அன்றைய நாள் முழுக்க அந்த கட்டிலை விட்டு லிங்கம் அசைந்தானில்லை.
வீரனும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அன்றைய தினம் வேறு வேலை இல்லையென்பதால், வீட்டில் தான் அவனும் இருந்தான்.
அனைவர் கேட்டும் என்னவென்று சொல்லாதவன், கண்களை திறக்காதவன், சுபா சென்று பேசிட அவளை வரவேற்கும் விதமாக சிறு புன்னகையை மட்டும் காட்டினான்.
மாலை வரை பொறுத்த வீரன்,
“வாடா அப்படியே களத்துமேடு வரையும் போய்யி வருவோம்” என தம்பியை அழைக்க, மறுப்பேதும் சொல்லாது எழுந்து உடன் சென்றான்.
இவர்கள் இருவரும் வயல்வெளி பக்கம் செல்வதை கண்ட சுபா,
“நானும் வரட்டுமா மாமா?” எனக் கேட்க, அவளை தவிர்க்க முடியாது வாவென்றிருந்தான்.
வீரன் லிங்கத்திடம் தனித்து பேச எண்ணியே அவனை வெளியில் அழைத்து செல்ல நினைத்தான். இப்போது சுபாவும் உடன் வருவதால் பொதுவாக பலவற்றை பேசியபடி இரு வீட்டுக்கும் நடுவிலிருக்கும் தென்னந்தோப்பிற்குள் வந்திருந்தனர்.
“மீனு வீடு வந்திருச்சே! நான் அங்க போயிட்டு வரேன் மாமா” என்ற சுபா வீட்டை நோக்கி செல்ல… இவர்கள் வருவதை தனதறை சன்னல் வழி பார்த்த மீனாள், லிங்கத்திடம் பேச வேண்டுமென தோப்பு பக்கம் வந்தாள்.
எதிரில் பட்ட சுபாவிடம்,
“மாமாகிட்ட பேசனும் சுபாக்கா. நீங்க வூட்டுக்கு போங்க. அம்மா, அண்ணே, அங்கை இருக்காய்ங்க. சட்டுன்னு வந்துபுடுவேன்” என்று சொல்லி செல்ல…
‘வீரா மாமாவும் லிங்கத்துகிட்ட பேசத்தான் தனியா கூட்டிட்டு வந்திருப்பாரோ? நாம நந்தி வேலை பார்த்துட்டோம்மாட்டிக்கு’ என்று நினைத்தவளாக சென்றாள்.
லிங்கம் வாய்க்காலின் மண் மேட்டில் இரு கால்களுக்கு இடையில் கை விரல்களை கோர்த்தவனாக, தரை பார்த்து அமர்ந்திருக்க… வீரன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தன்னுடைய தம்பியை அவதானித்தபடி தென்னை மரத்தின் தண்டில் சாய்ந்தவனாக நின்றிருந்தான்.
நீடித்த மௌனத்தை வீரனே கலைத்தான்.
“எதுக்கு அந்த பையனை அடிச்ச?”
“சேக்காலியோட அண்ணன்னு பழகியிருக்காள். அவன் இவளை அவனோட லவ்சுக்கு யூஸ் பண்ணிட்டியிருந்திருக்கான். தெரிஞ்சு அவளை கண்டிச்சேன். இவளும், உன் தங்கச்சி இருக்கும்போது நான் ஏன் நீயி கொடுக்கிறதையெல்லாம் அந்த அக்காகிட்ட கொடுக்கணுமின்னு இவள் கேட்டதுக்கு மிரட்டியிருக்கான். வந்து சொன்னாள். அவென ரெண்டு தட்டு தட்டினேன்” என்ற லிங்கம், “ஏற்கனவே அவனோட பேசக்கூடாதுன்னு நீங்க சொல்லி திட்டுனதால, மேடம் என்கிட்ட சொன்னாய்ங்க. அப்பவும் உங்கக்கிட்ட சொல்லடக்கூடாதுன்னு அம்புட்டு கெஞ்சல் வேற” என்றான்.
“அப்புறம்?” வீரன் தம்பியை அனைத்தையும் சொல் எனும் விதமாக பார்த்தான்.
“அதான் எல்லாம் உங்களுக்கே தெரியுமாட்டிக்கே! பொறவு என்னத்துக்கு என்னையவே சொல்ல சொல்லுறீ(ய்)ங்க?” என்றான்.
வீரனிடம் அதே பார்வை.
“காலையில பொங்க வைய்க்கும்போது ஏதும் வில்லங்கமா நடக்குதான்னு நா கேட்டதுக்கு, அது உன் முடிவை பொறுத்துன்னு சொன்னிங்களே… வெளங்கிடுச்சு” என்றான் லிங்கம்.
“அப்புறம்?”
“அண்ணே இப்போ நான் என்ன சொல்லணுமாட்டிக்கு நெனைக்கிற நீயி?” சற்று கடுப்பாகவே கேட்டான் லிங்கம்.
“நீதான் சொல்லணும் லிங்கம்!” வீரன் சொல்லிட மீனாள் அருகில் வந்தாள்.
வீரனிடம் பார்வையைக் கூட திருப்பாது,
லிங்கத்தின் முன் சென்று மண்டியிட்டவள் அவனின் கையை பிடித்துக்கொண்டு…
“என்ன வெசனம் லிங்கு மாமா உனக்கு? அவள் சின்னப்புள்ள. எடுத்து சொன்னாக்கா புரிஞ்சிப்பா(ள்). நீயி இப்படி சோர்ந்து உடக்காரத. என்னமோ மாறி இருக்கு” என்றாள்.
“சரி… அப்போ ரெண்டேறும் அவகிட்ட பேசாம, என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கீய்ங்க. இது தப்புன்னு எடுத்து சொல்லும். பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?”
லிங்கம் அங்கையை மட்டுமே மனதில் வைத்து அப்படி பேச, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மீனாள்.
மீனாளின் பார்வையில் அவளின் மனப்போக்கை கண்டுகொண்டவன், நெற்றியில் தட்டி தன்னையே நிந்தித்தவனாக,
“அச்சோ மீனாக்குட்டி… நானு உன்னைய” எனும் போதே…
“புரியுது மாமா. தப்பா நினைக்கல” என்றிருந்தாள்.
இவர்களின் இந்தப்பேச்சில் வீரனுக்கு ஒன்று தெரிந்தது.
மீனாளும் தன்னை பள்ளி வயதிலிருந்தே விரும்புகிறாள் என்று. எந்த வயதிலிருந்தென்று தான் தெரியவில்லை.
“நீயி பேசுண்ணே. உம் பேச்சுக்குத்தான் மதிப்பு கொடுப்பாள்” என்று லிங்கம் சொல்லி முடிக்க…
“யார் சொன்னாய்ங்கன்னாலும் இதில் கேட்டுக்க மாட்டேன்” என்று திடமாக மொழிந்தாள் அங்கை.
அப்போதுதான் மூவரும் அவளை கவனித்தனர். எப்போது வந்தாளென்று தெரியவில்லை.
“அப்படியே செவுலிலே ஒன்னு வச்சேன்னு வைய்யி… சவ்வு கிழிஞ்சிடும்” என்று உட்கார்ந்திருந்த லிங்கம் எகிறிக்கொண்டு கை ஓங்கிட, வீரன் அவனை பிடித்து தடுத்திருந்தான்.
“உன் வயசென்ன என் வயசென்ன? பல்லை பேத்து கையில கொடுத்துப்புடுவேன்” என்று வீரனின் பிடியில் திமிறினான் லிங்கம்.
“எல்லாம் நல்ல வயசுதான். கட்டிக்கலாம் தப்பில்லை.”
ஒன்றும் புரியாது பேசுபவளை பார்த்து லிங்கம் பல்லைக் கடிக்க,
“அங்கை” என்று மீனாள் அதட்டியிருந்தாள்.
“என்னை ஏன்’க்கா அதட்டுத? மதினியும், அண்ணேவும் லவ் பண்ணலையா?” எனக் கேட்ட அங்கையின் பார்வை வீரனை மட்டும் தவிர்த்தது.
“அச்சோ அங்கை புரியாம உளறாதட்டி” என்ற மீனாள், “அவெய்ங்களுக்கு சரியான வயசெட்டி. அதுவும் வூட்டுல ஒத்துக்கிட்டாய்ங்க. உனக்கும் மாமாக்கும் பதினோரு வருசம் வித்தியாசம் வருது” என்று விளக்கமாகக் கூறினாள்.
மீனாள் இதை சொல்லியதும், ‘என் காதலுக்கும் இவள் இதையெல்லாம் பார்ப்பாளோ?’ என உடனடியாக தனக்கும் மீனாளுக்குமான வயது இடைவெளியை கணக்கிட்டு நிம்மதி கொண்டான் வீரன்.
“அப்பாக்கும், அம்மாவுக்குமே பன்னெண்டு வருசம் வித்தியாசம். அவெய்ங்க சந்தோசமா வாழலையா? கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த மனசு போதும் வயசுலாம் வேணாமாட்டிக்கு” என்ற அங்கையின் பேச்சில் அதீத சினம் கொண்ட லிங்கம்…
“யார் சொல்றதையும் கேட்கமாட்டிய நீயி. தியேட்டர்ல நீயி பண்ண வேலைக்கு அங்கனவே உன்னைய வகுந்திருக்கணும். சின்ன புள்ள மாதிரியா பேசுற நீயி?” என்று கத்தினான்.
“இன்னும் ரெண்டு மாசத்துல பரீட்சை முடிஞ்சிட்டாக்கா… அடுத்த ரெண்டு மாசத்துல காலேஜூக்கு போயிப்புடுவேன். நான் ஒன்னும் சின்னப்புள்ளை இல்லை” என்ற அங்கை, “புரிஞ்சிக்கோயேன் மாமா. நெஞ்சுக்குள்ள உட்கார்ந்திட்டு அவஸ்தையை கூட்டுற. வீரா மாமாகிட்ட உரிமையா பேசும்போது விளையாடும் போதெல்லாம், உன்கிட்ட இப்படி இருக்க முடியலையேன்னு மனசு வெம்புது. அக்காவை உனக்கு ரொம்ப புடிக்கும் தெரியும். அவன்னா உனக்கு நாச்சியா மதனியைவிட கொள்ளப் பிரியம். அது என்மேல ஏன் இல்லைன்னு அக்கா மேலயே கோவம் கோவமா வருது. எனக்கு அக்காவ பார்த்தா பொறாமையா இருக்கு மாமா. உம்மேல உசுரே வச்சிருக்கேன். எப்புடி புரிய வைக்கணுமாட்டி தெரியல மாமா. நீயே புரிஞ்சிக்கோயேன்” என்றவள் அவன் முன் மண்டியிட்டு முகம் மூடி விசும்பினாள்.
லிங்கம் மட்டுமல்ல மீனாள், வீரனுக்கு கூட அங்கையின் தீவிரம் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
சிறுபெண் விளையாட்டாக செய்கிறாள். எடுத்து சொன்னால் சரியாகிவிடுவாளென்று வீரன் நினைத்திருக்க… அவள் தான் அப்படியில்லையென்று உணர்த்தியிருந்தாள்.
“என்னண்ணே பார்த்துகிட்டு நிக்குத?”
லிங்கத்திற்கு அவளின் அழுகை என்னவோ செய்தது.
“மீனு” என்று பரிதவித்த லிங்கம்,
“அச்சோ சின்னகுட்டி அழுவாத. என்னவோமாட்டிக்கு இருக்கு. நீதான் புரிஞ்சிக்கணும். உனக்கு இன்னும் வயசு இருக்குதுடா. இப்போ இந்த வயசுல படிப்புத்தேன் முக்கியம். மொத நால்லா படி. நீயி பாக்க வேண்டியது, தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்குது. இன்னும் வருசம் செண்டா உன் மனசு மாறலாம். அப்போ என்னையவிட வேற உனக்கு முக்கியமா தோணலாம். அப்போ பேசிக்கலாம். இந்த வயசுல இதெல்லாம் சும்மா ஈர்ப்புடா.” அதுவரை கத்திக்கொண்டு குதித்தவன் அவளின் அழுகையில் தன்னைப்போல் அமைதியாகியிருந்தான்.
அங்கையின் முகம் துடைத்து அழக்கூடாது என்ற லிங்கம்,
“மொத படி. பெரிய படிப்பெல்லாம் படி. பொறவு உனக்கே இது தப்புன்னு புரியும்” என்றான்.
“அதான் நீயே அம்புட்டும் சொல்லிபுட்டியே! நான் வேறென்னத்த சொல்ல” என்ற வீரன், மீனாளுக்கு லிங்கத்தை பார்க்குமாறு கண்காட்டிவிட்டு, அங்கையை தன்னுடன் அழைத்துக்கொண்டு தள்ளிச் சென்றான்.
வீரன் அங்கையிடம் என்னவோ பேசுவதும், அதற்கு கண்களை துடைத்துக்கொண்டு, பளிச்சென்று அங்கை சிரிப்பதும் இருவருக்கும் தெரிந்தது. ஆனால் என்ன பேசினான், இவள் எதுக்கு சரியென்று தலையை ஆட்டுகிறாள் என்று ஒன்றும் கேட்கவில்லை.
லிங்கம் அழுத்தமாக பார்த்தபடி நின்றான். அவனுக்கு அங்கை அழுகையோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தை குடைவது போலிருந்தது.
தங்கையின் கண்ணீர், அவளின் காதலின் ஆழத்தை மீனாளுக்கு காட்டியது. காதலில் நித்தம் வலி சுமந்து கொண்டிருப்பவளுக்கு, காதலின் ஆழம் தெரியாதா என்ன?
என்ன நடந்தாலும் அங்கை எப்போதும் இதில் பின்வாங்கிட மாட்டாளென்பது உறுதியாக மீனாளுக்கு தெரிந்திட, காதலில் தான் கொள்ளும் வலி தன்னுடைய தங்கைக்கும் வேண்டாமென நினைத்து லிங்கத்திடம் அவ்வாறு கேட்டாள்.
அங்கை காதலை உணர்த்த அழுகையோடு மன்றாடிய நொடி வேண்டாமென மறுத்தவனின் மனம், அவளின் இப்பேச்சில் ஆட்டம் கண்டது.
அதனை லிங்கம் உணரவில்லை. உணர்ந்துகொள்ள வலி சுமக்க வேண்டுமோ. காதலை வலி கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டுமென்றிருந்தால் லிங்கம் மட்டும் விதிவிலக்காக அமைந்திடுவானா என்ன?
இப்போதைக்கு அங்கை தன் முடிவை மாற்றிக்கொண்டதே போதுமென நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“தேன்க்ஸ்’ண்ணே!” என்ற லிங்கம், வீரனை அணைத்து விடுவிக்க, பார்வையில் பொறாமையை காட்டாது இயல்பாக பார்த்து நின்றாள் அங்கை.
கவனித்த லிங்கத்திற்கு ஆசுவாசமாக இருந்த அதே கணம், தொண்டை அடைப்பது போலவும் இருந்தது.
“சரி வூட்டுக்கு போங்க” என்று இரு பெண்களையும் வீரன் அனுப்பி வைத்திட,
“என்னண்ணே பேசுன?” என லிங்கம் வீரனிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் மீனாளும் அங்கையிடம் கேட்டிருந்தாள்.
“அப்படி அழுதுட்டு எப்புடி வேண்டாமின்னு சொன்ன? மாமா என்ன பேசுச்சு உன்கிட்ட?”
“நான் வேண்டாமின்னு சொல்லலையேக்கா! லிங்கு மாமா எனக்குத்தான்” என்று மீனாளை அதிர்வுக்குள்ளாக்கிய அங்கை, “என்ன பேசுனாங்க… அதை நீயி வீரா மாமாகிட்டத்தான் கேக்கணும்” என்று சொல்லித் துள்ளிக் குதித்து ஓடினாள்.