” ரிஷி இன்னைக்கு உங்களுக்கு டைம் இருக்குதுன்னு சொன்னா கொஞ்ச நேரம் என் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமா? ” என்று காலையில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த கணவனிடம் தயக்கமாக சிந்தியா கேட்க, அவளை பாவமாக பார்த்தான் ரிஷி.
எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாத நிலை அல்லவா அவளுடையது?
அவள் வாழ்க்கையை தியாகம் செய்து அல்லவா ஒரு உயிரை காப்பாற்றினாள்.
அந்த நல்ல மனதுக்கு விரைவிலேயே அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து வைக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் வெளியில் சொல்லவில்லை.
” ஓகே சிந்து.. இன்னைக்கு எனக்கு ஷூட்டிங் கிடையாது கேன்சல் ஆயிடுச்சு.. வெளியில ஒரு வேலையா போகலாம்னு இருந்தேன் பட் ஓகே.. “
” வேண்டாங்க உங்களுக்கு வேலை இருந்தா அதை பாருங்க.. “
” பரவாயில்ல சிந்து.. அது ரொம்ப முக்கியம் கிடையாது.. இன்னைக்கு பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைச்சிருக்குன்னு நினைச்சிக்கிறேன்
காவியா என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? “
” அவ இப்பதான் தூங்கி எழுந்தாள்.. உங்க பை.. ” என்று சொல்ல வந்தவள் ரிஷியின் அழுத்தமான பார்வையில் தன் வாயை மூடிக்கொண்டாள்.
” உன்கிட்ட பல தடவை சொல்லி இருக்கேன் சிந்து.. சில விஷயங்கள் ரகசியமாக காக்கப்பட வேண்டும்.. என் மேல எந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருக்கோ அதே அளவு நம்பிக்கையை உன் மேல நான் வச்சிருக்கேன்.. அதேபோல இந்த பிரச்சனை எல்லாம் என்னைக்கு ஒரு முடிவுக்கு வருதோ அன்னைக்கு நீயும் நானும் நடிச்சுக்கிட்டு இருக்க இந்த கல்யாண வேஷமும் ஒரு முடிவுக்கு வந்துடும்.. அதுவரை அவசரப்பட்டு எதையும் சொல்லாத.. ” என்றவன் செய்து கொண்டிருந்த வேலையை தொடர, அமைதியாகி போன சிந்து எதுவும் சொல்ல முடியாமல் வெளியில வந்தாள்.
தன்னுடைய அறைக்கு வந்தவள் அங்கு புன்னகைத்துக் கொண்டிருந்த ரிஷியின் புகைப்படத்தை கையில் எடுத்துக் கொண்டவள் அதை வேதனையுடன் பார்த்தாள்.
” உங்களுக்கு ஏன் என்னோட அன்பு புரிய மாட்டேங்குது? ஆரம்பத்துல எனக்கு வேற வழி தெரியாம தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா உங்களோட நல்ல மனசு புரிஞ்சதுக்கப்புறம் எப்படி என்னால உங்களை விட்டுட்டு போக முடியும்.. உங்க மேல அளவு கடந்த அன்பு வச்சிருக்கேன் நான்.. ஆனா உண்மையான அன்பு எப்பவும் அடுத்தவங்களை காயப்படுத்தக் கூடாதுன்னு நீங்க பல தடவை சொல்வீங்கல்ல.. அதை நானும் ஒத்துக்கிறேன் என்னோட அன்பு எப்பவுமே உங்களை கட்டுப்படுத்தாது.. ” என்று சொல்லிக் கொண்டவளுக்கு மனம் முழுவதும் துக்கம் விரவியது.
அவன் கைகளால் தாலி கட்டிக் கொண்டு மனைவி என்ற அந்தஸ்து கிடைத்த போதும் அதை கொண்டாட முடியாமலும் அனுபவிக்க முடியாமலும் அவள் படும் அவஸ்தையை
சொல்லி மாள இயலாது.
ஒரு பெண்ணுக்கோ தான் ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்கு கிடைக்கவில்லையே என்கிற வருத்தம்..
இன்னொரு பெண்ணுக்கோ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்தும் அது வாழ முடியவில்லை என்கிற வருத்தம்.
வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது.
யாருக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்காமல் காயப்படுத்தி அல்லவா பார்க்கிறது?
ரிஷி ஒர்க் அவுட் செய்து முடித்துவிட்டு வெளியில் வர, அங்கு அவனுடைய மருமகன் சுரேந்தர் தன்னுடைய டெடி பியர் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, புன்னகையுடன் பார்த்தபடி அவன் பக்கத்தில் வந்தமர்ந்த ரிஷி மருமகனை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான்.
மாமன் மடியில் அமர்ந்ததும் அத்தனை நேரம் அமைதியாக இருந்த அந்த சிறுவாண்டு அத்தனை நேரம் அமைதியாக இருந்தது அவன் தானா? என்று என்னும் அளவிற்கு மாமனிடம் திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் பேசுவது ரிஷிக்கு புரிந்தாலும் புரியாமல் போனாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அனைத்திற்கும் சிரித்தபடியே அவனுக்கு சரிக்கு சமமாக பதில் பேசியபடி இருந்தான்.
தன் அண்ணனும் மகனும் ஒருவருக்கொருவர் வாயடிப்பதை கண்டக் கண்ட காவியா அடுப்படியிலிருந்து இருவரின் முன்பாக வந்து இடுப்பில் இரு கைகளை வைத்து முறைக்க, மாமனும் மருமகனும் அவளை கண்டுகொள்ளாமல் முன்பு போலவே தங்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டிருக்க அதை கண்டு காவியா கோபமானாள்.
” அண்ணா.. ” என்று செல்லமாக சிணுங்கியவளை ரிஷி ஒரு குறுநகையுடன் நிமிர்ந்து அவளை பார்க்கவும் அண்ணன் பக்கத்தில் அமர்ந்து தோளில் சலுகையாக சாய்ந்து கொண்ட காவியா மகனைப் பார்த்து பழித்தாள்.
” மாமா நோ.. அம்மாவை தள்ளி உட்கார சொல்லு.. மாமா கிட்ட நான் மட்டும் தான் உட்காருவேன்.. “
” நீ போய் தள்ளி உட்காருடா.. எங்க அண்ணன் பக்கத்துல என்னை உட்கார கூடாதுன்னு சொல்ல நீ யாரு? ” என்றவள் இன்னும் சலுகையாக ரிஷியின் தோள்களில் சாய்ந்து கொள்ள, அவனுக்கோ நியாயமாக அவர்களது இந்த செயலில் சிரிப்பு தான் வந்திருக்க வேண்டும். ஆனால் சிரிப்புக்கு பதில் பயம்தான் வந்தது.
இன்னும் சற்று நேரத்தில் இந்த விளையாட்டு வினையாக போவதை முன்கூட்டியே அறிந்தவனாக!
” மாமா அம்மாவை போக சொல்லு நான் மட்டும் தான் விளையாடுவேன் அம்மாவை போக சொல்லு மாமா.. ” என்று மழலை குரலில் சுரேந்தர் அடம்பிடிக்க, காவியா அவள் பங்குக்கு அவளும் சிறு குழந்தை போல் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
ரிஷி காவியாவின் முகத்தை பார்க்க, குழந்தை தனக்கு விட்டுக் கொடுக்காமல் தன்னோடு சண்டை போடுவதை கண்டு அவள் முகம் இருக்க இருக்க வெளிற ஆரம்பித்தது.
அவளது முகம் வெளிற ஆரம்பித்ததைக் கண்ட ரிஷி மிகவும் பயந்து போனான்.
கையிலிருந்த குழந்தையிடமும் விஷயத்தை இன்னதென்று சொன்னால் அது புரிந்து கொள்ளுமா என்ன?
இல்லை புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் தான் இருக்கிறதா?
எப்படி இந்த சூழ்நிலையை சமாளிக்க போகிறோம் என்று அவன் பயந்து கொண்டிருக்க அதற்கு அவசியமே இல்லை என்பது போல் சிந்தியா அங்கு வந்தாள்.
இவர்கள் இருவரும் சண்டையிடும் சத்தம் அவள் அறை வரை நன்றாக கேட்க, அடுத்து அங்கு என்ன பிரச்சனை ஆரம்பிக்கப் போகிறது என்பதை உணர்ந்தவளாக தன் நிலை விட்டு விட்டு வேகமாக வெளியில் வந்தாள்.
அவள் நினைத்தது போலவே காவியா முகம் வெளிறி போனதைக் கண்டு மிகவும் பயம் கொண்டவள் அவளை சமாதானப்படுத்த முடியாது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ரிஷியின் கைகளில் இருந்த சுரேந்தரை பிடுங்காத குறையாக தூக்கிக் கொண்டாள்.
அவளின் அந்த திடீர் செயலில் குழந்தை ஒன்றும் தெரியாமல் விழித்து பின் உதட்டை பிதுக்கி அழுகைக்கு தயாராக, அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தியா குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.
வெளியே வந்தவள் குழந்தையின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு வேடிக்கை காட்ட ஆரம்பிக்க, அவளிடம் பழகியதால் என்னவோ குழந்தையும் பழையதை மறந்து அவளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது.
குழந்தை அங்கிருந்து சென்ற பிறகே காவியா அண்ணனை நிமிர்ந்து புன்னகையுடன் பார்த்தவள் ஒரு நிமிடம் மலங்க மலங்க விளித்தாள்.
அவளது அந்த பார்வையை கண்ட ரிஷி
மனது மிகவும் வேதனை கொண்டது.
” நான் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்? ஆமா நீங்க யாரு? ” என்று அண்ணனை பார்த்து கேட்க, எப்போதும் போல் அவள் கட்டிய வாட்சை தூக்கி ரிஷி காண்பிக்க, அதை கண்டதும் அவளுக்கு பழைய நினைவுக்கு வந்தது.
” அண்ணா.. என் மகன் எங்கே? ஆளையே காணும் அண்ணியையும் ஆள காணும்.. ” என்றவள் பார்வை அந்த இடம் முழுவதும் துளவியது.
” இரண்டு பேரும் வெளியில் விளையாடிக்கிட்டு இருக்காங்க காவியா.. உன் பையனுக்கு ஆசையா நீ ஏதோ சமைச்சுகிட்டு இருந்தியே! அதை அப்படியே விட்டுட்டு இங்க வந்துட்ட போய் அதை பாருமா நான் உன் அண்ணியை அனுப்பி வைக்கிறேன்.. ” என்றதும் சாவி கொடுத்த பொம்மை போல் எழுந்து சென்றாள் காவியா.
உணர்வில்லாமல் எழுந்து செல்லும் தங்கையை உள்ளத்தில் ஆறாத ரணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி சக்கரவர்த்தி.
அவளை தனியே விட முடியாது என்பதால் எழுந்து சிந்து வந்த இடத்திற்கு வர, அங்கு அவளோ குழந்தையோடு குழந்தையாக ஐக்கியமாகி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவளை அந்த ஒரு நிமிடம் கனிவுடன் பார்த்த ரிஷி அவள் மட்டும் தன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் தன் நிலை என்ன ஆகி இருக்கும் என்று யோசித்து கூட பார்க்க விரும்பாதவனாக தலையை உருகி கொண்டு அவளிடம் சென்றான்.
” சிந்து ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. நீ மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா கண்டிப்பா நான் என்ன பண்ணி இருப்பேன்னே தெரியலை.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. இவனை நான் பார்த்துகிறேன் காவியா அடுப்படி பக்கம் போனா.. அவளை அங்க தனியா விடுறது ஆபத்து.. ” என்றவன் அவளிடம் மீதத்தை கண்களாலேயே சொல்ல, அவனது வேதனை அவளையும் தாக்கிக் கொல்லாமல் கொன்றது.
” நீங்க கவலைப்படாதீங்க ரிஷி நான் இருக்கிற வரை இந்த குடும்பத்தில் இருக்கிற யாருக்கும் எதுவும் ஆக விட மாட்டேன்.. ” என்றவள் சுரேந்தரை அவனிடம் கொடுத்து விட்டு கிச்சனுக்கு சென்று விட்டாள்.
திரும்பவும் மாமனிடத்தில் வந்த சுரேந்தர் அவனோடு மீண்டும் ஐக்கியமாகி விளையாட ஆரம்பித்தான்.
வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாமல் இருந்த ரிஷிக்கு பாலைவனத்தில் பெய்த சாரல் மழை போல் ஒரு சிறு சந்தோஷம் சுரேந்தர் மட்டுமே.
அவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவன் வாழ்க்கை முழுவதும் பாலைவனம் போல் சந்தோஷம் இல்லாமல் வறண்டு போயிருக்கும்.
அவர்கள் இருவரும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்து போக, சிந்து நொடிக்கு நொடி மறந்து போகும் தனது நாத்தனாரிடம் சென்றாள்.
” அம்மா.. நம்ம ரெண்டு பேரால மட்டும் இங்க இருக்க குழந்தைகளை பார்க்க முடியாது.. நான் உங்ககிட்ட முன்னாடி சொன்னது போலவே வேலைக்கு ஆள் தேவைன்னு யார்கிட்டயாவது சொல்லி பாக்க சொல்லலாம் இல்லாட்டி செய்தி தாளில் விளம்பரம் கொடுக்கலாம்ன்னு இருக்கிறேன் அம்மா..”
” தேவையில்லாம எதுக்கு ஒரு ஆளை
வேலைக்கு வச்சுக்கிட்டு தேன்மொழி.. முடிஞ்ச வரைக்கும் இங்க இருக்க பசங்க எல்லாரையும் நம்மளே பார்க்கலாம்..”
” இல்லம்மா உங்களுக்கு வேற
வர வர சுத்தமா வேலை பார்க்க முடியலை எனக்கு அது நல்லாவே தெரியுது என்கிட்ட சொல்லாம நீங்க நடிக்கிறீங்க.. ” என்றவளை கனிவுடன் பார்த்தார் சரஸ்வதி.
” உன்னை பெற்றெடுக்க வேண்டிய நான் அந்த பாக்கியத்தை பெறாமலேயே அந்த கடவுள் எனக்கு கொடுத்துட்டான் தேன்மொழி.. உன் ஒருத்தியை மட்டும் தான் நான் தத்தெடுத்து வளர்த்தேன்.. ஆனால் எனக்கு நீ பிறக்காத குழந்தையாக இருந்தாலும் என்னோட குணம் எல்லாமே அப்படியே உன்கிட்டயும் இருக்கு.. கண்டிப்பா கடவுள் நமக்கு உதவி செய்வார்.. அது சரி நான் கேட்கணும்னு நினைச்சேன் ரிஷி தம்பியை நேரில் பார்த்தியே? அவர் உன்கிட்ட எப்படி பேசினார் எவ்வளவு பெரிய பிரபலமான ஆள் அவர் உன்கிட்ட எதுவும் தப்பா பேசலையே!” என படபடப்பாக கேட்க, புன் சிரிப்பை பதிலாக கொடுத்தாள் தேன்மொழி.
” இல்லம்மா.. நம்ம நினைக்கிற அளவுக்கு அவர் மோசமானவர் கிடையாது ரொம்ப ரொம்ப நல்லவர்.. அடுத்த முறையும் உதவி பண்றதா சொல்லி இருக்கார்.. “
” ரொம்ப நல்லதுமா.. இப்படி இருக்கிற எல்லாருமே தான் மட்டும் வச்சுக்கணும்னு நினைக்காம நாலு பேருக்கு கொடுக்கணும்னு நினைச்சாலே நம்மள மாதிரி அனாதை ஆசிரமம் வச்சிருக்க எத்தனையோ குழந்தைகள் நல்லா படிச்சு அவங்களும் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து பெறுவாங்க.. எல்லாத்துக்கும் மேல நம்ம மக்கள் எவ்வளவு தேவையில்லாத செலவு எல்லாம் செய்வாங்க.. அதுல அவங்களால ஒரு முடிஞ்ச தொகை நம்மள மாதிரி ஆசிரமம் வச்சிருக்க உங்களுக்கு கொடுத்தா அது நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும்.. ஒரு டிரஸ் எவ்வளவோ அதிகமான விலைக்கு எடுக்குறாங்க.. அதுல ஒரே ஒரு டிரெஸ்ஸை குறைச்சுக்கிட்டு அந்த காசை நமக்கு கொடுத்தா நம்ம பிள்ளைங்க நாலு நாளைக்கு பசி இல்லாம நிம்மதியான சாப்பாடு சாப்பிடுவாங்க அது எல்லாம் இங்க யாருக்கு தெரிய போகுது? அடுத்தவங்க முன்னாடி தான் அழகா இருக்கணும்னு மட்டும் தான் நினைக்கிறார்களே தவிர நமக்கு மட்டும் நம்ம அழகா இருந்தா போதும்னு யாரும் இப்ப நினைக்கிறது இல்லை..” என்றவர் மனதில் உள்ள ஆதங்கம் தாங்காமல் புலம்பினார்.
” கவலைப்படாதீங்கம்மா.. உலகத்துல இன்னும் எத்தனையோ நல்லவங்க இருக்கத்தான் செய்கிறார்கள்.. கண்டிப்பா அவங்க உருவத்துல கடவுள் நமக்கு உதவி செய்வார் கவலைப்பட வேண்டாம்.. ” என்றவள் குழந்தைகளை கவனிக்க சென்று விட்டாள்.
ஆசிரமத்தில் கைக்குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை இருக்க அனைவரையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள் தேன்மொழி.
இப்படியே ஒரு மாதம் கழிந்து செல்ல, அன்று ஒரு முக்கியமான வேலை இருந்ததால் தேன்மொழி புதிதாக வேலைக்கு சேர்த்திருந்த அருக்காணியிடம் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, சரஸ்வதியிடம் சென்றாள்.
” அம்மா.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு இன்னைக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான நாள் நான் கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன் அம்மா.. அருக்காணி கிட்ட பிள்ளைகளை பார்த்துக்க சொல்லி சொல்லி இருக்கேன் நீங்களும் கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோங்க நான் போன வேகத்துல வந்துடறேன்.. ” என்றவளை கண்களில் வழிந்த நீருடன் பார்த்தார் சரஸ்வதி.
அவரது கண்ணீர் எதற்காக என்பதை புரிந்து கொண்ட தேன்மொழிக் கண்களிலும் கண்ணீர்.
தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் தானும் கஷ்டப்பட்டு அவரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று முடிந்தவரை தன்னுடைய துக்கத்தை எப்போது போல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவள்
அதில் வெற்றியும் கண்டாள்.
” அம்மா.. அடிக்கடி இப்படி நீங்க எமோஷனல் ஆகிறது நல்லது கிடையாது.. எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்கிறது நீங்கள் மட்டும் தான்.. இப்படி நீங்க அழுதுகிட்டே இருந்தா என்னால தாங்க முடியாது தயவு செஞ்சு அழுகாதீங்க.. ” என்றவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
” எப்படி உன்னால இவ்வளவையும் செய்துட்டு அமைதியா இருக்க முடியுது.. எந்த ஒரு பெண்ணாலும் செய்ய முடியாத தியாகத்தை நீ செஞ்சிருக்கமா.. உன்னோட கு.. ” என்றவர் ஏதோ சொல்ல வந்து பிறகு வார்த்தைகளை அத்தோடு நிறுத்திக் கொண்டார்.
” பரவாயில்லம்மா.. நான் இன்னைக்கு கஷ்டப்பட்டாலும் சில விஷயங்கள் நினைச்சு பார்க்க ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு.. என்னால கொடுக்க முடியாத சந்தோஷத்தை அவருக்கு கண்டிப்பாக அவங்க குடும்பம் மூலம் கிடைக்கும்.. அவங்க என் மேல வச்ச காதலுக்கு முன்னாடி நான் செஞ்சது எல்லாம் எதுவுமே கிடையாது சரஸ்வதி அம்மா.. ” என்றவள் மேற்கொண்டு பேச முடியாது சரஸ்வதியை விட்டு விலகியவள் அவரிடம் தலை அசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தவள் கால்கள் எப்போதும் போல் தன்னிச்சையாக அவள் விரும்பி கும்பிடும் அம்மன் கோவிலுக்கு சென்றது.
அவள் மனம் முழுவதும் சூறாவளியாக பல நினைவுகள் சுழன்றெடுக்க, அதன் தாக்கம் தாங்க முடியாமல் அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
அடுத்தவர் சந்தோஷத்திற்காக தன்னுடைய சந்தோஷத்தை தியாகம் செய்வதெல்லாம் பெரிய தியாகம் அல்லவா?
அதே நேரம் அவளது மனம் புரிந்தார் போன்று ரிஷியும் அந்த கோவிலுக்கு வரப்போவதாக முன்பே அங்கிருந்த அர்ச்சகரிடம் தன் வேலையால் மூலம் தகவல் கொடுத்தவன் மனம் முழுவதும் தேன்மொழி அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைக்கு நிகராக அனுபவித்துக் கொண்டிருந்தான்.
இந்த நாள் அவளுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்ட நாள் அல்லவா?
எப்படி அவர்களால் அந்த நாளை மறக்க இயலும்?
இருவரின் மனதிலும் கடந்த காலம் விரிய அவர்களது கடந்த காலம் அவர்களுக்கு கொடுத்து சந்தோஷத்தை விட வலியும் வேதனையும் தான் அதிகம் அல்லவா?
அதை நினைத்துக் கூட பார்க்க விரும்பாமல் இருவரும் கோவிலை நோக்கி பயணப்பட்டார்கள்.
தன்னுடைய அறையில் அமர்ந்து சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிந்தியாவை கலைப்பது போல் ஓடி வந்தான் சுரேந்தர்.
” அத்த அம்மா கை ரத்தம் வரு வா..” என்று அழுதபடி மழலை குரலில் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு சிந்தியா இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
வேகமாக குழந்தையை கைகளில் தூக்கி கொண்டவள் காவியா இருக்கும் இடத்தை நோக்கி விரைய அங்கு தன் கையை அறுத்துக் கொண்டபடி எதிரில் இருந்த சுவரை வெறித்து பார்த்தாள் காவியா.
” ஐயோ காவியா என்னடி பண்ணி வச்சிருக்க? ” என்றப்படி பதட்டமாக அவளிடம் வர, அவளை அங்கேயே நிற்கும்படி ஒரு கையை காட்டி தடுத்து நிறுத்தினாள் காவியா.
அவளது செயலை விசித்திரமாக சிந்தியா பார்க்க அடுத்த அவள் கேட்ட கேள்வியில் ஆடிப் போய்விட்டாள்.