“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்.
விளக்கம்
நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்”
மறுநாள் அதிகாலை எப்போதும் போல் நாலரை மணிக்கே நந்தினிக்கு விழிப்பு வந்திருந்தது. கணவன் இன்னும் தூக்கத்தில் இருக்க சத்தம் வராமல் மெதுவாய் எழுந்தவள் மாற்று உடையோடு கீழே குளிக்கச் சென்றிருந்தாள்.
அப்போதும் யாரும் எழுந்தது போல் தெரியவில்லை. என்ன செய்வதென யோசித்தவளாய் விளக்கேற்றி நெற்றியில் விபூதி குங்குமத்தை வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவள் பாலை காய்ச்சி காபி தயார் செய்தாள்.
ஐந்தரை மணியளவில் எழுந்து வந்த ராணி சமையலறையின் விளக்கொளியைப் பார்த்துவிட்டு உள்ளே வர அங்கு நின்ற சிறிய மருமகளைப் பார்த்து ஆச்சரிமாய் இருந்தது.
“குகா அதுக்குள்ளே எந்திரிச்சுட்டியா?”
“ஆமா அத்தை எப்பவும் இந்த நேரத்துக்கு தான் முழிப்பேன்.காபி கலந்துட்டேன் குடிக்குறீங்களா?”
“இரு பல்லைத் தேய்ச்சுட்டு வரேன்.”, என்றவருக்கு மகனின் வாழ்க்கையின் மேல் சற்று நிம்மதி வந்திருந்தது.
மூத்த மருமகள் சாப்பிடுவதற்கு தவிர சமையலறைப் பக்கம் வந்ததே கிடையாது. எத்தனை சோர்வாய் இருந்தாலும் ராணி தான் அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று தனக்காக காபி கலந்து கொடுக்கும் சின்ன மருமகளை மிகவும் பிடித்துப் போனது.
ஆறு மணிக்கு எழுந்த சந்திரன் மனைவியைக் காணாது யோசனையாய் கீழே வர அங்கு சமையலறையில் தாயோடு அமர்ந்து கதை பேசிய வண்ணம் காய் நறுக்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து புன்னகை எழுந்தது.
அதைவிட தாயின் முகத்தில் தெரியும் உற்சாகம் அவன் பார்த்தேயிராத ஒன்றாயிற்றே.
“ம்மா..”
“வாடா காபி சாப்பிடுறியா?”
“இல்லை இனி தான் பல் தேய்க்கணும்.”, என்றவன் மனைவியைப் பார்க்க சிநேகமாய் புன்னகைத்தாள் நந்தினி.
அவள் அமர்ந்திருந்த விதமே வேலை செய்வதெல்லாம் பழகிப் போன ஒன்று என்ற தோரணையில் தான் இருந்தது.
முந்தைய தினம் போல் அல்லாது சுடிதாரில் இருந்தவள் இன்னமும் குழந்தையாய் தெரிந்தாள்.
மாமியாருக்கு வெறும் அடுப்பில் ஏற்றி இறக்கும் வேலை தான் மற்ற அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்ள ஒரு கட்டத்தில் ராணியே அவளைப் பிடித்து நிறுத்தி மாடிக்குச் செல்லுமாறு கூறிவிட்டார்.
“உங்க வீட்டுக்கு போகணும் தான? நீ போய் ரெடியாகு குகா..”
“இருக்கட்டும் அத்தை இன்னும் நேரம் இருக்கு..”
“சொன்னா கேட்கணும் போ கண்ணு..”, என்றதற்கு மேல் மறுக்க முடியாதவளாய் தங்களறைக்குச் செல்ல சந்திரன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான்.
“சரி வா சேர்ந்தே போலாம்..”, என்றவனுக்கு சரியென தலையாட்டி நகர்ந்தாள்.
இருவருமாய் கீழே வந்த நேரம் மொத்த குடும்பமும் உணவு மேசையில் இருந்தது. நான்கு பேர் அமரும் அந்த உணவு மேசையில் வசந்தன் சுரேந்தர் சுஜா மற்றும் அவர்களது குழந்தை அமர்ந்திருக்க ராணி சங்கடமாய் சிறிய மகனைப் பார்த்தார்.
கோபம் இருந்தாலும் ஒன்றும் கூறாமல் சந்திரன் சோபாவில் அமர்ந்துவிட இதை எதையுமே கவனியாதவளாய் சுஜாவைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் தட்டில் உணவை வைத்து சந்திரனிடம் கொடுத்தாள் நந்தினி.
அவனது தாய் கூட தந்தையின் வாய்க்கு பயந்து சற்று பார்த்து பொறுமையாய் தான் சந்திரனிடம் செயல்படுவார்.
ஆனால் யாரைப் பற்றிய கவலையும் இன்றி தனக்கான உணவை தன்னிடம் நீட்டியவளை இமைக்காது பார்த்திருந்தான்.
“அத்தை நாங்க வெளியே போக நேரமாகுது ஜனனிக்கு கொஞ்சம் ஊட்டி விடுங்களேன். குகா பரிமாறட்டும்.”, என்ற சுஜாவின் குரலில் வேகமாய் உணவு மேசைக்கு அருகில் வந்தவள் மூவருக்கும் பரிமாறினாள்.
இத்தனை நாள் அமைதியாய் இருந்தவனுக்கு இப்போது ஏனோ அப்படியிருக்க முடியவில்லை.
“உங்க பெரியம்மா ஏற்கனவே போன் பண்ணிட்டாங்க தான நந்தினி சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு”, என்று கூற அப்போது தான் அங்கு நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் சற்று மூளைக்குள் உரைத்தது நந்தினிக்கு.
இப்படி ஒரு கோணத்தை யோசித்தே இருக்காதவள் பதட்டமாய் மாமியாரைப் பார்த்துவிட்டு கணவனை ஏறிட்டாள். அதற்குள் கடுப்பாய் தன் தட்டில் தானே உணவை சுஜா வைத்துக் கொள்ள ராணி அவசரமாய்,
“ஆமா மா நீ சாப்பிட்டு கிளம்பு.”, என்றபடி கணவருக்கு இட்லியை வைத்தார்.
அடுத்து எந்தப் பேச்சும் வருவதற்கு முன் கிளம்புவது நல்லது என்று உணர்ந்தவளாய் கடகடவென உணவை முடித்துவிட்டு மாடிக்குச் சென்றிருந்தாள் நந்தினி.
“போலாமா?”
“என்னங்க..”
“ம்ம்?”
“அது அங்கே அவங்க எப்படி நடந்துப்பாங்கனு தெரியலை..”
“அவங்களை நான் எதாவது சொன்னா வருத்தப்படுவியா?”
“??!?”
“என்ன?”
“இல்ல.. அப்படியெல்லாம்..”
“அப்போ வா பார்த்துக்கலாம்..”, என்றவனோடு கீழே வந்தவளுக்குத் தலையில் மல்லிச் சரத்தைச் சூட்டி அனுப்பி வைத்தார் ராணி.
இருசக்கர வாகனத்தில் தோழிகளோடு சென்றிருந்தாலும் இப்போது முதல் முறை ஒரு ஆணோடு அதுவும் கணவனோடு செல்வது மகிழ்ச்சியாய் இருந்தது.
அதையும் மீறி அங்கு நிலைமை எப்படியிருக்குமோ என்ற பயம் வேறு. ஏதோ சிந்தனையில் இருந்தவள் வண்டி நின்றதைக் கூட உணராமல் அமர்ந்திருக்க சந்திரன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.
“உள்ளே போறோமா இல்லை அப்படியே கிளம்பிடலாமா?”, என்றதில் சட்டென இறங்கியவள் அவன் வண்டியை நிறுத்தும் வரை காத்திருந்து அவனோடு உள்ளே நுழைந்தாள்.
“பெரியம்மா..”
“வாடியம்மா..வாங்க மாப்பிள்ளை”, என்றவர் சாவுகாசமாய் எழுந்து நின்றார்.
கந்தன் எங்கேயோ வெளியே சென்றிருக்க பத்து நிமிடத்திற்கு மேல் சந்திரனால் அங்கு இருக்க முடியவில்லை. வெளியில் சென்று வரலாம் என்று கூறுவதற்காக சமையலறைக்குள் எட்டிப் பார்க்க நந்தினி தான் வேலை செய்து கொண்டிருந்தாள்.
“அவங்களை எங்கே காணும்?”
“அது இதோ இங்கே தான்”, எனும்போதே பின் வாசல் வழி உள் நுழைந்தார் அலமேலு.
“வயசாயிடுச்சுல பா.. என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டா குகா..”
“நோட் பண்ணிக்கோ எனக்கு மிஸ்ட் கால் கொடு உன் நம்பரை சேவ் பண்ணிக்குறேன்.”
“சரி..”
இப்படியாய் ஒரு மணி நேரத்தைக் கடத்திய பின் மீண்டுமாய் அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அலமேலு சமையலை முடித்திருக்க இருவருக்குமாய் இலையைப் போட்டு நந்தினி பரிமாறி விட்டு அவனோடு உணவருந்த அமர்ந்து விட்டிருந்தாள்.
அதன்பின் வெகுநேரம் அங்கு இருக்க விடாமல் கிளம்பியிருந்தான் சந்திரன்.
அன்றைய தினம் இப்படியாய் கழிந்திருக்க மறுநாள் சந்திரன் கிளம்புவதற்குள் காலை உணவை முடித்து அவன் உணவருந்திய பின்னரே கடைக்கு அனுப்பி வைத்தாள்.
சரியாய் சந்திரன் வாசல் அருகில் வர அவனைக் கவனித்த வசந்தன்,
“பெரிய தொழில் அதிபர் மாதிரி காலையிலேயே கிளம்பிற வேண்டியது. இதுக்கு வீட்டில் இரண்டு வேலையை பார்த்துட்டு போனா கூட புண்ணியம்.”, என்றபடி உள்ளே செல்ல நந்தினிக்கு வருத்தமாகி விட்டது.
சந்திரனோ எதுவுமே நடக்காதது போல் அவன் போக்கில் வண்டியைக் கிளப்பிச் சென்றிருந்தான்.
அதன் பின்னான பொழுதுகள் மொத்தமும் நந்தினிக்கு ராணியுடன் தான். அவளது சிறு வயது தொடங்கி கல்லூரி வரை நடந்ததெல்லாம் பேசிய படியே வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை முதல்ல பார்த்தப்போ வாயே பேச மாட்டியோனு நினைச்சேன் குகா..”
“பொதுவா அமைதி தான் அத்தை.. ஆனால் உங்ககிட்ட பேச்சு தானா வருது..”
“அது சரி.. ஆமா என்ன சொல்றான் உன் புருசன்?”, என்றதும் அமைதியாகி விட்டவளைப் பார்த்து பதட்டமானார் ராணி.
“என்ன மா கோபமா நடந்துக்கிட்டானா என்ன?”
“ச்ச சச்ச அதெல்லாம் இல்லை அத்தை. சாதாரணமா தான் பேசினார். கல்யாணம் அவருக்கு விருப்பமில்லாம நடந்துட்டதா சொன்னாங்க..
சீக்கிரமே சரி ஆகிடுவேன்னும் சொன்னாங்க..”
“ம்ம் நான் தான் சொன்னனே அவன் ரொம்ப பாசக்காரன்.
ஆனால் என்ன போறாத காலமோ அவனைப் போட்டு பாடா படுத்துது.”
“கவலைப்படாதீங்க அத்தை.. நீங்க வேணா பாருங்க அவரு தொழில்ல ஓகோனு வர தான் போறார்.”
“உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் கண்ணு..”, என்றவர் கன்னம் கிள்ளி கொஞ்சினார்.
“அத்தை..”
“சொல்லு குகா..”
“நான் வேணா போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரட்டுமா?”
“!!”
“இல்ல சாய்ந்திரம் தான் வருவேன்னு சொன்னாரு. இப்போ தான் நான் இருக்கேனே கொடுத்துட்டு வரேன்..”
“ம்ம் அவனோடது தான் தூக்கி போட மனசில்லாம என்னவோ பொக்கிஷமா வைச்சுருக்கான்.”
“அதில் போயிட்டு வரேன் அத்தை..”
“புது இடம் பார்த்து போயிடுவியா கண்ணு?”
“அதெல்லாம் பத்திரமா போயிட்டு வருவேன் அத்தை..”
“சரி வா பாத்திரத்தில் போட்டு தரேன்.”, என்றவருக்கு அத்தனை மகிழ்ச்சி. தன் மகனின் நல்ல குணத்திற்கு ஏற்ற மனைவியைக் கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றி கூறினார்.
கூடையில் உணவுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவள் சைக்கிளை எடுக்க எதிரில் வந்த வசந்தன் அவளை கேள்வியாய் பார்த்த வண்ணம் உள்ளே சென்றிருந்தார்.
அங்கு கடையில் வந்திருந்த ஒரு வாடிக்கையாளருக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தவனின் கண்கள் விரிந்தன.
தன் புது மனைவியை இப்படி ஒரு நிலையில் எதிர்பாராதவனுக்கு நொடி நேர ஆனந்தத்தைக் கடந்து கோபம் எழுந்தது.