விடுமுறை முடிந்து அலுவலகமும் செல்ல ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிற்று. அலெக்ஸிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. இவளிடம் அவன் எண் இருந்தாலும் அவளாக அவனை தொடர்பு கொள்ள ஒரு தயக்கம்.
ஒரு வேளை மேம்போக்காக பழகி இருந்தால், தானாக தொடர்பு கொள்வதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்றும் தெரியாதே. அவளறியாமாலே அலெக்ஸ் மிருதுளாவிடம் ஒரு தேடலை துவக்கி இருந்தான்.
அவன் பேசியதில் விருப்பத்தையும், ஒரு தீவிரத்தையும் மிருதுளா உணர்ந்தே இருந்தாள். ‘டேட்டுக்கு போலாம். ரூல்ஸ் ஃபிக்ஸ் பண்ணலாம்னு கதைய விட்டுட்டு ஆளையே காணோம்’ என்று அவள் போக்கிலே அலெக்ஸைப் பற்றி ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.
‘ஒரு வேளை டைம் பாஸுக்கு தான் பேசி இருப்பாரோ, நாமா தான் தப்பா புரிஞ்சுகிட்டோமோ’ என ஒரு வாரமாக மண்டை குழம்பியது தான் மிச்சம். ஜெனி கூட கேட்டு பார்த்து விட்டாள்.
“என்ன லவ்லி எப்போ பார்த்தாலும் ஏதோ யோசிச்சிட்டே இருக்க மாதிரி தெரியுது. எதுவும் பிரச்சனையா?”
அப்பொழுது தான் தன் கவனச்சிதறலை உணர்ந்த மிருதுளா,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஜெனி. இந்த மாசம் ஃபோர்காஸ்ட் டேலி ஆகலை. அதான் ஜேக் கிட்ட கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்லை. இன்னிக்கு லஞ்ச் எடுத்திட்டு வரலை. வெளில போகலாமா?” என்க,
அவளை ஆச்சரியமாகப் பார்த்த ஜெனி, ‘போகலாம் என்பது போல் தலையாட்ட, அவளுடன் கிளம்பினாள்.
இருவரும் வழக்கமாக செல்லும் கடைக்குச் செல்லாமல், ஜெனி பரிந்துரைத்த வேறு ஒரு இடத்திற்கு சென்றனர்.
லண்டன் பிரிட்ஜின் அருகில், பரோ மார்க்கெட் என்ற இடம் உலகின் பலவிதமான உணவு வகைகளுக்கு வெகு பிரசித்தம். எல்லாம் ரோட்டோர கடை போல் சில மணி நேரங்களுக்கு மாத்திரம் இருக்கும்.
அரிதாக வீட்டில் இருந்து உணவு எடுத்து வராத நாட்களில், ஏதாவது ஒரு துரித உணவகத்தில் ஒரு சாண்ட்விஜை வாங்கி எளிதாக முடித்து விடுவாள் மிருதுளா. இன்று ஜெனி தான், புதிதாக ஏதாவது உணவு வகையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று இங்கு அழைத்து வந்தாள்.
வரும் வழியில் அன்று போலேவே, ‘ரெக்சி’ என்ற குறியீடுடன் வேறு ஒரு சுவர் சித்திரம் வரையப் பட்டு இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்திருப்பது போலவும், மறு கையால் அலைபேசியை பிடித்து அதில் மூழ்கி இருப்பது போலவும் தத்ரூபமாக ஒரு சித்திரம்.
பல உறவுகளின் தற்கால சூழலை அழகாக எடுத்துரைப்பது போல் இருந்தது.
“ஹேய் லவ்லி, இங்க பார்த்தியா? உங்க ஆளு” என்ற ஜெனி, மிருதுளாவை அழைக்க, அவளும் அருகில் வந்து அந்த சித்திரத்தை ரசித்துப் பார்த்தாள்.
“நான் எவ்ளோ வருஷமா இந்தப்பக்கம் வந்துருக்கேன். இது மாதிரி எல்லாம் பார்த்தது இல்லை. ரெக்சி லண்டன் பிரிட்ஜ லீசுக்கு எடுத்துட்டான் போலேயே. வாரத்துக்கு ஒன்னு வரைஞ்சு வைக்கிறான்” என ஆச்சரியமாகக் கூறினாள்.
மிருதுளா பதில் எதுவும் கூறவில்லை. அன்று பார்த்த ரெக்சியின் சித்திரத்தை விட இந்த சித்திரம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்த சித்திரத்தையே சற்று நேரம் ஆழ்ந்து பார்த்தாள்.
சித்திரம் சொன்ன செய்தி எவ்வளவு உண்மை என்றே தோன்றியது. அருகில் இருக்கும் உயிரும், உணர்வும் கலந்த மனிதர்களிடம் பேசுவதை விட, கூட இருந்து நேரம் செலவழிப்பதை விட, அலைபேசி தானே பலரது முதன்மை தேர்வாக இருக்கிறது.
அதில் மனம் சற்று தெளிவடைய, ஏனோ சம்பந்தம் இல்லாமல் அலெக்ஸின் ஞாபகம் வேறு வந்து தொலைத்தது. சிலருக்கு அலைபேசியில் குறுஞ்செய்தி வழியாகத் தான் பேச்சு இயல்பாக வரும். நேரில் பார்த்தால் பேச்சு குறைவே. ஒரு வேளை அலெக்ஸ் இதற்கு எதிர்பதமோ என அவனுக்கு சாதகமாக சரியாக யோசித்தாள்.
அவனிடம் ஒரு தீவிரம் இருந்தாலும், இருக்கும் வேலையை விட்டு ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுபவன் போலும் தெரியவில்லை.
‘அடக்கடவுளே, அலெக்ஸ்ன்ற பேரைத் தவிர ஒன்னும் தெரியாது. ஒரு ரெண்டு மணி நேரம் தான் பேசி இருப்பேன். அதுக்குள்ள ஏன் இவ்ளோ எதிர்பார்ப்பு, குழப்பம்’ என மறு நிமிடமே சலிப்பாகவும் இருந்தது.
வெகுவாக முயன்று, சிதறும் எண்ணங்களை சிறைபிடித்தவள், அலுவலகம் திரும்பவும் வேலையில் கவனம் வைத்தாள்.
அலெக்ஸ் அன்று தான் வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தான். அவன் எடுத்திருந்த ப்ராஜக்ட்டை சிறப்பாக முடித்து விட்டான். பல முறை மிருதுளாவுக்கு அழைக்க நினைத்து பின் தயக்கத்தில் அழைக்காமலே விட்டு விட்டான்.
அவனுக்கும் சற்று நேரம் தேவைப்பட்டது, தன்னையே சுய பரிசோதனை செய்து கொள்ள. அதனால் மிருதுளாவை அழைக்க வேண்டும் என்ற ஆவலை எட்ட நிறுத்தி வைத்து, வேலையில் ஆழ்ந்து விட்டான்.
அன்று அவர்களது அலுவலக அறைக்கு வந்தவனை, ராபர்ட் ஆர்ப்பட்டமாக வரவேற்றான். அலெக்ஸ் செய்து முடித்த ப்ராஜக்டைப் பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்தவனை அலெக்ஸ் மறுத்து விட்டான்.
“ஏன் சேண்டி? ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா?”
“தேவை இல்லை. எப்பவும் போல நீ பேப்பர் வொர்க் பார்த்துக்கோ. இது நான் நினைச்சத விடவே ரொம்ப நேரம் இழுத்துடிச்சு. சோ ஒரு பிரேக் எடுத்து கொஞ்சம் கமர்சியல் வொர்க் பண்ணலாம்.
எனக்கு ஒரு பைப் லைன் ரெடி பண்ணி வை. அடுத்து ஒரு மூனு – நாலு மாசத்துக்கு சேர்ந்தாப்புல பண்ற மாதிரி. சம்மர்ல பெரிசா என்னோட பெர்சனல் பிராஜக்ட் பண்ண முடியாது. ஃபால்ல தான் அடுத்தத பத்தி யோசிக்கனும்.”
“ரைட். டன் டீல்” என்றவன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன்,
“ஈவ்னிங் என்ன பிளான்? என் கூட வீட்டுக்கு வரியா. வீல் ஆர்டர் அ பிட்ஸா அண்ட் சில் அவுட் எ பிட்?” என நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.
“ம்ம்ம்ம்” என்று உதடு மடித்து யோசித்தவன்,
“தெரியல, வில் டிரை. ஐ’ல் டெக்ஸ்ட் யூ” என்று கிளம்பி விட்டான்.
மிருதுளா அலுவலகம் முடிந்து கிளம்ப அன்று சற்று தாமதம் ஆகி விட்டது. ஜேக்குடன் சேர்ந்து கணக்குகளை சரி செய்து முடிக்க நேரம் எடுத்ததால், ஜெனி அவளுக்கு முன்பாகவே கிளம்பி விட்டாள்.
இருவரும் ஒரே இடத்திற்கு செல்வதானாலும், வேலை நேரங்கள் மாறுபடும் என்பதால், அவரவர்க்கு தோதான நேரத்தில் கிளம்பி விடுவர். வசந்த காலத்தில் பகல் பொழுதுகள் அதிகமாகி இருக்க, அவள் கிளம்பிய நேரம் வெளிச்சமாக தான் இருந்தது.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவள், தொடர்வண்டி நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கினாள். சற்று தூரம் நடந்ததும், யாரோ பின் தொடர்வது போல் இருந்தது.
முதலில் கவனிக்காமல் அவள் பாட்டுக்கு நடக்க, ஆள் நடமாட்டம் சற்று குறைவான பாதையில் மாற்றி செல்ல, அந்த நபர் அவளை பின் தொடர்வது அப்பட்டமாக தெரிந்தது.
திரும்பி பார்க்காமல் விறுவிறுவென நடந்து தொடர்வண்டி நிலையத்துக்குள் நுழையவும், அவள் ஏற வேண்டிய வண்டி வரவும் சரியாக இருந்தது. ஏறிய பின் தான் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.
வசதியான இடம் பார்த்து அமர்ந்தவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் கவனிக்கவில்லை. வழக்கம் போல் புத்தகத்தை விரித்து அதில் மூழ்கியவள், அருகில் யாரோ அமரும் அரவம் உணர்ந்து சற்று தள்ளி அமர்ந்தாள்.
“எப்படி இருக்க மிரு?” என்று மிகவும் பரிச்சயமான குரல் கேட்க, விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.
வினய் தான் அவளருகில் அமர்ந்திருந்தான்.
என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் ஒரு நிமிடம் உறைந்து விட்டாள். சத்தியமாக அவனை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டது.
அவளது அலைபேசி எண்ணையும், தங்கும் இடத்தையும் மாற்றி இருக்க வினயால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. பலவிதமாக முயன்று கடைசியில் அவளது அலுவலத்தை இன்று தான் கண்டு பிடித்திருந்தான்.
சில மணி நேரங்கள் காத்திருந்தவன், வெளியே நின்று பேச முயன்றால் மறுத்து விடுவாள் என நினைத்து, அவளைப் பின் தொடர்ந்து இந்த பெட்டியில் ஏறி இருந்தான்.
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முடியாதல்லவா. மிருதுளாவை நன்றாக அறிந்திருந்தவன், வெளியிடத்தில் பிரச்சனையை வளர்க்க விரும்ப மாட்டாள் என்பதால் தான் கொஞ்சம் தைரியமாக வந்து அமர்ந்தான்.
“ப்ளீஸ் மிரு, நான் சொல்றத கேளு. என் பக்கத்தை நான் உனக்கு சொல்லனும். அதுக்கு ஒரு வாய்ப்பு கொடு. அது மட்டும் தான் நான் உன் கிட்ட கேட்குறேன்” என மெதுவாக கெஞ்சினான்.
மிருதுளாவுக்கு, பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட உணர்வு. அவனுடன் பேசவும் பிடிக்கவில்லை. நடந்து முடிந்ததை திரும்ப அலசி ஆராயும் மன நிலையும் இல்லை. சில்லு சில்லாய் உடைந்து விட்ட கண்ணாடியை விரிசல் இல்லாமல் ஒட்ட வைக்க முடியுமா என்ன?
பேசாமல் இருப்பதே சிறந்த வழி என்று முடிவெடுத்தவள், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றாள்.
“நான் சுமித்ரா பத்தி அம்மா கிட்ட முதல்லயே சொல்லிட்டேன் மிரு. அப்போ எல்லாம் எதுவும் சொல்லாம கடைசி நிமிஷம் என்னை கார்னர் பண்ணிட்டாங்க. யாருகிட்டயும் சொல்ல முடியாதபடி என் கைய கட்டி போட்டுட்டாங்க.
உன்னை கல்யாணம் பண்ணின பிறகு எப்படியாவது அதுல பொருந்தி போயிடனும்னு தான் நினைச்சேன். ஆனால் பண்ணது எல்லாம் பாவம் தான். அதுலேர்ந்து மீள முடியாத சூழ்நிலைல மாட்டிக்கிட்டேன். சுமித்ரா எனக்கு எந்த வாய்ப்பும், நேரமும் கொடுக்கலை.
அப்புறம் குட்டிமா பிறந்தப்புறம் இன்னுமே சிக்கல் ஆயிடுச்சு. உனக்கு ஒரு வழி பண்ணனும், ஒரு வாழ்க்கை அமைச்சு குடுத்துடனும்னு தான் மிரு நினைச்சேன்.
நான் பண்ணது பச்சைத் துரோகம் தான். இல்லைன்னு எல்லாம் சொல்லல.
ஆனால் நான் சொல்றதுக்குள்ள எல்லாமே கை மீறு போய்டுச்சு. எந்த முகத்தை வைச்சுட்டு உன்கிட்ட சொல்ல முடியும் சொல்லு. நான் நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு. சூழ்நிலைக் கைதி ஆகிட்டேன் அப்டின்றத தவிர ஒன்னும் என்னால சொல்ல முடியாது.
நான் பண்ணதுக்கு நீ ஏன் இங்க தனியா இருந்து கஷ்டப்படனும்? இந்தியா போய்டு. அம்மா விஜய் கிட்ட பேசிட்டாங்க. நானும் நமக்குள்ள எதுவும் நடக்கலை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தீப்பார்வை பார்த்தாள்.
அந்தப் பார்வையின் தீட்சண்யம் தாங்காதவனாய், வாயை இறுக மூடிக் கொண்டான்.
“எனக்கு ஒன்னு மட்டும் சொல்லுங்க அத்தான். எனக்கு நடந்த மாதிரி நாளைக்கு உங்க பொண்ணுக்கு நடந்தாலும், இதே வசனம் தான் பேசுவீங்களா?” என நறுக்குத்தெரித்தாற் போல் கேட்க, என்ன சொல்வான்.
அதற்கும் மௌனமே பதிலானது,
“இல்லை நான் தெரியாம தான் கேட்குறேன். நான் என்ன பொம்மையா? நீங்க இல்லாட்டி உங்க தம்பின்னு தூக்கி குடுக்குறதுக்கு.
உங்க மேல் ஒரு காலத்தில எனக்கு நிறைய மரியாதை இருந்தது. அன்பும், அக்கறையும் இருந்துச்சு. அது பரஸ்பரமான உணர்வுன்னு தப்பா புரிஞ்சுட்டு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன்.
அது தான் நான் பண்ணின பெரிய தப்பு. ஆனா நீங்க பண்ணது எந்த வகையில் சேர்த்தி? நீங்க யாருகிட்ட சொல்லலைன்னாலும், என் கிட்ட சொல்லி இருக்கணும். அது கடந்த காலம்னு நீங்க நினைச்சிருந்தாலும், எனக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்சிருந்தா சொல்லிருப்பீங்க.
ஏதோ கடவுள் புண்ணியத்தில உங்க மனைவி வந்து உண்மைய உடைச்சிட்டாங்க. இல்லாட்டி இன்னும் எத்தனை வருஷம் என்னைய ஏமாத்தி உட்கார வைச்சிருப்பீங்களோ?
உண்மையிலேயே எனக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு நினைச்சீங்கன்னா என் முகத்திலயே இனி மேல் முழிக்காதீங்க” என அமைதியாக, அழுத்தமாக உரைத்தவள், சட்டென்று எழுந்து விட்டாள்.
மனம் படபடவென்று அடித்தது. வினயிடம் தைரியமாக பேசி விட்டாலும், உடல் மெலிதாக நடுங்கியது.
அவள் எழுந்ததும், வினயும் எழுந்து அவள் அருகில் வர,
“எனி பிராப்ளம் மிரு?” என மிருதுளாவுக்கு பக்கத்தில் கேட்டது அலெக்ஸின் குரல்.
அதில் இன்னுமே அதிர்ச்சியானவள், விழி எடுக்காமல் அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையில் என்ன இருந்தது என்று கிரகிக்க அலெக்ஸ் எடுத்தது சில நொடிகளே. கண்டிப்பாக கொஞ்சம் கோபமும், குற்றஞ்சாட்டுதலும் இருந்தாலும், பெரும்பான்மை ‘அப்பாடா, வந்துவிட்டாயா’ என்ற நிம்மதியே தெரிந்தது.
அவள் அந்தப் பெட்டியில் நுழைந்தவுடனே அவளை கவனித்து விட்டான். ஆச்சரியத்துடன் அவளருகில் சென்று பேச நினைத்தவன், அவள் அருகில் அமர்ந்த புதியவனைப் பார்த்து புருவம் சுருக்கினான்.
சரி, யாரோ தெரிந்தவர் போலும் என அமைதியாக நின்று விட்டவன், மிருதுளாவின் உடல் மொழி ஒரு அசௌகர்யத்தை வெளிப்படுத்த, அவள் மீது தான் தீவிரமாக பார்வையை பதித்திருந்தான்.
அவர்கள் பேசுவது முழுதாக கேட்கவும் இல்லை. புரியவும் இல்லை.
ஆனால் அந்தப் புதியவன் பேசுவது மிருதுளாவுக்கு பிடிக்கவில்லை என்ற அளவு புரிந்தது. அதற்குள் அவள் எழுந்து விட தாமதிக்காமல், அருகில் வந்து விட்டான்.
அவள் இன்னுமே பதிலளிக்காமல் இருப்பதைப் பார்த்தவன்,
“ஆர் யூ ஓகே மிரு?” என்றவன், அவள் உடல் வெட வெடப்பதைப் பார்த்து மெதுவாக, ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டான். தண்ணீரை எடுத்து நீட்ட, மறுக்காமல் வாங்கி குடித்தவள் அவனிடமே திருப்பி நீட்டி விட்டு அவனை விட்டு விலகி நின்றாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வினய்க்கு ஒன்றும் புரியவில்லை. ‘சரி, அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவனாய் இருக்கும்’ என முடிவெடுத்தவன், அவள் எதுவும் பேசாததால்,
“ஷி இஸ் ஓகே. ஐ ஆம் ஹெர் கசின்” என்று அலெக்ஸிடம் கையை நீட்டினான்.
‘கசின்?’ என யோசனையாகப் பார்த்தவன், வினயிடம் கை குலுக்கினான்.
ஆனாலும் எங்கோ பிசிறடித்தது. சரி அவளே சொல்லட்டும் என்று அலெக்ஸ் அமைதி காக்க, வினயோ அலெக்ஸுக்கு புரிய கூடாது என்பதற்காக,
“யாரு மிரு இது, உங்கூட வேலை பார்க்குறவனா? பார்க்க ரவுடிப் பய மாதிரி இருக்கான்” என வார்த்தையை விட்டான்.
‘இது என்ன அநாகரீகமான பேச்சு’ என அவனை கண்டனத்துடன் பார்த்தவள்,
“ஹி இஸ் மை பிரெண்ட், அலெக்ஸ்” என்று விட்டு,
“அலெக்ஸ், திஸ் இஸ் வினய். மை கசின் அண்ட் எக்ஸ் ஹஸ்பண்ட்” என வெறுப்புடன் கூறினாள்.
‘கசின் அண்ட் எக்ஸ் ஹஸ்பண்ட்’ என்றதில் குழம்பிய அலெக்ஸ், அதை பின்பு தெளிவுபடுத்தலாம் என்று முடிவெடுத்தவன்,
“ரைட், இஸ் ஹி டிரபுளிங் யூ? யூ லுக் பேல்” என வினவினான்.
‘இதற்கு எப்படி பதில் அளிப்பது’ என மிருதுளா தயக்கமாக பார்க்க, அதில் புருவம் சுருக்கியவன், அப்படித் தான் என்று முடிவு செய்து கொண்டான்.
அவ்வளவு நேரம் இருந்த ஒரு மில்லி மீட்டர் இலகுத்தன்மை கூட விடை பெற்று விட, அலெக்ஸின் முகம் இறுகியது.
வினய்க்கு இது எதுவும் உவப்பானதாக இல்லை.
“ஷி இஸ் மை ரிலேடிவ். வி ஆர் ஜஸ்ட் டாக்கிங். வாட் இஸ் யுவர் பிராப்ளம்” என்று அலெக்ஸிடம் கூறியவன், மிருதுளாவிடம் திரும்பி,
” என்ன மிரு நடக்குது. உன் கிட்ட நான் பேசினா இவனுக்கு எதுக்கு கோபம் வருது? பிரெண்ட் மட்டும் தானா இல்லை அதுக்கும் மேலயா?
இவனுக்காக தான் இந்தியா போகாம இங்க உட்கார்ந்திருக்கியா. பார்த்து மிரு. வெள்ளைக்கார பயலுகள எல்லாம் நம்ப முடியாது. கல்யாணம், கத்திரிக்காய்ல எல்லாம் நம்பிக்கை இருக்காது. டைம் பாஸுக்கு தான் எல்லாமே பண்ணுவானுங்க. உனக்கும், இந்த ஊர் காரனுக்கெல்லாம் செட்டே ஆகாது.
ஒழுங்கா, ஊரு போய் சேருற வழிய பாரு. நான் மாமா கிட்டயும், மகி கிட்டயும் பேசுறேன். விஜய் வேண்டாம்னா பரவாயில்லை, விட்டுடலாம். நம்ம வேற யாரையாச்சும் பார்க்கலாம். என் மேல இருக்குற கோவத்தில உன் வாழ்க்கைய சீரழிச்சுக்காதே” என இலவச ஆலோசனை வழங்கினான்.
அவ்வளவு தான். மிருதுளாவின் பொறுமை காற்றில் பறந்து விட்டது.