நள்ளிரவு நேரம் பிள்ளையின் சிணுங்கலில் உறக்கம் களைய மெல்ல எழுந்தாள் வேதா. தொட்டிலிலிருந்த குழந்தையைப் பசியாற்றி மீண்டும் கட்டிலில் இட உறங்கும் குழந்தையின் அழகில் மனம் மெழுகாகிப் போனது.
தனக்குப் பின்னால் கேட்ட அர்ஜுனின் சத்தத்தில் திரும்பியவள், “ஹ்ம்ம் சொன்னாங்க தான். ஆனாலும் கை ரெண்டும் இப்படி தலைக்கு மேல நீட்டி வச்சுத் தூங்கும் போதும் இல்ல கையைக் கன்னத்துல வச்சுத் தூங்குறப்பவும் உங்க மாதிரியே இருக்கான்.
ஆறு மாசம் இல்ல அஜூ வாய்ப்புக் கிடைச்சா ஆயிரம் வருஷம் கூட என் பையன் எப்படித் தூங்குறான்னு நான் பார்ப்பேன்.” என்றாலும் மெல்ல அங்கிருந்து நகர்ந்து வரத் தூக்கம் மொத்தமாகக் களைந்திருந்தது.
“தூக்கம் போச்சு அஜூ, வர்றீங்களா ஊஞ்சல்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்போம். வளைகாப்பு முடிஞ்சு அங்க போனதிலிருந்து இப்ப ஜெய்க்கு அஞ்சு மாசம் ஆகித் திரும்பி வர்ற வரைக்கும் நான் ரொம்ப மிஸ் பண்ணினது இந்த ஊஞ்சல் மட்டும் தான்.” என்றவாறு அவளின் ஆஸ்த்தான இருக்கையான ஊஞ்சலில் அமர்ந்தாள்.
“ஆறு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் வீட்டுக்கு வந்திருக்க. ஆனா என்ன மிஸ் பண்ணல நீ, இந்த ஊஞ்சலை மிஸ் பண்ணுறேன்னு சொல்லுற?” ஆதங்கம் அவன் குரலில்.
“நீங்க தான் பாதி நாள் என் கூடத் தானே இருந்திங்க. அதுவும் ஜெய் உங்களை நல்லாப் பார்க்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நீங்க எங்க எங்களை விட்டுட்டு இருந்தீங்க?
ஆனா இந்த ஊஞ்சலும் இந்த இடமும் இந்த நேரமும் இப்படி உங்க கூட ராத்திரியில நிலா வெளிச்சத்துல இருக்க இந்தத் தனிமையும் ரொம்ப மிஸ் பண்ணினேன்.” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளின் கையைப் பற்றி விரல்களை வருடி மோதிரம் ஒன்றை அணிவித்தான். அதன் கூடவே அவன் இதழின் ஆழ்ந்த முத்தங்களும் இலவசமாகக் கிடைத்தது அவளின் கைக்கு.
“ஹே, என்ன அஜூ இதெல்லாம். வாவ் இது பிங்க் டைமண்ட் ரிங்கா? எப்பவோ நான் கேட்டதுக்காகவா?”
“ஹ்ம்ம், என்னோட குட்டி சர்ப்ரைஸ் கிப்ட் பார் திஸ் டே. நீ நான் நம்ம பையன், இனி இது நம்ம குடும்பம். இன்னைக்கி நீ பையனோட வந்திடுவேன்னு உனக்காக வாங்கினேன்.
இன்னைக்கு நைட் ரூம்க்கு வந்ததும் குடுக்கலாம்ன்னு பார்த்தா நான் தூங்க வரும் போதே மேடம் டையர்டுல தூங்கீட்டிங்க. இதுக்கு தானே, இந்த நாளுக்காகத் தானே நம்ம எவ்வளவோ போராடினோம். அதான் இப்போ நீ எழவும் நானும் எழுந்துட்டேன்.
இந்த ராதாவப் பார்த்துத் தானே நீ அன்னைக்கு சொன்ன. நான் ராதாவாவே இருந்துக்குறேன்னு. ஆனா பாரு இன்னைக்கு உனக்குள்ள இருக்க யசோதா தானே எனக்குத் தெரியிறா.”
“அஜூ அது அப்படி இல்ல. எல்லாப் பொண்ணுக்குள்ளையும் ஒரு யசோதா இருக்கா. ஆனா இவங்க எல்லாம் சொல்லுறது போல பிள்ளை பெத்துக்கிட்டவங்க மட்டும் தான் யசோதாவா ஆக முடியும்ன்னு நினைக்கிறது தப்பு தானே.
குழந்தை பெத்துக்க மனசும் உடலும் ஏங்கி அந்த ஆசை நிறைவேறாம வெளியிலையும் மத்தவங்க பேசுற பேச்சக் கேட்டுகிட்டு இருக்கது எவ்வளவு கொடுமை அஜூ.
குழந்தை இப்ப வேண்டாம்ன்னு இருக்கது வேற. ஆனா அது நடக்காம, கிடைக்காம இருக்கவங்கள ‘ஒன்னும் விஷேஷம் இல்லையான்னு’ கேக்கிறது எவ்வளவு பெரிய வலி.
அந்த வலி கடந்து வந்த நமக்குத் தெரியும் அஜூ. ஆனா இன்னும் அந்த வலியோட வாழுறவங்க எவ்வளவு பேர்?
அத்தை கொஞ்ச நாள் என்னைப் பேசினத்துக்கே நம்ம எவ்வளவு கஷ்டப் பட்டோம். இதெல்லாம் வருஷக் கணக்கா கேட்டுக் கேட்டுப் பழகிப் போய் அதுக்குள்ளே மனசைத் தொலைச்சு இருக்குற பொண்ணுங்க நிலமை?”
“டேய், நீ ஏன் இதுக்கு டென்ஷன் ஆகணும். நமக்குன்னு இப்ப பையன் வந்தாச்சு. இன்னுமா நீ அதெல்லாம் நினைக்கிற? வேண்டாம் அதெல்லாம் மறந்திடு டா.”
“மறக்கலாம் அஜூ. ஆனா இது எனக்கு மட்டும் இல்ல. இன்னும் பல நூறு பொண்ணுங்க இருக்காங்க. இதே மாதிரி கொடுமை இல்லாத இந்தக் கொடுமையை அனுபவிக்கிறவங்க.
இருக்கவன் இல்லாதவனைக் கொடுமைப் படுத்துறது, அவங்கள மட்டமாப் பேசுறது, நடத்துறது இதெல்லாம் காசு பணத்துல மட்டும் இல்லையே. குழந்தை இல்லாதவங்களுக்கும் இந்த நிலமை தானே.
இயற்கையா நடக்காத ஒரு விஷயத்துக்கு, ஒரு குறைபாட்டுக்கு அந்தப் பொண்ணோ இல்ல ஆணோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டாங்க அஜூ.” அவளின் உணர்ச்சியின் வேகம் அர்ஜூனுக்கும் புரிந்திருந்தது.
இந்த வலியை அவர்கள் தாண்டி இருந்தாலும் அவை தந்த தழும்புகள் என்றென்றும் ஆறாதது. என்றுமே அவை மாறப் போவதும் இல்லை மறையப் போவதுமில்லை.
அர்ஜுன் வேதா மட்டும் அல்ல ஆயிரம் ஆயிரம் தம்பதிகள் இதுபோல் புறக் கண்களுக்குத் தெரியாத நாவினால் சுட்ட வடுக்களைத் தாங்கி வெளியில் புன்னகை முகமாக, தேவதைகளாக நம்மோடும் வலம் வருகிறார்கள்.
“வேதாம்மா, நீ வீட்டுக்கு வர்ற இந்த நாளுக்கான என்னோட எதிர்பார்ப்பு புரியாம, குடுத்த கிப்ட்க்கு பதில் கிப்ட் குடுக்கமா, ம்ம்ஹ்ம் போதும் டா. இனி நம்ம இதெல்லாம் கடந்து வந்தாச்சு. பின்னாடி நம்ம யாரையும் இப்படிப் பேசாம, அவங்க மனசை சங்கடப் படுத்தாம இருப்போம். அதுதான் நம்ம செய்ய வேண்டியது. அவ்வளவுதான்.” என்றவன் பேச்சும் செய்கையும் இனி அவர்களுக்கான நேரம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
அழகான இந்தக் கூடலின் இன்ப எண்ணங்கள் அலைமோத உறக்கம் மறந்து அர்ஜுன் வேதா விழித்திருக்கும் வேளையில், கனவில் கலகலவென சிரிக்கும் அவர்களின் மழலையின் கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பொலி உயிர் நனைக்கும் இரவு நேரத்து இன்னிசையாய் அவர்களின் காதுகளில் மட்டுமல்ல மனதிலும் ஒலிக்கிறது.
அலைமோதிய எண்ணங்கள் எல்லாம் எங்கோ சிதறி ஓட அவர்களின் நினைவெல்லாம் அவர்களை ஆழப் புதைக்கும் இந்தக் குட்டிக் கண்ணனின் கன்னத்துக் குழியும், அவன் அதரங்கள் சிந்திய அந்த நகைப்பொலியும் தான்.
இனி அவர்கள் கண் மூடும் நேரம் அவர்களின் கனவிலும் வருவான் வேதாவின் இந்த அழகுத் தங்கரதம்.
(சிரிப்பொலியின் சத்தம் என் முகநூலின் ‘சிந்திய சில நிமிடங்கள்’இல் இருந்து)
வருடங்கள் சில கடந்து…
மாலை கல்லூரியிலிருந்து வர வேதா கண்டது துர்காதேவியின் வடிவாக முகம் சிவக்க அமர்ந்திருந்த சாகரியையும் கால் வைத்து நடக்க இடமின்றி பொம்மைகளால் நிறைந்திருந்த அவர்களின் கூடத்தையும் தான்.
“வந்துட்டியா, வா வந்து பாரு. உன் பசங்க ரெண்டும் என்னை என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு. நீயும் டாக்டர் பட்டம் வாங்கிட்டேன் வேலைக்குப் போறேன்னு கிளம்பிடற. வயசான காலத்துல இந்த முட்டி வலியோட இவனுங்க பின்னால எல்லாம் என்னால ஓட முடியாது.
இன்னைக்கு மட்டும் மாடில உங்க ரூமுக்கும் கீழைக்கும் என்னை பத்து தரத்துக்கு மேல ஓட விட்டுட்டான் சித்தார்த்.
ஜெய்ய சமாளிக்கலாம், அவன் ஸ்கூல்ல இருந்து வந்து அவன்பாட்டுக்கு அமைதியா தான் இருந்தான். ஆனா உன் சின்னப் பையனுக்கு என்னைப் பார்த்தா எப்படி வருமோ?” கோபம் கொப்பளிக்க வழக்கமான குறை பாடல் இன்றும் சாகரியிடம் மாறாமல்.
இன்றும் அதே புன்னகை மட்டுமே வேதாவின் முகத்தில். ‘பிள்ளை பிள்ளைன்னு சாகடி என்னை சாகடிச்சதுக்கு கொஞ்சமாச்சும் திரும்பத் தர வேண்டாமா?’ என்ற எண்ணம் மனதில் எழுந்தாலும், “இதோ நான் பார்த்து எடுத்து வைக்கிறேன் அத்தை. நீங்க இருங்க.” என்றவள் மேலும்,
“உங்க மாமா இங்க பக்கத்துல இருக்க பார்க்குக்கு கூட்டீட்டு போயிருக்காங்க. அர்ஜுன் மேல வேலை செய்யிறான்.”
“இந்த கொரோனா காலத்துல ஏன் மாமாவையும் பசங்களோட அலைய விடறீங்க. நான் வந்து கூட்டிட்டு போயிருப்பேனே?”
“அதெல்லாம் கைக்கு சானிடைசர் குடுத்து விட்டுருக்கேன். நீ ஆறு மணிக்கு மேல வந்து, நீ எங்க கூட்டிக்கிட்டுப் போக முடியும்? நீ போயி கை கால் கழுவீட்டு வா. ஏதாவது குடிக்கத் தர்றேன்.”
வேதா ஒரு வழியாகக் கீழிருந்த விளையாட்டு சாமான்களைத் தாண்டி தன் அறைக்கு வர,
“ஹையோ வந்துட்டியா. என்னால ஒரு மீட்டிங் கூட ஒழுங்கா அட்டன் பண்ண முடியல. ஒரே சத்தம் இந்தப் பசங்களோட.”
“ஏற்கனவே கேட்டுட்டு வந்துட்டேன் அஜூ. பார்க்க பாவமாத்தான் இருக்கு அத்தைய. ஆனா என்ன செய்ய. இதுக்குத் தானே அவங்க ஆசைபட்டாங்க.” என்ற படி குளியலறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்திலேயே கதவை உடைக்கும் வேகத்தில் தட்டும் சத்தம். தட்டும் அதிர்விலேயே வேதாவிற்குத் தெரிந்துவிட்டது, தட்டுவது யார் என்று.
“அம்மா நீ எங்க இருக்க? ஹக் மீ அம்மா. முத்தம் குடு அம்மா.” அள்ளி அணைத்துக் கொஞ்சி முத்தமிடும் நேரமெல்லாம் கன்னத்து ஈரத்தைப் புறங்கையால் துடைத்துக் கொள்ளும் அவள் பெற்ற சின்னத் தங்கரதம் சித்தார்த்.
ஆனால் குளிக்க அல்லது கழிவறை சென்று கதவடைக்கும் நேரம் மட்டும் கண்ணீர் சிந்திக் கதறும் அவனின் பிள்ளை மொழி
நாம் தேடினால் அவர்கள் ஓடுவதும், அவர்கள் தேடலில் நம்மைக் கரைப்பதும் பிள்ளைகளின் பிரதான குணம் போல.
(சிந்திய சில நிமிடங்களில் இருந்து)
“இதோ வந்துட்டேன் டா.” வெளியில் வர பிள்ளைகள் இருவரும் அவளைக் கட்டி அணைத்து ஆளுக்கு ஒரு புறம் முத்தமிட அந்த அழகிய நொடி அர்ஜுன் கைப்பேசியில் வண்ணப் படமாய் ஒளிர்ந்தது.
“அம்மா என் பிரண்ட் ஜோஷ்க்கு நேத்து தங்கச்சி பாப்பா வந்துருச்சாம்மா. எனக்கும் தம்பி வேண்டாம். தங்கச்சி வேணும்மா.” முத்தமிட்ட ஈரம் மறையும் முன்னே கழுத்தை கட்டிக் கொண்டு ஜெய் கேட்க, அவளைக் குறும்பாக்கப் பார்த்த அர்ஜுனின் கை பேசியில் அடுத்த சில நொடிகளில் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு போதும் என்னை விட்டு விடு
வேதா நிமிர்ந்து பார்க்க நமுட்டு சிரிப்புடன் கையில் சித்தார்த்துடன் நின்ற அர்ஜுனின் இதழ்கள் சின்னவனின் கன்னம் தொட,
“போதும் போதும் பாட்டை நிறுத்தீட்டு வாங்க அஜூ கீழ. எல்லாரும் போய் கொட்டி வைத்திருக்க விளையாட்டு சாமானை அள்ளலாம். இந்தப் பாட்டுக் கேட்கலாம் தப்பில்ல. ஆனா ஆசைப் படக் கூடாது. போதும் எனக்கு இந்த ரெண்டு தங்க ரதங்களுமே. என்னைக்கோ என் கை விட்டுப் போன அந்த தேவதை மனசில இருந்தாப் போதும். நிஜத்துல எதுக்கு?” சொல்லியபடி அர்ஜுனைக் காண அவன் முகத்திலும் ஒரு நிறைவான அர்த்தமுள்ள புன்னகை.
அர்ஜுன் வேதா தேடி அலைந்த சுவர்க்கம் அவர்களின் வீடு வந்த மகிழ்வில் அவர்கள் திளைத்திருக்க அதே சுவர்க்கமும், தித்திக்கும் அவர்களின் மகிழ்வும் அவர்களைப் போல் காத்திருக்கும் அனைத்து வேதா அர்ஜுனுக்கும் கிடைக்க இறைவனை வேண்டி நாமும் விடை பெறுவோம்.
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும் ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்