“ம்.. அவங்களுக்கென்ன?” என மிதப்பாய் சொல்ல.. “வாங்கத்தை..” என வரவேற்றபடி விஜயன் வெளியே வந்தான். மருமகன் வரவும் ஷர்மிளா பற்றி பிறகு பேசலாம் என நினைத்து.. சற்று நேரம் விஜயனின் பெற்றோர், அண்ணன் குழந்தைகள்கள் பற்றி உரையாடியபடி உணவருந்திக் கொண்டிருக்க கார்த்திகா வந்தாள்.
கார்த்திகாவிடம் நலம் விசாரித்த விஜயன் இவர்களுக்கு தனிமையளிக்க வேலையிருப்பதாக சொல்லி வெளியே கிளம்பினான்.
“உங்கண்ணிக்கு குழந்தை பெத்துக்கிற ஐடியா இருக்காமா? இல்ல இப்படியே தானாதட்டிமா இருக்கபோறாளாமா?” என ஆரம்பித்தார் கற்பகம்.
“ஓ.. இதுக்குத்தான் என்னையும் வர சொன்னியா? நானென்னவோ மகளுங்களை பார்க்க ஆசையா வந்திருக்கனு நினைச்சேன்..” என கோபித்தாள் கார்த்திகா.
“ஃபோன்ல கூட இதுபத்தி கேட்டிருப்பேன்.. உங்களை பார்க்கும் ஆசையிருக்கிறதாலதான இங்க வந்திருக்கேன்.?” என எடுத்துரைத்து.. “வேலை வேலைன்னு இரண்டு பேரும் இறக்கை கட்டிட்டு பறக்குறதைதான் கத்து வச்சிருக்காங்க..
உங்களுக்குனா எல்லாமும் பார்த்து பார்த்து செய்யிறான்.. காலாகாலத்துல குழந்தை பெத்துக்கோன்னு தேவாக்காக அவகிட்ட நீங்கதான சொல்லனும்?” என்றார் அதட்டலாக.
“ம்மா.. குழந்தை பெத்துக்கிறது அவங்கவங்க பர்சனல்.. அதுல நாங்க எப்படி தலையிடறது?” என்றாள் கார்த்திகா.
“கல்யாணமே குடும்ப விருத்திக்குத்தான்.. எத்தனை குழந்தை வேணும்னு வேணா அவங்க முடிவெடுக்கலாம்.. அதுக்காக குழந்தை பெத்துக்கிறதையே தள்ளி போட்டா என்ன அர்த்தம்? இதெல்லாம் நீங்க கேக்காம பின்ன நானா கேக்க முடியும்?” என்றார் கோபமாக.
அபிராமி.. “கல்யாணமாகி இரண்டு வருசம்தானமா ஆகுது? அதோட தேவாண்ணாக்கு இருபத்தி அஞ்சு வயசுதான ஆகுது.. சொந்த வீடு வாங்கிட்டு குழந்தை பெத்துக்க ப்ளான் செய்திருப்பாங்களா இருக்கும்..” என்றாள் தன்மையாக.
கற்பகம்.. “அவ தம்பி படிப்பு முடிச்சதுக்கப்புறம் இப்ப மூனு மாசமா அவங்கப்பா வீட்டுக்கு பணம் அனுபறதில்லையாம்.. அந்த பணத்தை சேர்த்து வைப்பான்னு பார்த்தா மூனு லட்சம் அட்வான்ஸ கொடுத்து பதினைஞ்சி லட்சரூபாய்க்கு காரை வாங்கியிருக்காங்க..
இருக்கிறது வாடகை வீடு.. இதுல கார் அவசியமானு கேட்டா.. பைக்ல டிராவல் பண்றது ரொம்ப அலுப்பாகிடுதாம்.. அதுக்குத்தான் கார் வாங்கினோம்னு அவளுக்கு சப்போர்ட் பண்றான் உங்கண்ணன்..
அதோட போச்சா? பியூட்டி பார்லர்க்கே மாசத்துக்கு ஆயிரக்கணக்குல செலவு பண்றா.. அவ பண்ற ஆடம்பரத்துக்கு சொந்த வீடு வாங்கிட்டாலும்..” என நொடித்து..
“ஆமாமில்ல?” என முனுமுனுத்த கார்த்திகா.. “ஆனாலும் இதை எப்படிம்மா நாங்க பேசுறது?” என்றாள் தவிப்பாக.
“கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சிட்டு குழந்தை பிறப்பை தள்ளி போட்ட நிறைய பேருக்கு குழந்தையே நிக்காம போயிருக்கு.. உங்கண்ணனுக்கு வாரிசு வேணும்னு நினைச்சினா நேக்கு போக்கா உங்கண்ணிகிட்ட பேசு.. பேசறதோட இல்லாம இதுதான் சரியான வயசுனு எடுத்து சொல்லு..” என்றார் கற்பகம்.
“சரிம்மா..” என்றாள் கார்த்திகா.
“சரிம்மான்னு சொன்னா ஆச்சா? இப்ப போன் போட்டு பேசு..” என்றார்.
“ம்மா.. இப்ப அண்ணி கம்பெனியில இருப்பாங்க.. அதோட நீ சொல்லி கொடுத்து நான் கேக்குற மாதிரி வேணாம்.. ஒரு இரண்டு நாள் கழிச்சி பேசுறேன்..” என்றாள்.
“இன்னும் ஒரு வருசத்துல பேத்தியோ பேரனோ என் கைக்கு வந்தாகனும்.. அதுமாதிரி ஸ்ட்ராங்கா பேசு.” என கட்டளையாக சொல்லி கிளம்பினார் கற்பகம்.
ஷர்மிளாவிடம் ஓரளவிற்கு இயல்பாக பேசிப் பழகியிருந்தாலும் குழந்தை பற்றி பேச தயக்கம் உண்டாகவே “என் மகனுக்கு ஐஞ்சு வயசாகிடுச்சி.. இனியும் லேட் செய்தா அப்புறம் உன் பொண்ணு கிழவனை கட்டிக்கமாட்டனுடுவா.. எனக்கு உன் பொண்ணுதான் மருமகளா வேணும்..” என தம்பியிடம் கிண்டல் போல் பேசினாள் கார்த்திகா.
அன்னை சென்று வந்ததும் இப்பேச்சு வரவும் நிச்சயம் அம்மாவின் விருப்பமாகத்தான் இருக்கும் என கணித்து.. “பொண்ணு பிறந்தா கொடுக்கிறேன்.. பையன் பிறந்தா நான் பொறுப்பில்லை..” என தானும் சிரிப்போடே பதில் கொடுத்தான் தேவேஷ்.
தம்பியின் பதிலில் சந்தோசமானவள்.. “அதெல்லாம் என் ப்ரார்த்தனைபடிதான் நடக்கும்.. முதல்ல பொண்ணு.. அப்புறம் எத்தனை பையன் வேணும்னாலும் பெத்துக்கோ..” என இணைப்பை துண்டித்து அடுத்தநாள் தம்பியோடான உரையாடலை அன்னைக்கும் சொல்லி சந்தோசமடையச் செய்தாள் கார்த்திகா.
கார்த்திகாவின் விண்ணப்பத்திற்கு பிறகு தேவிற்கும் குழந்தை ஆசை வந்தது. அத்துடன் நாம் பேச தாமதித்தால் இனி அன்னை நேரடியாக ஷர்மிளாவிடம் கேட்பார்கள் என்றுணர்ந்த தேவேஷ்.. குழந்தை வேண்டுமென்ற ஆசையை அன்றிரவே மனைவியிடம் தெரிவித்தான் காதலாக.
“என் ஃப்ரண்ட்சும் கேக்குறாங்க தேவ்.. இதுதான் சரியான வயசுன்னு அம்மாவும் சொல்றாங்க..” என வெக்கத்தோடு சம்மதம் தெரிவித்தாள் ஷர்மிளா.
ஒரு மாதம் கடந்திருக்க.. “குழந்தை வேணாம்னு நாம எதுவும் ப்ளான் செய்யலையே தேவ்.. அப்புறம் ஏன் எனக்கு குழந்தை உண்டாகல?” என்றாள் கவலையாக.
பதினெட்டு வயசுக்கப்புறம் அம்மா கேட்டாங்க.. எல்லாம் சரியாத்தான் ஆகுறேனு சொல்லிடுவேன்.. ஆனா எனக்கு ஆறு மாசத்துக்கு ஒருமுறை ஆகறதே பெரிய விசயம்..” என்றாள் கவலையாக.
“ஹே.. இதுக்கெல்லாம் கவலைப்படுவியா? இப்போலாம் எல்லாத்துக்கும் ட்ரீட்மண்ட் வந்துடுச்சி.. நமக்கு என்ன வயசா ஆகிடுச்சி? விடு பார்த்துக்கலாம்..” என தேற்றினான் மனைவியை.
தேவேஷ் எத்தனை தைரியமளித்தாலும் குழந்தை பிறப்பு அத்தனை எளிதல்ல என ஷர்மிளாவிற்கு பயம் உண்டாகவே.. தேவேஷ் அல்லாமல் தனியாக மருத்துவமனைக்கு சென்றாள் ஷர்மிளா.
ஷர்மிளாவை பார்த்த மருத்துவர் அத்தனை அனுபவம் வாய்ந்தவர் இல்லை என்பது அவளிற்கு புரியவில்லை. ட்ரீட்மண்ட் கொடுத்தால் நிச்சயம் குழந்தை உண்டாகும் என நம்பிக்கையளித்த மருத்துவரின் பேச்சை அப்படியே நம்பினாள்.
அடுத்தநாள் தேவேசையும் அழைத்து சென்றாள். மருத்துவர் சொல்வது உண்மையோ இல்லையோ.. ஷர்மிளாவின் சந்தோசத்திற்காக “கொஞ்ச நாள் இவர்கிட்ட ட்ரீட்மண்ட் எடுத்துக்கலாம்.. சரிவரலனா ஸ்பெஷலிஸ்ட்கிட்ட போலாம்.” என்றான்.
ஷர்மிளாவும் அப்போது சம்மதித்தாள்தான்.. ஆனால் ஒரு வருடம் ஆகியும் குழந்தை உண்டாகாமல் போகவே.. வேறு மருத்துவரிடம் சென்று தனக்கு அந்த பாக்கியம் இல்லையென சொல்லிவிட்டாள் என்ன செய்வதென தேவேஷ் சொன்ன மருத்துவரிடம் செல்ல மறுத்தாள் ஷர்மிளா.
கற்பகம்.. “உன் பொண்டாட்டி எல்லா நாளும் சாமிக்கு விளக்கேத்துறா.. மாசமாசம் ஒதுங்கறதில்ல போல.. முதல்ல அதுக்கு என்னனு பாருடா.” என ஷர்மிளா முன்பே சொல்ல.. அன்றிலிருந்து விளக்கேற்றுவதையே நிறுத்தியிருந்தாள் ஷர்மிளா.
“அம்மா ட்ரீட்மண்ட்க்குதான சொன்னாங்க?” என தேவேஷ் எடுத்துரைக்க.. “இல்ல.. குழந்தை பெத்துக்க எனக்கு தகுதியில்லனு குத்திகாட்டுறாங்க..” என கண்ணீர்வடித்தாள் ஷர்மிளா.
“அப்படியேன்னாலும் அவங்க குத்திகாட்டுற அளவுக்கு நாம ஏன் விடனும்? வேற டாக்டர்கிட்ட செக் செய்து ப்ராப்பரா ட்ரீட்மண்ட் எடுத்துக்கலாம்..” என்றான்.
“தேவ்..” என்றாள் தவிப்பாக.
“ஷர்மி.. ஒருவேளை நம்மளால குழந்தை பெத்துக்க முடியலன்னாலும் எத்தனையே குழந்தைகள் ஆதரவில்லாம இருக்காங்க.. அதுல நமக்கு பிடிச்ச குழந்தையை எடுத்து வளர்த்துக்கலாம்.. பெத்து வளர்த்துறதை விட தத்தெடுத்து வளர்த்துறது நமக்கு பெரிய புண்ணியம்..” என்றான்.
தேவேஷைபோல ஷர்மிளாவால் இவ்விசயத்தை எளிதாக நினைக்க முடியவில்லை.. குழந்தை என்பது காதலின் அடையாளம் அல்லவா? என் தேவாக்கு ஒரு குழந்தை பெத்துதர முடியலனா அப்புறம் நான் எதுக்கு?
தேவா சொல்வதுபோல் குழந்தை தத்தெடுத்தால் தன்மீதான தேவாவின் காதல் நிச்சயம் குறையும்.. அப்படியில்லையென்றாலும் தன் மாமியார் அதை செய்வார்கள்..
அதோடு எவனோ ஒருவனின் குழந்தைக்கு தன்னால் அம்மாவாக இருக்கவே முடியாது என மனம் திடமாய் எடுத்துரைக்க.. குழந்தை தத்தெடுப்பதில் தன் விருப்பமின்மையை கணவனிடம் சொல்ல.. முதன்முறையாக வெறுப்போடு பார்த்தான் மனைவியை.
கணவன் பார்வை புரிந்து.. என்தேவ் என்னை புரிந்துகொண்டது இவ்வளவுதானா வேதனையடைந்தவள்.. “எத்தனை குழந்தைகளுக்கு வேணுமானாலும் கார்டியனாக இருக்கலாம். ஆனால் அம்மாவாக அடுத்தவன் குழந்தைக்கு என்னால் இருக்கவே முடியாது..” என கண்ணீர் விட்டாள் ஷர்மிளா.
“சரி விடு.. உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்யமாட்டேன்..” என அப்பொழுதும் பொறுமையை கையாண்ட தேவேஷ்.. “எனக்காக நான் சொல்ற டாக்டர்கிட்ட ஒருமுறை போய் வரலாமா?” என்றான் கனிவாக.
“ம்..” என சம்மதித்தாள். ஆனால் இன்று நாளை என மேலும் ஆறு மாதத்தை கடத்தி சென்ற மாதம்தான் இருவரும் மருத்துவரிடம் சென்று வந்தனர்.
அதில் தேவேஷிற்கு எந்த குறையும் இல்லை.. ஷர்மிளாவிற்குத்தான் குறை.. குழந்தையை தாங்கும் சக்தி இவர்களின் கர்பபைக்கு இல்லை என மருத்துவர் சொல்ல.. மொத்தமாய் உடைந்தாள் ஷர்மிளா.
“ஹே.. இப்போ என்ன? யாரோ பெத்த குழந்தையை வளர்த்துறதுதான உனக்கு பிடிக்கல.. கொஞ்சநாள் பொறுத்து உன் தம்பி கல்யாணம் செய்துக்குவானில்ல? அவனை பெத்து தர சொல்லலாம்..
அவ்வளோ நாள் பொறுக்க முடியாதுனா என் தங்கை இப்போ கர்பமாதான் இருக்கு.. அந்த குழந்தையை நமக்கு தர சொல்லலாம்.. நீ சொல்ற மாதிரி அப்பாம்மாவா இருக்க வேணாம்.. கார்டியனா இருந்துக்கலாம் விடு..” என மனைவியின் துயர் போக்கினான் தேவேஷ்.
தேவேஷ் சொன்ன எதிலும் ஷர்மிளாவிற்கு உடன்பாடில்லாமல் போகவே.. அன்றிலிருந்து கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஆரம்பித்தது.
இப்படியாக மேலும் ஒருவருடம் கடந்திருக்க.. இருவருக்கும் இருபத்தி எட்டு வயசாகுது.. இளம்வயதுதானென்றாலும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதற்கு இதுவே மீறின வயதுதானே? பகவான் எப்பதான் கண்திறப்பாரோ என கற்பகத்தின் முகத்தில் நிம்மதி காணாமல் போயிருந்தது.
இதற்குமேல் அன்னையிடம் மறைக்க வேண்டாமென.. ஷர்மிளாவின் பிரச்சனையை அன்னையிடம் சொல்லி.. குழந்தை தத்தெடுக்கும் எண்ணத்தை பற்றியும் பேசினான்.
தனக்கும் ஷர்மிளைவிற்கும் ஆகாதென்றபோதும்.. ஒருவேளை குறை மருமகளிடம் இல்லாமல் மகனிடம் இருந்திருந்தால் குழந்தைக்காக தேவாவை எங்கும் விட்டுக்கொடுக்கமாட்டாள் என மருமகளை உணர்ந்து.. மருமகள் மீதான மகனின் அன்பையும் உணர்ந்திருந்த கற்பகம்.. பத்து நிமிடம் ஆழ யோசித்து மகனின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
அன்றிரவு “குழந்தை தத்தெடுத்தலில் தன் அன்னைக்கு முழு சம்மதம்.. இனி குழந்தையைப் பற்றிய கவலையை விடு..” என தேவேஷ் சந்தோசத்தோடு சொல்ல..
“அவங்களுக்கு விருப்பமிருந்தா போதுமா? என் விருப்பம் வேணாமா? தத்தெடுக்க எனக்கு பிடிக்கலன்றேன்.. திரும்பவும் அதைப் பத்தியே பேசுறிங்க..” என பொங்கினாள் ஷர்மிளா.
தற்போது பேசினால் சண்டையில்தான் முடியும்.. இவ்விசயத்தை பிறகு பார்த்துக்கலாம் என.. “சரி.. இனி குழந்தைப் பத்தி நானும் பேசமாட்டேன்.. நீயும் யோசிக்காத..” என முடித்துக்கொண்டான் தேவேஷ்.
அடுத்தநாளான இன்று கம்பெனியிலிருந்து அமைதியாகவே வந்துகொண்டிருந்தனர் இருவரும்.