“மீரு மனோஹரங்கா கனிபிஸ்துனாரு, சுந்தரமாயின சுந்தரிடா” என்று சொன்னவனின் விழியில் ரசனைக் கொட்டிக்கிடந்தது.
சூர்யா ரசித்து சொல்ல, யமுனாவோ முழித்துக் கொண்டு இருந்தாள். யமுனாவின் அந்த விழிகள் கூட சூர்யாவுக்குப் பிடித்தது. பாவையின் பாவனைக் கண்டவன்
“ஏன்ட்டீமா?” என்றான்.
யமுனாவோ “நீங்க பேசுறதே புரியல” என்றதும்
“அச்சோ! சாரி ரா. அது நீ ரொம்ப அழகா இருக்க, அதான் டக்குனு தமிழ் வரல. இட்ஸ் ஓகே! சுந்தரமா இருக்க பொண்ணை சுந்தர தெலுங்குல பாராட்டினா தப்பில்லை” என்று கண்சிமிட்டினான்.
“ஓஹ், இப்படி பேசிட்டு சமாளிக்குறீங்க, ஆமா சுந்தர தெலுங்குன்னு யார் சொல்லிக் கொடுத்தா, ஸ்டாலின் அண்ணாவா?” என்று சரியாய் யமுனா கேட்க
“எஸ், அவனேதான்” என்று சிரித்தவன்
“ப்ரியத்தம்மா! உன்னைப் பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. தேங்க்ஸ் ஸோ மச் டா பங்காரம்” என்றான் யமுனாவின் தோற்றம் ரசித்தபடி. முன்பு படம் பார்க்கச் சென்றபோது சூர்யா பேச்சுவாக்கில் சொன்ன மௌனம் சம்மதம் நடிகை அமலாவின் புடவை போலவே அணிந்திருந்தாள். சிவப்பும் கறுப்பும் சேர்ந்த புடவை, கருங்கூந்தலில் மல்லிகை. அதுவே மயக்கியது சூர்யாவை.
“என்னைப் பார்த்துட்டே இருந்தா உங்க சிரஞ்சீவி படம் எப்போ பார்க்கறதாம்?” என்று கேட்க சிரித்தான் சூர்யா.
“ம்ம், போகலாம். எப்போ எடுத்த இந்த சேரீ?”
“நாங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் கோ ஆப்டெக்ஸ் போனோம். அப்போ இந்த புடவைப் பார்த்ததுமே உங்க ஞாபகம்தான். உங்களுக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டேன். ஜாக்கெட் பழசு இருந்துச்சு” என்றாள்.
யமுனாவின் கைப்பற்றிய சூர்யா
“தேங்க்ஸ்டாம்மா, நான் சர்ப்பரைஸ் ஆகிட்டேன் தெரியுமா?” என்றவன் ஆட்டோ பிடித்து யமுனாவுடன் வில்லிவாக்கம் ‘ராயல் தியேட்டர்’ சென்றான். சிரஞ்சீவி நடித்த ‘கொண்டவெட்டி தொங்கா’ திரைப்படத்திற்கு அழைத்துப் போனான் சூர்யா.
டிக்கெட் வாங்கி வந்த சூர்யா இடம் பார்த்து யமுனாவை முன்னே அனுப்பி பாதுகாப்பாய் உட்காரவைத்தான். அந்த செய்கையே இதமாய் இதயம் தொட்டது. அவள் அப்பா முதலில் அவர் உட்கார்ந்துவிட்டு பெண்களுக்கு இடமிருக்கிறதா என்று கூட பார்க்க மாட்டார் எங்குனாலும் சரி, அவர் அப்படித்தான். செயலில், சொல்லில் ஆண் என்ற அகங்காரம் காட்டுவார். சூர்யாவோ யமுனாவுக்கு அதிசயமாகவே தெரிந்தான்.
யமுனாவை உட்கார சொல்லி, அவளருகே உட்கார்ந்தவன்
“ஐ அம் ஸோ ஹாப்பி, என் ப்ரியத்தம்மா கூட எனக்குப் பிடிச்ச சிரஞ்சீவி படம் பார்க்க வந்துருக்கேன், என்னால நம்பவே முடியல” என்று சொல்லி அவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“நீங்க என்ன இன்னிக்கு வித்யாசமா இருக்கீங்க?”
“என்ன வித்யாசமா?”
“டீ ஷர்ட்லாம் போட்டிருக்கீங்க” என்றவள் “நம்ம இரண்டு பேரும் இன்னிக்கு ஒரே கலர்” எனும்போது யமுனாவிடம் ஒரு குழந்தையின் குதூகலம். சூர்யா இன்று ஜீன்ஸ், சிவப்பு நிறத்தில் டீஷர்ட் போட்டிருந்தான்.
“அது சிரஞ்சீவி ஒரு படத்துல இது மாதிரி ரெட் டீஷர்ட் போடுவாரு, அதனால ரொம்பத் தேடி வாங்கினேன். பாரு, இரண்டு பேரும் இன்னிக்கு சேம் கலர் டிரஸ் வேற, நாக்கு சால சந்தோஷம் ரா” என்றவன் யமுனாவின் விரல்களில் இருந்த நெயில் பாலிஷ் பார்த்து
“சூப்பர், பிடிச்சதா உனக்கு இந்த கலர்?” என்று கேட்க
“ரொம்ப பிடிச்சது சூர்யா, தேங்க்ஸ்” என்றாள் யமுனா.
அருகே அகம் கொண்ட காதலி, பிடித்த நட்சத்திரத்தின் திரைப்படம். காதல் வானில் பறந்தான். திரையையே பார்த்துக் கொண்டிருந்தான் சிரஞ்சீவி வரும் காட்சி காண.
“உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ அவரை?” யமுனாவுக்கு சூர்யாவின் அந்த ஆர்வம் பிடிபட கேட்டாள்.
“ம்ம், ரொம்ப பிடிக்கும். நல்ல டான்ஸர் ரா அவரூ. என்ன ஸ்டைல் தெரியுமா?” என்றான் சிலாகித்து.
அவனின் ‘அவரூ’வில் சிரித்துவிட்டாள் யமுனா.
“என்னம்மா சிரிக்கிற?” சூர்யா புரியாது பார்த்தான்.
“இல்ல, பேசுற கொஞ்சம் தமிழும் தியேட்டர் விட்டு போறதுக்குள்ள மறந்திடும் போல உங்களுக்கு” என்றதும்
“மறந்தா நீ சொல்லிக்கொடு” என்று மடக்கினான் அவன்.
படம் ஆரம்பித்தவுடன் சூர்யா மற்ற ரசிகர்கள் போல இருக்கையை விட்டு எழுந்து நின்று ஆர்ப்பாட்டமாகக் கத்த ஆரம்பித்தான். நாயகன் வருகையில் கலர் பேப்பர்கள் பறக்க, விசில் சத்தம் காதைப் பிளந்தது.
“தமிழ் நாட்டுல இந்த படம் பார்க்க இத்தனை பேரா?” என்று ஆச்சரியம் கொண்டாள் யமுனா. தோழிகளுடன் அவள் திரையரங்கம் செல்லும்போதும் இப்படி ஆண்கள் கத்துவது, கூச்சலுடன் கதா நாயகனைக் கொண்டாடுவது என பார்த்திருக்கிறாள். ஆனால் அத்தனையும் தமிழ் படம்.
இது முற்றிலும் புது அனுபவம்! அனுராகம் கொண்டவனின் அருகாமை. அவனின் உற்சாக பரிமாணம் எல்லாம் பாவையைக் கொள்ளைக் கொண்டது. சூர்யா அவளுக்குத் தெரிந்தவரையில் கொஞ்சம் அமைதியானவன். படிப்பில் மிகவும் கெட்டி, அவனுடன் படம் பார்க்கச் சென்றபோது கூட இப்படி இல்லை அவன்.
சூர்யாவோ சிரஞ்சீவியின் அத்தனை மாஸ் வசனத்திற்கும் விசில் அடித்து சத்தம் போட்டான். இத்தனை உற்சாகம் அவனிடம் எதிர்ப்பார்க்கவே இல்லை யமுனா. கொஞ்ச நேரம் படம் பார்த்த யமுனாவிற்கோ அதில் மனம் லயிக்கவில்லை. இவர்கள் செய்த சத்தம் பாதி, மொழி வேறு புரியாமல் இருக்க எதற்கு சிரிக்க, அழ என்றே தெரியவில்லை. சிறிது நேரம் இருந்த கவனம் கூட காதலனின் அட்டகாசத்தில் காணாமல் போனது.
சூர்யாவின் கவனம் திரையில் இருக்க, யமுனாவின் கவனமோ அவனில் இருந்தது. சூர்யாவின் ஒவ்வொரு அசைவும் யமுனாவினுள் ஆழமாய் இறங்கியது. அவன் அருகில் இருக்கவும், ஒரு அலாதி அமைதி அவளிடம், அவனின் கையில் இவள் விரல்கள் இருக்க விடுபட விருப்பமே இல்லை அவளுக்கு. சூர்யா யமுனாவின் விரல்கள் பிடித்திருந்த விதமே அத்தனை மென்மை.
“என்னோட சூர்யா!” நினைக்கவே இனித்தது அவளுக்கு. இண்டர்வெல் விட
“உனக்கு சாப்பிட என்ன வேணும் டா?” என்று சூர்யா கேட்க
“ஒன்னும் வேண்டாம் சூர்யா” என மறுத்தாள்.
“இங்க வெளியே சமோசா நல்லாயிருக்கும், நான் வாங்கிட்டு வரேன்” என்று சூர்யா எழ
யமுனா அப்படி கேட்க சூர்யாவினால் விட்டு செல்ல முடியவில்லை.
“ஓகேடா, படம் எப்படி இருக்கு? புரியுதா? கதை புரிஞ்சதா?” என்று கேட்க யமுனா இடவலமாகத் தலையசைத்தாள்.
“புரியலையா டா?” என்று சூர்யா கனிவாய்க் கேட்டவன்
“ஸாரிடா, நெக்ஸ்ட் டைம் நம்ம தமிழ் படமே போகலாம்” என்றான்.
“அய்யோ சூர்யா, நீங்க எஞ்சாய் பண்ணீங்க, அதையே நான் பார்த்துட்டு இருந்தேன். அதனால எனக்குப் படத்துல கவனமில்லை, நான் ஒன்னும் உங்க சிரஞ்சீவியைப் பார்க்கவரல. சூர்யா கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு வந்தேன்”
இதைக் கேட்க சூர்யாவுக்கு எப்படி இருக்கும்?
“நா ப்ரியத்தம்மா!” என்றவன் அவளின் கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்.
“சூர்யா?” என்று யமுனா பார்க்க
“எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு ரா. போன வருஷம் உன்னோட படம் பார்க்க வந்தப்போ எப்படி பயந்துட்டே இருந்தேன் தெரியுமா? நீ வரமாட்டேன் சொல்லவும் எனக்குக் கஷ்டமா இருந்துச்சு”
“நெக்ஸ்ட் டைம் நம்ம தமிழ் படம் போகலாம் யமுனா” என்று சூர்யா சொல்ல
“தமிழ் படம்னா வரவே மாட்டேன் நான், அங்க எங்க ஊர்க்காரங்க, தெரிஞ்சவங்க வந்துடுவாங்களோன்னு பயந்துட்டே இருக்கனும். இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன். உங்க கூட இருக்க நேரமும் யார் பார்ப்பான்னு என்னால பயந்துட்டே இருக்க முடியாதுப்பா” யமுனா தன் நெஞ்சில் கைவைத்து பெருமூச்சுடன் சொன்னாள்.
“அப்படி பயந்துட்டே இருந்தா நீ என் மேல சாஞ்சுப்ப. இப்போ தள்ளி இருக்க.. ஸோ நெக்ஸ்ட் டைம் தமிழ் படம்தான்!” என்று குறும்பாய்ப் பேச
“சூர்யா! போங்க, இப்படி பேசினா நான் வரவே மாட்டேன்” என்று மிரட்டியவளுக்கு உள்ளுக்குள்ளே காதல் மின்னல்கள். ஒரு மென் நடுக்கம், மெல்லிய வெட்கம் பெண்ணுக்குள்.
“யமுனா, கோவமா ரா?” என்று சூர்யா யமுனாவின் வெட்க முகத்தைக் கண்டு கேட்க,
“ஓகே தானே ரா?” என்று படத்தைப் பார்த்துக்கொண்டே பாவையிடம் கேள்வி கேட்டான் சூர்யா.
“என் சூர்யா இருக்கும்போது நான் ஓகேதான்” யமுனாவின் இந்த வார்த்தைகள் வசந்தகாற்றை அவனுள் வீச, அவள் கையைத் தனக்குள் பொத்துவைத்தபடி படம் பார்க்க, யமுனா புரிகிறதோ இல்லையோ மேம்போக்காக படம் பார்த்தாள்.
சூர்யாவிடம் பேசும்போது தன்னையே புதிதாய் உணர்ந்தாள் யமுனா. உண்மையில் சூர்யா என்பவன் யமுனாவையே அவளுக்கு உணர்த்தினான். அப்பாவின் கண்டிப்பில், அம்மாவின் அதட்டலில், அண்ணனின் அனுசரணையில் வளர்ந்த ஒரு சின்னப்பெண்ணை அவளின் ஆசைகளை, அவளுக்கான தேடல்களை சின்ன சின்ன சந்தோஷங்களை தன் காதலால், கனிவால், அன்பால் இயல்பாய் மீட்டுக்கொடுத்தான் சூர்யா.
சூர்யாவுடன் இருக்கும் யமுனாவை அவளுக்கே மிகவும் பிடிக்கும். ஆண்களிடம் ஆமாம் சொல்லியே வளர்ந்தவளுக்கு சூர்யாவுடனான பேச்சுகள், தன் பேச்சை அவன் கேட்கும் பொறுமை எல்லாம் பிடிக்கும். காதல் சுயத்தை இழக்கவைக்கும் என்பார்கள். காதல் அன்பென்றால் அது எப்படி ஒன்றை இழக்கவைக்கும்?
இல்லைவே இல்லை! சுயத்தை, சுயமரியாதையை இழக்கச் செய்வதெல்லாம் காதல் அல்ல! சுயநலம்! காதலிப்பவரை பொருளாய்ப் பாவிப்பவர் செய்வது அதெல்லாம்.
காதல் சுயத்தை மெருகேற்றும்! மென்மேலும் அழகாக்கும்! நேசம் என்பது நிறைவைத் தருவது! நிறைய நிறைய அன்பைத் தருவதும் பெறுவதுமாகும்! சுயத்தைத் தொலைக்க வைக்காத பேரன்பு அழகென்றால், சுயத்தை மீட்டுக்கொடுக்கும் பேரன்பு பெருமதிப்புமிக்கது. அப்படியான பேரன்பைக் கொண்டவன் சூர்யா, அதை கொண்டவளுக்கும் கொடுத்து கொள்ளைக் கொண்டான்.
இடையே படத்தில் பாட்டு ஓடியது.
‘சுபலேகா ராசுக்குன்னா எதலோ எப்புடு?
அதி நீக்கு பம்புக்குன்னா அபுடே கலலு’
(I wrote a wedding invitation in my heart a long time ago
I sent it to you then in a dream)(என் இதயத்தில் நம்ம திருமண பத்திரிக்கையை முன்பே எழுதிவிட்டேன், அதை கனவில் உனக்கு அனுப்பிவிட்டேன்)
அதில் நாயகனும் நாயகியும் நெருக்கமாய் ஆட, யமுனாவிற்கு சங்கடமாக இருக்க கீழே குனிந்து கொண்டாள். சூர்யா சரியாக பாடல் ஓடவும் பாவை பக்கம் பார்க்க, யமுனாவோ எங்கே போன முறை போல் இப்போது ராதா கட்டிய புடவையைப் போல் பார்க்க வேண்டும் என்று சொல்லிடுவானோ என பயந்தாள்.
“இளையராஜா எப்படிங்க தெலுங்குப் படத்துக்குக்கெல்லாம் பாட்டு போடுறார்?” என்று யமுனா தன் சந்தேகம் கேட்க
“art and love doesnt have any barriers, அது… இது மாதிரி மியுசிக் லவ் எல்லாம் லேங்குவேஜ் தேவையில்லைரா. இளையராஜாவுக்கு மியுசிக் பிடிக்கும், அதனால அவருக்குத்தானாவே வருது, ஏன் எஸ்பிபி எடுத்துக்கோ அவர் தெலுங்கு, ஆனா பாரு என்னை மாதிரி தமிழ் பேசுறார், நல்லா பாடுறார் எல்லா லேங்குவேஜ்லயும். if you love it, you do it” என்றான்.
“எஸ்பிபி பாடும்போது அவர் தெலுங்குன்னு தெரியாது, உடனே உங்களைக் கொண்டு போய் எஸ்பிபியோட பேசாதீங்க, நீங்க அவரூன்னு சொல்றப்பவே ஆந்திரான்னு எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்க” சூர்யாவின் தமிழைக் கிண்டல் செய்வதெல்லாம் யமுனாவிற்கு சாதாரணமாய்ப் போனது இப்போது. உண்மையில் அந்தளவு உரிமையும் சுதந்திரமும் கொடுத்திருந்தான் சூர்யா.
யமுனா பயந்தது போல் ராதா போல் புடவை அணிய சூர்யா சொல்லவே இல்லை. அதுவே அவளுக்கு சந்தோசமாய் இருந்தது. இருவரும் படம் முடிந்து உணவை முடித்துக்கொண்டனர். யமுனாவைக் கல்லூரி அருகே விட்டவன்
“உனக்கு அடுத்த வாரம் எக்ஸாம் இருக்குல்ல யமுனா? படிச்சிட்டியா?” என்று கேட்டான்.
“படிச்சிட்டேன்”
“குட்! டவுட்னாலும் என்னைக் கேளு, நான் லைப்ரரியில ஈவினிங் வரைக்கும் இருப்பேன்” என்றான்.
“நெக்ஸ்ட் வீக் அம்மாவுக்கு தெவஷம் வரும் யமுனா, நான் குண்டூர் போகனும். நீ உன் எக்ஸாம் நல்லா பண்ணு, நான் வந்ததும் உன்னை தமிழ் படம் அழைச்சிட்டுப் போறேன்” முதலில் சாதாரணமாய்ப் பேசியவன் கடைசியில் கிண்டலில் முடிக்க,
“சூர்யா, முன்னாடி எல்லாம் நீங்க பேசவே மாட்டீங்க. இப்படியே சொல்லிட்டே இருங்க, இனி இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்துடுவேன்” யமுனா மிரட்டவே செய்தாள்.
“நீ கூடத்தான் பேசவே யோசிப்ப, என்னவோ நான் உன்னை எதாவது பண்ணிடுவேன்ற மாதிரி பயப்படுவ, இப்போ இந்த அம்மாயி என்னை மிரட்டுறாங்க” என்று சிரித்தான்.
“சூர்யா கூட இருக்கும்போது நான் ஏன் பயப்படனும்?” என்று கேட்ட யமுனா உருக்கமான குரலில்
“உங்க கூட இருக்கும்போது யாராவது தெரிஞ்சவங்க பார்ப்பாங்கன்னு பயமிருந்தாலும், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சூர்யா. உண்மையை சொல்லனும்னா என் வீட்ல இருக்கறதவிட ரொம்ப சந்தோஷமா இருப்பேன். கல்யாணமான அப்புறமும் இப்படியே இருப்பீங்களா?” என்றாள் ஆவலுடனும் ஐயத்துடனும்.
அவள் தலையில் கைவைத்து அழுத்திய சூர்யா
“நுவ்வு நா ப்ராணம்டா, இந்த சந்தேகமெல்லாம் எல்லாருக்கும் இருக்கறதுதான். கண்டிப்பா இதைவிட உன்னை நான் நல்லா பார்த்துப்பேன் யமுனா, சத்தியம் டா” என்றவனின் குரலில் காதலின் ஆழம் உணர்ந்தாள் சூர்யாவின் ப்ரியத்தம்மா.
“சூர்யா, எனக்குத் தெலுங்கு புரியவே இல்லையே. எனக்குத் தெலுங்குப் பேச முடியலன்னா திட்டுவீங்களா?”
“ஏன்ட்ரா நீ? உனக்கு என்ன இஷ்டமோ பேசு, நீ பேசுறது எனக்குப் புரியுது. நான் பேசுறது உனக்குப் புரியுது, ப்ரியம் இருக்க இடத்துல லேங்குவேஜ் இஸ் நாட் எ ப்ராப்ளம். என்னாச்சு என் ப்ரியத்தம்மா இன்னிக்கு ரொம்ப பேசுறாங்க?”
“அது நீங்க ரொம்ப ஆசையா படம் பார்த்தீங்க, நாங்க ப்ரண்ட்ஸ்லாம் படம் பார்த்த பின்னாடி அது பத்தி பேசுவோம். இப்போ நீங்க ஆசையா படம் பார்த்துட்டு எங்கிட்ட பேச வந்தீங்க, நான் படமே பார்க்கலயே..” வருத்தமுடன் வஞ்சியின் குரல் வர
வாத்சலயம் நிறைந்த குரலில் சூர்யா “அதுதான் என் ப்ரியத்தம்மா என்னைப் பார்த்தாளே, அதுவே நாக்கு சந்தோஷம் டா. இப்ப படம் புரிஞ்சா என்னையே சைட் அடிப்பியா நீ?” என்று கேட்டு யமுனாவை சிவக்க வைத்தான்.
சூர்யா ஊருக்குப் போய் வந்தவன் அந்த வார ஞாயிற்றுக்கிழமை மதியம் போல யமுனாவை வெளியே அழைத்துப்போனான்.
“சூர்யா படத்துக்கா போறோம், லேட் ஆகுமே” என்றாள் அவனுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றபடி.
“நான் பார்த்துக்கிறேன் யமுனா, நீ பயப்படாத” என்றவன் அவளுடன் தி நகர் செல்லும் பேருந்தில் ஏறினான். வாணி மஹாலில் இறங்கியவன்
“உனக்கு டிராமா பார்க்கப் பிடிக்கும்னு கோகிட்ட சொல்லியிருக்க, இங்க உனக்குத் தெரிஞ்சவங்க வர சான்ஸ் கம்மி, மௌலியோட flight 172 ரொம்ப நல்லாயிருக்கும்னு ஸ்டாலின், எங்க ஹவுஸ் ஓனர் ராணியக்கா எல்லாம் சொன்னாங்க. இன்னிக்கு ஏதோ ஒரு கெஸ்ட்காக ஸ்பெஷல் ஷோவாம். அதான் உன்னை அழைச்சிட்டு வந்தேன்” என்றான் சூர்யா.
யமுனாவிற்குத் தேவையானது அத்தனையும் வீட்டில் கிடைத்துவிடும். ஆனால் அது பிடித்ததா என்று யாரும் கேட்கமாட்டார்கள், பிடித்தாலும் பிடிவாதம் கொண்டெல்லாம் பெண்பிள்ளையான அவளால் கேட்டிட முடியாது. ஆசைப்பட்டால் அண்ணன் வாங்கித்தருவான், அதுவே அப்பாவுக்குத் தெரியாமல். அதனால் அண்ணனைக் கஷ்டப்படுத்தக் கூடாதென தொந்தரவும் கொடுக்க மாட்டாள் யமுனா.
காதல் என்றால் இதுதானோ? என் சூர்யாதானோ? என்று நினைக்க வைத்தான் அவன். தனக்கெனவே அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அப்படியே அவனில் விழுந்தாள் பெண். உண்மையில் அவளுக்குத் தன்னைப் பிடிக்க வேண்டும் என்ற ப்ரயர்த்தனமெல்லாம் சூர்யாவிடம் துளியும் கிடையாது, அவனின் ப்ரியத்தம்மாவிக்குப் பிடித்தவை செய்வதில் அவனுக்கு ஒரு ஆனந்தம். அதற்காகவே செய்தான்.
மேடை நாடகம் தொடங்கிட, இரு நபர்கள் ஃப்ளைட்டில் உட்கார்ந்து பேச, நாதஸ்வர கலைஞரான மௌலி தன்னைப் பற்றி அருகே இருந்த நபரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கினார்.
“வாட்?? ஐ டூ நாதஸ்வரம்”
“நாதஸ்வரம்?”
“எஸ், நாதஸ்வரம். இன் மேரேஜஸ், இன் டெம்பிள்ஸ், ஃபோர் பாய்ஸ் சிட்டிங் ஒன் கார்னர், நாட் தேர்… இன் மேரேஜஸ் ப்ரோடியுசிங்க் noise.” என்று மௌலி விளக்கம் சொல்ல அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது.
“பழகிடுச்சு, முன்னாடி மாதிரி இல்லைடா. இப்போ குறைச்சிட்டேன் நான். நீ ஸ்டாலினைக் கேளு” என்றான். யமுனாவும் ஆசைக்காக ஒரு மிளகாய்ப் பஜ்ஜி உண்டுவிட, காரம் தாங்க முடியவில்லை. அவள் கண்கள் கலங்கிவிட
“இந்த மிளகாவே காரம்னா நம்ம தோட்டத்து மிளகாய் சாப்பிட்டா என்னவா டா நீ?” என்றவன் அவளுக்குத் தண்ணீர் குடித்தும் சரியாகாததால் வெனிலா ஷேக் வாங்கிக் கொடுத்தான். ஹாஸ்டலுக்கு நேரமாகிவிடும் என்பதால் சூர்யா யமுனாவை பேருந்துக்குக் காத்திருக்க வைக்காமல் ஆட்டோவிலேயே விட்டுவிட்டான்.
இப்படியே இவர்கள் ப்ரியங்களின் கதை நீள, நாலாம் செமெஸ்டர் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று வந்த யமுனா சூர்யாவின் ப்ரியத்தம்மாவாக இல்லாமல் சற்குணப்பாண்டியனின் மகளாக மாறியிருந்தாள். சூர்யாவின் கோபத்தையும் தூண்டிவிட்டாள்.