காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும் இருக்கணும் கலக்கணும்
எங்கோ ஒலிப்பது போல் கேட்ட அலாரத்தின் சத்தத்தில் விழித்தாலும் அர்ஜுனின் இறுகிய அணைப்புக்குள் இருந்து வெளி வர ஏனோ இன்று வேதாவிற்கு மனமே இல்லை. ஆனால் சத்தம் நிறுத்தப் படாமல் இருக்க அர்ஜுனும் எழுந்து கொண்டான்.
“சக்கரை, அலாம் அடிக்குதுடா. எழுந்துக்க. இல்ல அதை நிறுத்தீட்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. நேத்தும் தூங்க லேட் ஆச்சு.”
“இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு வைவாக்கு. நீ உன்னோட கைடு குடுக்குற அப்பாயிண்மெண்ட் வீணாக்காத. அப்புறம் உனக்கு அது வேற டென்ஷன் ஆகும். லீவு வேண்டாம். வேணும்ன்னா லேட்டா போ.”
“ஹ்ம்ம் சரி, தூக்கம் கலஞ்சுடுச்சு. நான் போய் குளிச்சுட்டு ரெடி ஆகி வர்றேன். மத்தத அப்புறம் யோசிப்போம்.” என்றவள் குளித்து தயாராகச் சென்றாள்.
அழகிய அடர் நீல கலம்காரி சேலையில் சிவப்பு மஞ்சள் பச்சை வண்ண ஓவியங்கள், மொத்தத்தில் தேவதை என வேதா தயாராகிக் கொண்டிருந்தாள். படுக்கையில் இருந்தபடியே அவளின் முக பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
தன் வாழ்வின் மொத்தத்தையும் காதலால் இட்டு நிரப்ப வந்த தன் இணையின் புன்னகையின் அழகில் மனம் மயங்கினாலும் அவளின் உள்ளப் போராட்டங்கள் அவன் மனதையும் வாட்டத்தான் செய்தது.
வேதாவின் மன அழுத்தம் அவள் மனதை உடைக்கும் முன்னமே அவனே அவற்றைக் களைந்து விட்டாலும், அதன் சுவடுகளும் அக்கம் பக்கத்தில் இருந்து அவ்வப்பொழுது வரும் கேள்விகளும் இன்னும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
அன்றைய பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இன்று சில மாதங்கள் கடந்து குழந்தை பிறப்பு பற்றிய பேச்சுக்கள் இவர்களின் வீட்டில் வெகுவாகக் குறைந்திருந்தது. சாகரியும் பெரும்பாலும் தன் குதர்க்கமான பேச்சுக்களையும் குற்றம் சுமத்தும் சொற்களையும் குறைத்திருந்தார்.
கணவனுக்காக என்பதைத் தாண்டி பிற்காலத்தில் வேதாவின் உதவி மற்றும் தேவைக்காகவும் ஆவாவது தான் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம், சாகரிக்கு அன்றைய பேச்சின் சாராம்சமாக மெல்ல மெல்ல விளங்கியது.
சாகரி என்ன நினைக்கிறார் என்பதில் கவனம் வைக்க வேதாவிற்கு அன்றும் தோன்றியதில்லை இன்றும் தோன்றவில்லை. அவரவர் எண்ணம் அவரவர் வாழ்க்கை.
சாகரியின் பேச்சும் அவளை நடத்தும் முறையும் மட்டுமே வேதாவை பாதித்தது. அது இன்று மாறி இருக்கும் போது, அது மன மாற்றமா? இல்லை வெறும் வெளிப்புற பேச்சில் மாற்றமா என்ற ஆராய்ச்சி அங்கு அவளுக்குத் தேவையாய் தோன்றவில்லை.
அத்தகைய பேச்சுக்களால் வந்த மனப் போராட்டம் முடிவுக்கு வந்ததே ஆயிரம் யானைகளைக் கொன்று பரணி பாடல் பெற்ற கொண்டாட்டம் அவள் மனதில்.
குடும்பத்தின் இந்த அமைதியே வேதாவின் மனதை மகிழ்வாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது. குழந்தை என்னும் வரத்தை கடவுளின் செவிகளில் சேர்த்து விட்டு தன் முனைவர் பட்டத்திற்கான பணிகளில் மும்மரம் காட்டத் தொடங்கினாள் வேதா.
அதன் பயனோ என்னவோ பல மாதங்களாக அவள் தொலைத்த அவளின் புன்னகை தவழும் முகம் இன்று மீண்டிருந்தது.
“அஜூ, என்னைப் பார்க்காம நீங்களும் கிளம்புங்க. ஆபீஸ் போகணும் தானே இன்னைக்கு. நான் கீழ போய் காபி எடுத்துட்டு வர்றதுக்குள்ள நீங்க அட்லீஸ்ட் பல்லாவது தேச்சுடுங்க.”
“ஹ்ம்ம், மேடம் இன்னைக்கு என்ன எல்லாமே ஆர்டர் போடுறீங்க? முகமெல்லாம் வேற மின்னுது. என்ன விஷயம்? நேத்து அம்மா வீட்டுல சாப்பாடு பலமோ?”
“ஹ்ம்ம் கண்டிப்பா செம சாப்பாடுதான். அதுவும் நான் அத்தை ஆகப் போற சந்தோசம் கேட்ட உடனே நம்ம வீட்ல அத்தை கிட்ட சொன்னேனா, அவங்களும் வீட்டுக்குப் போயிட்டு வான்னுட்டாங்க. அப்பறம் என்ன? ஒரே கொண்டாட்டம் தான்.”
“சரி அம்மா எதுவும் உன்னைப் பேசல தானே?” அர்ஜுனுக்கு அவன் அம்மவைத் தெரியுமே. சாகரியின் அமைதி அவன் கண்களில் பட்டாலும் உறுதி செய்து கொள்வது அவனுக்கு அவசியமானதாகத் தோன்றியது.
அவங்க என்னை இனி பேசினா நம்ம மறுபடி வெளி நாட்டுக்குப் போயி செட்டில் ஆயிடுவோம். திரும்பி வர மாட்டோம்.
குழந்தைங்க வந்தாலும் அவங்க கண்ணுல காட்ட மாட்டோம்ன்னு இன்னும் என்னென்ன சொன்னாலோ தெரியல.
அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு கூட எனக்குத் தெரியல அஜூ. ஆனா முன்ன மாதிரி என்னை எதுவுமே பேசுறதில்ல. எல்லாரும் அவங்கள கார்னர் பண்ணிட்டோம்ன்னு கூட நினைக்கலாம். தெரியல.”
“அப்படி இல்ல வேதா. அப்பாவும் அவங்கள பேசுவாங்கன்னு எதிர் பார்த்திருக்க மாட்டாங்க. மத்தபடி நான் ஸ்ரீ மட்டும்ன்னால்லாம் அம்மா இப்பிடி இருக்க மாட்டாங்க. எதுன்னாலும் வீடு அமைதியா, என் சக்கரை ஹேப்பியா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்.”
“நான் எப்பவும் உங்ககூட சந்தூஷமா இருக்கேன். அதுவும் நேத்து அம்மா ஜீவாவை எல்லாம் பார்த்துட்டு, ஆனந்தி கூட இருந்துட்டு வந்ததுக்கப்புறம் இன்னும் ஹேப்பி தான்.
நேத்து நான் இங்கிருந்து கிளம்பி வீட்டுக்குப் போறதுக்குள்ள ஜீவாவும் சீக்கிரம் வந்துட்டான். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். நானும் செம ஆட்டம். ஆனா உங்களை மட்டும் உங்க தங்கச்சி ரொம்ப மிஸ் பண்ணினா.”
நேற்று ஆனந்தி அவள் அம்மா ஆகப் போகும் செய்தியை சொன்னவுடன் வேதா அவளைக் காண சென்றிருந்தாள். அம்மா வீட்டின் சந்தோசம் அவளையும் தொற்றிக் கொள்ள மனதின் மத்தாப்புக்கள் அவளின் முகத்திலும் பளபளத்தது.
“நான் வரலன்னு கூட மேடம் தேடலை? என் தங்கச்சி மட்டும் தான் தேடிருக்கா. இருக்கட்டும். என் மருமகப் புள்ள வரட்டும். அத்தைய சிறப்பா கவனிக்க சொல்லுறேன்.”
“ஹ்ம்ம், பார்க்கலாம் பார்க்கலாம். அவன் அத்தை மடி மெத்தைன்னு என் செல்லமா இருப்பான். இந்த நாய் மாமன்ஸ் கூட எல்லாம் சேர மாட்டான்.”
“சக்கரை நீயா இப்படி எல்லாம் பேசுற, ஹ்ம்ம் சரி பேசு பேசு.” என்றபடி அர்ஜுன் கழிவறைக்குச் செல்ல வேதாவும் தன் அறையிலிருந்து கீழிறங்கினாள்.
கீழிறங்கி வந்தவள் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு வர அவள் கண்டது அடுக்களை வாசலில் புன்னகை முகமாக நின்றிருந்த சாகரியைத்தான்.
“இருங்கத்தை நான் காபி போடறேன்.” என்று சொல்லியபடியே அடுக்களைக்குள் நுழைய,
“அதெல்லாம் ஏற்கனவே நான் பால் காய வச்சுட்டேன். மாமா சீக்கிரம் வெளில வேலை இருக்குன்னு கிளம்பினாங்க. நாங்க ரெண்டு பெரும் காபி குடிச்சுட்டோம். இரு உனக்கும் போட்டுத் தர்றேன். நீ குடிச்சுட்டு அர்ஜுனுக்கு கலந்து எடுத்துட்டுப் போ.” என்றவர் பால் கொண்டு வந்து தர
“அத்தை இன்னைக்கும் எனக்குப் பால், “
“குடி ஒன்னும் பண்ணாது. தினமும் என்னத்துக்கு காபி.” என்று சொல்ல வேதாவிற்கு ஏனோ எதிர்த்துப் பேசும் எண்ணம் எதுவும் தோன்றவில்லை. சாகரி தானாக மாற முயற்சிக்கும் போது தானும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதுமே வேதாவிற்கும் இருந்தது.
“ஆனந்தி எந்த டாக்டர் கிட்ட பாத்துட்டு வந்தாளாம்? சாரதா அவங்க வீட்டுக்கிட்ட இருக்க லேடி டாக்டரைப் பார்க்கப் போறோம்ன்னு சொன்னாலே?”
“இல்லத்தை நேத்து அம்மா வீடு பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்க்கு தான் போயிட்டு வந்தாங்க. இனி எங்க பார்ப்பாங்க என்னன்னு தெரியலத்தை.” என்று சொல்லியபடி வழக்கமான வேலைகளைத் தொடங்கினாள். காலை உணவிற்கான ஏற்பாடுகளுக்கு நடுவில் அர்ஜுனும் அலுவலகம் செல்லத் தயாராகி கீழிறங்கி வந்தான்.
அடுக்களையில் காலை மதியம் என இரு நேரத்திற்கும் உணவுகள் தயாராக பீன்ஸ் வெட்டிக் கொண்டு நின்ற வேதாவிற்கு ஏதோ ஒரு வாசனை உகந்ததாகத் தோன்ற வில்லை. மெல்ல சமாளித்துக் கொண்டு காய்களை வெட்ட, முழுவதுமாக இரண்டு நிமிடங்கள் ஆகவில்லை.
அரிசி கொதிக்கும் வாசனை இவளின் நாசியில் ஏற ஏற குடித்த பால் மொத்தமும் வாய் வழி வந்துவிடும் போல் தோன்றியது.
ஓட்டமும் நடையாய் பின் வாசல் கழிவறை நோக்கி வந்தவளின் ஓங்கரிக்கும் சத்தத்தில் மொத்தக் குடும்பமும் பின் வாசலில் வந்து நின்றது.
“என்ன ஆச்சு வேதா? ஏன் காபி குடிச்சதா? என்ன டா பண்ணுது?” பதட்டத்துடன் மனைவியின் தலையைத் தாங்கிப் பிடிக்க பின்னாலேயே சாகரி வந்து நின்றார்.
“இல்லங்க, சாதம் வேகுற வாசனை வருது, அது ஏனோ குமட்டி வாமிட் ஆகிடுச்சு” குனிந்து நின்றபடியே வேதா சொல்லிய வார்த்தைகள் சாகரியின் காதுகளையும் எட்டியது.
“அர்ஜுன் அவளைக் கொண்டு வந்து உள்ள விட்டுட்டு, நீ போய் கிளம்பி வா. ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போகணும்.” என்ற சாகரி மேலும் “இன்னைக்கு முப்பத்தி மூணு நாள் ஆச்சு டா அவ தலைக்கு ஊத்தி. அது தான், காலைல கூட பால் தான் குடுத்தேன். எதுக்கும் போய் ஒரு தரம் டாக்டரைப் பார்த்துக் கேட்டுகிட்டு வந்துருங்க.
நீங்க உள்ள வாங்க அவங்க வரட்டும். எல்லாம் நல்ல விஷயமாத் தான் இருக்கும்.” சொல்லி முடித்தவர் கணவருடன் உள்ளே சென்றிருந்தார்.
சாகரி பேசி முடித்த அந்த கணமே அர்ஜுன் வேதா இருவரும் என்ன உணர்கிறார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை.
கைகள் இரண்டும் எப்போது எப்படிக் கோர்த்துக் கொண்டதோ அதையும் அவர்கள் இன்னும் கவனிவில்லை.
வேதாவின் அதிர்ந்த இதயத் துடிப்பும், அப்படியா? என்ற அர்ஜுனின் மகிழ்ந்து தடுமாறித் துடிக்கும் இதயத் துடிப்பும் எப்பொழுது அமைதி பெறுமோ அது அவர்களே அறியாதது.
“அப்படித் தானோ? அஜூ.” வேதாவின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே,
“வா முதல்ல மேல ரூமுக்குப் போகலாம். நீயே செக் பண்ணி சொல்லு.” பேசியவன் கையோடு கூட்டி வந்து தன் அறையில் நிறுத்தி இருந்தான்.
தேடி அழைந்து வீடு வந்த சொர்கம் போல் தெரிந்தது அவள் கண்ட அந்த சிவப்பு வண்ண இணை கொடுகள். அவன் கைகளில் நீள் பட்டையை நீட்ட அதைக் கண்ட கணமே அவள் சிறைபட்டிருந்தால் அவனின் இறுகிய அணைப்பில்.
இந்த அணைப்பு அவனின் அதிர்வா? இல்லை அவளுக்கு அவன் அளிக்கும் ஆறுதலா? எதுவாகினும் அந்த நிமிடம் அந்த உணர்வைக் கடக்க இருவருக்குமே இந்த அணைப்பின் தேவை அவசியம் இருந்தது.
‘ஈன்று புறம் தருவேன் என்று செய்தி சொல்லும் அவசியம் இன்று இல்லை.
உணர்ந்த நொடியில் உன் மார் சாய முடியா இடைவெளியும் இன்று இல்லை.
ஆனால் என் தாய்மை உணர்வுகள் இம்முறையும் ஏமாற்றப் படாமல் உன் மறு வடிவாய் பிஞ்சுப் பாதம் கொண்ட பஞ்சுப் பொதியாக என் கை சேர வேண்டும்.
அதற்கு உன் கை பலம் கொண்டு என்னைக் கட்டி அனைத்துக் கடைத்தேற்று.’ என உள்ளம் உறுக கைகளின் இறுக்கம் கணவனின் உடல் வளைக்க நின்றிருந்தாள் வேதா.
“சக்கரக்கட்டி சந்தோஷத்துல என்ன நொருக்கிடுவ போலயே? என்ன நினைக்கிற வேதா? உனக்கு சந்தோசம் தானே?” அணைப்பின் இறுக்கம் குறையாமல் இருக்க, ‘வேதா என்ன நினைக்கிறாள்?’ என்றே தோன்றியது.
தன் கைகள் தளர்த்தி அவளின் இறுகிய அணைப்பிலிருந்து வெளிவந்தவன் வேதாவின் முகத்தைக் காண சந்தோஷக் கண்ணீரை மிஞ்சும் பயம் மேலிட நின்றிருந்தாள்.
“வேதா பயம் எதுக்கு டா?”
“இந்த முறையும் நான் பாப்பாவைத் தொலைச்சுடக் கூடாதே. இனி என்னால தொலைக்க முடியாது அஜூ. எனக்கு என் குழந்தை வேணும். பத்திரமா, ஆரோக்கியமா சந்தோஷமா…. இன்னும் நிறைய.” ஆழ்மன உணர்வுகள் எல்லாம் பயத்தோடு வெளிவர தன்னையே சிறிது குழப்பிக் கொண்டாளோ?
“சக்கரைகட்டிக்கு என்ன பயம் இது. நல்லவிதமா யோசனை பண்ணு டா. முதல்ல நமக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல, அதனால விட்டாச்சு. இப்ப அப்படி இல்லையே. நீ இப்ப இருந்தே கம்ப்ளீட் கேர்ல இருக்கப் போற. கூடவே எல்லாரும் இருக்காங்க.
முதல்ல மாதிரி நம்ம தனியா இல்ல. இந்த நிமிஷம், இந்த நாள் எல்லாமே நமக்கு ரொம்ப முக்கியம் டா. உன்னை நீ சந்தோஷமா வச்சுக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் குட்டி பாப்பாவும் சந்தோஷமா தைரியமா வளரும். கருவிலே அவங்களுக்கு கத்துகிற சக்தி இருக்கு.
உன் மனநிலை தான் உன் பாப்பாக்கும் வரும். எனக்கு என் வேதா மாதிரி சிரிச்சுகிட்டே இருக்க என் குட்டி பொண்ணு தான் வேணும். இப்படி பயப்படற பாப்பாவா இருந்தா எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்க.” அவன் பேசி முடிக்க வேதாவும் சற்று தெளிந்திருந்தாள்.
“அது அப்போ அந்த நிமிஷம் சந்தோஷத்தை விட பயம் அதிகமா இருந்துச்சு அஜூ. இப்ப கொஞ்சம் ஓகே தான். இனி அப்படி எல்லாம் யோசிக்க மாட்டேன். வாங்க கீழ போகலாம். அத்தை வெயிட் பண்ணுவாங்க. என்னால நம்பவே முடியல, அவங்க நாள் கணக்கெல்லாம் சரியா சொல்லுங்கன்னு. காலைல நான் சாமி கும்பிடும் போதே இதை யோசிச்சிருப்பாங்க போல.”
“வேதா, எங்க அம்மா வில்லி இல்ல டா. என்னவோ இப்ப இப்படி பண்றாங்க. இனி எல்லாமே மாறிரும்.” நம்பிக்கை அவன் குரலில்.
வேதாவின் மனதில் தோன்றியதெல்லாம், ‘அவங்க சாகரியோ சாகடியோ இனி எனக்கு சமாளிக்கிற வழி தெரியும்.’ என்பது தான். அந்த நினைவோடு,
“உலகத்துல உள்ள பசங்கள்ல அம்மாவை விட்டுக்குடுக்குற பசங்கள தேடித்தான் கண்டு பிடிக்கணும் அஜூ. ஹ்ம்ம், வாங்க வாங்க கிளம்பலாம். நான் அப்பவே சொன்னேன் லீவு போட்றேன்னு. நீங்க லேட் சொல்ல சொன்னீங்கன்னு சொன்னேன், இப்ப மறுபடி லீவே சொல்லுறேன்.”
பேசியபடி இருவரும் தயாராகி மருத்துவமனை சென்று வந்தனர்.
உள்ளே நுழையவும் அவர்கள் கண்டது ஆவலாக அமர்ந்திருந்த பெற்றவர்கள் முகங்களைத்தான். மகனின் சந்தோஷ முகமே அவர்களுக்கு பதில் சொல்லி விட அர்ஜுன் வீட்டில் தேவதை வாசம் செய்ய வரப் போகும் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.