அடுத்த இரு வாரங்கள் போனதே தெரியவில்லை அஜய் குடும்பத்திற்கு. சொன்னது போலவே ஆர்த்திக்கு இறகுப் பந்து வைத்து விளையாடக் கற்றுக் கொடுத்தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த ஆர்வத்தில், கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் சற்று விரைவாகவே எழப் பழகியிருந்தாள் சின்னவள். அதே பழக்கமாக அன்றும் எழுந்திருக்க,
“ஏன் ஆருக்குட்டி, இன்னிக்கு லீவ் தான, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?” என்றபடி அவளுக்குக் குடிக்க சத்து மாவு கஞ்சி தயார் செய்தாள் அம்ருதா.
“எனக்கு லீவ் தான், ஆனா அப்பா ஆஃபிஸ் போய்டுவாங்களே. அதுக்கு முன்னாடி அவங்க கூட விளையாடணும்ல” என்றவள் அதற்கு தயாராகவே வந்திருக்க, அம்ருதாவின் முகத்தில் புன்னகை.
“குட்டிமா, நீயும் உங்கப்பாவும் எனக்கு ஓவரா ஷாக் குடுக்குறீங்க” என்று சிரித்தபடியே, அவள் கையில் பானத்தை நீட்டினாள்.
“பொறாமைடி உனக்கு. நானும் என் பொண்ணும் காலைலயே எழுந்து சமத்தா எக்சர்ஸைஸ் பண்றோம்ல”
“ப்ப்ப்பா…எனக்கு ரொம்ப பொறாமை தான் என் சமத்து சக்கரைக்கட்டிங்க மேல. நீங்க ரெண்டு பேரும் ஒரு ரெண்டு நாள் உருப்படியா ஒரு விஷயம் பண்ணீங்கன்னாவே பெருசு தான். நான் பார்க்குறேன் இந்தக் கதை எவ்வளவு நாள் ஓடுதுன்னு” என்றவள் நொடிக்க,
அஜய்க்கு உணவு கட்டுப்பாடுகள் ஓரளவு பழகியிருக்க, கொஞ்சம் எளிதான உடற்பயிற்சிகளையும் முடிந்த அளவு செய்ய ஆரம்பித்திருந்தான். அதிலும் இது போன்ற மனைவி, மகளோடு நேரம் செலவழித்தாற் போலிருக்கும் முயற்சிகள் நன்றாகவே பலனளித்தது எனலாம்.
ஆறு மாதங்கள் கடந்து மருத்துவரை சந்திக்க வேண்டிய நிகழ்வு இருக்க, அஜய் அவன் போக்கில் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அம்ருதா தான் ஒரு நாளைக்கு இருமுறை அவன் எடை பார்க்கும் இயந்திரத்தின் மேல் ஏற்றி அவள் ரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொண்டிருந்தாள்.
“வெயிட் பார்த்து நோட் பண்ணியா அஜ்ஜூ?” என்று வழக்கம் போல் கேட்க,
“எதுக்கு அம்மு இவ்ளோ டென்ஷன்? கொஞ்சம் ஸ்லோ அப்டின்னாலும் இது நல்ல முன்னேற்றம் தானே. அது தான் முக்கியம். எல்லாத்துக்கும் மேல நானே ரொம்ப பெட்டரா தான் ஃபீல் பண்றேன்.
முன்னாடி ஒரு பத்து நிமிஷம் நடந்தா, படி ஏறினா அப்டி மூச்சு வாங்கும். இப்போ அதெல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. சாப்பாடு அளவு எவ்வளவு குறைச்சிருக்கேன்னு உனக்கே தெரியும். அதுவும் இப்போ ஃபாலோ பண்ற calorie deficit method (கலோரி – கனலி பற்றாக்குறை முறை*) எனக்கு ரொம்ப நல்லாவே வொர்க் ஆகுற மாதிரி தான் தெரியுது. விடு பாத்துக்கலாம்” என்றான்.
“ம்ம்ம்ம் அதுவும் கரெக்ட் தான். இந்த நிலைமைக்கு வர்றதுக்கே தலையால தண்ணீ குடிக்க வேண்டி இருக்கு. ஆனா இதெல்லாம் பத்தாது அஜ்ஜூ. லாங்க் வே டு கோ” என்று உறுதியில்லாத தொனியில் கூறினாள் அம்ருதா.
“ஓய், நடக்குறதுல பாசிட்டிவ்வான விஷயத்தைப் பாரு அம்மு. எனக்கு எவ்ளோ எரிச்சல், ரெண்டு பேரும் முட்டிக்கிட்டே இருந்தோம், நீ ஒன்னொன்னும் பிளான் பண்ணி பண்றதுக்கு எவ்ளோ முயற்சி எடுத்த. அதெல்லாம் ஓரளவுக்கு இப்போ செட் ஆகிடுச்சுல்ல.
எனக்கு பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? சாப்பாட்டைப் பத்தின என்னோட கண்ணோட்டமே இப்ப மாறிடுச்சு அம்மு. இப்பயும் வாயைக் கட்டுறது ஒன்னும் ஈஸி இல்லை தான். ஆனா, ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடணும்னு சொல்ற மாதிரி, உணவும் அளவா இருக்குறது நல்ல விஷயம் அப்டின்னு லைட்டா தோன ஆரம்பிச்சிருக்கு.
அதுவும் ஒவ்வொரு நாளுக்கும் எவ்ளோ கலோரி தேவை, நான் அதை விட எவ்வளவு அதிகமா சாப்பிட்டுட்டு இருந்தேன்னு இப்ப யோசிச்சுப் பார்த்தா எனக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு”
“அதெல்லாம் சரி தான் அஜ்ஜூ. ஆனா உன்னால தேவையான கலோரி விட கம்மியா சாப்பிட முடியலையே”
“முடியலைன்னு சொல்ல முடியாது, ஆனா கஷ்டம் தான். பல வருஷப்பழக்கம் இல்லையா, அதுனால ரொம்பவே கஷ்டமா தான் இருக்கு, இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா இந்த eye opener (கண்திறப்பு) ரொம்ப முக்கியம்ல. அதை தான் சொல்ல வரேன்”
“ஹா ஹா, அது எனக்கே ஆச்சரியம் தான் அஜ்ஜூ. என்னது நூறு கிராம் நூத்தம்பது கிராம் தான் சாதம் சாப்பிடனுமான்னு நீ அலறினது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு” என்று சிரிக்க,
“அடிப்பாவி, ஒரு பச்சப்புள்ளைய இல்லாத கொடுமையெல்லாம் பண்ணிட்டு உனக்கு சிரிப்பு வேறயா ராஸ்கல்” என்று போலியாக அவளை அதட்டியவன்,
“ஃபுல் பிளேட் பிரியாணிய ஒரு கட்டு கட்டுறவனைப் போய் ஏதோ தங்கம் அளக்குற மாதிரி அளந்து கொடுத்தா என்ன பண்றது? அதுனால தான் நான் பயந்து போய்ட்டேன்” என்றான்.
“வேற என்ன பண்றது அஜ்ஜூ. நான் சும்மா, நீ சாப்பிட்டது போதும்னா சொல்ல முடியும்? இதுனா ஆப்ல (App) நீயே பார்த்துப்ப. நான் உன்னைய ஃபோர்ஸ் பண்ற மாதிரி தெரியாதுல”
“அது என்னமோ கரெக்ட் தான். நானும் பத்து தடவை செக் பண்ணி பார்ப்பேன், என்னடா நாலு ஸ்பூன் ரைஸ் தானே போட்டோம். அதுக்குள்ளயா இத்தனை கிராம் வந்துருச்சுன்னு திக்குன்னு இருக்கும்.
மாங்கு மாங்குன்னு முக்கால் மணி நேரம் நடந்தா நூத்தம்பதோ இருநூறோ குறையும் கலோரி. ஆனா நாலு இட்லி சாப்பிட்டா அதை விட கூட ஏறிடும்.
சோ, இவ்ளோ வருஷமா இந்தக் கணக்கே இல்லாம, நேரா நேரத்துக்கு வகை, வகையா, பொரிச்சது, வறுத்ததுன்னு கலந்து கட்டி அடிச்சிட்டு, அதுக்கும் மேல இனிப்பு, நொறுக்குத்தீனின்னு தேவைக்கு அதிகமா சாப்பிட்டு தினமும் கலோரிய ஏத்திட்டு, அதை செலவழிக்கிறதுக்கு பெரிசா எந்த உடலுழைப்புமே இல்லை. அப்புறம் எல்லாம் கொழுப்பா தான் ஏறிக்கிடக்கும்.
இப்ப யோசிச்சுப் பார்த்தா புரியுது. எப்படி இருந்த நான் இப்டி ஆகிட்டேன்னு…ஆனா இந்தப் புரிதல் வரதுக்கு இவ்வளவு பிரச்சனைய கடந்து வர வேண்டியதாட்டம் இருக்கு. வர்றதுக்குள்ளயும் உடம்பும் எக்குத் தப்பா ரிப்பேர் ஆயிருச்சு” என்றவனிடம் நீண்ட பெருமூச்சு.
கணவனின் தோள்களை ஆதரவாகப் பற்றிய அம்ருதா,
“கவலைப்படாத அஜ்ஜூ. இன்னிக்கு டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம். அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். நீயும் ஆருவும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு சீக்கிரம் வந்துடுங்க. முடிஞ்சா ஆஃபிஸ்லேர்ந்து சீக்கிரம் வரப் பாரு” என்றவள் சமையலைத் தொடர்ந்தாள்.
மாலையில் இருவரும் மருத்துவரை சந்திக்க, அவரும் சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்து முடிவுகளைப் பார்த்து, நல்ல முன்னேற்றம் என்க, அஜயைக் கையில் பிடிக்க முடியவில்லை.
“ஆனா உங்களுக்கு இன்னும் ரிஸ்க் அதிகமா தான் இருக்கு அஜய். உங்களை பயமுறுத்த சொல்லல. டயட் ரெஸ்டிரிக்ஷன் கண்டிப்பா ஃபாலோ பண்ணியே ஆகணும். வெயிட் இன்னும் குறைக்கணும், உங்களுக்கு ஒரு கம்ஃபோர்ட் ரேஞ்சுக்கு வர்ற வரை குறைச்சிட்டு, அப்புறம் அதை மெயிண்டெயின் பண்ணனும்.
முக்கியமா உங்க வாழ்க்கை முறை மாற்றம் தான் தேவை, ஃபார் த ரெஸ்ட் ஆஃப் யுவர் லைஃப். இல்லன்னா மாத்திரை, சர்ஜரினு போக வேண்டியது இருக்கும், அதுக்கான வாய்ப்பு இருக்குன்னா கூட உறுதியா சொல்ல முடியாது.
இப்ப நீங்க சொன்ன மைல்ட் பிசிக்கல் ஆக்டிவிட்டிஸ் ஓகே. அதுலயும் கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருக்கனும். பொதுவா நிறைய பேர் ரொம்ப தீவிரமா உடற்பயிற்சி செய்றேன்னு டோட்டலா அதையே ஃபோக்கஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. உங்க ஹார்ட் கண்டீசன்க்கு அதுக்கெல்லாம் ஒத்துழைக்காது.
வாக்கிங் ஓகே. ரன்னிங், சைக்கிளிங் கூட ரிஸ்க் தான். ஹார்ட் ரேட் ரொம்ப கம்மியான இடைவெளில வேகமா அதிகரிக்காம பார்த்துக்கணும். அது ரொம்ப முக்கியம் அஜய்” என்று மருத்துவர் ஆலோசனைகளை வழங்க, அஜயும், அம்ருதாவும் கவனமாகக் கேட்டுக் கொண்டனர்.
மருத்துவமனை சூழல் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்தவைகளை நினைவுபடுத்த அம்ருதாவுக்கு அன்று இருந்த மனநிலை நினைவில் வந்தது. அவள் வேகமாக தலையை உலுக்க,
“என்னாச்சு அம்மு?” என்றான் அவளருகில் நடந்து வந்து கொண்டிருந்த அஜய்.
“ஹாங், ஒன்னும் இல்லை அஜ்ஜூ. நீ அட்மிட் ஆகி இருந்த ஞாபகம் வந்திடுச்சு”
“ஹேய், கவலைப்படாதே அம்மு டார்லிங் அவ்ளோ சீக்கிரம் எல்லாம் நீ என்கிட்டேர்ந்து எஸ்கேப் ஆக முடியாதே” என்க, அம்ருதா திரும்பி அஜயை முறைத்தாள்.
“வாயை முதல்ல கழுவு அஜ்ஜூ. எதுல தான் விளையாட்டுன்னு இல்ல” என்று சிடுசிடுக்க,
“ம்ப்ச், டாக்டர் பாசிட்டிவ்வா தானே சொல்லிருக்காரு. நானும் அதையே தான் சொல்றேன். வீ ஆர் மேக்கிங் பிரொக்ரஸ். அதுக்கு முன்னாடி நம்ம பிரச்சனைக்கான தீர்வுக்கு ஒரு மைல் கல் அப்டின்னு எடுத்துக்கலாம் அம்மு” என்று மனைவியைத் தேற்ற, அம்ருதாவிடம் ஒரு பெருமூச்சு.
இருவரும் ஆர்த்தியை கிருபாவின் வீட்டில் விட்டு விட்டுத் தான் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அம்ருதாவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அஜய் தான் வற்புறுத்தியிருக்க, வேறு வழியில்லாமல் தான் சம்மதித்தாள்.
அவளை அழைத்துக் கொள்ள கிருபாவின் வீட்டிற்கு செல்ல, தினேஷும் ஆர்த்தியும் விளையாடிக் கொண்டிருந்தனர். சந்திரவதனா வந்து சம்பிரதாயமாக வரவேற்க, அம்ருதாவும் உதடுகளை இழுத்துப் பிடித்து சிரிப்பதாக காட்டிக் கொண்டாள்.
அவளது முகபாவனையைப் பார்த்து அஜய்க்கு அப்படி ஒரு சிரிப்பு. அவன் சிரிக்க, அவர்களை வரவேற்க வந்த கிருபாவிற்கு மனம் நிறைவாக இருந்தது. நண்பன் சில மாதங்களாகவே இறுக்கமாகவே இருந்திருக்க, அவனுக்கும் வேலைப் பளு காரணமாக அஜயுடன் பெரிதாக நேரம் செலவழிக்க முடியவில்லை. இப்போது நண்பனின் உடல்நலமும், மனநலமும் சற்று மேம்பட்டது போல் இருக்க, கிருபாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“என்ன மச்சி, என்ன விஷயம்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல” என்று அஜயின் முதுகில் தட்ட, அம்ருதாவோ கணவனை எச்சரிக்கைப் பார்வை பார்த்தாள்.
“ஒன்னும் இல்லடா, சும்மா அம்மு என்னைய டேமேஜ் பண்ண ஏதோ சொல்லிட்டு இருந்தா. அதான் சிரிச்சேன்” என்று சமாளித்தவன்,
“அப்புறம், நீ எப்படி இருக்க? ஆளையே புடிக்க முடியுறதுல்ல” என்றான்.
“எனக்கென்னடா, ஜம்முன்னு இருக்கேன். நீ எப்டி இருக்க? டாக்டர் என்ன சொன்னாங்க?”
“ஃபீலிங் பெட்டர்டா, டாக்டர் நல்ல முன்னேற்றம் தான், ஆனா லாங் வே டு கோன்ற மாதிரி தான் சொன்னாரு”
“சூப்பர்டா, ரொம்ப சந்தோஷம். ஒரு மூனு மாசம் முன்னாடி இருந்ததுக்கு இப்ப நல்லா இருக்க. முகம் தெளிவா இருக்குற மாதிரி இருக்கு.”
“ஹ்ம்ம்ம், வேற வழி. ஒன்னொன்னா மாத்தி மாத்தி டிரை பண்ணிட்டு இருக்கோம். இப்ப ஏதோ கொஞ்சம் செட் ஆகிட்ட மாதிரி இருக்கு. எவ்ளோ நாளைக்குன்னு பார்க்கலாம்” என்க, இவ்வளவு நேரம் நண்பர்கள் பேசி முடிக்க காத்திருந்தாற் போல் நின்றிருந்த சந்திரா,
“அம்ருதா, டின்னர் இங்க சாப்டுட்டு போங்க. நான் எல்லாம் பண்ணிட்டேன்” என்றாள்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் சந்திரா? நான் எல்லாம் சமைச்சு வைச்சிட்டு தான் வந்திருக்கேன்” என்க, கிருபா நண்பனை கேள்வியாகப் பார்த்தான்.
“என்னடா, நம்ம வீட்டுக்கு வந்திட்டு சாப்பிடாம போறது? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு நான் தான்டா சமைக்க சொன்னேன். உனக்கு பிடிச்சதா தான் செய்ய சொல்லிருக்கேன்.
நாலு தெரு தள்ளி இருக்கோம்னு தான் பேரு, நேர்ல பாத்து மாசக்கணக்காயிடுச்சு. இன்னிக்கு ரிலாக்ஸா கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பார்த்தேன்” என்றான்.
‘அதானே பார்த்தேன், இல்லாட்டி இவங்களாவது சமைக்கிறதாவது’ என்பது போல் அம்ருதா அஜயைப் பார்க்க, அஜய்க்கோ சற்று சங்கடமான சூழல். சாப்பிட்டால் மனைவி பார்வையாலேயே பொசுக்கி விடுவாள். சாப்பிட மறுத்தால் நண்பன் மனம் வருந்துவான். என்ன செய்து சமாளிப்பது என்பது போல் யோசித்தவன்,
“டேய், நம்ம வீட்ல சாப்டறதுக்கு என்னடா? உனக்கு தெரியும்ல, என்னவெல்லாம் டிரை பண்ணிட்டு இருக்கோம்னு அதுக்கு தான் யோசனை” என்று பதிலளித்தாலும், அடுத்த வீட்டிற்கு போய் ‘நான் உணவை அளந்து கலோரி கணக்கிட்டு தான் சாப்பிடுவேன்’ என்று எப்படி சொல்வது என்ற தயக்கம்.
“எனக்குத் தெரியாதா மச்சி? சோ ஒரு நாள் தானே, சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது அப்டின்னு எல்லாம் நான் சொல்லமாட்டேன். நீ பட்ட பாட்டெல்லம் பக்கத்தில இருந்து பாத்திருக்கேன்ல.
நீ உங்க வீடு மாதிரி நினைச்சிட்டு என்ன சாப்பிடணுமோ சாப்பிடு. உனக்குப் பிடிச்சதும் எண்ணெய் கம்மியா தான் செய்ய சொல்லிருக்கேன். சாலட் டைப்பும் நானே பண்ணிருக்கேன். வா வந்து பாரு” என்று வற்புறுத்தி அழைக்க, அதற்கு மேல் அஜயால் மறுக்க முடியவில்லை.
சந்திராவின் பார்வையில், ‘உன் நாவடக்கத்தை இன்று பார்த்து விடலாம்’ என்ற கேலி தொனி இருப்பது போல் அம்ருதாவிற்கு தோன்ற, உள்ளுக்குள் அவளுக்கு சீற்றமே. கணவனுக்காகவும், கிருபாவின் உளமார்ந்த நட்பிற்காகவும் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
சாப்பிட்டதாக பேர் பண்ணிக் கொண்டு, அம்ருதா சீக்கிரமே எழுந்து விட, ஆர்த்தியோ, ‘அத்த, இது நல்லா இருக்கு, அது நல்லா இருக்கு’ என்று சந்திராவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க, அம்ருதாவிற்குப் பற்றிக் கொண்டு வந்தது.
நல்ல வேளை. அஜய் அவனது தினசரி அளவுகளை மீறவில்லை. சில வாரங்களாக அளந்து அளந்து, அவனுக்கே தோராயமாக தேவையான அளவு தெரிந்திருக்க, அவன் அதற்கு மேல் எடுத்துக்கொள்ளவில்லை. மீறினால் ஒரு வித அசௌகர்ய உணர்வு வரும் அளவுக்கு அவன் உடல் புதுப்பழக்கத்திற்கு மாறி இருந்தது.
அவன் உண்ணும் அளவைப் பார்த்த அம்ருதாவுக்கு நிம்மதி என்றால், சந்திராவுக்கு மெச்சுதல் கலந்த ஆச்சரியம். அவள் கிருபாவிடம் கிட்டத்தட்ட சவாலே விட்டிருந்தாள். விருந்து என்றால் அஜய் கட்டுப்பாடுகளை தூர எறிந்து விடுவான் என்று. கிருபாவுக்கும் லேசாக பயம் இருந்தாலும், அஜயைப் பார்த்த பின்னர் அவனுக்கு நம்பிக்கை வந்து விட்டது, ஏனோ இந்த முறை அஜயின் முயற்சிகள் நிரந்தரமான பலனைத் தரும் என்று.
“சாரி மச்சி, நிறைய செஞ்சுட்டீங்க, வேஸ்ட் ஆகிட போகுது. நீ முன்னாடியே சொல்லிருந்தா நான் வேணாம்னே சொல்லிருப்பேன்” என்று அஜய் சங்கடமாக உரைக்க,
“அடேய் நல்லவனே, எப்போர்ந்துடா இவ்வளவு ஃபார்மலிட்டி நமக்குள்ள? அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் சேஃபா ஸ்டோர் பண்ணி வைச்சிடுவேன். எதுவும் வேஸ்ட் ஆகாது, ஓகேவா” என்று கிருபா கூறிய பின்னரே அஜய் சற்று இலகுவானான்.
அனைவரும் உண்டு முடித்ததும், சந்திரா மேசையை ஒதுங்க வைக்க, அம்ருதாவும் அவளுக்கு உதவினாள். நண்பர்கள் இருவரும் வரவேற்பறைக்குத் திரும்பி இருந்தனர்.
“ஏன்டா, ஆருவையும் தினேஷ் கூட டென்னிஸ் சேர்த்து விட்ருக்க வேண்டியது தானே? பேட்மிண்டன் தான் விளையாடுறேன்னு சொன்னா” என கிருபா இயல்பாக கேட்க, அஜயிடம் மௌனம்.
நண்பனைப் பற்றி அவனுக்குத் தெரியும் என்றாலும், மகள் பார்வையில் தான் ஒரு தவறான முன்னுதாரணம் என்பது போல் ஒரு கருத்து பரவுவதை அவனால் இயல்பாகக் கடக்க முடியவில்லை. சமையலறைப்பக்கம் திரும்பிப் பார்த்தவன், அம்ருதாவும், சந்திராவும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவர்கள் கவனம் இங்கில்லை என்பதை உறுதி செய்து கொண்டு,
“இல்லடா, அவளுக்கு டென்னிஸை விட பேட்மிண்டன் தான் பிடிச்சிருக்கு” என்றான்.
ஒரு நொடியேனும் நண்பனின் முகமாற்றத்தைக் கண்டு கொண்ட கிருபா, அவன் சமையலறைப்பக்கம் பார்த்ததையும் கவனிக்கத் தவறவில்லை.
“சரி, அதுக்கு ஏன் நீ இப்படி பம்மிகிட்டு பதில் சொல்ற?” என்றவனிடம் இப்போது ஆராய்ச்சிப் பார்வை.
நண்பனின் மனம் நோகாதவாறு இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசித்த அஜய்க்கு சற்று தடுமாற்றமே.
“என்னடா? வேற ஏதோ பிரச்சனை இருக்கு போலயே?” என்று கிருபா மீண்டும் கேட்க,
“ஹம்ம், பிரச்சனைனு இல்லை. ஆனா கொஞ்சம் பிரச்சனை தான்” என்று நிறுத்தினான் அஜய்.
“ஒன்னும் இல்லடா. நீங்க தினேஷ் கிட்ட டென்னிஸ் விளையாடலைன்னா என்ன மாதிரி ஆகிடுவான்னு ஏதாவது சொன்னீங்களா?” என வெளிப்படையாகக் கேட்டு விட, அதிர்ந்து வாயடைத்துப் போய் நண்பனைப் பார்த்தான் கிருபா.
நண்பனின் பதில் தேவையில்லை என்பது போல் தொடர்ந்த அஜய்,
“அது கரெக்ட் தான்டா. பிள்ளைங்களுக்கு நல்ல விஷயம் சொல்லனும்னு தான் எல்லாரும் மெனக்கெடுறோம். நீங்க அவன் ஆக்டிவ்வா இருக்கணும்னு சொன்னது தப்பு ஒன்னும் இல்லை. ஆனா அதை எப்படி சொல்றோம், நம்ம சொல்றத அவங்க எப்படி எடுத்துக்கிறாங்கன்னு ஒன்னு இருக்குல்ல.
அவன் ஆர்த்திட்ட போய் அதே மாதிரி ஏதோ சொல்லிருக்கான். அவ என்கிட்ட வந்து கேட்டா. என்னைப் பத்தி உனக்குத் தெரியும்ல, இதெல்லாம் நான் பெருசா எடுத்துக்க மாட்டேன். ஆனா அம்மு அப்படி இல்லைடா. அதுவும் உனக்குத் தெரியும்.
அவ ரொம்ப சென்சிடிவ், அதுவும் என் விஷயம்னு வந்துட்டா அவளுக்கு பொறுமையும் இருக்காது. என்னைய யாரும் ஒரு குறையும் சொல்லக்கூடாதுன்னு நினைப்பா. அந்த எதிர்பார்ப்பு சரின்னு நான் சொல்லல. ஆனா இது மாதிரி யாராச்சும் எதாச்சும் சொன்னா என்னைய விட அவ தான் ரொம்ப ஹர்ட் ஆகுறா” என மெல்லிய குரலில் கூற, அவனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டான் கிருபா.
“மச்சி சாரிடா, நீ ஒன்னும் மனசுல வைச்சுக்காத. நான் போய் உன்னைய அப்படியெல்லாம் சொல்வேனாடா. அது சந்திரா தினேஷ் கிட்ட என்னவோ உளறி வைச்சிருக்கா. நான் அப்பவே அவகிட்ட இந்தப் பேச்செல்லாம் வேண்டாம்னு திட்டி விட்டுட்டேன். ஆனா பசங்க அப்படியே பிடிச்சுக்கிட்டாங்க போல. அவளைப் பத்தி உனக்குத் தெரியாதா. இதை விட்டுடேன் ப்ளீஸ். எனக்காகடா” என்க,
“நமக்குள்ள என்னடா சாரி?” என்று கிருபாவின் தோளில் விளையாட்டாக குத்திய அஜய்,
“இதை உன் கிட்ட சொல்லி உன்னைய கஷ்டப்படுத்தணும்னு நான் சொல்லலை” என்று சேர்த்துச் சொன்னான்.
“ஆமா இதுனால தான் நீ வீட்டுப்பக்கமே வர்றதில்லையா?” என கோவமாகக் கேட்டான்.
“அப்டியெல்லாம் இல்ல. ஆனா உன்னைய ரொம்ப மிஸ் பண்ணேன்டா. நீ வேலைல ரொம்ப பிஸியா இருந்த. இங்க நேர்ல வரலாம்னா ஒரு சின்ன தயக்கம். எனக்கு சந்திராவப் பத்தியும் தெரியும், அம்முவையும் தெரியும்.
நமக்காக ரெண்டு பேரும் ஏதோ ஒருத்தரை ஒருத்தர் சகிச்சிட்டு போறாங்கன்னு நினைக்கிறேன். சோ அவங்கள ரொம்ப சோதிக்க வேண்டாம்னு தான் விட்டுட்டேன்”
“மண்ணாங்கட்டி. அவ என்ன பண்ணிடுவா உன்னை? வாயை வைச்சிக்கிட்டு சும்மா இல்லாம எதையாச்சும் சொல்லிடுவா, மித்த படி மனசுல ஒன்னும் வைச்சுக்க மாட்டா. அதுவும் என் கிட்ட தான்டா சொல்லுவா. உன்கிட்டயும், அம்ருதாகிட்டயும் வாயைத் திறக்க மாட்டா”
“பொண்ணுங்கள பத்தி உனக்குத் தெரியாது மச்சி. அவங்க வாயைத் திறந்து எதையாவது சொல்லி தான் பிரச்சனை வரணும்னு இல்லை. அம்மு எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணிட்டு தான் இருப்பா. அவங்க பாடி லாங்குவேஜ் வைச்சே ஒருத்தர ஒருத்தர் எடை போட்டுடுவாங்க. சோ நம்ம தள்ளி இருக்குறதே பெட்டர்”
“என்னடா இப்படி சொல்ற? ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல இருக்குறது அவ்ளோ நிம்மதியான விஷயம் எனக்கு. நீ என்னடான்னா தள்ளி இருக்கலாம்ன்ற” என்று கிருபா ஆதங்கமாகக் கேட்க,
“அப்டின்ற, அது பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்ல” என்று விட்டு, அஜயை இடித்துக் கொண்டு அமர்ந்து அவன் தோளில் கை போட்டு இன்னும் அருகில் இழுத்தான்.
“அடக்கருமம் புடிச்சவனே, அவனா நீ? இத்தனை நாளா இது தெரியாம போய்டுச்சே” என்று அஜய் துள்ளிக் குதித்து எழ, கிருபா சத்தம் போட்டு சிரித்தான்.
இவர்களது களேபரத்தில், பிள்ளைகளும் அன்னையரும் வரவேற்பறைக்கு வந்து விட,
“என்னாச்சு?” என்றாள் அம்ருதா.
அதற்கு நண்பர்கள் இருவரும் ஒரே குரலில், மிக வேகமாக,
“ஒன்னுமில்லையே” என்றனர்.
பெண்கள் இருவரும், அவர்களை சந்தேகமாக பார்க்க, அஜயோ,
“ஆம்பிளைப் பசங்களுக்குள்ள பேசுறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும். எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்ல முடியுமா?” என சிடுசிடுக்க, கிருபாவோ வீம்புக்கென்று அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான்.
‘மவனே தொலைஞ்சடா நீ இன்னிக்கு’ என்று அவனைக் கொலைவெறியுடன் அஜய் பார்க்க, இவர்கள் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்த சந்திரா,
“நீங்க வாங்க, அம்ருதா. இவங்க ஏதோ சேம் சைட் கோல் போடுறாங்க” என்றபடி உள்ளே சென்று விட, அஜயை நன்றாக முறைத்த அம்ருதா அவளைப் பின் தொடர்ந்தாள்.
“உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா?” என்று கிருபா பிள்ளைகளைப் பார்த்துக் கேட்க,
“உங்க டாடி ஓவரா பண்றாரு தினேஷ்” என்று சிலிர்த்துக் கொண்ட ஆர்த்தியும் விளையாட்டிற்குத் திரும்ப, தினேஷும் அவளுடன் சென்று விட்டான்.
அவர்கள் தலை மறைந்ததும், நண்பனின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் அஜய்.
“அடேய் எருமை, வலிக்குதுடா” என்ற கிருபா முதுகைத் தடவிக் கொண்டே அஜய் அருகில் அமர வர,
“பக்கத்துல வந்த கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று அஜய் அவனை முறைக்க, அதை சட்டை செய்யாமல், அவனருகில் வந்து ஆசுவாசமாக அமர்ந்தவன்,
“ஐ மிஸ்ட் ஆல் திஸ் டா” என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
“அஜ்ஜூ, சந்திரா கொஞ்சம் பொசசிவ் தான். ஆனா அதுக்காக நீ என்னைய டிஸ்டர்ப் பண்றதா நினைக்காத. உனக்கு ஒரு தேவைன்னா நான் வந்து நிப்பேன்டா.
சும்மா சேர்ந்து சரக்கடிக்கிறதா பிரெண்ட்சிப்? நம்மோளடது அந்த கேட்டகிரிலயே வராது. வண்டியெடுத்தா அஞ்சு நிமிஷம். அதுக்கு நீ இவ்ளோ யோசிப்பியா? இங்க வர இஷ்டம் இல்லாட்டி ஒரு ஃபோனப் போடு. நான் வர்றேன். அதுவும் இல்லையா ரெண்டு பேரும் பார்க், பீச்னு போவோம்” என்று கண்ணடிக்க,
“அடேய், கிராதகா. என் பொண்டாட்டி குத்துக் கல்லாட்டம் இருக்குறப்போ உன் கூட பார்க், பீச்னு போற வயசாடா எனக்கு” என்று அஜய் அலறினான்.
அதில் அட்டகாசமாக சிரித்த கிருபா,
“நீ தானேடா என்னைய மிஸ் பண்றேன்னு சொன்ன” என அப்பாவியாகக் கேட்டான்.
“அய்யா சாமி, ஏதோ என் கிரகம் தெரியாம சொல்லிட்டேன். ஆள விடுடா ராசா” என்று கையெடுத்துக் கும்பிட்டான் அஜய்.
பின்னே, நண்பனின் புதிய பரிமாணத்தில் அரண்டு போயிருந்தானே அவன்.
“சரி நீ இவ்ளோ ஃபீல் பண்றதுனால உன்னைய விட்டுறேன்” என மிடுக்காகக் கூறியவன்,
“ஏதாச்சும் படம் பார்க்கலாமா, நாளைக்கு வீக்கென்ட் தானே? என்ன படம் போடட்டும்” என்று சாதரணமாகக் கேட்டான்.
அஜயோ ‘என்னது அடுத்து படமா’ என்பது போல் அவனை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே,
“அம்மு, ஆரு, தினேஷ் எல்லாரும் வாங்க. படம் பார்க்கலாம்” என்று எல்லாரையும் துணைக்கழைத்து, முதல் ஆளாக அம்ருதாவின் பக்கத்தில் போய் அமர்ந்து விட்டான்.