ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 9
நந்தினியின் வீட்டு வாயில்படி சிறியதுதான்.. அவள் நகர்ந்தால்தான் இவர்கள் உள்ளே நுழையமுடியும் என்ற நிலையிருக்க.. ‘நிவி.. இவ ப்ரீசாய்ட்டா.. நீ வா உள்ள..” என்றவன்.. சோபியின் கையை பிடித்தபடி உள்ளே வர.. தானாய் விலகி நின்றது அவளின் உடல்.
நந்தினி அமைதியாகவே நின்றிருக்கவும்.. ‘நமக்கு அண்ணியா வரப்போறவளாச்சேன்னு.. கல்யாணப்பொண்ணே உன்னைத்தேடி வந்து பத்திரிக்கை வைக்க வந்திருக்கா… நீ இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ராஜி..?” என்றான் கொஞ்சம் கோபமாக.
‘ஏன்..? இங்க தனியா வச்சி நான் அசிங்கப்படுட்டது பத்தாதா..? மண்டபத்தில வச்சிவேற அசிங்கப்படனுமா..?” என்றாள் தலை நிமிராமல்.
‘அம்மாக்கு மாறன் உங்களை விரும்புற விசயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா அப்படி பேசியிருக்கமாட்டாங்க..” என்றாள் சோபனா.
‘என்னை பேசியிருந்தாங்கனா கூட பரவாயில்லை.. என் அம்மாவை ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க..” என்று கண்ணீர் வடித்தாள் நந்தினி.
‘இனிமே அப்படி பேசமாட்டாங்க.. உங்ககிட்ட மன்னிப்பு கேட்க கூட அவங்க தயாராத்தான் இருக்காங்க.. மாறன்தான் வேணாம்னு சொல்லிட்டான்.” என்றாள் சோபி.
பிறகுதான் மாறனைப் பார்த்தாள் நந்தினி. ஆமாம் என்பதுபோல் கண்மூடித்திறந்தவன்.. ‘எங்கம்மாப்பா சம்மதத்தோடதான் உனக்கு பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்க. நான் கட்டிக்கப்போற பொண்ணு எப்படியிப்பான்னு பார்க்க ஆசையா வந்திருக்காங்க.. அவங்களுக்கு முதல்ல தண்ணியாவது கொடு..” என்றான்.
‘ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் என்னை அவ்வளவு கேவலமா பேசினாங்க.. இப்ப எப்படி உடனே சமாதானம் ஆனாங்க..?” என்றாள் சந்தேகத்தோடு.
‘ப்ச்.. சொன்னதையே எத்தனை முறை சொல்றது..? இப்பதான சோபி சொன்னா.. நான் உன்னை லவ் பண்ற விசயம் தெரிஞ்சிருந்தா என் அம்மா இப்படி பேசியிருக்கமாட்டாங்கன்னு..” என்றான் சற்று குரலுயர்த்தி.
அப்பொழுதும் மாறன் சொல்வதில் முழுதாய் நம்பிக்கையெல்லாம் வரவில்லை நந்தினிக்கு.. இவர்கள் இருக்கும்போது பேச்சை வளர்க்க வேணாம் என்றெண்ணி..
‘நான் டீ வைக்கிறேன்..” என்று உள்ளே போனாள்.
‘டீ வேணாம்.. இங்க வந்து உக்காரு..” என்றாள் நிவேதா.
மாறன் சேரில் அமர்ந்திருக்க.. பக்கத்தில் இருந்த கட்டிலில் சோபியும் நிவேதாவும் அமர்ந்திருந்தனர். ‘உங்கண்ணனை உங்ககூட உக்கார சொல்லுங்க.. நான் சேர்ல உக்காருறேன்..” என்றாள் சன்னக் குரலில்.
‘மாறன் அங்கையே உக்காரட்டும்.. நீங்க வாங்க இங்க..” என்று இருவரும் சற்று தள்ளி நந்தினியை இருவருக்கிடையிலும் உக்கார வைத்தாள் சோபனா.
பேகில் இருந்த சாரியை எடுத்த நிவேதா.. ‘இது உனக்கு.. என் தம்பி செலக்சன்..“ என்று நந்தினியிடம் நிவேதா சாரியை நீட்ட..
‘இந்த சாரியை கட்டிகிட்டுத்தான் நீங்க என் கல்யாணத்துக்கு வரனும்..‚” என்று சோபனா பத்திரிக்கையை நீட்ட.. ‘எனக்கு இதெல்லாம் வேணாம்.. இந்த வீக் என்ட்ல ஊருக்கு போய்.. என் அம்முமாவை நேர்ல பார்த்து பேசனும்..” என்றாள் கலங்கிய குரலில்.
[the_ad id=”6605″]
‘என்ன பேசப்போற..? இந்த மாறனை நம்பலாமா.. ? வேணாமான்னா..? உன் அம்மும்மா வேணாம் சொன்னா.. நீ என்னை விட்டுடுவியா..? கொன்னுடுவேன் ஜாக்கிரதை..‚ ஒழுங்கா அந்த சாரியையும்.. பத்திரிக்கையையும் முதல்ல வாங்கு..‚” என்று கட்டளையிட்டான். அவள் மீண்டும் அமைதியாகவே இருக்கவும்..
‘வாங்குன்னு சொல்றேன்ல..? இவங்க ரெண்டு பேருமே உன்னோட பெரியவங்க.. முக்கியமா என் கூடப் பிறந்தவங்க.. முதல்ல இவங்களுக்கு மரியாதை கொடுக்க கத்துக்க..‚” என மிரட்டும் குரலோடு அவள் அருகில் வந்து அவளின் தாடை தொட்டு முகம் நிமிர்த்தினான்.
‘என் அம்மாகிட்ட கேக்காம நான் யார்கிட்டயும்.. எதையும் வாங்க மாட்டேன்..” என்றாள் பிடிவாதமான குரலில்.
‘உன் அம்முமாகிட்ட கேட்டுதான் உன் மனசில எனக்கு இடம் கொடுத்தியா..?”என்றான் அழுத்தமான பார்வையோடு.
‘நீங்க மட்டும்.. உங்கம்மாப்பாகிட்ட கேட்டுட்டா என்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னிங்க..? ஆனா.. பத்திரிக்கை வைக்கிறதுக்கு மட்டும் அவங்க பர்மிசன் கொடுத்தவாட்டிதான இவங்களை கூட்டிட்டு வந்திருக்கிங்க..? எனக்கு பத்திரிக்கை வைக்கிறதுக்கு உங்க அம்மாகிட்ட நீங்க பர்மிசன் வாங்கலாம்.. ஆனா அதை வாங்கிக்கிறதுக்கு நான் என் அம்மாகிட்ட பர்மிசன் வாங்ககூடாதா..? அப்படி எந்த விதத்தில எங்கம்மாவும் நானும் உங்களுக்கு குறைஞ்சி போய்ட்டோம்..?” என்று குரலுயர்த்தி கேட்டாலும் நந்தினியின் கண்கள் மீண்டும் கலங்கவும்..
‘ப்ச்.. நான் அப்படி நினைக்கில ராஜி.. விவாகரத்து.. கள்ளக்காதல்.. வரதச்சனைக்காகன்னு.. ஆனோ.. பெண்ணோ.. கட்டிகிட்டவங்க சரிவரலைன்னா ஈசியா பிரிஞ்சிடறாங்க.. ஒரு சிலர் இன்னொரு கல்யாணம் கூட செய்துக்கிறாங்க.. இப்படி எல்லாமும் சகஜமா இருக்கிற இந்த காலத்தில.. ஒருத்தரை மனசுல நினைச்சிட்டோம்ங்கிறதுக்காக.. அவங்களையே இன்னைக்கு வரைக்கும் நினைச்சி வாழ்ந்திட்டிருக்கிறவங்க கொஞ்சம்பேர்தான்..
அந்த விசயத்தில உன் அம்மாவை நான் உயர்வாத்தான் பார்க்கிறேன்.. நீதான் தேவையில்லாம மனசை போட்டு வருத்திட்டிருக்கிற.. ஒவ்வொன்னா சரிசெய்யத்தான் பார்க்கனுமே தவிர.. எதையும் இழுத்துபிடிச்சிட்டிருக்கக் கூடாது.
நான் எங்க அப்பாம்மாகிட்ட.. உன் அம்மாவைப் பத்தி எல்லாம் சொல்லித்தான் உன்னை கல்யாணம் செய்துக்க பர்மிசன் வாங்கியிருக்கேன்… நான் சொன்னதுக்கப்புறம் அவங்க உன் அம்மாவை புரிஞ்சிகிட்டாங்க..
சோபி கல்யாணம் முடிஞ்சதும் உன் அம்மாவை நேர்ல பார்த்து பேசறேன்.. இப்பவும் இதை வாங்கிக்க விருப்பமில்லைன்னா.. உன் அம்மாக்கு போன் செய்து கேட்டுக்கோ.. நாங்க வெளில வெய்ட் பண்றோம்..” என்றவன் சோபியையும்.. நிவேதாவையும் பார்க்க.. அவர்கள் எழுந்தனர்.
மாறனின் பேச்சில் கோபம் குறைந்தவள்.. ‘இல்ல.. இல்ல.. உக்காருங்க.. பத்திரிக்கையை கொடுங்க.. நான் வாங்கிக்கிறேன்..” என்றாள் அவசரமாய்.
‘வாங்கிகிட்டா பத்தாது.. கல்யாணத்துக்கும் அவசியமா வந்திடனும்..‚” என்று சோபனா பத்திரிக்கையை கொடுத்தாள்.
‘சாரி நல்லாயிருக்கா..?” என்றபடி நிவேதா சாரியை நீட்ட..
‘பத்திரிக்கை மட்டும் போதும்.. சாரியெல்லாம் வேணாம்..” என்றாள் சங்கடமாய்.
‘சாரி வேணாம்னா.. இது மட்டும் போதுமா..?” என்று சோபனா நந்தினியின் சாரிக்கு வாங்கிய டிசைனர் மேட்சிங் பிளொஸ்.. இன்ஸ்கர்ட் போன்றவற்றை காண்பிக்கவும்.. பே.. வென விழித்தாள் நந்தினி.
[the_ad id=”6605″]
‘ம்ஹ_ம்..” என்று பெருமூச்சொன்றை வெளிப்படுத்தி.. ‘சாரிக்கு மேட்சா ஒன்னுவிடாம வாங்கனும்னு.. என் தம்பி கடையிலயே எங்களை அந்த மிரட்டு மிரட்டி வாங்க வச்சான்.. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ.. இல்லைன்னா இதுகூட சரியா வாங்க தெரியாதான்னு அப்புறம் அதுக்கும் எங்களைதான் திட்டுவான்..” என்று நிவேதா புன்னகை முகமாய் சொல்லவும்..
பிறகுதான் சாரியை பார்வையிட்டாள் ராஜநந்தினி. அவளின் முகமே சொல்லியது அந்த சாரி அவளுக்கு பிடித்திருக்கிறதென்று.
‘சாரி நல்லா இல்லதான…? உங்களுக்கு பிடிக்கலைதான..?” என்று கேட்ட சோபனா ‘நல்லாயில்லன்னு சொல்லுங்க..” என்று முனுமுனுக்க..
‘ஏய்.. உன் வில்லி வேலையை ஆரம்பிச்சிட்டியா.?” என மாறன் சோபியை பொய்யாய் முறைக்க..
‘சாரி நல்லாயிருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்க அண்ணன் செலக்சன் சூப்பர்தான்.. ஆனா என் செலக்சன்தான் ரொம்ப கேவலமா இருக்கு..” என நந்தினி மாறனைப் பார்த்து சொல்ல.. சோபனாவும் நிவேதாவும் புரியாமல் பார்க்க..
‘நான்தான் லைப் பார்ட்னரா உங்க அண்ணனை செலக்ட் செய்திட்டனே.. இதிலிருந்தே தெரியலைங்களா..? என் செலக்சன் ரொம்ப சுமார்தான்னு..‚ ம்ம்.. இனி பேசி என்ன பண்ண..?” என்று நந்தினி சோகமாய் சொல்ல..
பிறகுதான் புரிந்தவளாய்.. ‘ஏய்..” என்று சோபனா ஒற்றை விரலை ஆட்டியபடி சிரிக்க.. நம்ம அம்மா பேசினதை மறந்தாளோ.. இல்லை மன்னிச்சிட்டாளோ.. ஆனா.. ஒருவழியா மலையிறங்கிட்டா.. என நிம்மதியடைந்தவன்..
அன்று முதல்நாள் ராஜியை பார்த்தது நினைவு வரவும்.. அன்றும் இப்படித்தானே நக்கலாகவே பேசினாள் என நினைத்தவன்.. தற்போது மீண்டும் அவளது இயல்பான நக்கல் பேச்சில்.. தன் புருவத்தை உயர்த்தியபடி.. மாறனும் மௌனப்புன்னகை புரிய.. சற்று நேரம் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தனர்.
‘மாறா.. எனக்கு ஒரு மாதிரி இருக்குடா..” என்று சொன்ன நிவேதா.. சற்று நேரத்திலேயே நந்தினி மீதே மயங்கி சரிய..
‘என்னாச்சி..? என்று நந்தினி பதற.. மாறன்தான் தண்ணீர் எடுத்து ‘நிவி.. நிவி..” என்று அவளின் முகத்தில் தெளித்து.. குடிக்கவும் செய்ய நிவேதா கண்திறக்கவில்லை..
‘ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க..” என்று நந்தினி மாறனிடம் பதட்டமாய் சொன்னாள்.
‘சோபி நிவியால தனியா பைக்ல உக்கார முடியாதுன்னு நினைக்கிறேன்.. நிவியை உக்கார வச்சி.. நீ பின்னாடி உக்கார்ந்துக்கோ..“ என்று மாறன் நிவேதாவை இருகைகளிலும் அள்ளிக்கொண்டு பைக்கில் அமரவைத்து வண்டியை எடுக்கவும்..
‘ஹாஸ்பிட்டல் போனதும் எனக்கு கால் பண்ணுங்க..” என்றாள் நந்தினி.
சிறு தலையசைப்போடு கிளம்பியவன் ஐந்து நிமிடத்தில் வீட்டிற்க்கு வந்ததும்.. ‘அம்மா..” என்று சோபனாவின் பதட்டமான குரல் கேட்டு.. ராமுவும் சுமதியும் வெளியே வரவும்.. அப்பொழுதுதான் லேசாய் கண்திறந்தாள் நிவேதா.
நிவேதாவின் நிலையை சோபனா விளக்கவும்.. சுமதியின் முகத்தில் ஒளிவெள்ளம் வீச.. ‘வா நிவி..” என்று வாஞ்சையோடு சொல்லி.. கைத்தாங்கலாய் சுமதி வீட்டிற்குள் அழைக்கவும்..
‘ம்ம்மா.. ஹாஸ்பிட்டல் போலாம்.. மாமாகிட்ட கார் சாவி வாங்கிட்டு வாங்க..” என்று மாறன் பதட்டமாய் சொன்னான்.
‘அதெல்லாம் வேணாம்… நீ உள்ள வாடா..” என்று சொன்ன சுமதி.. தன் கணவனிடம்.. ‘ஏங்க.. நம்ம செல்லாயி மருத்துவச்சியம்மாவை கூட்டிட்டு வரிங்களா..?” என்று பொலிவான சிரிப்போடு சொல்லவும்..
‘ம்ம்..” என்ற அர்த்தமான பார்வையோடு தன் மனையாளை பார்த்தவர்.. பின் சந்தோசமாய் சென்று நான்கு வீடு தள்ளியிருக்கும் செல்லாயியை ஐந்தே நிமிடத்தில் அழைத்துவந்தார்.
சுமதியைத் தவிர்த்து.. கிசோர் உள்பட.. மற்ற அனைவரும் படபடப்போடு இருக்க..
‘சுமதி.. நீ பாட்டியாய்ட்ட..” என்று செல்லாயி சந்தோசத்தோடு சொல்ல..
‘மாறா.. இப்போதைக்கு இனிப்பு எதுவும் வீட்ல இல்ல.. நீ போய் பக்கத்து கடையில வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா..” என்று சொல்ல.. சிட்டாய் பைக்கில் பறந்த மாறன்.. அடுத்த பத்தாவது நிமிடம் வெத்தலை பாக்கோடு… அந்த பெட்டி கடையில் இருந்த.. தேன்மிட்டாய்.. கம்மர்கட்டு.. புளிப்பு சாக்லேட்.. போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்தான்.
‘அம்மா.. இந்தாங்க.. இந்த காசையும் வைச்சி கொடுங்க..” என்று மாறன் தன் அம்மாவிடம் பணம் கொடுக்க.. இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை வெற்றிலை பாக்கோடு வைத்து சுமதி செல்லாயிடம் கொடுத்தார்..
‘நான் இதுக்கெல்லாம் காசு பணம் வாங்கிறதில்ல கண்ணு.. எனக்கு பணம் வேணாம்.. அந்த முட்டாயை மட்டும் கொடு.. என் பேத்திக்கு ரொம்ப பிடிக்கும்..” என்று சாக்லேட்டை மட்டும் வாங்க..
‘இந்த காசுலயும் உங்க பேத்திக்கே எதாச்சம் வாங்கி கொடுங்க பாட்டி..” என்று அவர் கையில் மாறன் பணத்தை திணிக்க.. செல்லாயி சந்தோசமாய் வாங்கிப்போனார்.
‘அத்தை.. எதுக்கும் ஒருமுறை டாக்டரைப் போய் பார்த்திட்டு வந்திடறோம்..” என்று கிசோர் சொல்ல..
‘வேண்டாம் மாப்பிள்ளை.. நிவேதா ரொம்ப களைப்பா தெரியுறா.. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு போய்க்கலாம்.. பயப்பட வேணாம்.. செல்லாயம்மா சொன்னா அதுல மாற்றமே இருக்காது. நிவேதா கொஞ்சம் களைப்படங்கினதும் நீங்க இரண்டுபேரும் போய் அம்மாகிட்ட இந்த நல்ல விசயத்தை சொல்லுங்க.. அவங்களும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..
கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் பக்கம் இருக்கு.. அங்கையே நிவேதா ரெஸ்ட் எடுக்கட்டும்.. நலங்கு வைக்கும்போது மாறன் வந்து சொல்லுவான்.. நிவியும் நீங்களும் நலங்குக்கு வந்தா போதும்.. இப்ப போய் கொஞ்ச நேரம் படு நிவி..” என்று வெளியே போனார்.
[the_ad id=”6605″]
சுமதியோடே வந்த ராமன்.. ‘சுமதி.. நான் போய் இந்த சந்தோசமான விசயத்தை.. சின்னைய்யாகிட்ட சொல்லிட்டு வந்திடறேன்..” என்று மகள் மருமகனுக்கு தனிமையளிக்க விரும்பி வெளியே கிளம்பினார்.
‘நிவி.. உனக்கு என்ன வேணும்..? சொல்லு.. சொல்லு..” என்று மாறன் ஆர்வமாய் கேட்கவும்..
‘மாறா.. இங்க நான் ஒருத்தன் இருக்கேன்.. எல்லாமும் நீங்களே செய்திட்டா எப்படி..? என் பொண்டாட்டிக்கு பிடிச்சதை வாங்கி கொடுக்க.. எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க..” என்று கிசோர் செல்ல சண்டையிடவும்..
பிறகுதான் நினைவு வந்தவன்.. ஆமாம்ல.. இவங்களுக்கு தனிமை கொடுக்கனுமே.. என யோசித்து நிவேதாவை பார்க்க.. அவள் கிசோரின் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல் வெக்கத்தோடு தலைகுனிந்திருந்தாள். பிறகு சோபியை பார்க்கவும்.. அவள் மாறனுக்கு சைகை செய்து அவளின் ரூமிற்க்குள் போனாள்.
அவள் பின்னோடே வந்த மாறன்.. ‘முதல்ல வீட்டை கட்டியிருக்கனும்.. இல்ல சோபி..” என்றான் வருத்தத்தோடு.
‘கட்டியிருக்கலாம்தான்.. பரவாயில்ல விடு மாறா.. இப்படி இந்த சூழல்கூட ரொம்ப அழகாத்தான் இருக்கு.. என் கல்யாணம் முடிஞ்சதும்.. முதல்ல வீட்டு வேலையை ஆரம்பிச்சிடு மாறா.. நிவி வயித்தில இருந்து வர நம்ம வீட்டோட முதல் பிரின்சஸ்.. நம்மளோட புது வீட்லதான் கால் பதிக்கனும்..” என்று ஆசையாய் சோபனா சொன்னாள்.
‘ஸ்யூர் சோபி..” என்று மாறன் சந்தோசமாய் சொல்ல.. சோபனாவின் போன் அடிக்கவும்.. அதை பார்த்தவளது முகம் அசடு வழியவும்.. ‘முரளியா..?” என்றான் சிரிப்போடு.
‘ம்ம்..” என்று அவஸ்த்தையாய முகம் சுருக்கினாள் சோபனா.
‘சரி.. சரி.. நீ முரளிகிட்ட பேசிட்டிரு.. எனக்கும் ஒரு முக்கியமான வேலையிருக்கு.. அம்மா வந்து என்னை காணோம்னு கேட்டாங்கனா.. நான் ஏது என் பொண்டாட்டியை பார்க்க போயிருக்கேன்னு சொல்லிடாத..” என்று மாறன் சொல்ல..
‘நான் முரளிகிட்ட பேசலை.. நீயும் எங்கையும் போகக்கூடாது..”
‘அது இல்ல சோபி.. உன் ஸ்கூட்டி அவ வீட்லயே விட்டுட்டு வந்திட்டோமே.. அதை போய் எடுத்திட்டு வரவேணாமா..?” என்றான் பொறுப்போடு.
‘ஆமாம் மாறா..” என்று யோசனையாய் சொன்னவள்.. ‘அச்சோ.. மாறா.. அதுலதான் அவங்களுக்கு வாங்கின நகையெல்லாம் இருக்கு..” என்று பதறினாள்.
‘நீ பயப்படாத சோபி.. அது இந்த இளமாறன் பாதுகாப்பில இருக்கிற வீடு.. அங்கிருக்கிற நகைக்கு ஒன்னும் ஆகியிருக்காது. நான் தாய்மாமனாய்ட்டேன்ற சந்தோசமான நியூசை அவளுக்கு சொல்லிட்டு.. அப்படியே அவளுக்கு வாங்கின நகையையும் கொடுத்திட்டு.. வண்டியை எடுத்திட்டு வந்திடறேன்..” என்று சொல்லவும்..
சோபனாவிற்கு மீண்டும் முரளியிடமிருந்து அழைப்பு வரவும்.. மீண்டும் சோபனாவின் முகம் அஷ்டகோணலாய் மாறி.. மாறனை பார்க்க.. ‘மாறன் கிளம்பிட்டான்..” என்று சொல்லிக்கொண்டு சிரித்தபடியே வெளியில் வந்தவன்.. தன்னவளின் வீட்டை நோக்கி உல்லாச நடைபோட்டான்.