தாரா கர்ப்பமானதில் இருந்து அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள். ஷீலா தாராவை பெற்ற மகளைப் போல பாசமாக பார்த்துக்கொண்டார். அவளுக்கு வாந்தி மயக்கம் வரும் சமயம் எல்லாம் பெற்ற தாயை போல அன்பை பொழிந்தார்.
தாரா குடும்பத்தினரின் அன்பு மழையில் நனைந்தாள். தாராவின் பெற்றோர் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். மல்லிகாவும் சந்திரசேகரும் கிஷோரின் குடும்பத்தினர் தாராவைப் பார்த்துக் கொள்வதைப் பார்த்து பூரித்து போயினர். தன் மகளுக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்துவிட்டதை நினைத்து சந்தோஷப் பட்டனர்.
நாட்கள் ஓட இன்னும் ஒரு வாரத்தில் தாராவுக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. வளைகாப்பை வெகு விமர்சையாக செய்ய சந்திரசேகர் பெரிய மண்டபத்தை பிடித்து இருந்தார். வளைகாப்புக்கு தேவையான வேலையை சந்திரசேகரும் மல்லிகாவும் ஓடியாடி பரபரப்புடன் செய்துகொண்டிருந்தனர்.
சூர்யாவிற்கும் இரண்டாம் வருடம் படிப்பு முடிந்தது. எக்ஸாம் எல்லாம் முடிந்து சூர்யா இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா கிளம்ப உள்ளான்.
சூர்யாவிற்கு நட்சத்திராவை நினைத்து கவலையாக இருந்தது. தான் இருந்தவரை அவளை நன்றாக பார்த்துக் கொண்டோம். அவள் தனியாக ஒரு வருடம் ஆஸ்திரேலியாவில் எப்படி இருப்பாள்? இதைவிட பெரிய கவலை என்னை விட்டு அவளும் அவளை விட்டு நானும் எப்படி இருப்போம். ஆனால் நட்சத்திரா கவலையாக இருப்பது போல் காட்டிக்கொள்ளவே இல்லை. சூர்யா தான் இதைப் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா, “மாமா நைட் என்ன சாப்பாடு செய்யட்டும்?” என்று கேட்டாள். சூர்யா அதை கவனிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். அவனை இடித்தவள் “என்ன மாமா யோசிச்சிட்டு இருக்க? நான் கேட்டதைக் கூடக் காதில் வாங்காமல்” என்றாள்.
அவள் இடித்ததில் யோசனை களைந்து சூர்யா என்ன எனக்கேட்டான்.
நட்சத்திரா, “சரியாப் போச்சு போ…. நைட்டு என்ன சாப்பாடு செய்யட்டும் என்று கேட்டேன்” என்றாள்.
சூர்யா, “உன் இஷ்டம் ஏதாவது செய்” என்றான் நட்சத்திரா, “சரி மாமா” என்று கிச்சனுக்கு சென்றாள்.
சூர்யா ‘என்ன இவள் இவ்வளவு சாதாரணமா நடக்கிறா. நான் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா கிளம்பும் போது ஒரு வாரம் ரூம்க்குள்ளேயே உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தாள். ஆனா இப்போ எப்போதும் இருக்க மாதிரி ஜாலியா இருக்கா. ஒருவேளை நாம கிளம்பிறதுனால இவளுக்கு வருத்தமா இல்லையோ…? இவ இல்லாம என்னால எப்படி இருக்க முடியும்? அப்போ நான் மட்டும் தான் இந்தியா போவதை நினைத்து வருத்தப்படுகிறேனா…?
ஒருவேளை வருத்தப்படாத மாதிரி நடிக்கிறாளோ…? கிளம்பும் அன்னைக்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாளோ?’ என பலவாறாக யோசித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா, “மாமா சமைச்சுட்டேன் வா சாப்பிடலாம்” என்று கிச்சனில் இருந்து குரல் கொடுத்தாள். சூர்யா எதுவும் பேசாமல் சாப்பிட அமர்ந்தான். நட்சத்திரா வழக்கம் போலவே நடந்து கொண்டாள். ஆனால் எப்போதும் பேசும் வழவழ பேச்சு அவளிடம் இல்லை. சூர்யா அவளை உற்று கவனித்தான். அவளிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. இருவரும் சாப்பிட்ட பிறகு நட்சத்திரா பாத்திரங்களை கழுவி விட்டு கிச்சனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சூர்யா பேசாம அவ கிட்டயே கேட்டு விடுவோம் என நினைத்தவன் வேண்டாம் என முடிவு செய்தான். பின் அவ வாயாலேயே வாங்கி விடுவோம் என நினைத்து அவள் கிச்சனில் இருந்து வரும் வரை டிவி பார்ப்போம் என ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.
டிவி ஓடிக் கொண்டிருந்தாலும் சூர்யா நட்சத்திரா எப்போது வருவாள் என கிட்ச்சனை எட்டிப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான். ஆனால் நட்சத்திரா வந்தபாடில்லை. கிட்ச்சனில் எதையோ உருட்டிக் கொண்டு இருந்தாள்.
சூர்யா பொறுமை இழந்து, “நட்சத்திரா நட்சத்திரா….” என அழைத்தான். கிச்சனிலிருந்து வெளியே வந்த நட்சத்திரா “சொல்லு மாமா” என்றாள்.
சூர்யா “இன்னும் இரண்டு நாளில் இந்தியா கிளம்பனும். அதுக்கு என்னோட பொருள்களை எல்லாம் பேக் பண்ணனும். எனக்கு கொஞ்சம் உதவி பண்றீயா?” என்று கூறி அவளது முகத்தை பார்த்தான்.
அவள் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் சாதாரணமாக வைத்துக்கொண்டு” ஒரு ஐந்து நிமிடத்தில் பாத்திரத்தை ஒதுங்க வைத்து விட்டு வரேன். வந்து உனக்கு உதவி பண்ணுறேன்” என்று கூறி கிச்சனுக்குள் புகுந்தாள்.
சூர்யாவிற்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமாட்றாளே. ஒரு வேளை உண்மைக்கே அவளுக்கு நான் ஊருக்கு கிளம்பிறதுல வருத்தம் இல்லையோ…?
நட்ச்த்திரா சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து பொருட்களை எல்லாம் எடுத்து வைப்போம் என அழைத்தாள். நட்சத்திரா அவனது ஒவ்வொரு பொருளையும் ஞாபகம் வைத்து தேடி எடுத்து சூட்கேசில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சூர்யாவும் ஏனோதானோவென்று தனது பொருட்களை எடுத்துவைத்து கொண்டிருந்தான். சூர்யா இவளை விட்டு ஒரு வருடம் பிரிந்து இருக்க போறோம். இவ ஞாபகமா எதையாவது எடுத்து வைத்துக் கொள்வோம் என நினைத்தவன் எதை எடுத்துட்டு போகலாம் என யோசித்தான்.
பின் தனக்கு அவளிடம் மிகவும் பிடித்த அந்த பிங்க் கலர் சுடிதாரை எடுத்து நட்சத்திராவிற்கு தெரியாமல் தனது துணிக்கடியில் மறைத்து வைத்து விட்டான்.
நட்சத்திரா ஒரு வழியாக அவனது அனைத்து பொருட்களையும் சூட்கேசில் மூட்டை கட்டி விட்டாள். சூட்கேசை எடுத்து ஒரு ஓரமாக வைத்தவள் தனது போனை எடுத்து வீட்டிற்கு போன் செய்து பேச ஆரம்பித்தாள். சூர்யாதான் அவள் என்ன நினைக்கிறாள் என யூகிக்க முடியாமல் தவித்தான். திடீரென்று அவன் மண்டையில் மணி அடித்தது.
திடீரென்று சூர்யாவின் மண்டையில் மணி அடித்தது…..