கணவன் மனைவி இருவரும் வயதில் மட்டுமல்ல… படிப்பு வருமானம் என அனைத்திலும் சம்மானவர்கள்.. திருமணமாகி முடிந்து நான்கு வருடங்களாகிறது.
காதலிக்கும்போது சிறு மனச்சுணக்கம் கூட இருவருக்கும் வந்ததில்லை.. ஆனால் திருமணத்திற்கு பின்னே சிறு சிறு சண்டைகள் வர ஆரம்பித்தது. பிறகு சண்டை வரக்கூடாதென இருவரும் வேண்டிக்கொள்வார்கள். ஆனால் சண்டை வந்துவிடும். வந்த சண்டையின் ரணம் குறைவதற்குள் அடுத்த காயத்தை தேடிக்கொள்வார்கள்.
தேவேஷ் ஷர்மிளா இருவரும் வெவ்வேறு ஐ.டி கம்பெனியில் பணிபுரிகிறார்கள். ஒரே கல்லூரியில் பயின்றவர்கள்.. கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் காதல் வயப்பட்டு, இரண்டாண்டுகள் காதலித்து தனது இருபத்தி மூன்றாம் வயதில் திருமணம் செய்துகொண்டார்கள்.
காலை ஏழு மணிக்குமேல் எழும் ஷர்மிளாவிற்கு அறையிலிருந்து வெளிவரவே ஏழரைக்கு மேலாகிடும்..
ஒரு காபி குடிக்க எட்டு மணியாகிடுது என கற்பகம் முறைத்தால்.. ஏன் உங்கம்மா காபி கூட போட்டுக்கமாட்டாங்களா என கற்பகத்தின் முன்பே தேவேஷிடம் கேட்பாள்.
நீ போட்டு கொடுத்தா என்னாகிடுவ?? என தேவேஷ் கேட்டால்.. நான் வரும்முன்ன உங்கம்மா எல்லா வேலையும் செய்தவங்கதான? இப்போ காபி மட்டும்தான போட்டு குடிக்க சொல்றேன்..?
உங்களைபோலதான நானும் வேலைக்கு போறேன்? என மல்லுக்கு நிற்பாள் ஷர்மிளா. இதனாலேயே ஷர்மிளா வேலைக்கு போவது கற்பகத்திற்கு சுத்தமாக பிடிக்காமல் போனது.
ஆனால் அது பற்றி பேசினால் மகனே தன்னிடம் மல்லுக்கு நிற்பான், அது மருமகளிடம் இன்னும் இளப்பமாகிவிடும் என்பதால் அமைதியாகிடுவார் கற்பகம். இப்படியாக ஷர்மிளாவிற்கும் தேவேஷின் அன்னைக்கும் ஆரம்பம் முதலே முரண்பாடுதான்..
தேவேஷ் ஷர்மிளா இருவருமே நடுத்தர வர்கத்தினர்.. படிப்பை முடித்த அடுத்த மாதமே நல்ல வேலையில் மகன் அமர்ந்ததும் பெருமகிழ்ச்சியடைந்தார் கற்பகம்.
அதிலும் பத்தாயிரத்தில் மாதத்தை ஓட்டி வந்தவருக்கு மகன் எழுபதாயிரத்திற்குமேல் சம்பளம் வாங்கபோகிறான் என்பது அளவில்லா சந்தோசத்தை கொடுத்தது.
ஆனால் வேலைக்கு போன ஒரு வருடத்திலேயே மாலையோடு மணக்கோலத்தில் வந்து நின்ற மகனைக் கண்டதும் பேரதிர்ச்சியான கற்பகம்.. “இருபத்திமூனு வயசுதான ஆகுது? அதுக்குள்ள கல்யாணத்துக்கு அவரசரமா?” என முறைத்தார்.
“இரண்டு வருசமா லவ் பண்றோம்மா.. இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. வேற வழியில்லாம கல்யாணம் செய்துக்க வேண்டியதாகிடுச்சி..” என்றான் தன்மையாக.
“உன் விருப்பத்துக்கு தடையா என்னைக்குடா இருந்திருக்கேன்? இதுதான் சூழ்நிலைன்னு ஒத்த வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல? இரண்டு பொண்ணுங்களை கட்டிக்கொடுத்திருக்கோம்.. சம்மந்தி வீட்டுல என்ன நினைப்பாங்க?” என அங்கலாய்த்தார்.
விருப்பத்திற்கு தடைசொல்லமாட்டேன் என சொல்வதெல்லாம் பொய்.. காதலென்றாலே அன்னைக்கு சுத்தமாக பிடிக்காதென தேவேஷிற்கு தெரியும்.. அதனால்தானே சொல்லாமல் திருமணம் செய்து வந்திருக்கிறான்.
தேவேஷ் அமைதியாக இருக்கவே.. “நம்ம ரெண்டுபேருக்கு எதுக்கு இத்தனை பெரிய வீடுன்னு கேட்டதுக்கு அக்கா தங்கை வந்து போனா தங்கறதுக்காகன்னு சொன்னது இதுக்குத்தானா?” என முறைத்தார்.
தெருவில் சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க.. எதுவும் சொல்லாமல் கற்பகம் உள்ளே செல்லவும்.. “வா..” என அழைத்துப்போனான் ஷர்மிளாவை.
கற்பகம் அமைதியாக அமர்ந்திருக்க.. “உக்காரு..” என்றவன் கிச்சன் சென்று தண்ணீர் எடுத்துவந்து ஷர்மிளாவிற்கு கொடுக்கவும் அந்த முறை முறைத்தார் மகனை.
ஷர்மிளா தண்ணீர் குடித்ததும் இவனும் அமைதியாக அமர்ந்திருந்தான் ஒருமணி நேரம் வரை. பிறகு இளைய மகள் வரவும்.. கற்பகம்.. “வா.. அபி.. நானே போன் பண்ணலாம்னு இருந்தேன்.. உன் அண்ணன் பார்த்துருக்க வேலையைப் பார்த்தியா?” என்றார் ஆற்றாமையோடு.
“கல்யாணம்ன்றது அவ்வளோ ஈசியா?” என கற்பகம் முறைக்கவும்.. “அம்மா.. அண்ணாக்குனு எதாவது இதுவரை செய்திருக்காங்களா? இப்போதான் கல்யாணம் செய்து வந்திருக்காங்க.. வாழ்த்தலைன்னாலும் பரவால்ல.. இப்படி அழாதிங்கம்மா..” என்றாள் கெஞ்சுதலாக.
அக்காள் தங்கைகளுக்கு நேற்றே சொல்லிவிட்டான் தேவேஷ். அதனால் இன்று சரியான நேரத்திற்கு வந்திருந்தார்கள் இருவரும். இருவரையும் ரிஜிஸ்தர் அலுவலகத்திற்குதான் வரசொன்னான் தேவேஷ்.
ஆட்டோவிற்கு பணம் கொடுத்து கார்த்திகா வரவும்.. “கார்த்தி..” என பெரிய மகளைக் கட்டிக்கொண்டு.. “நான் மோசம் போய்ட்டேன்டி.. என்ன ஜாதியோ தெரியல.. உன் தம்பி இப்படி பண்ணுவானு நினைச்சே பார்க்கல..” என கண்ணீர் வடித்தார் கற்பகம்.
“அம்மா.. அழாத.. இரண்டு வருசம் கழிச்சி நல்ல பொண்ணா பார்க்கனும்னு சொல்லிட்டுதான இருந்த? உனக்கு சிரம்மில்லாம நல்ல அழகான பொண்ணா தேவே பார்த்துட்டான்..
தேவா கல்யாணம் நீ நினைச்சதை விட இரண்டு வருசம் முன்ன நடந்திருக்கு.. அவங்களை வாழ்த்தி வாழ விடும்மா.” என்றாள் கெஞ்சுதலாக.
“என் பையனை நான் வாழவிடலையா?” என்ற எண்ணம் தாக்க.. அதிர்வாய் பார்தார் கார்த்திகாவை.
அன்னையை அறிந்தவளாய்.. “நடந்தது நடந்துடுச்சி.. இனி இவங்கதான் தேவோட மனைவி.. உன் மருமகள்.. இதை மாத்த நினைச்சா முதல்ல பாதிக்கப்படறது உங்க மகன்தான்.
உனக்குனு இல்ல.. எங்களுக்கும் தேவ்வை விட்டா வேற யாரிருக்கா? அப்பாகிட்ட இருந்த மொத்த பணத்தையும் போட்டு எனக்கு கல்யாணம் செய்து வச்சிட்டு போய் சேர்ந்துட்டார்..
ஆம்பிளைப் பையன் எனக்கு நான் சம்பாதிச்சிக்க மாட்டேனான்னு இருக்கிற ஒரு வீட்டையும் வித்து நல்ல இடத்துல அபிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் தேவ்..
ஒரு சதுரடிக்கு கோர்ட் வரைக்கும் போற காலத்துல என்தம்பி இந்தளவுக்கு எங்களுக்காக விட்டு கொடுத்தது எவ்வளோ பெரிய விசயம்..? யாருக்கு இந்த மனசு வரும்?” என அரைமணிநேரம் வரை பேசி..
“நம்மமேல தேவா எவ்வளோ அன்பு வச்சிருக்கானு உனக்கு தெரியாதாம்மா..? அவன் சந்தோசத்தை கெடுத்துட்டு நம்மளால நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு..?” என்றாள் தன்மையாக.
கற்பகம் அமைதியாகவே.. பின்னே ஷர்மிளாவை விளக்கேற்ற வைத்து, பால்பழம் கொடுத்து அவளின் வீட்டு நிலவரம் கேட்டறிந்தாள் கார்த்திகா.
மகளோடு ஷர்மிளா பேசியதில்.. அவளும் தன் ஜாதிதான் என்பதில் சற்று ஆசுவாசமடைந்தார் கற்பகம்.
ஒரு வாரம் கழித்து ஷர்மிளா வேலைக்கு செல்ல ஆயத்தமாகவே.. தேவேஷிடம் ஷர்மிளா வேலைக்கு செல்வதில் தனக்கு விருப்பமில்லையென்றார் கற்பகம்.
வேலைக்கு சென்றே தீருவேன் என ஷர்மிளா அழுத்தமாய் சொன்னதில் கற்பகத்திற்கு மனச்சுணக்கம் ஆனது.
“இவ சம்பளம் அவங்க வீட்டுக்கு ரொம்ப முக்கியம்மா.. இப்போ கோபத்துல இருந்தாலும் பின்னாடி சமாதனம் ஆகிடுவாங்க.. அவ தம்பியை இவதான் படிக்க வச்சிட்டிருக்கா..” என்றான் புரிய வைக்கும் நோக்கோடு.
நாமும்தான் இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்து கட்டிக்கொடுத்தோம்.. மகள்களும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்கள்தான். ஆனால் ஒருபோதும் அவர்களின் சம்பளைத்தைப் பற்றி யோசிக்காமல் தன் கடமையை நிறைவேற்றிய மகனா தற்போது மாமியார் வீட்டிற்கு மனைவியின் சம்பள பணத்தை தர அனுமதிக்கிறான்?
தேவே இப்படி சொல்கிறான் என்றால் அப்போ முன்னமே தன் சம்பளத்தைப் பற்றி மகனிடம் பேசிவிட்டாள்.. கல்யாணமாகி ஒரு வாரத்திலயே இத்தனை மந்திரமா என கற்பகத்திற்கு ஷர்மிளா தவறாகவே தெரிந்தாள்.
கற்பகம் நினைக்கும் அளவிற்கு உண்மையில் ஷர்மிளா தவறானவளே அல்ல.. ஒருவருடம் முன்பு தன் இரண்டாவது தங்கைக்காக இருக்கும் ஒரு வீட்டையும் விற்று அவளிற்கு கல்யாணம் செய்து கொடுக்கப்போகிறோம்.. அதை தவிர வேறு சொத்துகள் இல்லையென ஷர்மிளாவிடம் தேவேஷ் சொல்லும்போது..
இதையெல்லாம் என்கிட்ட சொல்லவேண்டியதே இல்லை தேவ்.. உங்க தங்கைக்காக கொடுக்குறிங்க.. அவங்க நல்லபடியா செட்டில் ஆனா நீங்க சந்தோசமா இருப்பிங்கதான? உங்க சந்தோசம்தான் என் நிம்மதி என மனமாற சொன்னவள் ஷர்மிளா.
தேவேஷ் ஆச்சர்யமாய் பார்க்கவும்.. வீடுதான? நம்மளால வாங்க முடியாதா என்ன? இன்னும் இரண்டு வருசத்துல என் தம்பி படிச்சி முடிச்சிடுவான்.. அதுக்கப்புறம் என் சம்பளம் மொத்தமும் நமக்குதான்..
அதோட இரண்டு வருசத்துக்கப்புறம் நம்ம சம்பளமும் அதிமாகியிருக்கும்.. கட்டின வீடா பார்த்து வாங்கிப்போம்.. ஒருத்தர் சம்பளம் வீட்டு செலவுக்கானாலும், ஒருத்தர் சம்பளத்தில கடனை கட்டிட்டு வந்திடலாம்..” என்றாள் நம்பிக்கையாக.
“தேங்க்யூடா..” என அணைத்தான் காதலியை. “தேவ்.. தேங்க்ஸ் சொல்லி என்னை அன்னியப்படுத்தாதிங்க.” என உருகியவள் ஷர்மிளா.
தற்போது அன்னையின் பார்வை மனைவி மீது தவறாக இருக்கிறது எனப்புரிந்த போதும்.. தற்போதே ஷர்மிளாவைப் பற்றி எடுத்துரைத்தால் மனைவி மந்திரம் என நினைப்பார்கள்.. போகப்போக அம்மாவே ஷரிமிளாவை புரிந்துகொள்வார்கள் என நினைத்தான் தேவேஷ்.
ஆனால் இருவருக்கும் பெரிதாய் சண்டை வராதபோதும், “கல்யாணமான பொண்ணு புடவை கட்டினா ஆகாதா? அதென்ன ஆம்பிளை மாதிரி எப்பப்பாரு பேன்ட்டும் சர்ட்டும் போடறது? என கற்பகம் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார். இப்படியான சிறு சிறு முனுமுனுப்பையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்திடுவாள் ஷர்மிளா.
திருமணத்திற்கு முன்பு தன்வேலைகளை அன்னையே செய்திருந்ததால் வீட்டு வேலை செய்து அலுவலகத்திற்கும் செல்வது ஷர்மிளாவிற்கு பெரிய பிரச்சனையாக இருக்கவே, முதலில் வாஷிங் மிஷின் வாங்கினாள்..
வாடகை வீடென்றாலும் பெரிய வீடாக இருக்க.. இத்தனை பெரிய வீட்டை என்னால பெருக்கி துடைக்க முடியாது என கற்பகம் மருமகளிடம் பேசவே.. அடுத்த வாரத்திலேயே வீட்டை சுத்தம் செய்ய ஆள் வைத்துக்கொண்டாள்.
வேலை செய்யும் பெண்ணிற்கு கொடுக்கும் சம்பளம் கற்பகத்தை பொருத்தவரை பெரிய தொகையென தோன்றவே மகனிடம் புலம்பினார்.
“அவ பணத்துலயிருந்துதான்மா அந்த பொண்ணுக்கு சம்பளம் கொடுக்குறா..” என தேவேஷ் சொல்ல.. “ஓ.. அப்போ அவ சம்பளம்னா நான் எதுவும் சொல்லக்கூடாதா?” என கற்பகம் சுணங்க..
“ம்மா.. கம்பெனியில எனக்கு ஈக்குவலா வேலை பார்க்குறா.. வீட்டுலயும் செய்யனும்னா எப்படிம்மா?” என மனைவிக்காக பேசவும்.. அதன் பின் அவ்விசயத்தைப் பற்றி பேச்செடுப்பதில்லை கற்பகம்.
கற்பகத்திற்கும் மருமகளை கொடுமை செய்யும் எண்ணமில்லை.. ஆனால் பிறந்த வீட்டிற்கு பாதி சம்பளத்தை கொடுப்பது, வீட்டு வேலைக்கு ஆள் வைப்பது.. இன்றைய சமையல் என்ன என்பன போன்ற எவ்விசயத்தையும் தன்னிடம் கலந்துகொள்ளாத ஷர்மிளா மீது பெரிதாய் நன்மதிப்பு தோன்றவேயில்லை.
காலையில் டிபன் வேலை முடித்து மாமியாருக்காக மதிய உணவும் செய்து பணிக்கு கிளம்பும் ஷர்மிளாவிற்கும்.. அவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் செய்ததை தவிர வேற என்ன தவறு செய்துவிட்டேன்..? எப்ப பார்த்தாலும் என்கிட்ட இறுக்கமாவே இருக்காங்க..
மகளுங்க வந்தா எப்படி சிரிச்சி பேசுறாங்க? கல்யாணமாகி இரண்டு வருஷமாச்சி.. இதுவரைக்கும் ஒரு வார்த்தை இயல்பா பேசுறாங்களா? நீங்க மாமியார்னா நானும் மருமகளாதான் நடந்துக்க முடியும்.. என்ற ஆதங்கத்தில் ஷர்மிளாவிற்கும் மாமியார் மீது நன்மதிப்பு தோன்றியதேயில்லை.
இப்படியாக இரண்டு வருடம் முடிந்திருக்க.. எல்லா தாய்மார்களையும் போல கற்பகத்திற்கும் பேரன் பேத்திகளை பார்க்கும் ஆசை மேலோங்க.. மருமகளிடம் இதைப்பற்றி பேசும் அளவிற்கு இன்னும் சகஜமாகவில்லை என்பதாலும்.. இதுகுறித்து மகனிடம் பேசவும் பிடிக்காமலும் மகள்களை காண சென்றார் கற்பகம்.
“ஒரு வருஷமே ஆகிடுச்சி.. இப்போதான் வீட்டுக்கு வரனும்னு தோணுச்சாம்மா?” என வரவேற்றாள் அபிராமி.
சொந்த வீட்டை விற்றதிலிருந்து அவமானமாய் உணரும் கற்பகத்திற்கு.. மருமகன் வீட்டில் தங்குவதை விட கடினம் வேறில்லை.. அதிலும் கார்திகாவை உள்ளூரிலேயே கொடுத்திருப்பதால் அவளின் வீட்டிற்கு தேவையின்றி செல்லமாட்டார்.
மகள் பேத்தி, மருமகன் நலன் விசாரித்த கற்பகம்.. “கார்த்தியை இங்க வரசொல்லியிருக்கேன்..” என்றார்.
விஜயன் முன்னே அண்ணியை குறைசொல்லிடப்போறாங்க என.. “ம்மா.. உங்க மருமகன் வீட்லதான் இருக்கார்.. உள்ள தூங்கிட்டிருக்கார். நீ வரன்னு சொன்னதால அவரும் லீவ் போட்டிருக்கார்.” என்றாள் அபிராமி.
(அபிராமியின் கணவன் பொதுப்பணித்துறையில் சூப்பிரண்டாக பணிபுரிபவன். மூத்தவன் தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் பணிபுரிபவன், அவனின் மனைவியும் பணிக்கு செல்பவள்.. விஜயன் பெங்களூருவில் வேலையில் இருப்பதால் தாய் தந்தையை அங்கேயே வைத்துக்கொண்டான்.
தரகர் பொண்ணு போட்டோ காட்டினார். அபியை பார்த்ததுமே என் பையனுக்கு பிடிச்சிடுச்சி, உங்க பொண்ணை கொடுத்திங்கனா எங்க பையனோட சந்தோசத்தோட சேர்த்து சொந்த ஊர்ல பொண்ணெடுத்த சந்தோசம் கிடைக்கும் என விஜயனின் பெற்றோர் அபிராமியை பெண்கேட்டனர்.
சந்தோசமடைந்த விஜயனின் பெற்றோர் ஐம்பது பவுன் நகை கேட்கவே கற்பகம் இவ்விடம் வேண்டாம் என்றார். விஜயனிற்கு தங்கையை கொடுத்தால் அவளின் எதிகாலத்தைப் பற்றி கவலையின்றி இருக்கலாம் என அன்னைக்கு எடுத்துரைத்து வீட்டை விற்று திருமணத்தை முடித்து வைத்தான் தேவேஷ்.
***** 2 *****
தங்கைக்கு நகையெடுக்கும்போதே கார்த்திகாவிற்கும் இருபது பவுன் நகை எடுத்து கொடுத்து, கார்திகாவின் திருமணத்திற்கு தந்தை போட்ட முப்பது பவுனை ஐம்பதாக சமன் செய்தான். கார்த்திகா மறுத்த போதும், பிறந்த வீட்டு சீர்வரிசையில் இருவருக்கும் பாகுபாடு இருந்தால் தனக்கு உறுத்தலாக இருக்கும்.. என் நிம்மதிக்காக வாங்கிக்கோக்கா என கார்த்திகாவை சம்மதிக்க வைத்தான்.
வீட்டை விற்றுதான் திருமணம் முடித்தார்கள் என திருமணம் முடிந்த பிறகு அபிராமி சொல்லித்தான் விஜயனிற்கு தெரிய வர.. அவனிற்கும் சங்கடமாகிப்போனது.
ஆனாலும் நடந்து முடிந்த செயலுக்கு ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால், உன் சம்பளத்துல உங்கம்மாக்கு மாசமாசம் ஒரு தொகையை அனுப்பிடு.. என்றான் விஜயன்.
அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் கணவன் சொன்னதை அபிராமி செய்ய.. கற்பகம் வாங்க மறுத்ததோடு, என் அம்மாக்கு நான் பார்க்க மாட்டனா? இனி இப்படி பணத்தோட வரதுனா வரவே வராத என தங்கையிடம் சண்டையிட்டு அனுப்பிவைத்தான் தேவேஷ்.)
குழந்தை விசயத்திலும் மகள்கள் ஷர்மிளாவிற்கு ஆதரவளிப்பார்களோ என்ற யோசனையில் கற்பகம் அமைதியாக இருக்கவே.. கார்த்தியை வர சொல்லியிருக்காங்கனா எதாவது பிரச்சனையிருக்கும் என்றுணர்ந்தவளாய்.. “அண்ணா அண்ணி நல்லாயிருக்காங்களா?” என்றாள்.