தனதறைக்கு வரவும் வேதாவிற்கும் தன் அம்மாவிற்குக் கூட அழைத்துச் சொல்லாதது நினைவுக்கு வர சீதாவிற்கு கைபேசியில் அழைத்திருந்தாள்.
“அம்மா, என்னம்மா சாப்பிட்டீங்களா? நீங்க மட்டும் தானா வீட்ல?”
“நான் மட்டும் தான். எல்லாம் ஆச்சு வேதா. சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம்ன்னு உட்கார்ந்திருந்தேன். என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?”
“சும்மா தான் மா. உங்க கிட்ட ஒன்னு கேட்கலாம்ன்னு.”
“என்ன வேதா, சொல்ல வேண்டியதை சொல்லேன், ஏன் இழுக்கிற?”
“இல்லமா நானும் ஜீவாவும் ஒரே நேரத்துல உங்களக் கூப்பிட்டா நீங்க யாருக்கு ஹெல்ப் பண்ணுவீங்க?” தாயிடம் நேரடியாகச் சொல்ல வெட்கமா, இல்லை தடுமாற்றமா எதோ ஒரு உணர்வு தோன்ற வேதா வேறு ஒரு கேள்வியில் விஷயத்தைச் சொல்லத் தொடங்கினாள்.
“இதென்ன டி கேள்வி. அப்படியே இருந்தாலும் நான் என் பையனுக்குத் தான் பார்ப்பேன். உன்னைப் பார்க்கத்தான் உன் குடும்பம் இருக்கே. நான் என் பையனைப் பார்ப்பேன்.”
“ம்மா, அப்பாவுக்குக் கால் பண்ணாம உங்களுக்குக் கால் பண்ணது என் தப்பு ம்மா. வழக்கம் போல எல்லா விஷயத்தையும் அப்பா கிட்ட சொல்லுறாப்ல இதையும் அப்பாவுக்கே முதல்ல சொல்லிருக்கணும்.”
“வேதா, ஏதாவது சொல்லணும்ன்னா தெளிவா சொல்லு. அப்படி என்னடி கேட்கப் போற. அதுவும் எப்பப் பாரு என் பையனுக்குப் போட்டியா? அவனை நீ தான் வம்பு இழுப்ப, ஆனா பாவம் அவன் குறும்பு பண்ணினான்னு அவனே திட்டு வாங்குவான்.”
“வேதா, என்னடி சொல்லுற. நேத்து ஆனந்தி கேட்ட ஹெல்ப்புன்னா,.. ” சிரத்தை இல்லாமல் பேசத் தொடங்கியவர் நொடி நேரம் யோசித்து, “வேதா நாள் தள்ளிப் போயிருக்கா டா? எவ்வளவு நாள் ஆகுது? அம்மா வரவா?” வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார்.
அவங்க நாள் கணக்கெல்லாம் கரெக்ட்டா சொன்னாங்கம்மா. காலைலயே என்ன நினைச்சாங்கன்னு தெரியல ரெண்டு நாளா எனக்கு காபி கூட கொடுக்கல. வெறும் பால் தான்.”
“அவங்க வீட்டுப் பிள்ளையை அவங்க பார்க்குறாங்க. அதெல்லாம் நல்லாவே பார்ப்பாங்க. என்ன பேச்சு தான் கொஞ்சம் பொறுத்துக்க முடியலை. விடு இனி உன்னை குறைன்னு ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
ஒருவேளை அடுத்த பிள்ளை பெத்துக்க லேட்டானா பேசுவாங்க. அது வரை பேச மாட்டாங்க.” என்று சொல்லி சீதா நக்கலாக சிரிக்க,
“ம்மா, ஆனாலும் நீங்க ரொம்ப ஓவர் மா. அதுக்குள்ளே அடுத்த பிள்ளை. ஹ்ம்ம் ஆனா நீங்க சொல்றதும் நிஜம் மா. லைப்ல ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு கேள்வி நமக்கு ரெடிமேடா இருக்கும்மா.” என்று பேசியபடி திரும்பிப் பார்க்க அர்ஜுன் இவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவன் பார்வையில் என்ன தோன்றியதோ அம்மாவிடம் பிறகு பேசுவதாக சொல்லி கைப்பேசியை அணைத்துவிட்டு அர்ஜுன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“என்ன அஜூ யோசனை? அப்படிப் பார்க்குறீங்க? எதுவும் சொல்லனுமா?” அவன் பார்வையின் அர்த்தம் என்னவாக இருக்குமோ என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில்.
“ஹ்ம்ம், இனி நமக்குள்ள இந்த மாதிரித் தனிமை எல்லாம் நம்ம பசங்க வந்துட்டாக் கிடைக்காதுல்ல? அவங்களே மொத்தமா உன் டைம் எல்லாம் எடுத்துப்பாங்க.”
“ஓஹ், அஜுக்கு இப்ப அந்தக் கவலையா?” என்று கேட்டவள் அவனின் தனிமைப் பொழுதுகளை மென்மேலும் இனிமையாக்கினாள்.
நாட்கள் மெல்ல நகர்ந்தோட இருவர் மனதிலும் சிறு பயம் இருக்கவே செய்தது. ஒருவரின் மனவாட்டம் மற்றவரையும் தாக்கும் என்ற எண்ணம் அவர்களின் பயத்தைக் கட்டுக்குள் கொண்டுவரச் செய்தது.
வேதா ஆனந்தி இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க இருவரும் ஒன்றாய் இருக்கவோ வேதா தன் அம்மா வீட்டிற்குச் செல்வதோ தடையாய் இருக்க சாகரியின் கவனிப்பு மட்டுமே.
சில நேரங்களில் அவரின் மிரட்டல்களும் இதைச் செய்து தான் ஆக வேண்டும் என்ற கண்டிப்பும் வேதாவிற்குத் தாய் மடியைத் தேடினாலும் முந்தைய நாட்கள் போல் சுடு சொற்கள் இல்லாத காரணம் அவளின் மனதை அவை தாக்கவில்லை.
“பழமே சாப்பிடாம, பாலும் குடிக்காம இருந்து எப்படி இந்தப் பிள்ளையை பெத்து எடுக்க? அவன் மெனக்கட்டு உனக்கு பழத்தைக் கழுவி டப்பால போட்டுக் கொடுத்தா பாதி தான் சாப்பிட்டு இருக்க.” சாகரி வழக்கம் போல சத்தமிட வேதா புன்னகை முகமாகவே அமர்ந்திருந்தாள்.
“அம்மா விடுங்கம்மா, அவ தான் முடியலைங்கிறாளே. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடட்டும். காலேஜ்ல சாப்ட்டுகிட்டேவா இருக்க முடியும். இப்ப உக்கார்ந்து சாப்பிட்டு முடிப்பா.” அர்ஜுன் பேசியபடி பழங்கள் இருந்த கிண்ணத்தை வேதாவின் கையில் கொடுத்தான்.
ஏழு மாதம் மேடிட்ட வயிற்றுடன் அமர்ந்திருந்தவள் தன் கைகள் கொண்டு வயிற்றைத் தடவியபடி “இன்னைக்கு காலைல ஸ்கேன்க்கு போகும் போது ஆனந்தியைப் பார்த்தேன் இல்லத்தை, அவகிட்ட அம்மா வேற பழமெல்லாம் குடுத்து விட்டிருந்தாங்க. அதான் இதுல கொஞ்சம் மிச்சம் வச்சுட்டேன்.” என்றபடி உண்ணத் தொடங்கினாள்.
“ஆமா, இப்படி ரெண்டு பெரும் ஒண்ணா பிள்ளைன்னு வந்து நின்னா அவங்களும் என்ன தான் செய்வாங்க. ஹ்ம்ம். இனி ஒரே நாள்ல பெத்துக்கிறேன்னு வந்துறாதீங்க. உங்கள்ல யாரைப் பார்க்கன்னு நாங்க தான் தவிக்கணும்.” சாகரி பேச்சோடு அன்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கர்ப்ப காலத்தில் இம்முறை ஆரம்பம் முதலே அனைத்தும் சரியாக இருக்க, வேதாவின் மனதிலும் நாட்கள் செல்லச் செல்ல பயமும் எதிர்மறை எண்ணங்களும் கடந்து ஆரோக்கியமான குழந்தையைத் தாங்கும் மகிழ்ச்சி மனதையும் முகத்தையும் நிறைக்க புன்னகைப் பூச் சூடி நின்றாள்.
அன்றைய அந்தி நேரத்தில் வேதா மேல் மாடத்தில் நடந்து கொண்டிருக்க அர்ஜுன் அறையில் அவனது அலுவலக வேலை செய்து கொண்டிருந்தான்.
“அஜூ வாங்க சீக்கிரம். இப்பவே. இன்னும் என்ன பண்றீங்க?”
“ஹையோ, போங்க நீங்க விளக்கம் கேட்டு வர்றதுக்குள்ள மறுபடி குட்டி உள்ள ஓடிட்டா. இங்க கால மேல ஏத்தி மிதிச்சுக்கிட்டு நின்னா. நீங்க லேட்டா வரவும் பாப்பாவுக்கும் அம்மாவுக்கும் கோவம்.” என்றபடி இருவரும் ஊஞ்சலில் வந்து அமர்ந்தனர்.
“அடுத்த வாரம் நீ அங்க அத்தை வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு தரம் எனக்குக் காட்டீடு. ப்ளீஸ். இன்னும் நான் ஒருதரம் கூட அவளை பீல் பண்ணவே இல்ல. பாப்பு அப்பாக்கு முத்தம் குடுடாம்மா. என் தங்கமில்ல” வேதாவின் அருகில் அமர்ந்து கெஞ்சவே தொடங்கி இருந்தான்.
“ஹ்ம்ம் என்ன உங்க பிள்ளை உங்கள சுத்தல்ல விடறாளா? இல்ல உங்களுக்கு பீல் பண்ணத் தெரியலையா? அதுவும் இல்லன்னா ஒருவேளை அவ பொறந்து நேர வந்து தான் அப்பாவை மீட் பண்ணனும்ன்னு காத்திருக்காளோ?”
“இருக்கும் இருக்கும். அவங்க அம்மா மாதிரி தானே இருப்பா. அதான் அப்பாவை சுத்தல்ல விட்றா. ஆனாலும் இதெல்லாம் எவ்வளவு சந்தோசம். இது நமக்கு வேணும்ன்னு தான் ஒருவேளை நம்ம அங்க தனியா கஷ்டப் பட்டோம் போல.” ஏனோ சட்டென அர்ஜுன் மனதில் அவர்களின் தொலைந்த கனவுகள் நினைவில் வந்து நின்றது.
“அதெல்லாம் இப்ப நான் நினைக்கிறதில்ல அஜூ. எப்ப நினைச்சாலும் சில கஷ்டங்கள் மனச விட்டுப் போகாது. அந்த வருத்தமெல்லாம் மறைக்கலாமே தவிர மறக்க முடியும்ன்னு எனக்குத் தோணல.
எனக்கு இன்னும் கேம்பிரிட்ஜ்ல இருக்கும் போது ஏமி சொன்னது தான் நியாபகம் வருது. குழந்தைங்க கருவுல வரும் போதே அவங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கிக்கிட்டு தான் வர்றாங்க. அவளோட வாழ்நாள் அந்த ஆறுமாசம் தான் போல. அதான் சொல்லாம வந்தவ சொல்லாமலே போயிட்டா.
ஆனா இப்பப் பாருங்க என் தங்க ரத்தத்தை நம்ம வீட்டுல அம்மா அப்பா மாமா அத்தை இப்படி எல்லாரோடையும் சந்தோஷமா இருக்கோம். ஹ்ம்ம், எல்லாமே நமக்கு ஒரு அனுபவம் தான் அஜூ.
அன்னைக்கு நம்ம அப்படி நிக்கலைன்னா, இறந்த குழந்தையை வயித்துல சுமந்துக்கிட்டு அடுத்த வாரத்துக்கு வேணும்ன்னு மாவு அரைச்சு வச்சு சமையல் செஞ்சு வச்சுன்னு, அந்தக் கொடுமையான நாட்களைத் தாண்டி வரலைன்னா இப்போ நம்ம இந்த சந்தோஷத்தை இவ்வளவு ஆழமா உணர்ந்து இருப்போமா தெரியலை அஜூ.”
பெருமூச்சும் கடந்த கால நினைவுகளுமாக வேதா பேசிக் கொண்டிருக்க அர்ஜுனின் கைகள் இன்னும் அவளின் வயிற்றில் அலைமோதிக் கொண்டு தான் இருந்தது. தன் மழலையை உணர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் அவன் கைகளில்.
“கண்டிப்பா ஒவ்வொரு நாளையும் இவ்வளவு ரசிச்சிருக்க மாட்டோம். உன்னோட ஒவ்வொரு முறையும் ஸ்கேன்க்கு வர்றேன்னு அடம் பிடிச்சுருக்க மாட்டேன்.
இப்படி நம்ம தங்கரதம் ஒரு மிதி மிதிக்க இவ்வளவு நேரம் கைவச்சு நான் காத்திருக்க மாட்டேன்.” என்றவனின் காத்திருப்பு அவன் குழந்தையைக் கைகளில் ஏந்தும் வரை நீண்டிருந்தது.
மாதங்கள் கடந்து இன்று சாகரியின் வார்த்தையை நிஜமாக்கப் பிரசவ வழியில் வேதா ஆனந்தி இருவரும் ஒன்றாய் துடிக்க மொத்தக் குடும்பமும் சேர்ந்து மருத்துவமனையில் காத்திருந்தது.
முதலில் ஆனந்திக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கவும் சாகரி, வீட்டில் காத்திருக்கும் ஸ்ரீக்கு கைப்பேசியில் தகவலைத் தெரிவித்தார்.
“ஆனந்திக்கு பையன் பொறந்துட்டான். நல்லா இருக்காங்க ரெண்டு பேரும். நாங்களும் இன்னும் பார்க்கலை. நீ சாப்பாடு அவங்களுக்கு மட்டும் குடுத்து விடு. யாழியை வச்சு உன்னால எல்லாருக்கும் சாப்பாடு செய்ய முடியாது.” ஸ்ரீ வேதாவைப் பற்றிக் கேட்க
“உங்க அண்ணனும் சீதாவும் கூட இருக்காங்க. அதெல்லாம் அவ கொஞ்சமும் அழுகல. வலியைத் தாங்கிகிட்டு இப்பவும் என்னைப் பார்த்து சிரிக்கிறா. இவளால எப்படித்தான் இப்பவும் சிரிச்ச முகமா இருக்க முடியாதோ?
வலில துடிக்கிற ரெண்டு நிமிஷம் கண்ணை மூடுறா, அப்புறமெல்லாம் அந்த சிரிச்ச முகந்தான். என்னமோ பிள்ளை நல்லா பிறந்துட்டா போதும்.” என்றவரின் மனதிலும் பிரார்த்தனைகள் மட்டுமே.
அனைவரின் காத்திருப்பையும் சந்தோஷத்தால் மூழ்கடிக்க அடுத்த சில மணி நேரங்களிலேயே பூக்களின் வாசமும் இதழின் மென்மையும் சூடி வேதா அர்ஜுனின் அன்பின் வடிவாக அவர்களின் மகன் பிறந்திருந்தான்.
தன் காத்திருப்புகளெல்லாம் கண்ணீரால் அடித்துச் செல்லப் பட, உடல் வலி பொறுத்து உயிர் வலி தாங்கிப் பெற்ற தன் மகனை கைகளில் ஏந்திய நொடி மொத்தமும் மறந்து தாய்மை மட்டுமே அங்கு வியாபித்திருந்தது.
மகனின் அதரங்கள் அவளின் மார் தொட்டு முதன் முதலாகப் பால் கொடுக்க ஊற்றெடுத்தது அன்பும் தாய்மையும் மட்டுமே.
தாய்மை உணர்வுகளின் உச்சம், அன்பும் கடவுளும் அழகாய் பெண்ணைத் தாக்கும் தருணம். அதைப் பெற்றவர்களுக்கு வரம், காத்திருப்பவர்களுக்குத் தவம்.
அத்தகைய வரம் இன்று வேதாவின் கைகளில். அர்ஜுன் வேதா இருவருமே கண்ணின் ஈரம் கன்னத்தில் கசிய நின்றிருந்தனர்.
“வேதாம்மா, தம்பி டா. அதுவும் உன்னை மாதிரியே இருக்கான் டா.” கைகள் கோர்க்கக் கண்களின் பார்வை மகன் மீது மட்டுமே.
மகனை வெளியில் கொண்டு வர அங்கு சீதா ஜீவாவின் மகனைக் கைகளில் ஏந்தி இருந்தார். சாகரி, அருணாச்சலம் அனைவரும் குழந்தையைக் கண்டு தூக்கி மகிழ கடைசியாக சீதா தன் இரு பேரன்களையும் இருபுறமும் மடியில் இட்டு மகிழ்ச்சிப் பிழம்பாய் நிமிர்ந்து தன் மகனைப் பார்க்க அந்த அழகிய பிம்பம் அர்ஜுனின் கைப்பேசி வழி நுழைந்து இனி அவர்களின் சுவரில் என்றென்றும் சித்திரமாய் வாழும்.
அந்த நாள் முழுவதுமே மொத்தக் குடும்பமும் கொண்டாட்டத்தின் உச்சியிலிருந்தது. மகிழ்ச்சி இரட்டிப்பாகும் பொழுது கொண்டாட்டமும் கூடிப் போகும்தானே.
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம் பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே பாவையர் தாய்மை ரீங்காரம்