“ஏய் மென்டல்.. அறிவிருக்கா உனக்கு?..” சட்டையில் இருந்த ஜூஸை தட்டிவிட்டுக் கொண்டே எழுந்த எழில் வேகமாக கை கழுவுமிடம் செல்ல அவன் பின்னே ஓடினாள் மலர்விழி.
எழில் தண்ணீரை கொண்டு அவன் சட்டையிலிருந்த கரையை சுத்தம் செய்து கொண்டிருக்க மெல்ல அவன் அருகே சென்று, “சாரி சீனியர்.. நான் வேணும்னு பண்ணல.. தெரியாம கால் சிலிப் ஆயிருச்சு..” தன்னை விளக்க முயன்றவள் அவன் முறைத்த முறைப்பில் கப் சிப்பென வாயை மூடி கொண்டாள்.
எத்தனை துடைத்தும் கறை போகாததில் எரிச்சலானவன் அவளை திட்ட வாய் திறக்க அதற்குள் தமிழும் அரவிந்த்தும் வந்துவிட்டனர்.
“ஏன் டா கறை போகலையா?” தமிழ் அவன் சட்டையை ஆராய மலரை முறைத்தவன், “போக மாடிங்குது” என்றான் எரிச்சாலாக.
“சரி விடு டா டிடர்ஜென்ட் போட்டு துவச்சா போயிரும்” என்று சமாதானம் செய்த அரவிந்த் அவன் விடுதியில் இருக்கும் நண்பனிடமிருந்து வேறு சட்டை வாங்கிக்கொடுக்க அதை வாங்கிக்கொண்ட எழில் மலரை ஓர் பார்வை பார்த்துவிட்டு சட்டை மாற்ற சென்றுவிட்டான்.
எழிலிடமிருந்து இதுபோன்ற எதிர்வினையை மலர் சற்றும் எதிர்பார்க்கவில்லை கத்துவான் சண்டையிடுவான் என எண்ணியவளுக்கு அவன் மௌனம் வியப்பாய் இருக்க அவன் விழி மொழியை உணர்ந்தவளுக்கு ஏதோ வில்லங்கம் வருப்போவது மட்டும் தெளிவாய் விளங்கியது.
அவள் கணித்தத்து போலவே அவள் முன் சட்டையை மாற்றிவிட்டு வந்து நின்றது வில்லங்கம்.
திடீரென முன் வந்து நின்றவனை கண்டு மலர் விழிக்க அவள் கையில் கறையான சட்டை திணித்தவன், “ஒழுங்கா கறை போற அளவுக்கு நல்லா துவச்சு நாளைக்கு அயன் பண்ணி கொண்டு வர” என கூற பொங்கிவிட்டாள் மலர். “நான் எதுக்கு துவைக்கணும்?” அவனிடம் எகிறியவள், “என்னால முடியாது” என மீண்டும் அவன் கைகளிலே குடுக்க
“நீ தானே ஜூஸ கொட்டுன.. தப்பு செஞ்சவங்க தான் அதை திருத்தணும்.. சோ நீ தான் துவைக்கணும்”.
இத்தனை நேரம் மனதில் வருந்தியவளுக்கு அவன் பேச்சில் எரிச்சல் மீக, “சீனியர் இது தெரியாம நடந்த ஒரு ஆக்சிடென்ட். நான் இன்டென்ஷனலா ஒன்னும் பண்ணல. அதான் சாரி சொல்லீட்டனே அப்புறமும் துவைச்சு குடுனா என்ன அர்த்தம்?” என கேட்க
“ஹான்.. நீ தான் துவைக்கணும்னு அர்த்தம்.. சாரி கேட்ட மட்டும் கறை காணாம போய்ருமா? அது ஆக்சிடன்ட்டோ இன்டென்ஷனலா பண்ணியோ எனக்கு தெரியாது நீதான் கொட்டுன சோ நீதான் துவைச்சுக் குடுக்கணும்” என்றவன் பெல் அடிக்கவும் சட்டையை மீண்டும் அவள் கையிலே திணித்து விட்டு தமிழையும் இழுத்துக் கொண்டு வகுப்புக்கு சென்றுவிட மலரும் வேறு வழியின்றி சண்டையை எடுத்துக் கொண்டு வகுப்புக்கு சென்றாள்.
மாலை கல்லூரி முடிந்து தமிழ் வீட்டிற்கு வர, சோஃபாவில் சொகுசாக அமர்ந்து டீபாய் மீது காலை நீட்டி அன்னை செய்த வடையை ருசித்தபடி ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருநத்தாள் முல்லை.
உடன்பிறப்பு நிம்மதியாக அமர்ந்து அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றை ரசித்து உண்பதை எந்த உடன்பிறப்பால் தான் சகித்துக்கொள்ள முடியும்?
அவளருகே சென்றவன் அவள் கையிலிருந்த கடைசி வடையை அப்படியே தன் வாயில் திணித்தான். தமிழின் திடீர் செய்கையில் அதிர்ந்தவள் கடுப்பாகி “டேய் அண்ணா.. அம்மாமா…” என கத்த, மகள் போட்ட கூச்சலில் சமையலறையிருந்து வெளியே வந்த கலைவாணி “ஏய் எதுக்கு டி இப்படி கத்தற..” என அதட்ட
“நீ தான் இவனுக்கு தனியா எடுத்து வச்சிருக்கில அப்பறம் எதுக்கு என்னோடத எடுக்கிறான்..” என தமிழை முறைத்தாள்.
தமிழுக்கு தொடக்கத்தில் ஆசைகள் இருந்தாலும் தங்கையிடம் இயல்பாய் பேச சில தயக்கங்கள் இருந்தது. ஆனால் முல்லைக்கு அதுபோல் ஏதும் இல்லை. அவள் வெகு சகஜமாக உரிமையுடன் பேச அவனும் தன் தயக்கங்கள் விட்டு இயல்பாக பேச ஆரம்பித்துவிட்டான். முதலில் அன்பாக மற்றொருவர் மீது அக்கறையாய் ஓர் இடைவெளியுடன் இருந்தவர்கள் இடையே இப்போதெல்லாம் அடிதடி தான். அந்தளவு அண்ணனும் தங்கையும் அன்னியோனியம் ஆகிவிட்டனர்.
“உன் அண்ணன் தானே ஒன்னு குடுக்க மாட்டியா..?” கலை கேட்க
“மாட்டேன்.. மாட்டவே மாட்டேன்” என்றாள் முல்லை.
“ரெண்டு நாள் முன்ன வர ஏதோ சிவாஜி கணேசன் சாவித்திரி ரேஞ்சுக்கு பில்டப் விட்டீங்க.. இப்போ என்னவாம்?”
“அதெல்லாம் ரெண்டு நாள் முன்னாடி வர தான்.. இனிமேல் இல்ல.. இவன் எல்லாமே எனக்கு குடுத்துட்டா சாப்பிடுறான்.. இவனுக்காக நான் எதுக்கு பாக்கணும்” முல்லை பட்டு பட்டென பேச
“நேத்து ஏதோ இவ வச்சிருந்த சாக்லேட்ட தெரியாம எடுத்து சாப்பிட்டேன்.. அதுக்கு ஒரு அண்ணன்னு கூட மரியாத இல்லாம எப்படி பேசுறா பாரு ம்மா..” பாவமாக அன்னையிடம் கோள் மூட்டிய தமிழ் கலை அவள் புறம் திரும்பியதும் உதட்டை சுழித்து பழிப்பு காட்டினான்.
கடுப்பானவள், “டேய் டேய் நடிக்காத டா.. இவன் வேணும்னு தான் ம்மா எடுத்தான்”.
“ஏய் தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைய வாடா போடானுட்டு.. அவன் வயசென்ன உன் வயசென்ன.. உன்ன விட ஆறு வயசு பெரியவன்.. ஒழுங்கா மரியாதையா பேசு” மகளை அதட்டிய கலை, “நீ ஏன் டா இவளோடத எடுக்கிற?” என மகனையும் கடிந்தார்.
“ஏதோ நம்ம தங்கச்சி தானேனு எடுத்துட்டேன்.. இனிமேல் இவ பொருள்ல கை வச்சா கேளு..” தமிழ் ஆவேசமாக பேச
“இத தான போன வாரமும் சொன்ன.. சொன்னா சொன்ன சொல்ல காப்பாத்தணும்” என அவன் மூக்குடைத்தாள் முல்லை.
“என்ன வர வர ஓவரா பேசுற..” தமிழ் தங்கையிடம் எகிற இவருக்குள்ளும் முட்டிக் கொண்டது. அவர்களின் வாக்குவாதம் வலுக்க, “ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்ல” என தலையில் அடித்துக் கொண்ட கலைவாணி இவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் உள்ளே சென்றுவிட்டார்.
இசை சமையலறையில் தேநீர் தயாரிக்க மெல்ல அவளருகே வந்து நின்றாள் மலர். அவளை கண்டதும் இசை கிண்டலாக சிரிக்க “இப்போ எதுக்கு டி சிரிக்கிற?” என எரிந்து விழுந்தாள்.
அதில் மேலும் சிரித்தவள், “ஏன் டி கை கால்ல வச்சுட்டு சும்மா இருக்க மாட்ட.. எத்தனை தடவ சொன்னேன் அந்த ஹீல்ஸ போடாத போடதனு கேட்டியா.. இப்போ பாரு”
“அதான் கேட்கலையே.. எல்லா என் தலை எழுத்து..” மலர் புலம்ப வாஷிங் மிஷினிலிருந்து சத்தம் வந்தது.
தன் வீட்டில் எழிலின் சட்டையை துவைத்தால் அன்னையிடம் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் இசை வீட்டில் துவைக்கிறாள்.
அவன் துவைத்த சட்டையை மிஷினிலிருந்து எடுத்து பார்த்தவள், “என்ன டி கறையே போல..” என சலித்துக் கொண்டே இசையிடம் காட்ட “மாதுளை கறை அவ்ளோ சீக்கிரம் போகாது” என்றாள்.
“அப்போ இந்த கரைய போக்கவே முடியாத..”
“கொஞ்சம் கஷ்டம் தான்..” என்றதும் மலர் பதட்டமாக “டென்ஷனாகாத டி.. கூகுள் யூட்யூப்னு எதுலயாது பார்த்து துவைக்கலாம்” என சட்டையை வாங்கி ஓராமாக வைத்த இசை “இப்போ டீய குடி” என அவள் கையில் தேனீரை குடுத்தாள்.
“எப்படி டென்ஷனாகமா இருக்க சொல்ற? கறை மட்டும் போகாட்டி நாளைக்கு அவன் என்ன வச்சு செஞ்சிடுவான்..”
“நான் தான் இருக்கேன்ல பார்த்துக்கலாம் விடு..”
இருவரும் தேனீர் பருகியதும் இசை வலைதளங்களில் கறையை போக்க வழிமுறைகள் தேட தலையில் ஓர் துண்டை கட்டிக்கொண்டு முழுமூச்சாக சலவையில் இறங்கிவிட்டாள் மலர்விழி.
தோழியின் கோலத்தை கண்ட இசைக்கு சிரிப்பு. அவள் இப்போது இருக்கும் மனநிலையில் மேலும் கலாய்த்து கடுப்பேற்ற வேண்டாம் என விட்டுவிட்டாள்.
மிஷினில் துவைத்தும் கறை போகததால் கையில் சலவை செய்ய ஆரம்பித்தவள் கறையின் மீது பிரஷை கொண்டு தேய்த்தாள். சட்டையை காணும் போதெல்லாம் எழிலின் முகம் வேறு கண் முன்னே வர எரிச்சலானவள், “இடியட் என்னையா துணி துவைக்க விடுற.. உன்ன என்ன பண்றேன் பாரு” என அழுத்தி தேயத்து அடித்து துவைக்க
“ஏய் எரும.. என்னடி பண்ற கிழிஞ்சுற போகுது” என அவளிடமிருந்து சட்டையை பிடிங்கினாள் இசை.
“கிழியட்டும்.. நல்லா கிழியட்டும்.. அவனுக்கு எவ்ளோ திமிரு?.. என்னையே துவக்க விடுவான்.. இன்னிக்கு இந்த சட்டைக்கு நடக்கிறது தான் நாளைக்கு அவனுக்கு.. குடு டி அத” மீண்டும் அவளிடமிருந்து சட்டையை பிடுங்க முற்பட
“ஐயோ.. சும்மா இரு டி.. புதுசா ஏதாவது பிரச்சனைய பண்ணி வைக்காத” என அவளை அடக்கிய இசை எங்கே கிழித்து விடுவாளோ என்ற பயத்தில் அதன் பின் சட்டையை தொட விடவில்லை. யூட்யூபில் கண்ட ஒர் வழிமுறை படி துவைப்பதற்காத அந்த சட்டையை ஊற வைத்தாள்.
மலர் செம கடுப்பில் இருந்தாள். எழில் மட்டும் கையில் கிடைத்தால் துவைத்து அலசி தொங்க போடும் அளவிற்கு கோவத்திலிருந்தாள்.
“என்னாச்சு?..” அவள் கடுகடுக்கும் முகத்தை கண்டு இசை கேட்க “இன்னும் என்ன ஆகனும்? எவ்ளோ திமிரு அவனுக்கு? தெரியாம நடந்ததுக்கு நம்மள துவைக்க விடுவானா.. இதுக்கு ஒரு முடிவு கட்டாம விட மாட்டேன்” என ஆவேசமாக பேசினாள் மலர்.
“அடியே.. நீ இன்னுமா இதை விடல..”
“எப்படி விட சொல்ற?.. என்னால டலரேட்டே பண்ண முடியல..”
இசைக்கு என்ன சொல்வதென்ன தெரியவில்லை. யாரை குற்றம் சொல்வது? இவள் வேண்டுமென்று கொட்டவில்லை என்றாலும் கை காலை வைத்து கொண்டு அடங்கி இருந்திருக்கலாம். எழில்.. அவனையும் முற்றிலும் பழி சொல்ல முடியாதே.. அரவிந்த் மட்டும் உதவவில்லை என்றால் பாவம் அவனும் என்ன செய்திருப்பான்? மாலை வரை அதே சட்டையிலா இருக்க முடியும்? அவன் கோவமும் நியாயம் தானே.
“சரி விடு சின்ன சின்ன விஷயத்தெல்லாம் பெருசு பண்ணாத” இசை அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைக்க
“எது இது சின்ன விஷயமா?” அப்போதும் அடங்காமல் பேசினாள் மலர்.
“நான் அப்படி சொல்ல வரல..” இசை அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க அவளை காப்பாற்றவே அழைத்தான் அவள் சீனியர்.
தமிழிடமிருந்து அழைப்பு வரவும் தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவன் அழைப்பை ஏற்று ஓரமாக சென்று, “தேங்க்ஸ் சீனியர்..” என்றாள் மெல்லிய குரலில்.
“எதுக்கு?” தமிழ் சிரிப்புடன் கேட்க
“இந்த மலர் மென்டல் கிட்ட இருந்து என்ன காப்பாத்துனதுக்கு.. படுத்துறா சீனியர்” என புலம்பினாள்.
“ஏன்? என்னாச்சு?”
“எழில் அண்ணா மேல செம காண்டுல இருக்கா..”
“ஓஓ.. அந்த ஜூஸ் மேட்டரா..”
“ஆமா சீனியர்.. வந்ததுல இருந்து எழில் அண்ணாவ திட்டீட்டே இருக்கா”
“பின்ன இருக்காதா இசை.. இருந்தாலும் இவன் ஷர்ட் எல்லாம் துவைக்க சொல்லிருக்க கூடாது ரொம்ப பண்றான்.. தெரியாமா நடந்தது தானே”
“எனக்கு யார குத்தம் சொல்றதுனே தெரியல” அவள் சலிப்புடன் பேச “ஹே நீ அவங்க சண்டையெல்லாம் தலைல ஏத்திக்காத” என தேற்றினான் தமிழ்.
இசை ஃபோனில் முணுமுணுவென பேசிக் கொண்டிருப்பதை கவனித்த மலர் யாரென்று கேட்க தமிழ் அழைத்திருப்பதாக கூறினாள்.
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டவன் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டும் படி கூற “சீனியர் அவளே இப்போ தான் வாய மூடியிருக்கா.. நீங்க ஏதாவது பேசி அவள டென்ஷன் பண்ணாதிங்க” என எச்சரித்துவிட்டே ஸ்பீக்கரில் போட்டாள்.
“என்ன மா மலரு.. என் ஃபிரண்டோட சட்டைய துவச்சுட்டியா” தமிழ் மலரிடம் வம்பிழுக்க இவரும் அடங்க மாட்டாரு என மனதில் நொந்து கொண்டாள் இசை.
“சீனியர் நானே செவனேன்னு இருக்கேன்.. தேவையில்லாம உங்க ஃபிரண்ட்ட பத்தி பேசி என் வாய புடுங்காதிங்க.. எவ்ளோ திமிரு அவனுக்கு” மலர் கடுப்பாக பேச
“அவனா.. அவன் உன்ன விட பெரிய பையன் மா”
“பெரிய பையனா பெரிய கொம்பா முளைச்சிருக்கு.. ஓவரா பண்றான்..” என மேலும் எழிலை திட்டித் தீர்த்தவள் “ச்சே அவன் எல்லாம் மனுஷனே இல்ல” என முடிக்க தமிழ் வாயடைத்து போனான்.
“யப்பா என்னா பேச்சு பேசுறா.. இவ இசை மாறி சாஃப்ட் இல்ல.. அவன் சொன்ன மாதிரி ரகர்ட்டு (rugged) ராட்சசி தான்” அகத்தில் அலறியவன், “என் ஃபிரண்ட பத்தி என்கிட்டயே இந்த பேச்சு பேசுற.. நாளைக்கு என்னையும் இப்படி தானே பேசுவ” என்க “அது நீங்க நடத்துக்கிறத பொருத்து சீனியர்” பட்டென பதிலளித்தாள் மலர்.
இதற்கு மேல் இவளிடம் வாயை குடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாதவன் “இசை என்ன அமைதியாவே இருக்க” என அமைதியாய் இருந்த அவளையும் அவர்களின் உரையாடலில் இழுத்துக் கொண்டான்.
பின் மூவரும் கல்லூரி கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.
உரையாடலின் நடுவே இசை ஊற வைத்த துணியை துவைக்க எழவும் தான் செய்ததுக்கு இசை ஏன் கஷ்டபட வேண்டும் என உள்ளம் உறுத்த, “நான் பண்ணதுக்கு நீ ஏன் டி கஷ்டப்படுற நானே பாத்துக்கிறேன்” என்ற மலர் அவள் உதவுவதாக சொன்னதையும் மறுத்துவிட்டு துணி துவைக்க சென்றுவிட்டாள்.