நட்சத்திராவிற்கு சூர்யா இல்லாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வு. சூர்யாவின் நிலைமையும் அதுதான். நட்சத்திரா பெயருக்கு காலேஜ் சென்று வந்தாள். காலேஜ் முடிந்து வீடு திரும்ப அவன் இல்லாமல் வெறுமையான வீடே அவளை வரவேற்றது. அவனுடன் இருக்கும்போது பிடித்திருந்த வீடும் பொருட்களும் இப்போது வெறுப்பை உண்டாக்கியது.
நட்சத்திராவிற்கு தனியே இருக்க பயமாக இருந்ததால் ஹாஸ்டலில் சேர அப்ளிகேஷன் போட்டு இருந்தாள். சூர்யா “இதை தான் நான் முதலிலேயே சொன்னேன். இப்போதாவது உனக்கு தோணுச்சே. சீக்கிரம் ஹாஸ்டல்ல ஜாயின் பண்ணு” என்றான்.
ஹரிஷ் தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க நட்சத்திரா மறுத்துவிட்டாள். சூர்யா தன் குடும்பத்தினருக்காக மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொண்டான். நட்சத்திராவின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது.
இரவு அவளை அணைத்துக்கொண்டே உறங்கி பழகியவனுக்கு அவள் இல்லாமல் உறக்கம் வர மறுத்தது. இப்படியே நான்கு நாட்கள் கழிய தாராவின் வளைகாப்பு நாளும் வந்தது. வீடே கலகலப்பாக இருந்தது. நிறைய உறவினர்கள் வந்திருந்தனர்.
சூர்யாவின் குடும்பத்தினரும் நட்சத்திராவின் குடும்பத்தினரும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். எல்லோரும் சந்தோஷ கடலில் மிதந்தனர்.
சூர்யாவிற்கு மட்டும் நட்சத்திரா இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது. மல்லிகாவிற்கும் இந்த சந்தோஷமான நேரத்தில் நட்சத்திராவும் நம்ம கூட இருந்து இருக்கலாம் என்று தோன்றியது..
தாய்மையின் பூரிப்பில் தாரா மிகவும் அழகாக ஜொலித்தாள். ஒவ்வொருத்தராக வந்து சந்தனம் பூசி வளையலை அணிவித்தனர். இதையெல்லாம் வீடியோகால் மூலம் நட்சத்திரா பார்த்துக்கொண்டிருந்தாள்.
சொந்த பந்தங்கள் அனைவரும் வாழ்த்தி விட்டுச் சென்றனர். அந்த நாள் வளைகாப்புடன் இனிதே கழிந்தது. வளைகாப்பு முடிந்ததும் தாராவை சந்திரசேகர் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
விஜய் சூர்யாவிடம், “மச்சான் காலையிலிருந்து உன் முகமே சரியில்லை. நீ என் தங்கச்சிய ரொம்ப மிஸ் பண்றேன்னு நினைக்கிறேன். இங்கேயே இருந்து அவளைப் பிரிந்து கஷ்டப்படுவதை விட பேசாம நீ ஆஸ்திரேலியா கிளம்பி போய் விடு” என்று அறிவுரை வழங்கினான். சூர்யாவும் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
நட்சத்திரா ஹாஸ்டல் செல்வதற்காக தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அங்கு உள்ள அனைத்து பொருட்களும் சூர்யாவையே அவளுக்கு நினைவூட்டியது. அவனுடன் சண்டை போட்டது அவனுடன் அமர்நது உணவருந்திய டைனிங் டேபிள். அவன் மேல் தண்ணீர் இறைத்து விளையாடிய வாஷ் ரூம்.
அவனை அடித்து விளையாடிய குஷன். தினமும் காலையில் அவன் போட்டு தரும் காபி. காலை எழுந்ததும் பார்க்கும் அவனது புன்னகை தவழும் முகம். தான் ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதும் அவன் அதிர்ச்சியாகி கொடுக்கும் அவனது ரியாக்ஸன். ஓவ்வொரு முறை காலேஜிற்கு அவள் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவளை வருடும் அவனது கள்ளப் பார்வை. அவனுடனான இனிய நிகழ்வுகளை நினைக்க நினைக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அவனுடன் இருந்த இனிய தருணங்களை கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேற அவளுக்கு துளியும் விருப்பமில்லை. கிளம்ப வேண்டிய கட்டாயத்தால் இடம் மாற முடிவு செய்தாள்………..
உயிரைத் தொலைத்தேன்
அது உன்னில் தானோ?
இது நான் காணும் கனவோ? நிஜமோ?
மீண்டும் உன்னைக் காணும் மனமே!
வேண்டும் எனக்கே மனமே மனமே…..
விழியில் விழுந்தால்
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீ தான் கண்ணே!…….
நட்சத்திரா சூர்யாவின் நினைவுகளில் உழன்று கொண்டிருக்க அவள் போன் ரிங்காகி அவளது யோசனையை கலைத்தது. ஹரிஷ் தான் போன் செய்திருந்தான். நட்சத்திரா போனை எடுத்து, “சொல்லுங்க அண்ணா” என்றாள்.
ஹரிஷ், “என்னமா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா? நான் வந்து உன்னை ஹாஸ்டல்ல சேர்த்து விட்றேன்” என்றான்.
நட்சத்திரா, “இல்லை அண்ணா இன்னும் கொஞ்சம் எடுத்து வைக்கணும்” என்றாள்.
ஷரிஷ், “சரி மா, நான் வந்து உனக்கு உதவி பன்றேன்” என காலை கட் செய்தான். நட்சத்திரா முகத்தை கழுவிவிட்டு வந்து வேலையை தொடர்ந்தாள்.
காலிங் பெல் சத்தம் கேட்க நட்சத்திரா ‘ஹரிஷ் அண்ணாவா தான் இருக்கும். ஹாஸ்டல் ஷிப்ட் பண்ண உதவி பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தாரே’ என நினைத்துக் கொண்டே கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.
சூர்யா அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தான். அவனை பார்த்து முதலில் சந்தோஷப்பட்டவள் பின் வேகமாக கதவை அடைத்து விட்டாள்.
சூர்யா அவள் கதவை அடைத்ததில் அதிர்ச்சியாகி, “ஏய் குட்டச்சி கடல் கடந்து 10 மணி நேரம் டிராவல் பண்ணி உனக்காக வந்து இருக்கேன் . இப்படி வெளியே தள்ளி கதவை அடைக்கிறியே இது நியாயமா? கதவை திறடி..”
நட்சத்திரா, “திறக்க முடியாது போடா இதுதான் உனக்கு தண்டனை” என்றாள்.
சூர்யா, “நான் என்னடி பண்ணேன்…” நட்சத்திரா, “என்னை விட்டுட்டு போன இல்ல? அதுக்கு தான்…”
சூர்யா, “அதான் திரும்பி வந்துட்டேன்ல. கதவை திறடி, டயர்டா இருக்குடி” என்றான். நட்சத்திரா, “போயிட்டு உடனேவா திரும்ப வந்த? ஒரு வாரம் கழித்துதான வந்து இருக்க”.
சூர்யா, “இதெல்லாம் அநியாயம் டி போன உடனே எப்படி திரும்ப வர முடியும்? நான் இங்க ஜாப் தேட வேண்டாமா..? அண்ணி வளைகாப்பு முடிந்த மறுநாளே பிளைட் புடிச்சு வந்துருக்கேன்” என்றான்.
நட்சத்திரா, “அதெல்லாம் எனக்கு தெரியாது. ஒரு வாரம் என்ன கஷ்டப்படுத்துனல்ல? அதுக்கு நீ கொஞ்ச நேரம் வெளியே நில்லு” என்றாள்.
சூர்யா ம்கூம் இப்படியெல்லாம் பேசினால் இவன் சரிப்பட்டு வரமாட்டா என நினைத்தவன், “ஏய் குட்டச்சி இப்ப நீ கதவ திறந்தா நீ ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டு இருக்கியே அதை உன் கிட்ட சொல்வேன்” என்றான்.
நட்சத்திரா உடனே ஆர்வமாக கதவை திறந்தாள். கதவைத் திறந்தவுடன் வேகமாக உள்ளே நுழைந்தவன் அவளை அணைத்துக்கொண்டான்.
நட்சத்திரா ஒரு நிமிடம் அவனது அணைப்பில் நெகிழ்ந்தாலும் வேகமாக அவனை விலக்கி “ஏதோ சொல்ல போறேன் என்று சொன்ன? அத முதல்ல சொல்லு” என்றாள்.
சூர்யா, “அது வா சொல்றேன் என்று அவளை மீண்டும் இழுத்து அணைத்தவன் அவள் காதில் ஐ லைக் யூ” என்றான்.
இதைக் கேட்ட நட்சத்திரா அவனை அடிக்க ஆரம்பித்தாள். “நீ என்ன ரொம்ப ஏமாத்துறடா. எவ்வளவு நாள் என்ன அலையவிடுற. இனிமேல் நான் உன் பின்னாடி சுத்த மாட்டேன்” என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சூர்யா, “ஹே! சாரிடி..”
நட்சத்திரா, “உன் சாரியை போய் குப்பையில் போடு” என்று நகர போக அவள் கையை பிடித்து நிறுத்தினான். “அதான் சாரி கேட்கிறேன் இல்ல அப்புறம் என்னடி கோவமா இருக்க…”
நட்சத்திரா, “என்னை ஒரு வாரம் தவிக்க விட்டலே, உனக்கு திரும்பி வர ஒரு வாரமா? அவ்வளவு நாள் என்னை விட்டுட்டு அங்க என்னடா பண்ண…..”
சூர்யா, “ஏய்! அண்ணி வளைகாப்பு முடிந்து அன்னைக்கு நைட்டே நான் பிளைட் பிடிச்சு இங்க வந்திருக்கேன். எல்லாரையும் சமாளிச்சிட்டு வர்றதுக்குள்ளேயும் எனக்கு போதும் போதும் என்று ஆயிடுச்சு” என்றான்.
நட்சத்திரா, “அவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காகத்தான் வந்தியா?” என்றாள். சூர்யா, “சே! சே! உனக்காக எல்லாம் வரல” என்றான்.
நட்சத்திரா, ‘சரியான கல்லுளிமங்கனா இருக்கிறான். எனக்காக தான் வந்தேன் என்று சொல்றானா பாரு’ என மனதிற்குள் திட்டியவள், “அப்போ யாருக்காக வந்தியோ அவங்க கிட்டேயே போய் பேசு” என உதட்டை சுழித்து விட்டு ரூமிற்குள் சென்று விட்டாள்.
சூர்யாவும் பயண களைப்பில் உறங்கி விட்டான். சூர்யா கண்விழித்து பார்க்க நேரம் மாலை ஆகியிருந்தது. எழுந்து வந்து நட்சத்திராவை பார்த்தான். டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் அவனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அதனை பார்த்து சிரித்துக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தவன் இரவு உணவை சமைக்க ஆரம்பித்தான்.
அவன் சமைத்து முடிக்கும் வரை நட்சத்திரா கிச்சன் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. சூர்யா சமைத்துவிட்டு “நட்சத்திரா சாப்பிட வா” என்று அழைத்தான். நட்சத்திராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
சூர்யா, “ஏய் குட்டச்சி காலையிலிருந்து சாப்பிடல பசிக்குது. ப்ளீஸ்டி அடம்பிடிக்காமல் சாப்பிட வாடி” என்று கெஞ்சினான். நட்சத்திரா அவன் கெஞ்சலில் மனமிறங்கி சாப்பிட வந்தாள். சாப்பிடும்போது மறந்தும் கூட அவனிடம் பேச வில்லை.
அவள் சாப்பிட்டு விட்டு அவளது ரூமை திறக்க முயற்சிக்க அதைத் திறக்க முடியவில்லை . நட்சத்திரா சூர்யாவைப் பார்க்க அவன் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா, ‘நீ கதவை பூட்டினால் மட்டும் நான் உன் ரூம்க்கு தூங்க வருவேனா? நான் ஹால்ல கூட படுத்துக்குவேன்’ என நினைத்து சோபாவில் படுத்துக் கொண்டாள்.
அவ எப்படியும் ரூமிற்க்கு வந்துவிடுவாள் எனநினைத்து சூர்யா ரூமிற்கு சென்று விட்டான். ஆனால் வெகு நேரமாகியும் நட்சத்திரா ரூமிற்கு வரவில்லை. சூர்யா எழுந்து போய் பார்க்க நட்சத்திரா கழுத்துவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டாள்.
சூர்யா, “ஏய் குட்டச்சி வம்பு பண்ணாம ஒழுங்கா ரூம்க்கு வந்து படுடி…” நட்சத்திரா, “போடா வர முடியாது” என்றாள்.
சூர்யா இவ இப்படி எல்லாம் பேசினா வழிக்கு வர மாட்ட என நினைத்தவன் அவளை அலேக்காக தூக்கி கையில் ஏந்திக் கொண்டான்.
நட்சத்திரா, “டேய் என்னடா பண்ற? என்னை இறக்கி விடுடா” என கத்த சூர்யா, “பேசாம வாடி நானே நீ இல்லாம ஒரு வாரம் சரியாக தூங்காமல் இருக்கேன். இன்னைக்காவது நல்லா தூங்கனும்” என்று கூறி அவளை பெட்டில் படுக்க வைத்தவன் தானும் அவள் அருகிலேயே படுத்து அவளை அணைத்துக் கொண்டான்.
நட்சத்திரா, “டேய் விடுடா. நான் ஹாலிலேயே படுத்துக்கிறேன்” என்றாள். சூர்யா, “பேசாம படுடீ எனக்கு தூக்கம் வருது” என கண்ணை மூடி உறங்க ஆரம்பித்து விட்டான். நட்சத்திராவும் அவனது அணைப்பு தந்த சுகத்திலே சிறிது நேரத்தில் உறங்கி போனாள்.
மறுநாள் காலையிலும் நட்சத்திராவின் கோபம் தொடர்ந்தது. சூர்யாவிடம் பாராமுகம் காட்டினாள். சூர்யா, “ஏய் இராட்சஷி ரொம்ப தான்டி ஓவரா போற.. நான் என்ன செஞ்சா உன் கோபம் போகும்? சொல்லுடி” என்றான்.
நட்சத்திரா சிறிது நேரம் யோசித்துவிட்டு “நான் பேக் பண்ணி வச்சிருக்கேன்ல இந்த பொருளை எல்லாம் அந்தந்த இடத்திலேயே அடுக்கி வை” என்றாள்.
சூர்யா, “இவ்வளவுதானா? இப்பவே செய்கிறேன்” என்றான். நட்சத்திரா ‘என்ன சொன்ன உடனே செஞ்சுட்டான்’ என நினைத்தவள் சரி என்றுவிட்டு டிவி பார்க்க சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் வேலை முடித்து வந்தவன் அவளை உரசிக்கொண்டு அருகிலேயே அமர்ந்தான். நட்சத்திரா என்னவென்று பார்க்க சூர்யா, “வேலை எல்லாம் முடித்து விட்டேன்” என்றான்.
நட்சத்திரா, “சரி என் கோபம் போயிடுச்சு போ” என்றாள். சூர்யா, “என்னடி இவ்வளவு சாதரணமா சொல்ற? ஒரு மணி நேரம் வேலை செஞ்சுட்டு வந்து இருக்கேன் டி” என்றான்.
நட்சத்திரா, “அதுக்கு இப்ப என்ன பண்ணனும்?”
சூர்யா, “ஏதாவது குடுடி..”
நட்சத்திரா, “என்ன கொடுக்க? என்கிட்ட ஒண்ணுமே இல்ல போடா” என்றாள்.
சூர்யா, “நீ தரலைன்னா பரவாயில்லை நான் தரேன் வாங்கிக்கோ” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
நட்சத்திரா, “சும்மா சும்மா பக்கத்துல வர்ற வேலை வச்சுக்காத தள்ளிப்போடா” என அவனை விலக்க சூர்யா, “என்னடி ரொம்பதான் ஓவரா பண்ற ஏன் நான் உன் பக்கத்துல வரக்கூடாதா?”
நட்சத்திரா, “ஆமா வரக்கூடாது”.
சூர்யா, “அப்போ அப்படி தான் வருவேன்” என்று அவளை நெருங்கி அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்து விட்டான். நட்சத்திரா அவன் செயல் அதிர்ச்சி ஆகிவிட்டாள். ஊரில் இருந்து வந்ததுல இருந்தே இவன் ஒரு மார்க்கமாக தான் திரிகிறான் என நினைத்தாள். ஆனால் அவன் எதுவுமே நடக்காததுபோல டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படியே நாட்கள் அவர்களுக்கு இனிமையாக கழிந்தது. சூர்யா திரும்பி வந்த விஷயம் தெரிந்து ஹரிஷின் குடும்பத்தினர் சூர்யாவை கலாய்த்து ஒரு வழியாக்கிவிட்டனர்.
சூர்யா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான். நட்சத்திரா இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். சூர்யா பைக் வாங்கி விட்டான். நட்சத்திரா மறுத்தும் கேட்காமல் அவளை தினமும் காலையில் காலேஜ்க்கு கொண்டு சென்று விட்டு வருவான். மாலையில் அவளாகவே பஸ்ஸில் வந்து விடுவாள்.
அவளை மிகவும் அக்கறையாகவே பார்த்துக்கொண்டான். சிறு சிறு விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்தான். நட்சத்திராவிற்கு அவன் செயல்கள் பிடித்திருந்தாலும் இன்னும் வாயை திறந்து அவன் காதலை சொல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்தது.
அவன் வாயைத் திறந்து சொல்லட்டும். அதுவரை தான் கேட்க கூடாது என நினைத்துக்கொண்டாள்.
*******
ஆர்.கே மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் கிஷோர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். தாரா உள்ளே வலியில் அலறி கொண்டிருந்தாள்.
ஷீலா கிஷோரிடம், “பதட்டப்படாதடா நல்லதே நடக்கும்” என்றார். இருந்தும் கிஷோர் பதட்டத்துடனே இருந்தான். தாராவின் பெற்றோரும் பயத்துடனே அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் ஒரு செவிலியர் வந்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாக கூற எல்லோரும் ஆனந்தம் அடைந்தனர். மகாலட்சுமியே வந்து பிறந்திருப்பதாக மகிழ்ச்சி கொண்டனர்.
கிஷோர் உள்ளே சென்று பார்க்க தாரா மயக்கத்தில் இருந்தாள். அருகில் பிங்க் நிறத்தில் குட்டியான கை கால்களுடன் இருந்த குழந்தை தனது பொக்கை வாய் சிரிப்பை உதித்தது.
கிஷோருக்கு தன் மகளைப் பார்த்ததும் உலகையே வென்று விட்ட உணர்வு. குழந்தையை தூக்கச் சென்றவனுக்கு ஒரு சின்ன தயக்கம். அதை புரிந்துகொண்ட ஷீலா குழந்தையை கையில் தூக்கி “இந்தாடா இப்படிதான் தூக்கணும் பயப்படாத” என்றார்.
கிஷோர் குழந்தையை கையில் வாங்கினான். குழந்தை கிஷோரை பார்த்து சிரித்தது. அதைப் பார்த்ததும் கிஷோருக்கு புன்னகை அரும்பியது. சிறிது நேரத்தில் கண் விழித்து தாராவும் குழந்தையை பார்த்து சந்தோஷபட்டாள்.
நட்சத்திரா சோபாவில் அமர்ந்து இருக்க சூர்யா அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். இருவரும் ஆர்வமாக டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
நட்சத்திராவின் போனில் வீடியோ கால் வந்தது. நட்சத்திரா அதை பார்த்து விட்டு “ஐயோ! மாமா வீட்டில் இருந்து வீடியோ கால் வருது” என்றாள்.
சூர்யா, “எடுத்து பேசுடி”….
நட்சத்திரா, “ஐயோ! மாமா அம்மா இந்த வீட்டை பார்த்தா நான் ஹாஸ்டல்ல இல்லை என்று கண்டுபிடித்து விடுவார்களே!”
சூர்யா, “ஏய் லூசு ரூம்க்குள்ள போய் பேசு டி” என்றான்.
நட்சத்திரா ‘சரி சமாளிப்போம் என்று ரூமுக்குள் போய் காலை ஆன் செய்தாள். மல்லிகா, “நட்சத்திரா தாராவுக்கு குழந்தை பிறந்துடுச்சுடி” என்றார் மகிழ்ச்சியாக.
நட்சத்திரா, “குழந்தை பிறந்துருச்சா? என்ன குழந்தை மா?” என்றாள் துள்ளிக் குதித்துக்கொண்டு.
மல்லிகா, “பெண் குழந்தைடி” என்றார். நட்சத்திரா வீடியோகால் மூலம் குழந்தையை பார்த்தாள். குழந்தை ரோஸ் நிறத்தில் அழகாக சிரித்தது. அந்த குழந்தையை பார்த்த நட்சத்திராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தையை நேரில் சென்று பார்க்க மனது துடித்தது. நட்சத்திரா தாரா மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பேசினாள். இந்த முறை கவனமாகவே பேசினாள். ஒரு தடவை ஷீலாவிடம் மாட்டிக்கொண்டதால் அதன்பின் எச்சரிக்கையாகவே இருந்தாள். மல்லிகா, “நட்சத்திரா இதுதான் உன் ரூமா..?’
அவள், “ஆமாம் அம்மா” என்றாள். மல்லிகா, “உன் ரூம்ல இன்னொரு பொண்ணு இருக்கான்னு சொன்ன அவ எங்க?” என்றார்.
நட்சத்திரா, “அது அம்மா அவள் வெளியே போய் இருக்கா” என்றுவிட்டு பின் சிறிது நேரம் பேசிவிட்டு போனை கட் செய்தாள்.
சூர்யாவிற்கும் ஷீலா வீடியோ கால் செய்தார். அவன் போனை பார்க்க நட்சத்திரா அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தாள்.
சூர்யா, “என்னடி குட்டச்சி ஒரு மார்க்கமா சிரிக்கிற? அன்னைக்கு மாதிரி ஏதாவது பண்ணி என்னை மாட்டிவிடப் போறியா?” என்றான்.
நட்சத்திரா, “சே சே நான் போய் அப்படி எல்லாம் பண்ணுவேனா மாமா?”என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.
சூர்யா, “உன் டோனே சரி இல்ல. நான் ரூம்க்குள்ள போய் பேசிறேன்” என்று உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டான்…….
நட்சத்திரா, ‘சே இவன கோர்த்து விடலாம் என்று நினைத்தால் எஸ்கேப் ஆகிவிட்டானே!’ என நினைத்தாள்.
தாராவிற்கு சுகப் பிரசவம் என்பதால் நான்கு நாட்களிலேயே டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். ஒரு நல்ல நாளாகப் பார்த்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
வழக்கம்போல சூர்யாவும் நட்சத்திராவும் வீடியோகால் மூலம் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். சொந்தபந்தங்கள் சூழ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சங்கர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு புது துணி எடுத்துக் கொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நட்சத்திரா இவ்வளவு சந்தோசமான நேரத்துல நாங்க அங்க இல்லாமல் போய் விட்டோமே என வருத்தப்பட்டாள். சூர்யா அவள் முகத்தை பார்த்தே அவள் நினைத்ததை கண்டுபிடித்து அவளிடம் கேட்டான்……
சூர்யா, “ஏய் குட்டச்சி உனக்கு இந்த சந்தோஷமான தருணத்தில் எல்லோர் கூடவும் இல்லை என்று வருத்தப்படுகிறதானே? என்னால தானே நீ உன் குடும்பத்தை பிரிந்து இவ்வளவு தூரம் வந்து இருக்க” என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திராவிற்கு கஷ்டமாக போயிற்று, “அப்படி எல்லாம் இல்லை மாமா. அப்பா அம்மாவை பிரிந்து வந்ததும் வருத்தம் தான். ஆனால் உன் கூட இருக்கும் போது எனக்கு எல்லாம் சொந்தமும் கிடைத்த மாதிரி ஃபீல் பண்றேன்”.
அவள் சொன்ன சமாதானங்களை சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை. நட்சத்திரா அவன் முகத்தை தன் புறம் திருப்பி, “இங்க பாரு மாமா, அப்படி பார்த்தா நீ கூட தான் எனக்காக இப்போ இங்க வந்து இருக்க. அதுக்காக நான் கவலை பட முடியுமா என்னால நீ அந்த விழாவில் கலந்து இருக்க முடியல என்று” என கேட்டாள்.
சூர்யா அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சூழ்நிலையை சகஜமாக மாற்றும் பொருட்டு, “என்னடி சந்தடி சாக்குல நான் உனக்காகத்தான் திரும்பி ஆஸ்திரேலியா வந்தேன் என்று சொல்ற? நான் உனக்காக எல்லாம் வரல” என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திரா இதுவரை இருந்த மனநிலை மாறி கோபமாகி விட்டாள். நட்சத்திரா அவனை முறைத்து “ஏன் மாமா இப்படி பொய் சொல்ற? நீ எனக்காகத் தான் வந்த என்று எனக்கு தெரியும்”.
சூர்யா, “அப்படின்னு நீயா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்றான் தோள்களை குலுக்கி.
நட்சத்திராவிற்கு கோபம் தலைக்கேறியது. “அப்போ யாருக்காக வந்தியோ அவங்ககிட்டே போய் பேசு. என்கிட்ட பேசாத” என்று விட்டு வேகமாக எழுந்து செல்ல முயன்றாள்.
சூர்யா அவளை இழுத்து அருகில் அமரவைத்து, “ஏன்டி குட்டச்சி இப்ப எல்லாம் நீ அதிகமாக கோவப்படுறடி, என்னை கெஞ்சவிடுறடி” என்றான். சூர்யாவிற்கு இது பிடித்திருந்தது.
நட்சத்திரா, “உனக்கு பிடித்தவங்க கிட்டயே போயி பேச வேண்டியதுதானே? ஏன் என்கிட்ட வந்து கெஞ்சுற?”
சூர்யா, “எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும்”
நட்சத்திரா, “நம்பமாட்டேன்.”
சூர்யா, “இப்ப பாரு உன்னை எப்படி நம்ப வைக்கிறேன் என்று அவளை அருகில் இழுத்து கைக்குள் கொண்டு வந்து அவளிடம் நெருங்கி எனக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும். உனக்காகத்தான் நான் போயிட்டு திரும்பி வந்தேன்” என்று கூறி அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான். இப்ப நம்புறியா டி?” என்றான்.
நட்சத்திரா, “நம்புறேன் நம்புறேன் நீ முதல்ல தள்ளி உட்காரு” என்றாள்.
சூர்யா, “இருடி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றான்.
நட்சத்திரா, ” சொல்லு மாமா என்ன விஷயம்?” என்றாள்.
சூர்யா, “நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரனும்” என்றான்….
நட்சத்திரா ஏடாகூடமா என்ன சத்தியம் கேட்கப் போகிறானோ? என நினைத்து “என்ன சத்தியம்?” என கேட்டாள்……
கவிதைகள் தொடரும்….
ஹாய் செல்லகுட்டிங்களா, சூர்யா என்ன சத்தியம் கேக்கப் போறானு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? கண்டுபிடிச்சிட்டீங்கன்னா கமெண்ட்ல சொல்லுங்க. சரியா கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு சாக்லேட் பரிசு…..???