதாவின் கல்யாணத்திற்கு பிறகு இவர்களுக்குள் வேலை செய்வதில் அடிக்கடி சண்டை வருவதை மனதில் வைத்துதான் கேட்டார்.
‘அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. நீங்க சாப்டுங்க. நாம கடைக்கு போலாம்..” என்றான் மாறன்.
[the_ad id=”6605″]
‘சுமதி சீக்கிரம்.. “ என்று உற்சாகத்தோடு சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிடும்போதே
‘அப்பா.. முதல்ல நகைக்கடைக்கு போலாமா..? இல்ல ஜவுளி கடைக்கா..?” என்றான்.
‘எந்த கடைக்கு போலாம் சோபி..?” என தன் மகளிடமே கேட்டார் ராமு.
‘உங்க இஷ்டம்ப்பா.. எனக்கு டையர்டா இருக்கு.. நீங்களே போய் வாங்கிட்டு வந்திடுறிங்க..” என்றாள் முகவாட்டத்தோடு.
மாறன்.. ‘என்னாச்சி சோபி.. சும்மா விளையாட்டுக்கு பேசினுதுக்கெல்லாம் கோபிப்பியா..? வந்து ரெடியாகு..” என சொல்லிக்கொண்டே அவளை உள்ளே இழுத்துப்போனவன்..
‘சாரி.. சோபி.. நான் உன்கிட்ட கோபிச்சிருக்கக்கூடாது. என் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்.. நீ உன் கல்யாணத்தை என்ஜாய் பண்ணு..” என்றான் தன் கோபம் மறைத்து இலகுவாய்.
‘உன் பிரச்சனைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி.. நீ ஏன் மாறா இப்படி பேசற..? அப்பா என்ன சொல்வாரோன்னு கொஞ்சம் பயமா இருக்குன்னுதான சொன்னேன்..?” என்று கண்கலங்கினாள் சோபனா.
அமைதியாய் ஒரு நிமிடம் கண்மூடித்திறந்தவன்.. ‘சாரி சோபி.. எதோ நியாபகத்தில அப்படி சொல்லிட்டேன்.. நீ எதையும் மனசில போட்டு குழப்பிக்காத.. ரெடியாகி வா..” என்று சமாதானமாய் சொல்லி வெளியே போக..
அவனின் கையை பிடித்து நிறுத்தியவள்.. ‘உன் கேர்ள் பிரண்டுக்கு சாரி எப்படி..? என் சாரிக்கு ஈக்குவலாவா..? இல்ல அதுக்கும் மேலையா..?” என்று லேசாய் சிரித்தாள்.
மாறன் முகமும் உடனே இலகுவாய் மாறினாலும்.. ‘நீ ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ணவேண்டாம் போ..” என்று முறுக்கினான்.
‘என் ஹெல்ப் வேணாம்னா.. என்னோட கல்யாணத்துக்கு.. என்னன்னு சொல்லி அண்ணியை கூட்டிட்டு வருது..?” என்று சோபனா நக்கலாய் கேட்கவும்.. தன் தங்கையின் அண்ணி என்ற வார்த்தையில் சரணடைந்த மாறன்..
‘அப்ப நீ போய் அவளுக்கு பத்திரிக்கை வைக்கிறியா..? போகும் போது கூடவே நிவியையும் கூட்டிட்டுப் போ..” என்றான் சந்தோசத்துடன்.
‘ம்ம்.. ம்ம்.. என்ஜாய் என்ஜாய்..” என்று தன் குரலை உயர்த்தினாள்.
‘மாறா.. டைம் ஆச்சுடா.. இப்ப போனாலே உங்கம்மா சாய்ங்காலம் பண்ணிடுவா.. இந்த நேரத்தில என்னடா அரட்டை வேண்டியிருக்கு..?” என்று ராமு குரல் கொடுக்கவும்.. ‘வந்திட்டேன்ப்பா..” என உற்சாகமாய் சொல்லி அனைவரும் சந்தோசமாய் கடைக்கு கிளம்பினர்.
‘நகை சோபிக்கு மட்டும்தான மாறா எடுக்கப்போறோம்.. அது சீக்கிரம் எடுத்திடலாம்.. அதுவுமில்லாம நகையை பத்திரப் படுத்திகிட்டு சுத்திட்டிருக்க முடியாது.. அதனால முதல்ல ஜவுளி வாங்கிடலாம்.. உங்கம்மா அதுக்குத்தான் ரொம்ப லேட் பண்ணுவா..” என்று ராமு சொல்ல.. ஜவுளி கடைக்கு சென்றனர்.
‘சோபி.. முதல்ல அம்மாக்கு செலக்ட் பண்ணு..” என்றான் மாறன்.
‘எனக்கு நிவேதா கல்யாணத்துக்கு எடுத்ததே நிறைய இருக்கு மாறா.. எனக்கு வேண்டாம்..” என்று சுமதி மறுக்க..
‘நிவி கல்யாணத்தில போட்டதையே சோபி கல்யாணத்திலயும் போட்டா.. என் அம்மா கௌரவம் என்னாகிறது..? இல்ல இந்த மாறனோட கௌரவம்தான் என்னாகிறது..?” என்று சிரிப்போடு சொன்னவன்.. ‘நிவிக்கா.. நீ அம்மாகிட்ட இல்லாத கலரா பார்த்து செலக்ட் பண்ணு.. ஒரு அஞ்சாறு சாரியாச்சம் நல்லா காஸ்ட்லியாவே எடு.. இளமாறனோட அம்மான்னா சும்மாவா..?” என்று அவனின் அம்மா தொடங்கி கிசோர் வீட்டினருக்கும் சேர்த்து.. அனைவருக்கும் தேவைக்கு அதிகமாகவே எடுத்தான்.
நிவேதாவிற்க்கும் சோபனாவிற்க்கும் முகூர்த்தத்திற்க்கு கட்டுவதற்க்கென்று ஒரே மாடலில் கலர் மட்டும் வேறையாய் எடுத்துக்கொண்டனர். மாறன் அங்கிருந்த தங்கநிற ஜரிகையோடு.. கனகாம்பரம் கலரில் இருந்த பட்டுசாரியை வருடிக்கொண்டிருக்க..
‘இதையா எடுக்கப் போற..?” என்று சோபனா கிசுகிசுக்க..
ஆமாம் என்பதாய் மாறன் தலையசைக்க.. ‘இந்த கலர் ரொம்ப எடுப்பா இருக்கே மாறா..” என்று நிவேதாவும் இப்போது கிசுகிசு மீட்டிங்கில் கலந்துகொள்ள..
‘இந்த எடுப்பான சாரியை கட்டினாலும்.. சாரியை விட என் பொண்டாட்டிதான் எடுப்பா.. ரொம்ப அழகா இருப்பா.. அதனால இதையே எடுத்துக்கலாம்..” என்று மாறன் கிசுகிசுக்க.. ‘ஆங்..” என்று பார்த்திருந்தனர் அக்கா.. தங்கை இருவரும். பிறகு மேட்ச்சிங்.. பிளெஸ்.. இன்ஸ்கர்ட்.. என்று சோபனா அவளின் சாரிக்கு பார்த்திருக்கவும்.. அதைப் பார்த்தவன்..
[the_ad id=”6605″]
‘நீங்க என்னென்ன வாங்கரிங்களோ.. எல்லாம் ஒன்னுவிடாம அவளோட சாரிக்கும் மேட்ச்சிங் வாங்கிடனும்..‚” என்று மாறன் அன்பு மிரட்டல் விட..
‘அடப்பாவி..” என்று அசந்துதான் போனார்கள் இருவரும்.
அதன் பின் மதிய உணவிற்கு பிறகு நகைக் கடைக்கு வந்தனர். அங்கும் மாறனின் கலாட்டா ஆரம்பித்தது. நான்கு மணிநேரம் முடிந்திருந்த நிலையில் சோபனாவிற்கு நகையெல்லாம் வாங்கி முடித்த பிறகு.. ‘நிவி.. உனக்கும் அம்மாக்கும் எதாவது புதுசா வாங்கு..” என்றான் மாறன்.
‘உனக்கென்ன கொழுப்பா மாறா..? என் கல்யாணத்துக்கு வாங்கின நகையே இன்னும் யூஸ் பண்ணாம நாலு செட் பக்கமா வச்சிருக்கேன். அதுவே போதும்..” என்று நிவேதா தன் தம்பியின் நிலையறிந்து கோபமாய் சொல்ல..
‘நிவி.. அவன்கிட்ட கோடி கணக்கில பணம் இருக்கு.. நீ எடுத்துக்கோ..” என்று சோபனா கிசுகிசுக்க.. ‘எப்படி டீ..” என்று நிவியும் கிசுகிசுக்க..
‘எல்லாம் நேர்மையா சம்பாரிச்சதுதான்.. நீ தைரியமா என்ன வேணுமா எடுத்துக்கோ நிவி… அப்படியே என் பொண்டாட்டிக்கும் இந்த நகை செட்டை செலக்ட் செய்திருக்கேன்.. நல்லாயிருக்கான்னு பார்த்து சொல்லு..” என்று மாறனும் கிசுகிசுக்க..
‘அடப்பாவி.. நல்லவேளை.. தாலி மாப்பிள்ளை வீட்லதான் வாங்கனும்ங்கிறதால முரளி வீட்ல வாங்கறாங்க.. இல்லன்னா அதையும் கையோட வாங்கி.. என் கல்யாணத்தோடவே சேர்த்து இவன் கல்யாணத்தையும் முடிச்சிருப்பான் நிவி..” என்றாள் சோபனா அதிர்ச்சி மாறாமல்.
‘என்ன..? தாலி… மாப்பிள்ளை வீட்லதான் வாங்கனுமா…? அப்ப சரி.. நான் இப்பவே அதையும் வாங்கிடறேன்..” என்று மாறன் தமாசாய் சொல்ல..
‘அடப்பாவி..” என்று வழக்கம்போல் சோபனா ஆரம்பிக்க.. ‘இங்க வந்தும் உங்க அரட்டை முடியலையா.. எல்லாம் எடுத்தாச்சில்ல.. வாங்க பில் கட்டிட்டு கிளம்பலாம்..” என்று சுமதி அழைத்தார். நிவேதாவிற்கு மாறன் வாங்கி கொடுத்த காரில்தான் அனைவரும் வந்திருந்தனர். கல்யாணம் முடியறவரைக்கும் இங்கையே இருக்கட்டும் என்று கிசோர் விட்டுச்சென்றிருந்தான்.
மாறன் கார் ஓட்டவும்.. சோபனா முன் சீட்டில் உக்கார்ந்திருந்தாள். வரும் வழியில்.. வாங்கிய நகை.. சாரி பற்றிய பேச்சுக்கள்.. பிறகு சோபி சீக்கிரம் கொஞ்சம் நல்லா சமைக்க கத்துக்கோ.. என்ற நிவேதாவின் அறிவுரை.. பிறகு ஒரு இடத்தில் காரை நிறுத்தி சாப்பிட்டு போலாம்.. என மாறன் சொல்ல.. சுமதி மறுத்தாலும் அவரை சம்மதிக்க வைத்து சாப்பிட்டு பிறகே கிளம்பினர். கார் வீட்டை நெருங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில்..
‘சோபி.. வீட்டுக்கு போனதும் அவளுக்கு வாங்கின சாரியையும்.. நகையையும் கவனமா எடுத்து தனியா வச்சிடு..” என்று மாறன் கிசுகிசுக்க..
‘என்னதாண்டா அப்படி ரகசியம் பேசுவிங்க..? என்கிட்ட மட்டும் எதையுமே சொல்லமாட்டுதுங்க.. எப்பப்பாரு தங்கச்சி காதை கடிக்கிறதே வேலையா வச்சிருக்கான்.. சோபி கல்யாணம் முடிஞ்சி போய்ட்டான்னா என்கிட்டதான வந்தாகனும்.. அப்ப இருக்கு உனக்கு…‚” என்று சுமதி கோபித்தார்.
வீட்டிற்கு வந்து அனைவரும் களைப்பாய் உக்காரவும்.. நிவேதா அந்நேரத்திலும் அனைவருக்கும் டீ வைத்து எடுத்து வந்தாள். இதமாக அருந்திக்கொண்டிருந்த வேளையில்.. நியாபகம் வந்தவராக..
‘மாறா.. நம்ம வேலாயுதம் மகன் முத்து இல்ல.. அவன் உன்னைப் பத்தி என்னென்னவோ சொல்றான்ப்பா.. எனக்கு பதட்டமாய்டுச்சி.. உன் அப்பாதான் என் பையன் அப்படி பட்டவன் இல்லைன்னு சொன்னார்..” என்று சுமதி ஆரம்பித்தார்.
அதிர்ச்சிதான் என்றாலும்.. அதை மறைத்து.. ‘என்னப்பா சொன்னான் முத்து..?” என்றான் மாறன்.
‘அவங்க வயலுக்கு முன்னாடி ஒரு வீடு எப்பவும் பூட்டியிருக்கும்ல..? அங்க ஒரு பொண்ணு வந்து தங்கியிருக்கு..‚ அது அமுதான்னு ஒருத்தவங்க.. உனக்கு சொன்னா தெரியாது.. ரொம்ப சின்ன வயசா இருக்கும்போதே ஊரைவிட்டு போய்டுச்சி.. அந்த அமுதாவோட பொண்ணுதானாம் அங்க தங்கியிருக்கிற பொண்ணு..
‘அந்த பொண்ணு இந்த ஊருக்கு வந்ததில இருந்து.. நீதான் அந்த பொண்ணுக்கு எல்லா உதவியும் செய்றியாம்.. நம்ம சோபிக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க போயிருந்தோம்ல..? அன்னைக்கு நீ அந்த பொண்ணு வீட்லதான் நைட் வரைக்கும் இருந்தன்னும்.. அந்த பொண்ணுகிட்ட நீ பேசிட்டிருக்கங்கிற மாதிரியும் சொன்னான்.
[the_ad id=”6605″]
அதுவும் அந்த பொண்ணு அப்ப பார்த்து.. அவங்க வீட்ல இருக்கிற செடிக்கு தண்ணி ஊத்திட்டிருந்துச்சி.. அந்த பொண்ணுக்கு காது கேட்கறமாதிரியே சொன்னான் மாறா. அந்த முத்துபையன் பேச.. பேச.. அந்த பொண்ணுக்கு அழுகையே வந்திடுச்சி.. எனக்கு அந்த பொண்ணை பார்த்து பாவமா போய்டுச்சி..
நான் அந்த பொண்ணுகிட்ட போய்.. நீ எதுவும் தப்பா நினைக்காதம்மா.. அவன் ஆள் சரி கிடையாது.. அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சுன்னு நினைச்சிகிட்டு.. நீ வருத்தப்படாதம்மான்னு ஆறுதல்தான் சொன்னேன்..
ஆனா.. உங்கம்மாதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டா..” என்று தன் முகத்தில் வருத்தம் காண்பித்தார் ராமு. தன் அப்பாவின் வருத்தத்தில் பதறியவன்.. தன் அம்மாவை ஊன்றிப் பார்த்து..
‘அங்க என்ன நடந்ததுன்னு ஒன்னுவிடாம சொல்லுங்கம்மா..” என்று மிரட்டும் தோரணையில் கேட்டான். சுமதி சொல்ல.. சொல்ல.. அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவன்.. தன் அம்மாவிடம் கோபத்தை காண்பிக்க முடியாமல்.. தனதறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
‘ஏங்க.. நான் அந்த பொண்ணை திட்டினேன்னதும்.. நம்ம மாறன் முகம்.. ஏன் ஒரு மாதிரி ஆகிடுச்சி..? இவன் வெள்ளந்தியா உதவிசெய்தாலும்.. தனியா இருக்கிற பொண்ணுக்கு செய்தா.. ஊர் உலகம் தப்பாதான பேசும்..? அப்படி தேவையில்லாம மாறனுக்கு எந்த கெட்ட பேரும் வந்திடக்கூடாதுன்னுதான நான் அந்த பொண்ணுகிட்ட அப்படி பேசினேன்..? இதுல என்ன தப்பிருக்கு..?” என சுமதி இராமுவிடம் கேட்க..
அதற்கு இராமன் பதிலளிக்கும் முன்.. ‘ஏற்கனவே.. அந்த வீட்டுமேல.. அந்த வேலாயுதத்துக்கு ஒரு கண்ணு.. அது ஊருக்கே தெரிஞ்ச விசயம்.. இப்போ அந்த வீட்டுக்கு புதுசா ஒரு ஆள் வந்திட்டாங்களேன்ற கோபத்திலயும்.. அதை அபகரிக்கிறதுக்காகவும்.. அந்த பொண்ணை துரத்தி விட்டுடலாம்னு நினைச்சி.. அந்த முத்து.. பொய்கூட சொல்லியிருக்கலாம்..
அப்படி இல்லன்னாலும்.. நீ நம்ம மாறன்கிட்டதான இதுபத்தி முதல்ல கேட்டுருக்கனும்..? தப்பு யார் பக்கம் இருக்குன்னே தெரியாம.. நீ எதுக்கும்மா அந்த பொண்ணை திட்டின..? இப்ப நீ திட்டினது அங்கயிருக்கிற நாலு பேராவது பார்த்திருப்பாங்க.. அது இன்னும் நாலுபேருக்கு பரவும்.. பையனை பெத்த உனக்கே இப்படி பதறுதுன்னா.. தனியா இருக்கிற அந்த பொண்ணுக்கு எப்படியிருந்திருக்கும்..?” என சோபனா சற்று வருத்தத்தோடு கேட்டாள்.
சுமதி பரிதாபமாய் முழிக்க.. ‘சரி விடும்மா.. எதுன்னாலும் மாறன் பார்த்துக்குவான்..” என தன் அன்னையை தேற்றினாள் சோபனா.
ரூமிற்க்குள் வந்தவன்.. ஒரு மணிநேரமாக பலமுறை ராஜிக்கு அழைத்துப்பார்த்தான்.. அவள் எடுக்கவே இல்லை. ‘நான்தான் உனக்கு.. நீதான் எனக்கு.. நீ மட்டும்தான்..‚” என ஒரு குறுஞ்செய்தியை ராஜிக்கு அனுப்பியவன்.. சில மணித்துளி ஆழமாய் யோசித்து.. பிறகு தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்தவனாய் படுத்துறங்கினான்.. அடுத்த நாள் காலை தன் வழக்கமான வேலைகளையெல்லாம் முடித்து.. ஒன்பது மணிபோல் தன் மொபைலை எடுத்தான்.