“என்னடே… என்ன வெசனம். அதான் சரியாப்போச்சுதே! சின்னகுட்டி தான் புரிஞ்சிக்கிட்டாளே!” என்று மொட்டை மாடி இருளில் நின்றுகொண்டிருந்த லிங்கத்தின் தோளில் கை போட்டவனாக வீரன் கேட்க, அவனின் தோளில் தலை சாய்த்தான் லிங்கம்.
“என்னடே?” என்ற வீரன் தம்பியை தட்டியவனாக தோளோடு இறுக்கமாக சேர்த்து அணைத்தான்.
“சின்னகுட்டி மனசு தடம் புரலுற அளவுக்கு நான் நடந்துகிட்டேனாண்ணே? உங்க எல்லாருகிட்டையும் இருக்க மாதிரித்தேன் அவகிட்டவும் பழகுனேன். எந்தயிடத்தில் தவறிப்போனேன் தெரியலையே. சின்னப்புள்ள மனசை கலைச்சிட்டனேன்னு எம்மேலவே கோவம் கோவமா வருதுண்ணே” என்ற லிங்கத்திடம் அத்தனை வருத்தம்.
“ம்ப்ச்… என்ன லிங்கு இது?” என்ற வீரன், “இந்த வயசுல இதுலாம் சகஜம்தானே! இதையும் கடந்து வரணுமில்லையா. எல்லாம் அனுபவம் தானே! இந்த அனுபவம் சின்னகுட்டியை பல ஈர்ப்பிலிருந்து தள்ளிவைக்குமில்லையா? அவ(ள்) சாதரணமாயிட்டா.. நீயும் இதை மறந்துட்டு உம் வேலையை பாரு” என்றான்.
“எங்கண்ணே!” என்றவன், “அவள் அழுது கெஞ்சுன காட்சி தான் படமாட்டிக்கு கண்ணு முன்னுக்கு வந்து நிக்குது” என்றான்.
“இப்போ சின்னகுட்டிதேன் உனக்கு வூட்டுல பாக்குற பொண்ணா இருந்தாக்கா என்ன செய்வ நீயி. அப்பத்தா, ஐயா, மாமான்னு எல்லாரும் ஆசைப்படுதாக… வேணான்னுடுவியோ?” எனக் கேட்டான்.
“அப்புடி ஒன்னு நடந்தாக்கா ரோசிக்கலாம்ண்ணே” என்ற லிங்கம், “அவ இன்னும் என் கண்ணுக்கு பச்ச புள்ளையாத்தான் தெரியுறாண்ணே” என்றான்.
“எனக்கும் அப்படித்தான் தெரிஞ்சாள் உம் மீனாகுட்டி. எப்போ வளந்தா(ள்) உள்ள புகுந்தான்னு ஒண்ணும் தெரியல. ஆட்டி வைக்குறா! கிட்டக்க நெருங்கவும் முடியல, எட்ட நிக்கவும் முடியல” என்ற வீரன் “அவசரத்துல முடிவெடுத்து பொறவு வெசனப்பட்டு நிக்காத” என்றான்.
“அப்போ எனக்கும் ஒருநா இது நடக்கும் சொல்லுதியாண்ணே?”
“எல்லாருக்கும் ஒரே மனசுன்னு சொல்லலடே! அப்படியொரு சூழல் வந்தாக்க என்ன செய்யணுமாட்டின்னு ரோசிச்சுக்க. எல்லா நாளும் ஒன்னு போல இருக்காது” என்றான் பூடகமாக.
“சொல்லுறதே வெளங்கமாட்டேங்குது” என்ற லிங்கம், “அவகிட்ட என்னண்ணே பேசுனீங்க?” எனக் கேட்டான் மீண்டும்.
“நீயி சொல்லுறமாறி இன்னும் பெரிய வயசு வந்ததும் உன்னையவே கட்டிக்கொடுக்குதேன்னு சொன்னேன்” என்று வீரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல லிங்கம் அவனை வெட்டவா குத்தவா என்று கடுப்புடன் நோக்கினான்.
“என்னைய அவகிட்ட வாழ்க்கை முழுசும் மாட்டிவிடலாம் பாக்குதியாண்ணே?” என்றான்.
“அதெல்லம் என் சின்னகுட்டி உன்னைய கண்ணு கலங்காம பார்த்துகிடுவாடே” என்ற வீரன் சத்தமிட்டு சிரித்தான். லிங்கத்தின் முகம் போன போக்கில்.
“அண்ணே!” என்று வீரனின் கழுத்தை லிங்கம் நெறித்து ஆட்டிட…
“அடேய்… என் தங்கப்பொண்ணுக் கூட நானு நூறு வருசம் வாழனும்டே” என்று பொய்யாக அளறினான் வீரன்.
லிங்கம் வீரனின் செய்கையால் மனம் விட்டு சிரிக்க… வீரனுக்கு உள்ளம் ஆசுவாசம் கொண்டது.
“இப்படியே இருடே. எதுவாயிருந்தாலும் போற போக்குல பார்த்துக்கிடலாம்” என்ற வீரன், “நாளைக்கு கொள்ள சோலி கெடக்கு. தூங்குவோம்” என லிங்கத்தை இழுத்துக்கொண்டு சென்று அவனது அறையில் விட்டு அவன் படுத்ததும் விளக்கினை அமர்த்திவிட்ட பின்னர் தான் தனதறைக்கு வந்தான்.
கட்டிலில் விழுந்த வீரனுக்கு மனம் முழுக்க அவனது தங்கப்பொண்ணுவின் நினைவு தான். அவளின் நினைவின்றி அவனில் அணுவும் அசைந்திடாதே!
மாடியிலிருக்கும் தன்னுடைய அறை சன்னலின் அருகே எழுந்து சென்று நின்றவனின் பார்வை தூரத்தில் ஒளிரும் விளக்கு வெளிச்சத்தில் நிலைத்தது.
மீனாளின் அறையில் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. வீடு மற்றும் சுற்றுப்புறம் யாவும் கருமையில் மூழ்கியிருக்க… விளக்கு ஒளிரும் பகுதி தன்னவளின் அறையென்று அறியாதவனா அவன். தினமும் இங்கிருந்து அவளின் நடவடிக்கைகளை அவதானிப்பவனுக்கு, இருளிலும் அவளது நடமாட்டம் தெரிந்தது.
மீனாள் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.
“சரியான படிப்ஸ். ஸ்டடி மண்டை. உனக்கு புஸ்தகப் பாடத்தோட சேர்த்து காதல் பாடமும் கத்துக்கொடுக்கணும். ரொம்ப தவிக்கவிடுற நீயி!” என்று மீனாள் பக்கத்தில் இருப்பதைப்போல் பேசிக்கொண்டிருந்தான்.
“எப்போ என் பக்கட்டு… இங்கன இந்த அறைக்குள்ள இருப்ப? உன் கை புடிச்சிட்டு தூங்கணும். உன்னையும் தான்” என்று ஏதேதோ பிதற்றியவன், மீனாளின் அறையில் விளக்கு அணைந்ததும் உறக்கத்திற்கு சென்றான்.
அடுத்தநாள் காலை மிகுந்த பரபரப்புடன் தொடங்கியது.
அனைத்து கால்நடைகளையும் கிணற்றுக்கு அருகிலிருக்கும் களத்து மேட்டிற்கு வீரன் ஓட்டிச்செல்ல, நாச்சியும், சுபாவும் உடன் சென்றனர்.
“லிங்கு எங்க?”
“சின்னண்ணே மாலை கட்ட வேண்டியதை கொண்டார போயிருக்கு” என்ற நாச்சி தோப்பினை கடந்ததும்…
“மீனு” என்று குரல் கொடுக்க, அவர்களிடம் அவளும் வந்து சேர்ந்தாள்.
“அங்கை வரலையா?” சுபா கேட்க,
“அவ இந்நேரத்துக்கு எங்கன எழுவா(ள்). உச்சி மண்டையல சூரியன் சுள்ளுன்னு கொட்டுனாத்தேன் எழுவா” என்ற மீனாள், “எங்க கரியனை காணோம்?” எனக் கேட்டாள்.
மீனாளுக்கு கரியன் என்றால் அதீத பிடித்தம். அந்த பிடித்தம் வீரனுக்கு கரியன் இன்னொரு தம்பி போலென்பதால் வந்தது. ஆனால் அதன் அருகில் மட்டும் சென்றிடமாட்டாள். அதனின் உயர்ந்த பருத்த திமிளும் கூறிய கொம்புகளுமே அவனின் தோற்றத்தை அச்சப்படுத்திக் காட்டும். அங்கையையே சாதாரணமாக தொட்டு தடவி விளையாட மீனாளுக்கு கரியன் மீது பிடித்தமிருந்த அளவுக்கு பயமும் உள்ளது.
“இந்தவாட்டியாவது அவன் பக்கட்டு போவியா?” சுபா சிரிப்போடு வினவினாள்.
“மாமா இருக்காகல… அவனை இன்னைக்கு நான் குளிக்க வச்சுக் காட்டுறேன்” என்று சவலாகக் கூறி வீரனை பார்த்தாள் மீனாள்.
“மாமா இருந்தாக்கா மட்டும் என்ன பண்ணிப்புடிவ? கரியன் கண்ணை உருட்டினாலே அளமலந்து போவ நீயி” என்று நாச்சியும் சுபாவுடன் சேர்ந்து மீனாளை பகடி செய்தாள்.
“இங்கிருக்கிறதுலே கரியனத்தேன் பிடிக்குமாட்டிக்கு. ஆனாலும் அவென் பக்கட்டு போக இந்தப்பயம் பயப்படுறவ” என்ற நாச்சி, “நீயி கண்ணுக்குட்டிவளை கழுவு” என்றாள். அதில் சுபா சத்தமிட்டு சிரித்திட மீனாளின் முகமே சுருங்கிப்போச்சு.
கிணற்று மோட்டாரை ஆன் செய்து தொட்டி நிரம்பச் செய்த வீரன்,
ஆளுக்கொரு ஓசினை கையில் கொடுத்தான்.
கால்நடைகளின் உடம்பில் தேய்க்கும் சோப்பு பவுடரை பாத்திரத்தில் கொட்டியவன்,
“அம்சாவை மொத கழுவி விடு நாச்சியா, தங்கம் கரியனை கழுவும்” என்றான்.
விலுக்கென சிறு அதிர்வோடு மீனாள் வீரனை பார்க்க, அவன் தானிருப்பதாக கண் மூடி திறந்தான்.
“நாச்சியா கழுவிவிட, நீயி தண்ணியை அடி சுபா” என்று இருவரையும் ஒரு சேர விட்ட வீரன், கரியனின் காதில் என்னவோ சொல்லிவிட்டு மற்ற மாடுகளின் பக்கம் நகர்ந்தான்.
தயங்கிய மீனாள் அப்படியே நிற்க,
“கழுவு தங்கம்” என்றான் வீரன்.
“நான்… நானா?”
“ஆமாம். நீயி தான். அவனை புடிக்கும் தானே! பொறவு என்ன? பயந்து நின்னா ஆவும்மா. கிட்டக்க நெருங்கினாத்தேன் பயம் போவுமாட்டி” என்றான்.
உள்ளர்த்தம் வைத்துக் கூறினானோ?
“இல்லை… வேணாம். பயமா இருக்கு.”
“நீயி எட்டக்க நவுர்ற வரைக்கும் அவென் அசையவே மாட்டியான்” என்ற வீரன் அழுத்தமாக அவளை பார்க்க, மெல்ல மெல்ல கரியனை நெருங்கினாள்.
மீனாள் அருகில் சென்று அவனின் முதுகில் மெல்ல கை வைக்க, அப்பவும் கல்லென அசையாது நின்றான். அவன் தலையை கூட ஆட்டாது நிற்க. மெதுவாக அவனை வருடிக் கொடுத்தாள்.
அவளின் வருடலில் சுகம் கண்ட கரியன், “ம்மா” என்று விளித்து தன் பாசத்தை உணர்த்திட முயன்றான்.
அதில் மீனாள் சிலிர்ப்பை உணர்ந்து, மெதுவாக அவனை சுத்தப்படுத்திட, கரியன் அவளுக்கு வாகாய் எல்லா பக்கமும் வளைந்து கொடுத்தான்.
“திமில் ஆட்டவே இல்லை மாமா. குழந்தையாட்டம் நிக்கிறான்.” மீனாள் உற்சாகமாக வீரனிடம் பகிர்ந்திட, அவனின் அகம் இன்பம் கொண்டது.
“மதினி இங்காருங்க… நான் கொம்பை புடிக்கிறேன். சுபாக்கா நீங்களும் பாருங்க” என்று சிறுமியாகத் துள்ளிக் குதித்தவளின் மகிழ்வில் அவர்களும் பங்கு கொண்டனர்.
அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து கால்நடைகளையும் சுத்தம் செய்து, ஈரம் காய்வதற்குள் உடம்பில் வண்ணப்பொடிகள் பூசிட, வீரன் ஒவ்வொன்றின் கொம்பிலும் பெயிண்ட் அடித்தான்.
கரியனின் முறை வரும்போது வீரன் மீனாளை ஏறிட, தானாகவே அவள் முன் வந்தாள்.
அங்கு வேறு வேலை எதுவும் இல்லாததால், தன்னவளை ரசித்தபடி நின்றுவிட்டான்.
தாவணி அணிந்திருந்தவள், வேலைக்கு ஏதுவாக முந்தி முனையோடு பாவாடையை ஒரு பக்கமாக கணுக்கால் தெரிய இடுப்பில் ஏற்றி சொருகியிருந்தாள். மும்முரமாக கரியனின் மற்றொரு கொம்பிற்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தாள்.
அக்காட்சி அவனுள் ரசிப்பை உண்டாக்க, தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பதிந்துகொண்டான்.
வெற்று பாதம் அவனை சுண்டி இழுத்தது.
‘மொத கொலுசு வாங்கித்தரணும்’ என நினைத்துக்கொண்டான்.
புகைப்படம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்தவன், வேகமாக தன்னவளை நிமிர்ந்து நோக்கினான்.
கெண்டை காலும், மெல்லிய இடையும் பளிங்காய் தெரிய, வீரனின் மனம் தறிகெட்டு ஓடியது.
“ஆங்… முடிஞ்சுது மாமா” என்றவள் அவனருகில் வர, வேகமாக திரும்பி தலையை கோதியவனாக மனதை சமன் செய்து அவளை ஏறிட்டான்.
“தங்கப்பொண்ணு…” வீரனின் குரல் மாறுபாட்டை கவனியாது, பொருள்களை எடுத்து வைத்தபடி இருந்த மீனாள்,
“ராவுக்கு சாமி கும்புடும் போது நான்தான் கரியனுக்கு சோறு வூட்டுவேன். அவன் முட்டுவான் நினைச்சேன். ஆனால் ஒண்ணுமே பண்ணல” என்று அவள் போக்கில் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஃபோட்டோ எடுத்தல மாமா. அதை எனக்கு அனுப்பிவுடு. ஜல்லிக்கட்டுல கரியன் ஃபேமசுல. என் பிரண்ட்ஸ்ங்ககிட்ட காட்டணும். போன பொங்கலுக்கு அலங்காநல்லூரில் ஜெயிச்சது நம்ம கரியன்னு சொன்னதுக்கு ஒருத்தியும் நம்பல” என்றாள்.