ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம்– 8
மதுரை நகரில் அதிரடியாய் வளர்ந்து வரும் அரசியல்வாதியின் மகன் ஜித்தேந்திரன்.. அவர்களின் கணக்கில்லா சொத்துக்களுக்கு மாறன்தான் ஆடிட்டிங் செய்து வருகிறான். மாறனுக்கு அதிகபட்ச வருமானம் அவர்களின் மூலம்தான். பல லட்சங்களில் அவர்களிடம் கமிசன் வாங்கினாலும்.. இதற்கு முன் அவர்களிடம் வேலை பார்த்த ஆடிட்டர்களை விட.. மாறன் வாங்கும் கமிசன் பணம் குறைந்ததுதான்.. தவிர.. மாறன் தொழிலில் நேர்த்தியானவன்.. நேர்மையானவனும் கூட.. எனவே ஜித்தேந்திரனுக்கும் மாறனுக்கும் ஒரு நெருங்கிய நட்பிருந்தது. அவனிற்கு தான் அழைத்திருந்தான் மாறன்.
‘ஜித்.. எனக்கொரு ஹெல்ப் வேணும்..”
‘சொல்லுங்க மாறன்..” என்றான் ஜித்தேந்திரன்.
‘வேலாயுதம்ன்னு எங்க ஊருக்காரன் ஒருத்தன்..” என ஆரம்பித்து.. முத்துவைப் பற்றியும் சொல்லி.. ‘இங்க ஊருக்குள்ளயும் அவனுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கு.. இங்க லோக்கல் போலீஸ்ஸ்டேசன்ல.. உங்களுக்கு தெரிஞ்சவங்ளை வச்சி.. அந்த முத்துவை கொஞ்சம் மிரட்டி வச்சா பரவாயில்ல.. நான் கட்டிக்க போற பொண்ணு வேற தனியா இருக்கா.. அவளுக்கு எந்த ஆபத்தும் வந்திடக் கூடாது..” என கேட்க..
சிரித்த ஜித்தேந்திரன்.. ‘இதுக்கு நான் தேவையில்ல மாறன்.. என் பசங்களுக்கே.. இது ரொம்ப ரொம்ப சின்ன விசயம்.. சரி விடுங்க.. உங்களுக்காக நான் என்னன்னு பார்க்கிறேன்.. ஒரு பத்து நிமிசம் கழிச்சி கூப்பிடறேன் வெய்ட் பண்ணுங்க..” என கட்செய்தான்.
என்ன..? பத்து நிமிசத்தில கூப்பிடறேன்னு சொன்னான்.. அரைமணிநேரமாச்சு… இன்னும் கூப்பிடலயே.. என யோசனையில் இருக்கும்போதே.. ஜித்தேந்திரனிடமிருந்து அழைப்பு வர.. ஆவலாய் அழைப்பை ஏற்றவன்..
‘சொல்லுங்க ஜித்..” என்றான்.
‘மாறன்.. அந்த வேலாயுதம் நீங்க நினைச்சமாதிரி இல்ல.. உங்களுக்கு எதிரா நிறைய வேலை பார்த்திட்டிருக்கான்.. உங்களோட அக்காக்கு நிறைய சீர் செய்திருக்கிங்களாம்.. அவங்க ரொம்ப ஏழைப்பட்டவங்க.. இந்த பணம் நீங்க இல்லீகல் பிஸ்னஸ்ல இருந்து சம்பாதிச்சிருக்கிங்கன்னு உங்க ஊர் இன்ஸ்பெக்டர்கிட்ட.. கேஸ் பைல் பண்ண சொல்லியிருக்கான்.. அதுக்கு எவ்ளோ பணம்ன்னாலும் நான் கொடுக்கிறேன்னும் சொல்லியிருக்கான்.
[the_ad id=”6605″]
அதுமட்டுமில்ல.. உங்களோட கேர்ள்பிரெண்ட் நேம் ராஜநந்தினிதான..? அவங்க அப்பன் பேர் தெரியாதவங்களாம்.. அவங்கம்மா.. சின்ன வயசிலயே ஊரைவிட்டு ஓடிப்போய்ட்டாங்களாம்.. அவங்கபாட்டி இவங்ககிட்ட ஏதோ கடன் வாங்கிட்டு அதை கொடுக்கலையாம்.. அதுக்காக அவங்க வீட்டை இவங்களுக்கு எழுதி கொடுத்திருக்காங்களாம்.. அதுக்கான டாக்குமென்ட்ஸ் அவன்கிட்ட இருக்காம்.. அதனால.. அந்த பொண்ணையும் அந்த வீட்டை விட்டு காலி பண்ண வைங்கன்னு சொல்லியிருக்கான்.. அதுக்கும் தனியா பணம் தரன்னு சொல்லியிருக்கானாம்.. இப்ப நீங்களே சொல்லுங்க.. அவனை என்ன பண்ணலாம்…?” என ஜித்தேந்திரன் கேட்க..
‘ஊருக்குள்ள அவன் நிலம்ன்னு சொல்லிகிட்டு.. விவசாயம் பார்த்திட்டிருக்கிற பாரஸ்ட்டுக்கு சொந்தமான நிலத்துக்கு.. லீகலா ஆக்சன் எடுக்கனும்.. அவன்கிட்ட இருக்கிற மத்தவங்களோட நிலப்பத்திரம்.. காட்டுப்பத்திரம் எல்லாம் சம்மந்தமானவங்களுக்கு கிடைச்சாகனும்.. நிலத்தை பறிகொடுத்தவங்கள்ல நிறைய பேர் இறந்துகூட போய்ட்டாங்க.. அவங்களோட வாரிசுங்க ரொம்ப கஷ்ட்டத்தில இருக்காங்க.. எனக்கு அவனோட உயிர்சேதமோ.. உடல் சேதமோ தேவையில்ல.. நிலத்தை பறிகொடுத்தவங்ககிட்ட இதுக்கு செலவு செய்யவெல்லாம் பணமில்ல.. எவ்ளோ சார்ஜ் ஆனாலும் பராவாயில்ல.. வரப்போற ஆடிட்டிங்ல எனக்கான கமிசன் பணத்தில நான் உங்களுக்கு செட்டில் செய்திடறேன்… கொஞ்சம் எனக்காக பார்க்கறிங்களா ஜித்..?”
‘இதெல்லாம் ஒரு விசயமே இல்ல.. லீகலா போனா.. ரொம்ப சுத்தி வளைக்கும்.. முதல்ல நிலத்தை பறிகொடுத்வங்களோட பத்திரத்தை தரசொல்லி நமக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் வச்சி மிரட்டிபார்க்கலாம்.. படியலைன்னா.. அவன்கிட்ட இருக்கிற புறம்போக்கு நிலத்துக்கு முதல்ல பட்டா போட்றலாம்.. அப்புறம் அதை வச்சி.. சம்மதப்பட்டவங்களோட பத்திரத்தை கொடுக்கலைன்னா.. இவ்ளோ நாளா கவர்ன்மென்ட் நிலத்தை அபகரிச்சி விவசாயம் பார்த்ததுக்கு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்னு மிரட்டலாம்.. இப்படி இன்னும் தொழில் ரகசியம் நிறைய இருக்கு.. வேலை ரொம்ப சுலபம்தான்.. சும்மா அடாவடின்னாலே நம்ம பசங்க கெத்து காட்டுவானுங்க.. ஒரு நல்லதுக்காகங்கும்போது.. பயங்கர பந்தாவோட தீயா வேலைபார்ப்பானுங்க.. அங்க இருக்கிற நம்ம பசங்களை வச்சே வேலையை முடிச்சிடலாம்.. விடுங்க மாறன்..” என அசால்ட்டாய் சொன்னான் ஜித்தேந்திரன்.
‘எனக்கு எவ்ளோ சீக்கிரம் வேலை முடியுமோ.. அவ்ளோ சீக்கிரம் செய்து கொடுங்க ப்ளீஸ்.” என்றான் மாறன்.
‘நான் இப்பவே நம்ம பசங்களுக்கு கால் பண்றேன்.. உங்க நம்பர் அவங்ககிட்ட கொடுத்திடறேன்.. உங்களுக்கு கால் பண்ணுவாங்க.. யார் யாரோட நிலப்பத்திரம் அவன்கையில மாட்டியிருக்குங்கிற லிஸ்ட்டை மட்டும் பசங்ககிட்ட கொடுத்திடுங்க.. மத்ததை அவனுங்க பார்த்துப்பானுங்க.. கையில பணமிருந்தாத்தான் சுறுசுறுப்பா வேலை பார்ப்பானுங்க.. அதனால கைசெலவுக்கு மட்டும் அவனுங்களுக்கு பணம் கொடுத்திடுங்க.. மத்த அபிசியல் செலவெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றான் ஜித்தேந்திரன்.
‘ஜித்.. என் தங்கைக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.. அதோட.. என் அப்பாம்மா.. இந்த மாதிரி விசயம்னா.. ரொம்ப பயந்திடுவாங்க.. அதனால.. யாரையும் வீட்ல வச்சி நான் பார்க்கமாட்டேன்..” என்றான் சிறு தயக்கத்தோடு.
‘அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மாறன்.. உங்களுக்கு எங்க கன்வீனியன்ட்டோ.. அங்கையே வச்சி பார்த்துக்கோங்க.. நான் நம்ம பசங்க போட்டோவை உங்களுக்கு வாட்ஸ்ஆப் ல அனுப்பிடறேன்..”
‘தேங்ஸ் ஜித்..” என்று நிம்மதியாய் இணைப்பை துண்டித்தவன்.. பிறகு நந்தினிக்கு அழைத்தான்.
நான்கு முறை அட்டென் செய்யாமல் ஐந்தாவது முறை..
‘ஹலோ..” என்றாள் கம்மிய குரலில்.
‘எல்லாம் கேள்விபட்டேன்.. எதையும் போட்டு வருத்திட்டிருக்காதே தைரியமா இரு.. எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு.. உன்னை நேர்ல வந்து பார்க்கிறேன்..” என்று அவளுக்கு தைரியமூட்டி கட்செய்தான்.
அடுத்து வந்த ஒரு வாரமும் மாறன் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசவில்லை. தன் அம்மா மீது எவ்வளவு கோபம் இருப்பினும்.. அவர்களிடம் மாறனால் அதை காட்ட முடியவில்லை. ஆனாலும்.. இவனின் கடுமையான முக பாவனைக்கே சுமதி கலங்கிப்போனார்.
‘மாறா.. முத்து தம்பியும்.. வேலாயுதம் ஐய்யாவும் உன்னை பார்க்க வந்திருக்காங்க.. வா..” என இராமன் மாறனிடம் சொல்லி..
‘உள்ள வாங்கைய்யா..” என்று ராமு வேலாயுதத்தை அழைக்கவும்..
‘அப்பா.. கண்டவங்களையெல்லாம் எதுக்கு உள்ள கூப்பிடுறிங்க..?” என்றவாறே வெளியே வந்தவன்.. வேலாயுதத்தை பார்த்து..
‘நான் குளிச்சிட்டு வரேன்.. தேவைன்னா வெய்ட் பண்ணுங்க.. இல்லைன்னா நீங்க கிளம்பலாம்..” என்று அசால்ட்டாக சொல்லி..
‘எதுக்கு இப்படி கையை கட்டிட்டு நிக்கிறிங்க..? இந்த வேலாயுதம் என்ன.. உங்களோட வயசில பெரியவங்களா..? இல்ல.. நீங்க எதாவது அவங்ககிட்ட கடன்பட்டிருக்கிங்களா..?” என்று தன் அப்பாவை முறைத்தான்.
‘என்ன மாறா இது.? வயசுல பெரியவங்களை பேர் சொல்லி கூப்பிடுற..? ஐயா நீங்க எதுவும் தப்பா நினைக்காதிங்க.. இவன் எதோ தெரியாம பேசிட்டான்..” என்று இராமு பதற..
‘நான் தெரிஞ்சேதான் பேசினேன்.. நீங்க இவங்களுக்கு மரியாதை கொடுக்க.. கொடுக்க.. நான் இவங்க மரியாதையை கெடுத்துகிட்டே இருப்பேன்.. இதுக்கு மேல இந்த வேலாயுதம் அசிங்கப்பட்டு போகக்கூடாதுன்னா.. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க..” என்று மீண்டும் தன் அப்பாவை மிரட்ட..
‘இராமு..” என்று வேலாயுதம் ஆரம்பிக்கும்போதே.. ‘என்னன்னு எங்கப்பாவை கூப்பிட்ட..? வயசிலயும் சரி… குணத்திலயும் சரி… உன்னைவிட எங்கப்பா ரொம்ப உயர்ந்தவர்.. இனி ஒருமுறை எங்கப்பாவை பேர் சொல்லி கூப்பிட்டன்னு வை..‚” என்று இளமாறன் முறைத்த முறைப்பில்.. எப்பொழுதும் சீறும் வேலாயுதம்.. இன்று அடிபட்ட பாம்பாய் அடங்கினான். உள்ளே போனவன்.. குளித்து அரை மணிநேரம் கழித்து வெளியே வந்து இருவரையும் பார்க்க சேரில் அமர்ந்திருந்தனர்.
‘என்ன விசயம்..?” என்றான்.
‘நான் அந்த பொண்ணுகிட்ட அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் பண்ணல.. நீ ஏன் இப்படி என்னை பழிவாங்கற..?” என்று இறங்கிய குரலில் வேலாயுதம் கேட்கவும்..
‘அந்த பொண்ணுகிட்ட எந்த பிரச்சனையும் பண்ணல.. ஆனா.. அவ சொத்தை அபகரிக்கிறதுக்கு.. என்னென்ன பிராடு வேலை செய்யமுடியுமோ.. அத்தனையும் செய்வ..? அப்படித்தான..?” என மாறன் வேலாயுதத்தை முறைத்துப் பார்த்தான்.
வேலாயுதம் தலைகுனியவும்.. முத்துவை பார்த்தவன்.. ‘எழுந்திரிடா முதல்ல..” என்று மாறன் போட்ட சத்தத்தில்.. முத்து எழுந்து நிற்கவும்.. சோபனா.. நிவேதா.. கிசோர்.. சுமதி.. என அனைவரும் வெளியே பதட்டத்தோடு வந்தனர். முத்து உக்கார்ந்திருந்த சேரில் உக்கார்ந்தவன்..
‘நான் அன்னைக்கே உன்னை வார்ன் பண்ணிதான அனுப்பினேன்..? எவ்ளோ தைரியம் இருந்தா மறுபடியும் அவ பேச்சை எடுத்திருப்ப..? நான் யாருன்னு உனக்கு காட்ட வேணாமா..? அதான் கொஞ்சமா காட்டினேன்..” என்றான் தன் கையிலிருந்த மொபைலை சுழற்றியவாறு.
‘முத்து என்ன செய்தான்..?” என்று வேலாயுதம் பதட்டமாய் கேட்க..
‘ஓ… உனக்கு விசயமே தெரியாதா..?” என்றவன்.. முத்துவை பார்த்து..
‘எங்கப்பாம்மாகிட்ட என்ன சொன்ன..? நான் அந்த பொண்ணை வச்சிட்டிருக்கேன்னா..? நல்லா கேட்டுக்க.. நான் அவளை வச்சிட்டிருக்கல.. நான் அந்த பொண்ணை காதலிக்கிறேன்.. கல்யாணமும் செய்துக்குவேன்.. என்று மாறன் சொல்ல.. இராமுவும்.. சுமதியும் அதிர்ச்சியில் விழிவிரித்தனர்.
‘அவன் ஏதோ தெரியாம சொல்லிட்டான்.. அதுக்கு நீ எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுப்பியா..?” என வேலாயுதம் மன்றாடலாய் கேட்கவும்..
[the_ad id=”6605″]
‘நான் அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கு செய்திருக்கேன்..‚ உனக்கு விசயம் தெரிஞ்சதும் நீ நேரா என்னை வந்து பார்ப்பேன்னு நினைச்சேன்.. ஆனா.. நீ.. இன்ஸ்ப்பெக்டர்ல ஆரம்பிச்சி.. நம்ம ஏரியா எஸ்.பி. வரைக்கும் பேசி பார்த்துட்டு.. அங்கெயெல்லாம் முடியாதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம்.. கடைசியா வேற வழியில்லாம இங்க வந்து நிக்கிற..‚
நீ எங்கெங்கெல்லாம் போய்.. யார் யாரையெல்லாம் இதுவிசயமா பார்த்தேன்னு நான் சொல்லட்டுமா..?” என்று வேலாயுதம் கடந்த மூன்று நாட்களாக செய்த வேலைகளை மாறன் அடுக்க.. விதிர்த்துப்போனான் வேலாயுதம்.
‘என்னை நீ சாதாரணமா எடைபோட்டுட்டல்ல..? இப்ப தெரிஞ்சதா.. என் பவர் என்னன்னு..? அடுத்தவங்ககிட்ட இருந்து ஏமாத்தின சொத்தை புடுங்கினதுக்கே உனக்கு இவ்ளோ வருதுன்னா..? சொந்த நிலத்தை பறிகொடுத்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்..? உன்கிட்ட இருக்கிற அறுபது ஏக்கர் நிலம்தான் உன்னோட பூர்வீக சொத்து.. அதையாவது உனக்கு தக்க வைக்கனும்னா.. இனிமே பார்த்து நடந்துக்க..‚
என்னை பழிவாங்குறதா நினைச்சி.. மறுபடியேது எதாவது வேலைத்தனம் செய்தன்னு வை.. அப்புறம் உன் பையன் உனக்கு எதுக்கும் ஆகமாட்டான். கவர்ன்மென்ட்டுக்கு சொந்தமாகிடுவான்..
எப்படின்னு பார்க்கிறியா..? கஞ்சா கேசு.. பாலியல் பலாத்காரம்.. இப்படி அப்படின்னு இன்னும் ஏகப்பட்டது நம்ம நாட்டுல இருக்குல்ல..? அதுல எதாவதை உன் பையனுக்குன்னு உயிலெழுதி உள்ளே அனுப்பிடுவேன்..‚ அப்புறம் என்ன..? உன் ஒரே பையனை அப்படியே விட்டுட முடியுமா உன்னால…? அவனை காப்பாத்துறதுக்கே உன் சொத்து எல்லாத்தையும் நீயே விற்க்கிற மாதிரி ஆகிடும்.. ஆகலன்னாலும் ஆக வைப்பேன்..‚” என்று எச்சரித்தான்.
பேச்சற்றவனாய் வேலாயுதம் தலைகுனியவும்.. எழுந்து வந்து வேலாயுதம் தலையை தன் ஒரு விரல் கொண்டு நிமிர்த்தியவன்..
‘உங்கப்பாதான் அவங்கப்பாவோட சேர்ந்துகிட்டு.. இந்த கேடுகெட்ட வேலையெல்லாம் செய்திருக்கார்.. நீ அதை அப்படியே தக்க வச்சிட்ட அவ்ளோதான்..‚ அதுவும் பெரிய தப்புதான்.. இருந்தாலும் நல்லா வாழ்ந்தவங்க கெட்டுப்போகக் கூடாதுன்னு.. எங்கப்பா அடிக்கடி சொல்வார்.. அதனாலதான் நிலத்துக்கு சொந்தக்காரங்ககிட்டயெல்லாம்.. உங்கப்பன் செய்த பாவத்துக்கு நீயே பரிகாரம் செய்த மாதிரி சொல்லி வச்சிருக்கேன்.. சுத்தி வளைச்சி பார்த்தா.. நான் உனக்கு நல்லதுதான் செய்திருக்கேன்..‚
இதுவரைக்கும் உன் அப்பன்.. பாட்டன்.. பூட்டன்.. செய்த பாவமெல்லாம் இதுல அடிபட்டு போனமாதிரி நினைச்சி.. இனிமே வாழ்ற வாழ்க்கையை நிம்மதியா வாழு.. என்னை சீண்டாத வரைக்கும்.. உனக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது..” என்றான்.
வேலாயுதம் கிளம்புவதற்கு எழுந்திரிக்கவும்.. ‘முத்து.. இனி.. ஊர்ல எங்கையாவது உன் சத்தம் வந்திச்சி.. இருக்கிற இடம் தெரியாம செய்திடுவேன்..‚ என்னைப் பத்தியோ.. என்னை சார்ந்தவங்களைப் பத்தியோ.. நீ மூச்சுகாத்து விட்டன்னு தெரிஞ்சா கூட போதும்.. இங்கயிருந்து புயல்காத்தே கிளம்பும்.. ஜாக்கிரதை..‚” என்று மீண்டும் மிரட்டியே அனுப்பினான்.
இருவரும் சென்ற பின்.. ‘மாறா.. அந்த பொண்ணு நமக்கு வேணாம்..” என்று உறுதியாக சொன்னார் சுமதி. முதன் முதலாய் தன் அம்மாவின் முகத்தில் கடுமையைப் பார்த்து அதிர்ந்தாலும் அதை மறைத்தவனாய்.. ‘அவளுக்கு என்னம்மா குறை..?” என்றான்.
‘அவங்க குடும்பமே சரியில்லாத குடும்பம்.. அந்த அமுதா பிறந்து கொஞ்ச நாள்லயே அவங்க அம்மா செத்துட்டாங்க.. அவங்கப்பனும் அமுதாவை பார்த்துக்கல.. இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு அவர் வழியை அவர் பார்த்துக்கிட்டார். கடைசியா அமுதாவும் சின்ன வயசுலயே இந்த ஊரை விட்டு போனவதான்.. யாரை கல்யாணம் செய்துகிட்டா.. இப்படி எந்த விபரமும் யாருக்கும் தெரியாது. இந்த பொண்ணுக்கும் அவங்க பரம்பரை ரத்தம்தான் ஓடும்.. நம்ம குடும்பத்துக்கு அந்த பொண்ணு வேணாம்..‚” என்று திடமாய் மறுத்தார் சுமதி.
‘எல்லாருக்கும் நல்ல அப்பாம்மா வாய்ச்சிடாதும்மா.. நாட்ல எவ்வளவோ அநாதை குழந்தைகள் இருக்கிறாங்க.. அவங்கள்ல சில பேர் தப்பா பிறந்தவங்களா கூட இருக்கலாம்.. அதுக்காக அவங்களெல்லாம் தப்பாதான் வளருறாங்களா..? இல்ல.. நல்ல அப்பாம்மா வயித்தில பிறந்தவங்களெல்லாம் தப்பே செய்யிறதில்லையா..? பெத்தவங்க செய்த தப்புக்கு அவ என்னம்மா செய்வா..?” என்று தன் அம்மாவிற்கு புரிய வைக்கும் நோக்கோடு பொறுமையாக பேசினான்.
‘அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் பிறந்ததுல இருந்து கஷ்ட்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவ.. ரெண்டு மூனு தலைமுறைக்கப்புறம் இப்பதான் நம்ம குடும்பம் நல்லா தழைச்சி வருது.. எனக்கிருக்கிறது நீ ஒரே மகன்.. அப்பன் பேர் தெரியாத பொண்ணு.. மருமகளா எனக்கு வேணாம்..” என்று முகம் சுழித்தார்.
‘அப்பன் பேர் தெரியாம பிறந்தது அவ தப்பில்ல.. அது அவ அப்பாவும்.. அம்மாவும் செய்த தப்பு..‚ அவ உடம்புல நல்ல ரத்தம்தான் ஓடுது.. எனக்கு அவதான் வேணும்..‚” என்று இம்முறை சற்று குரலுயர்த்தி சொன்னான்.
[the_ad id=”6605″]
‘மாறா.. நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. எனக்கும் அந்த பொண்ணு பிடிக்கல.. நான் உன்மேல நம்பிக்கை வச்சிதான் அன்னைக்கு அந்த பொண்ணை ஒன்னும் சொல்லாம வந்தேன்.. உங்கம்மா அந்த பொண்ணை திட்டினதுக்கு கூட வருத்தப்பட்டேன்.. ஆனா.. இப்பதான தெரியுது.. உங்கம்மா செஞ்சது சரின்னு..” என்று இராமுவும் சண்டைக்கு கிளம்ப..
‘அவளைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு நான் வாக்கு கொடுத்திட்டேன்.. இந்த ஜென்மத்தில அவதான் என் பொண்டாட்டி.‚” என்று அவனும் கிட்டதட்ட.. சண்டையிடுவது போல் சற்று கோபமாகத்தான் சொன்னான்.
என்றும் இப்படி பேசாத மாறன்.. இன்று இப்படி பேசவும்..
‘பெத்தவங்களை விட.. யாரோ ஒருத்திக்கு வாக்கு கொடுத்தது உனக்கு முக்கியமா போச்சா..?” என்று சுமதி கண்கலங்கினார்.
‘மாறன் யாரோ ஒருத்திக்கு வாக்கு கொடுக்கலை இராமு.. எனக்குதான் கொடுத்திருக்கான்.. என் பொண்ணை கல்யாணம் செய்துக்கிறேன்னு எனக்குதான் வாக்கு கொடுத்திருக்கான்.. நந்தினி யாரோ ஒருத்தி இல்ல.. என் பொண்ணு.. என் ரத்தம்..‚” என்று குரல் தழுதழுக்க பேசியபடி அவர்களின் வீட்டு கதவை பிடித்து நின்றிருந்தார் ராஜன்.
‘சின்னைய்யா.. நீங்க எப்ப வந்திங்க..? உள்ள வாங்க..” என்று இராமு ராஜனின் பக்கத்தில் வந்து.. உள்ளே அழைத்து வரவும்.. சுமதி தண்ணீர் கொண்டு வந்து பவ்யமாக கொடுத்தார்.
ராஜன் அங்கிருந்த சேரில் அமர்ந்து தண்ணீர் குடித்ததும்..
‘சின்னைய்யா.. மாறன் மேல இருக்கிற பாசத்துல.. அவன் ஆசைப் பட்டுட்டுடான்னு நீங்க ஏன் உங்களை அசிங்கப்படுத்திக்கிறிங்க..?” என்று இராமு குரல் தளர்ந்து கேட்க..
‘இல்ல ராமு.. நான் உண்மையைத்தான் சொல்றேன்..‚ நந்தினி.. எனக்கும் அமுதாக்கும் பிறந்த பொண்ணு. நான் அமுதாவை கல்யாணம் செய்துக்கிற நினைப்போடத்தான் அவளோட பழகினேன்.. எப்பவும் அவளை கைவிடனும்னு நினைக்கவே இல்ல.. ஆனா.. அவ எதனால என்னை விட்டுட்டு போனான்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை..” என்று ராஜன் கண்ணீர் வடிக்கவும்..
‘ராஜய்யா.. உங்களால யாரையும் ஏமாத்த முடியாதுன்னு எங்களுக்கு தெரியும்.. ரொம்ப ஸ்ட்ரென் பண்ணிக்காதிங்க.. திரும்ப நெஞ்சுவலி வந்திடப்போகுது..” என்று மாறன் ராஜனை அமைதிப்படுத்தினான்.
‘நீ என் பக்கத்தில இருக்கும்போது எனக்கு ஒன்னும் ஆகாது மாறா.. எனக்கு வாக்கு கொடுத்ததால.. என்னைக்கும் இல்லாம.. எனக்காக இராமுகிட்ட..” என்று ராஜன் சொல்லும்போதே இடைமறித்தவன்..
‘அப்பா ராஜய்யா என் பொண்ணை காட்டுறேன்னுதான் அன்னைக்கு ராஜிகிட்ட என்னை கூட்டிட்டு போனார்.. ராஜய்யா பொண்ணுங்கிறதால இல்ல.. உண்மையாவே எனக்கு அவளை பார்த்ததும் ரொம்ப பிடிச்சிருச்சி. நான்தான் ராஜய்யாகிட்ட உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து கொடுப்பிங்களான்னு கேட்டேன்.
அப்பவே ராஜய்யா.. நீங்களும் அம்மாவும் ஒத்துக்க மாட்டிங்கன்னு சொன்னார். என் அப்பாம்மாகிட்ட நான் சம்மதம் வாங்கிக்கிறேன்னு நான் ராஜய்யாக்கு வாக்கு கொடுத்ததைத்தான் இப்போ இப்படி சொல்றார்.” என்று மாறன் சொல்ல..
இராமுவுக்கும்.. சுமதிக்கும் என்ன சொல்வதென்றே புரியாமல் தவித்து நின்றனர். ‘உங்க குடும்பத்தில என் பொண்ணையும் சேர்த்துக்குவிங்களா இராமு..” என்று ராஜன் தன் மகளுக்காக கிட்ட தட்ட.. வாழ்க்கை பிச்சை கேட்பது போல் கேட்டார் மாறனின் பெற்றோரிடம்..