நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்பது போல் என் ஞாபகங்கள் சிலவற்றைக் காணவில்லை என்பது அதிர்வுகளைத் தர ஏன் இப்படி என்று மருத்துவரைக் கேட்டேன்.
“மயக்க மருந்தோட effect. கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வந்துடும் பயப்படாதிங்க” என்றார்.
அப்போது மீண்டும் அதே மருத்துவர் குழு வந்தது. இம்முறை புரியா மொழி அல்ல. என்னிடமே பேசினார்கள்.
“வீட்டுக்குப் போகனும்” என்றேன். என் வாயசைப்பு புரியவில்லை அவர்களுக்கு. பேப்பர் பேனா கொடுத்து எழுதச் சொன்னார்கள். மெதுவாக எழுதிக்காட்டினேன்.
“I want to go home” என்று.
“நீங்க எப்ப கிளம்புவிங்கன்னு தான் நாங்களும் பாத்துட்டு இருக்கோம்.” என்று அனைவரும் கூறிச் சிரித்தனர்.
“இந்த எண்ணம் வந்தா தான் சீக்கிரம் உடம்பு சரி ஆகும். Very good. கவலைப்படாதிங்க இன்னும் ஒரு 20 நாள் ல வீட்டுக்குப் போயிடலாம்” என்றார் தலைமை மருத்துவர்.
“இன்னும் 20 நாளா…” மனதிற்குள் எண்ணிணேன்.
“எனக்கு அர்ஜுன பாக்கனும்” என்று வேண்டினேன்.
“இப்ப தான் நாங்கல்லாம் பாத்துட்டு வரோம். Very cute and naughty. கீழ தான் இருக்கான். ஆனா ICU ல no entry for kids. Infection ஆய்டும். Phone தான் இருக்கே. Video call ல பேசுங்க” என்று சொல்லி, செவிலிக்கும் மருத்துவர்களுக்கும் சிலவற்றை அறிவுறுத்தி வெளியேறினார்.
அந்த அறிவுறுத்தல்கள் விரைவிலேயே அமலுக்கு வந்தன.
Chest physio, suction தொடர்ந்து blood culture, urine culture. இரத்தம் எடுக்க தமணிக்காக 4 பேர் தேடுதல் வேட்டை நடத்தியும் கிடைக்கவில்லை. எனவே Femoral artery யில் எடுத்தனர். என் பிரசவத்தில் கூட அத்தனை வலிக்கவில்லை.
அழுது ஓய்ததும் கணவர் வந்தார். வழக்கம்போல் சமாதான வார்த்தை கூறினார். இரவு உறங்காததைப் பற்றி செவிலி குறை கூற,” மயக்க மருந்து இல்லாம நீ தூங்கியே ஆகனும். இல்லன்னா மறுபடியும் மயக்க மருந்து போட்டுருவாங்க. அப்பறம் வீட்டுக்கு போக நாள் தள்ளிகிட்டே போகும்” என்றார்.
முயற்சிப்பதாய் வாக்களித்தேன்.
ஆனால் அன்றிரவும் தூக்கம் வரவில்லை.
ஜுர வேகத்தில் மயக்கம்தான் வந்தது. உலகப்பந்தின் துருவப்பகுதியில் தன்னந்தனியாய் நான் இருப்பது போல் தோன்றியது. குழப்பத்தில் தலை வெடித்துவிடும்போல் இருந்தது. இடையில் “தூங்குங்க.. தூங்குங்க” என்ற செவிலியின் நச்சரிப்பு வேறு. ஒரு நிமிடம் ஒரு யுகமாய்க் கழிவது காதலில் மட்டுமல்ல. ICUவிலும் தான்.
மறுநாள் காலை chest physio முடிந்து இயன் மருத்துவரும் இன்னொரு மருத்துவரும் என்னை நிமிர்த்தி அமர்ந்த நிலையில் பிடித்துக்கொண்டனர். பயங்கரமாக இருமல் வந்தது. சளி தெறித்தது. மிகவும் சோர்வாக உணர்ந்தேன். மருத்துவரிடம் கேட்டேன்.
“எனக்கு சளி புடிச்சிடுச்சுன்னு அவர் சொன்னார். ஆனா அது பொய்யின்னு எனக்கு தெரியுது. எனக்கு என்னதான் ஆச்சு? நான் ஒரு தைரியமான பொண்ணு தான். பயப்படவோ துவளவோ மாட்டேன். Please doctor. I really want to know what happened to me and what’s going on..”
சொன்னார்…
பிரம்மித்துப் போனேன்……