காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த சூர்யா நட்சத்திராவைப் பார்த்து ஆடிப் போய்விட்டான். இது எப்படி சாத்தியமாகும் என நினைத்துக் கண்ணை கசக்கிவிட்டு பின் மீண்டும் அவளைப் பார்த்தான். சூர்யாவிற்கு புரிந்துவிட்டது, இது நிஜம்தான்.
சூர்யாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் கனவில் கூட நடக்கும் என்று நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. என் நட்சத்திரா வந்துவிட்டாள். எனக்காக கடல் கடந்து வந்துவிட்டாள்.
அவள் காதலின் ஆழத்தை பார்த்து கண்கள் கலங்கிவிட்டது சூர்யாவிற்கு. நட்சத்திராவிற்கும் சூர்யாவை முழுதாக ஒரு வருடம் கழித்து பார்ப்பதால் சொல்ல முடியாத உணர்வுகள் ஆட்கொண்டது. எப்போதடா நேரில் பார்ப்பேன் என்று தவமிருந்த நாள் வந்துவிட்டது. என் உயிரில் சரி பாதி என்னை சேர்ந்து விட்டது என எண்ணினாள்.
அவனைப் பார்த்து அளவில்லா ஆனந்தத்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சூர்யா ஆனந்த அதிர்ச்சியின் உணர்ச்சிப் பெருக்கில் தாவிச் சென்று அவளை அணைத்துக்
கொண்டான். நட்சத்திராவும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
ஒரு வருட பிரிவின் வலியை இருவரும் அந்த ஒற்றை அணைப்பின் மூலம் தீர்த்துக் கொண்டனர்.
நொடிகள் நிமிடங்களாக கரைந்தது. இருவருக்குமே விலக மனமில்லை. நட்சத்திராவிற்கு மகிழ்ச்சியில் அழுகை அதிகமாகியது. அவள் அழுகையை பார்த்து பதறிய சூர்யா அவளை உள்ளே அழைத்து வந்து, “ஏய் குட்டச்சி ஏன்டி அழுகுற? அதான் இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்துட்டேல என்னப் பார்க்க” என்றான்.
ஆனால் அவள் அழுகை நிற்கவில்லை. சூர்யா எழுந்து சென்று ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் நீட்டினான். நட்சத்திரா அதை வாங்கி தாகம் தீரும் வரை பருகினாள். பின் சில நிமிடத்தில் அவள் அழுகை மட்டுப்பட்டதும் முகத்தை துடைத்துக் கொண்டாள்.
சூர்யா, “ஒருவழியா அழுகையை நிறுத்திட்டீயா. சரி சொல்லு, நீ எப்படி ஆஸ்திரேலியா வந்த? எதுக்கு வந்த?” என்றான்.
நட்சத்திரா வாய் திறந்து பேசவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சூர்யா, “என்னடி நான் கேள்வி கேட்டுட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாமல் என்னை பார்த்துட்டு இருக்க” என்றான்.
நட்சத்திரா அவனை முறைத்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள். சூர்யா, “ஏன்டி இன்னுமா உனக்கு கோபம் போகல, ஒரு வருஷம் ஆச்சு இதெல்லாம் ஓவரா இல்ல” என்றான்.
நட்சத்திரா அவன் பேசியதை கேட்டு கொண்டாளொழிய பதில் பேசவில்லை. சூர்யா, “ஏய் பேசுடி, நான் பண்ணது தப்புதான் திடுதிப்பென்று கிளம்பியிருக்கக் கூடாது சாரி” என்றான்.
நட்சத்திரா, ‘செய்றதை செஞ்சுட்டு சாரி கேக்குறியா, இருடா உன்ன கதறவிட்றேன்’ என நினைத்துக் கொண்டவள், “செய்வதெல்லாம் செஞ்சிட்டு சாரி கேட்டா சரி ஆயிடுமா” என்று முறைத்தாள்.
சூர்யா, ‘யப்பா! ஒருவழியா பேசிட்டாள். இவள் பேச்சை கேட்க ஒரு வருஷம் வெயிட் பண்ணிருக்கேன்’ என நினைத்து விட்டு, “நம்ம சண்டையை அப்புறமா வச்சிக்கலாம், ஃபர்ஸ்ட் நீ எப்படி இங்க வந்த எதுக்கு வந்த சொல்லு” என்றான்.
நட்சத்திரா, “அதுவா மாமா உங்க வீட்டிலேயே எங்க வீட்டிலயும் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி என்கிட்ட கேட்டாங்க. நான் அதுக்கு நாங்க கொஞ்ச நாள் லிவிங் டுகெதர் வாழ்ந்து பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னேன். அவர்களும் ஓகே சொல்லிட்டாங்க. அதான் உடனே ஆஸ்திரேலியா கிளம்பி வந்துட்டேன்” என்று தனக்கு மிகவும் கைவந்த கலையான பொய்யை அள்ளிவிட்டாள்.
இதைக்கேட்ட சூர்யாவின் முகத்தில் அளவில்லா அதிர்ச்சி. நட்சத்திரா அதைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டாள். சூர்யா, “என்னடி உளர்ற” என்றான்.
நட்சத்திரா, “உண்மைதான் மாமா, நம்பு…” என்றாள். சூர்யா வழக்கம்போல பொய்யை அள்ளிவிட்றாளோ..? என்று நினைத்து சந்தேகமாக பார்க்க நட்சத்திராவின் போன் அலறியது. எடுத்து பேசியவள், “வந்துட்டேன்பா, கரெக்டா கண்டு பிடிச்சு வந்துட்டேன் என்றவள் அப்பா மாமாவுக்கு நான் வந்தது நம்ப முடியல. எதுக்கு வந்த என்று சொன்னாலும் நம்ப மாட்றாரு. நீங்களே மாமா கிட்ட பேசுங்க” என்று போனை நீட்டினாள்.
சூர்யா போனை வாங்கி, “சொல்லுங்க மாமா” என்றான். சந்திரசேகர், “எப்படி இருக்க சூர்யா” என்றார். சூர்யா, “நல்லா இருக்கேன் மாமா என்றவன் நட்சத்திரா சொல்றதெல்லாம்…” என ஆரம்பித்த உடனே,
சந்திரசேகர், “உண்மைதான் சூர்யா, நானும் அவளை அனுப்ப முதலில் யோசித்தேன். மல்லிகா கூட இதெல்லாம் வேணாம்னு தான் சொன்னா. ஆனால் நான் தான் இது அவளோட வாழ்க்கை என்று பேசி சரி கட்டி அனுப்பி வச்சிருக்கேன். நட்சத்திரா கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருப்பா, பத்திரமா பாத்துக்கோங்க. அவளை நீங்க பார்த்துப்பீங்க என்ற நம்பிக்கைல தான் அனுப்பி வைத்திருக்கிறேன்” என்றார்.
சூர்யாவுக்கு இதையெல்லாம் கேட்க மயக்கம் வராத குறை தான். சூர்யாவின் ரியாக்சனைப் பார்த்த நட்சத்திரா ‘என்ன ரியாக்ஷன் ஒரு மாதிரி இருக்கு. ஒருவேளை அப்பா உண்மையை உடைத்து விட்டாரோ..? ஐயையோ இப்ப எப்படி இவங்கிட்ட இருந்து தப்பிக்கிறது’ என யோசித்தாள்.
சூர்யா, “சரிங்க மாமா நான் பார்த்துகிறேன்” என்றவன் போனை கட் செய்துவிட்டு அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான்.
நட்சத்திரா, போட்டு வாங்கி பார்ப்போம் என்று நினைத்தவள், “என்ன மாமா இப்பவாவது நான் சொன்னது உண்மைதானு நம்புறீயா..? அப்பா நான் சொன்னது உண்மைதான்னு சொன்னார்ல” என்றாள்.
சூர்யா ஆமாம் என்று தலையாட்டினான். நட்சத்திரா, அப்பாடா! தப்பித்தோம் என்று நினைத்தவள், “சரி மாமா இதுதான் நம்ம ரூமா என்று கேட்டு உள்ளே சென்று தனது லக்கேஜை வைத்து விட்டு மாமா குளிச்சிட்டுவரேன்” என பாத்ருமிற்குள் நுழைந்தாள்.
சூர்யா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. குளித்து முடித்து வந்த நட்சத்திரா சூர்யாவை உரசிக் கொண்டு அமர்ந்தாள்.
நட்சத்திரா, “என்ன மாமா ஒரே யோசனையா இருக்க. இங்க இதெல்லாம் சகஜம்தானே, கொஞ்ச நாள் நாம சேர்ந்து வாழ்ந்து பார்ப்போம். உனக்கு கண்டிப்பா என்னை பிடித்துவிடும். அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறி சூர்யாவின் முகத்தை பார்த்தாள்.
சூர்யா ஏதோ சொல்ல வாயை எடுக்க அவன் போன் அலறியது. கிஷோர் தான் அழைத்து இருந்தான். சூர்யா போனை அட்டென்ட் செய்து, “சொல்லுடா…” என்க
கிஷோர், “சூர்யா நட்சத்திரா வந்துட்டாளா?” “வந்துட்டா…” என்றான் குரல் சுரத்தேயில்லாமல்.
கிஷோர், “அதை ஏன்டா இவ்வளவு சோகமா சொல்லுற” என்றான்.
அப்போது தான் சூர்யாவிற்கு மண்டையில் மணி அடித்தது. பேசாம இவன் கிட்டே கேட்டு இவ சொல்றதெல்லாம் உண்மையா? என்று கன்ஃபார்ம் பண்ணி விடுவோம் என நினைத்து கிஷோரிடம், “டேய் அண்ணா! இவ சொல்றதெல்லாம் உண்மையா?” என்றான்.
கிஷோரும் அவள் என்ன சொல்லியிருப்பாள் என யோசிக்காமல், “ஆமா டா, உன்ன நம்பி தான் அத்தை மாமா அவளை அனுப்பி இருக்காங்க. அவளை பத்திரமா பார்த்துக்கோ” என்றான். இதைக் கேட்டதும் சூர்யாவிற்கு புஸ்ஸென்றானது. “சரி டா..” என்றான்.
ஷீலா மொபைலை வாங்கி, “சூர்யா என்னடா பண்ற, சாப்டியா ?”
சூர்யா, “இல்லமா, இனிமேதான் சாப்பிடனும்” என்றவன் அம்மா ஏன்மா இப்படி பண்றீங்க?” என்றான்.
“நான் என்னடா பண்ணினேன்?”
நட்சத்திரா ‘ஐயையோ! உண்மையை கண்டுபிடிச்சுட்டானோ? நான் எப்படி சமாளிப்பேன்’ என நினைத்தாள்.
சூர்யா, “ஏன்மா இவளை இங்கே அனுப்புனீங்க?”
ஷீலா, “இது என்னடா வம்பா போச்சு? அவதான் ஆசைப்பட்டா. அதனால நாங்க அனுப்பினோம்” என்றார்.
“அவ ஆசைப்பட்ட நீங்க செஞ்சுடுவீங்களா?” என்றான். ஷீலா எதுக்கு இவன் இப்படி ஏதேதோ சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்கான்? என நினைக்க,
தாரா, “கொடுங்க அத்த நான் பேசுகிறேன் என போனை வாங்கி கொண்டு தனியாக வந்தவள் சூர்யா…” என்றாள்.
சூர்யா “சொல்லுங்க அண்ணி.”
தாரா, “சூர்யா உனக்காக தான் அவ ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கா. அவள பத்திரமா பாத்துக்கோ. அம்மா அப்பா ஒத்துக்வே இல்லை. நான் தான் பேசி ஒத்துக்க வச்சேன். படிக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தான் சம்மதிச்சாங்க.”
சூர்யாவுக்கு இதைக் கேட்டதும் அதிர்ச்சி, “என்னது படிக்கிறதுக்கா?”
தாரா, “ஆமா படிக்கிறதுக்கு தான். நீ படிக்கிற காலேஜ்ல தான் அவளும் பிஜி பண்ண போறா. அதுக்கு தான் ஆஸ்திரேலியா வந்து இருக்கா. அவ இங்கேயே படிப்பில தத்தக்கா புத்தக்கா. நீ தான் சொல்லிக் கொடுத்து அவள நல்லா படிக்க வைக்கனும்.”
சூர்யா, ‘படுபாவி வந்த உடனேயே என்னை கதற வைத்துவச்சுட்டா. எப்படி எல்லாம் பொய் சொல்றா? என் மேல தான் தப்பு . இவள பத்தி தெரிஞ்சும் இவ சொல்வதை நம்பி இருக்கக் கூடாது’ என நினைத்தவன், “சரிங்க அண்ணி, நான் பார்த்துக்கிறேன்” என்று போனை கட் பண்ணியவன் அவளை முறைத்தான்.
நட்சத்திரா கண்டுபிடிச்சுட்டான்யா! கண்டுபிடிச்சுட்டான்யா! என நினைத்து ஈஈஈ என இளித்தாள்.
சூர்யா, “ஏன்டி உன் வாயிலிருந்து உண்மையே வராதா?” என்றான் கோபமாக.
நட்சத்திரா, “என்னை ஒரு வருஷம் தவிக்க விட்டுட்டு போனல, அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட்.”
சூர்யா, “எனக்கே நீ பனிஷ்மென்ட் குடுக்குறியா? இப்ப பாரு என் பனிஷ்மென்ட என்று கூற நட்சத்திரா எழுந்து ஓடினாள்.
“ஓடினாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது….” என துரத்தினான். நட்சத்திரா ரூம்க்குள் நுழைந்து பெட்டை சுற்றி ஓடினாள். சூர்யா ஓடிச் சென்று அவளை பிடித்து விட்டான்.
நட்சத்திரா, “மாமா ப்ளீஸ்” எனக் கெஞ்சினாள்.
சூர்யாவிற்கு அவள் தலை சாய்த்து கெஞ்சுவது ரசனையாக இருந்தது. சில நிமிடங்கள் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா அவனின் பார்வை உணர்ந்தவள் மாமா என்று அழைத்தாள்.
அவள் அழைப்பில் நினைவு திரும்பியவன் என்னடா இப்படி பார்த்து தொலைஞ்சுட்ட? அவ உன்ன கலாய்க்கப் போறா என தன்னைத்தானே கடிந்து கொண்டவன், “சரி போனாப் போகுதுன்னு உன்ன விடுறேன் என்றவன் நீ பக்கத்துல இருக்க ரூம்ல தங்கிக்க” என்றான்.
நட்சத்திரா, “இல்ல மாமா நான் உன்கூடவே தங்கிக்கிறேன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றாள் கைகளை விரித்து.
அவள் தலையில் கொட்டியவன், “ஏன்டி உனக்கு ஆட்சபணை இல்லைனா என்ன? எனக்கு இருக்கு. ஒழுங்கா அந்த ரூம்க்கு போடி” என்றான்.
நட்சத்திரா அவன் தாடையை பிடித்து “ப்ளீஸ் மாமா. நான் இந்த ரூம்லயை தங்கிக்கிறேன்” என்றாள்.
சூர்யா அவள் கெஞ்சியதில் மனம் இறங்கினாலும் அதை இழுத்துப் பிடித்தவன், ‘வீட்டில எல்லோரும் உன்னை பத்திரமா பார்த்துக்க சொன்னாங்க. ஆனா நான் தான் உன்கிட்ட இருந்து என்ன காப்பாத்துக்கனும்’ என நினைத்து விட்டு, “இது சரிவராது. நீ அந்த ரூம்ல தான் இருக்கணும்” என்று அவள் லக்கைஜை எடுத்து பக்கத்து ரூமில் வைத்தான்.
நட்சத்திரா உதட்டை சுழித்து விட்டு, “அங்கேயே தங்கிக்கிறேன்” என்றாள். சூர்யா அவளது செயலைப் பார்த்து சிரித்தான்.
நட்சத்திரா, “மாமா எனக்கு ரொம்ப பசிக்குது” என்றாள். சூர்யா குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்துவிட்டு,.”சாப்பிட எதுவும் இல்லையே! சரி வா நாம ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வரலாம்” என்றான்.
நட்சத்திரா, “சரி ஒரு ரெண்டு நிமிஷத்துல பிரெஷ் ஆகி வரேன்”என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
சூர்யா, “நட்சத்திரா என்ன பண்ற? ரெண்டு நிமிஷம் என்று சொன்ன அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு” என்றான்.
“இதோ வந்துட்டேன்” எனக் கூறி வெளியே வந்தாள். நட்சத்திரா சூர்யா இருவரும் நடந்தே பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
நட்சத்திரா, “மாமா இங்க நம்ம ஊரு சாப்பாடு கிடைக்குமா?”
சூர்யா, “அதெல்லாம் கிடைக்காது. இங்க இருக்கிற சாப்பாடு தான் கிடைக்கும்” என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திராவின் முகம் சுருங்கியது. அவன் அதை பார்த்துவிட்டு, “எல்லாமே எப்போதும் கிடைக்காது. நாமதான் இடத்துக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்” என்றான்.
நட்சத்திரா, “மாமா நாளைக்கு நாம அடுப்பு மளிகை சாமான் எல்லாம் வாங்கி வீட்டிலேயே சமைச்சுக்கலாம்” என்றாள்.
சூர்யா, ‘இவ சமைக்கிற சாப்பிட்றதா’ என நினைத்தவன் வெளியே சொல்லாமல், “அதை நாளைக்கு பாத்துக்கலாம். இப்போ சாப்பிடு” என்றான். இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டை அடைந்தனர்.
நட்சத்திரா வீட்டிற்கு போன் செய்து பேசினாள். மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாலும் சூர்யா நட்சத்திராவையே தான் கவனித்துக் கொண்டிருந்தான்.
“நான் சாப்பிட்டேன் மா என்றவள், ஆமாமா நாளைக்கு தான் ஹாஸ்டல் சேரனும். மாமா கூட்டிட்டு போய் சேர்த்து விடுறேனு என்று சொல்லி இருக்காங்க” என்றாள்.
சூர்யா ‘பாவி! பேசுறது எல்லாம் பொய்யா இருக்கு’ என நினைத்தான். அவள் போனை கட் பண்ணியதும், “ஏன்டி உன் வாழ்க்கையில் நீ உண்மையை பேச மாட்டியா?” என்றான்.
நட்சத்திரா சொல்லிருக்கேனே என்றாள் ஆவேசமாக. சூர்யா, “எப்போடி..?” என்றான் ஆர்வமாக.
நட்சத்திரா, “அதான் மாமா உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணும் போது உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு சொன்னேனே” என்றாள்.
இதைக் கேட்டதும் சூர்யாவிற்கு உள்ளுக்குள் ஆனந்தம். வெளியே காட்டாமல் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு, “எனக்கு தூக்கம் வருது. நீயும் போய் தூங்கு” என்றான்.
நட்சத்திரா, ‘இப்படியே எத்தனை நாள்தான் தப்பிப்ப? என்கிட்ட மாட்டி தான ஆகனும்’ என்று நினைத்துக்கொண்டு, “சரி மாமா குட் நைட்..” என தனது அறைக்குச் சென்றாள்.
சூர்யா என்ன இவ சொன்ன உடனே கேட்டுட்டா. இவளுக்கு தனியாக படுக்க பயம் ஆச்சே? அதுவும் புது இடத்தில் என யோசித்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றான். சூர்யா சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். சூர்யா தூங்கியதை உறுதிபடித்துக் கொண்டு பூனை நடைபோட்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.
கவிதைகள் தொடரும்….