அலெக்ஸிற்கு இது வழக்கம் தான். காலில் சக்கரம் என்பது போல் தான் அவனது பொழுதுகள் கழியும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் லண்டனை விட்டு கிளம்பி சில தினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரிந்து, உடல் களைத்து, மனம் புத்துணர்ச்சி பெற்று, அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்த யுக்திகள், திட்டத்துடன் திரும்புவான்.
எப்பொழுதும் தனிமையான பயணங்கள் தான். பல நேரங்களில் ராபர்ட்டிற்கு கூட இவனது முழு பயண திட்டங்களும் தெரியாது. ஏனோ அடுத்தவரின் அக்கறை ஏற்பது கூட அலெக்ஸிற்கு சற்று கடினமான காரியம் தான். இயல்பும், வளர்ந்த விதமும் அவனை எல்லாவற்றையும் தன்னிச்சையாக செயல்படுத்தவே பழக்கப்படுத்தி இருந்தது.
ஸ்காட்லாந்திற்கு பல முறை வந்திருந்தாலும், இந்த இடத்திற்கு வருவது முதல் முறை. இதுவரை கடந்த சில தினங்கள் அவனுக்கு ஏற்ற விதத்திலேயே இருக்க, ’நாட் பேட், ஆனா இவ்ளோ காசு இதுக்கு வொர்த் இல்லை’ என்று தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.ஒரு முறை ‘முயற்சித்துப் பார்க்கலாம்’ என்ற முடிவில் தான் இந்த இடத்தைத் தெரிவு செய்திருந்தான்.
ஆனால் வந்த பின் அங்கிருக்கும் வசதிகள் வெகு ஆடம்பரமாக இருக்க, தனது தேவைக்கு இது சற்று அதிகம் என உணர்ந்தான். திட்டமிட்டதை விட சில தினங்கள் முன்பதாகவே லண்டன் திரும்பி விடலாமா, இல்லை அருகில் காட்டுக்குள் இருக்கும் ‘கேம்பிங்’ சைட் போய் விடலாமா என்று இருமனதாய் இருந்தவனை உணவு தயாரானதிற்கான தகவல் கலைக்க, அதைப் பெற்று கொண்டு தனது இடத்திற்கு திரும்பினான்.
பீட்டரும், ஜெனியும் தங்களுடன் உணவு அருந்த வருமாறு மிருதுளாவை அழைக்க, அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி தன் அறையிலேயே முடித்துக் கொள்வதாகக் கூறி தவிர்த்து விட்டாள்.
மறுநாள் காலை விரைவாகவே பீட்டரும், ஜெனியும் மலையேற்றத்திற்கு சென்று விட, மிருதுளா வெகு நேரம் கழித்தே விழித்தாள். அவர்கள் தங்கி இருந்த இடத்திலேயே பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க, மிருதுளா அதில் சிலவற்றை முயற்சிப்பதாக கூற, பீட்டரும் ஜெனியும் இரு தினங்கள் மலையேற்றம் செல்லவும், பின் மிருதுளாவுடன் சேர்ந்து மற்ற இடங்களை சுற்றிப் பார்ப்பதும் தான் அவர்கள் திட்டம்.
புது இடம். இயற்கை எழில் கொஞ்சும் சூழல். இரவின் இருளில் தெரியாத அழகெல்லாம், பகலின் வெளிச்சத்தில் பளபளத்தது. தேநீர் தயாரித்து வெளியில் வந்து அமர்ந்தவளுக்கு, அந்த சூழ்நிலை இதத்தையும், குதூகலத்தையும் கொடுத்தது.
சில வருடங்கள் கழித்து மனதில் அலைப்புருதல் நின்று விட, மனம் நிர்சலனமாய் இருந்தது. இந்த நொடி இப்படியே உறைந்து விடாதா என்று கூட லேசான ஏக்கம் எட்டிப் பார்த்தது.
அப்படியே அந்த நிமிடத்தின் நெகிழ்வினில் தன்னையே மறந்து அமர்ந்திருந்தாள் மிருதுளா. ‘நாள் முழுவதும் இப்படியே அமர்ந்திருந்தாலும் சலிக்காது போலவே’ என்று எண்ணியவாறு, நிதானமாக தேநீரை அருந்தியவள், அலைபேசி ஒலி கேட்டு வீட்டிற்குள் சென்றாள்.
கலைவாணி தான் அழைத்திருந்தார். வழக்கமாய் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வைக்க, மீண்டும் அழைப்பு. ஏதோ தெரியாத எண்ணாக இருக்க, எடுப்பதா, வேண்டாமா என யோசித்துக் கொண்டே அழைப்பை ஏற்றாள்.
அவர்கள் தங்கியிருக்கும் விடுதியின் வரவேற்பு குழுவில் இருந்து தான் அழைத்திருந்தார்கள். ஏற்கனவே மிதிவண்டிக்கு முன் பதிவு செய்திருக்க, அது தயாராக இருப்பதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தகவல் அளித்தனர்.
ஜெனி கேட்ட பொழுது, மிருதுளா தான் இதை தெரிவு செய்திருந்தாள். சிறுவயதில் இருந்தே மிதிவண்டி மீது ஆர்வம் தான். பள்ளிக் காலங்களில் வெகுவாக உபயோகித்த ஒன்று. ஆனால் அதற்குப் பின் பெரிதாக வாய்ப்பு கிட்டியதில்லை.
‘சரி, தனியாக அறையில் அடைந்து கிடப்பதற்கு இது தேவலாம்’ என்று தான் இந்த மிதிவண்டி திட்டம். ஆனால் காலையில் மனதிற்கு கிடைத்த இதம், பேசாமல் இப்படி வெளியிலே இருந்து விடலாமே என ஒரு பக்கம் தோன்ற, முன்பதிவு செய்ததையே மறந்து விட்டிருந்தாள்.
வரவேற்பு குழு ஞாபகப்படுத்தியதும், சிறிது நேரத்தில் தன்னை தயார்படுத்தி அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றாள். அங்கு, பின் எழுபதுகளில் இருக்கும் ஒரு முதியவர், மிருதுளாவை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.
அவளை நலம் விசாரித்தவர், மிதிவண்டி குறித்து பல கேள்விகளை கேட்க திருதிருவென விழித்தாள். அவர் பேசிய ஆங்கிலம் ஒரு பக்கம் புரியவில்லை என்றால், புரிந்த சில கேள்விகளுக்கும் அவளுக்கு பதில் தெரியவில்லை.
அவள் முகத்தைப் பார்த்து என்ன புரிந்து கொண்டாரோ, அவரே சில மாதிரிகளை காட்டி அவள் உயரத்திற்கு ஏற்ற ஒன்றை தெரிவு செய்ய சொன்னார்.
பின் இருபக்கமும், கியர் மாற்றுவது எப்படி என்றும் விளக்கி, செயல்படுத்தி காண்பித்தார்.
புரிந்தாற்போல் மிருதுளா தலையை எல்லா பக்கமும் உருட்ட, ஒரு தலைக்கவசத்தையும் கொடுத்து, பத்திரமாக ஓட்டும்படி கூறி அடுத்த விருந்தினரை கவனிக்க சென்றார்.
மிருதுளாவுக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. அவள் பழகின எதிர்பார்த்த மிதிவண்டி வேறு. மிதிவண்டியில் கியர் இருப்பதே இப்பொழுது தான் கேள்விப்படுகிறாள்.
இதில் தலைக்கவசம் எதற்கு என்றும் புரியவில்லை. ‘சும்மா ஒரு சுற்று சுற்றி வர என்னா பில்டப்’ என எண்ணிக் கொண்டவள், மெதுவாக ஏறி அமர்ந்து பெடலை அழுத்த ஆரம்பித்தாள்.
அது மிக கடினமாக இருக்கவே, அவர் சொல்லியது போல் கியரை மாற்ற முனைந்தாள். அந்த நேரத்தில், செயின் மாறுவது சத்தம் எழுப்ப சற்று பயந்தவள் அதன் பின், பெடலை அழுத்துவது சற்று எளிதாக இருக்க, அதன் பின் எதையும் மாற்றாமல் மிதமான வேகத்தில் செல்ல ஆரம்பித்தாள்.
மர வீடுகள் இருந்த பகுதியை தாண்டினதும், ஒரு சிறிய ஒற்றையடி பாதை போல் சிறு கற்கள் நிறைந்த சாலை மேடு இருந்தது. அதன் இடப்புறம் முழுவதும் மலைகள் சூழ்ந்திருக்க, வலப்புறம் பள்ளத்தில் அழகிய நீரோடை.
பார்க்க பார்க்க, கண்கள் தெவிட்டாத காட்சியை ரசித்தவள் அந்த சாலையிலேயே தன் பயணத்தை தொடர்ந்தாள். அது நடப்பதற்கும், மிதி வண்டி செல்வதற்குமான பிரத்யேகமான பாதை.
அவளைக் கடந்து, தனியாக, தம்பதியராக, குழுவாக என சில மிதிவண்டிகள் கடந்து சென்றன. அவர்களை கவனித்தவள், தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.
அவர்கள் அனைவரும் அதற்கேற்ற உடையில், எல்லா பாதுகாப்பு கருவிகளுடனும் இருக்க, அவள் ஒருத்தி தான் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். ‘ஆனாலும் இதெல்லாம் ஓவராத்தான் இருக்கு. ஒரு சைக்கிள் ஓட்ட இந்தப் பாடா’ என எண்ணிக் கொண்டவள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல, சில நிமிசங்களிலேயே அவளைக் கடந்து சென்றவர்கள், ஒரு ஏற்றப் பாதையில் சென்று மறைந்து விட்டிருந்தனர்.
பொதுவாக இதுபோல் மிதிவண்டி செலுத்துபவர்கள், அதை முறையான பயற்சியோடு, வழமையாக செய்பவர்கள். அவர்களுக்கு இந்த மலைப்பாதையின் நெளிவு சுளிவுகள் தெரியும். அதற்கென்றே இருக்கும் சிறப்பு மிதிவண்டியை தேர்வு செய்து, சர்வ சாதராணமாக 40-50 மைல் கூட பயணம் செய்வர்.
மிருதுளாவிடம் அந்த முதியவர் கேட்ட கேள்விகளும் அதற்காக தான். அவளது தடுமாற்றம் புரிந்தே, அவர் இருப்பதிலேயே எளிதாக கையாளக் கூடிய ஒரு வண்டியைத் தான் கொடுத்திருந்தார்.
தெரியாத விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லையே. எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா என்ன. அங்கிருக்கும் மிதிவண்டிக்கான பாதை எப்படிப்பட்டது, எது இலகுவான பாதை, என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றெல்லாம் மிருதுளாவும் கூகுளில் பார்த்திருக்கலாம் , இல்லை ஜெனியிடமாவது கேட்டிருக்கலாம்.
அதையெல்லாம் விடுத்து, பாதை இரண்டாக பிரியும் இடத்தில் மிருதுளா நேராக சமதளத்தில் இருந்த பாதையில் செல்லாமல், சற்று முன் அந்தக் குழுவினர் சென்ற மலையேற்றப் பாதையில் சென்றாள். முன்பே ஜெனி, மலையில் இருந்து கீழே பார்க்கும் ‘வியூ பாயிண்ட்கள்’ பற்றி கூறி இருந்தாள். எனவே அதற்கான பாதை தான் இது என்று அவளாகவே முடிவெடுத்து, அந்தப் பாதையை தொடர்ந்தாள்.
முதலில் ஒரு சிறு ஏற்றம் தான். அதற்கே மிருதுளாவுக்கு மூச்சு வாங்கியது. சரியான உடல் எடையுடன் இருக்கும் ஆரோக்யமான பெண் தான். ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதே.
பெரிதாக உடற்பயிற்சி என்று தனியாக எதுவும் செய்வதில்லை. மிஞ்சிப் போனால், அவ்வப்பொழுது நடைபயிற்சி மட்டுமே. அதுவும் கால நிலை சாதகமாக அமைந்தால். மழை, குளிர், பனி இல்லாத அது போன்ற நாள்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அதைக் கடந்தவுடன், ‘அப்பாடா’ என நிமிர்வதற்குள் அடுத்த ஏற்றம், கிட்டத்தட்ட செங்குத்தாக இருந்தது. சிறு கடினமான இருக்கை. பின்புறம் வலி எடுத்தது. கியரை எப்படி மாற்ற வேண்டும் என்று தெரியாததால், ஏற்றத்தில் அழுத்துவது மிகவும் கடினமாகி விட்டது.
ஒரு கட்டத்தில் மூச்சடைக்க, வண்டியில் இருந்து இறங்கி விட்டாள். சிறிது தூரம் உருட்டிக் கொண்டே ஏற, கால்கள் இரண்டும் ஓய்விற்கு கெஞ்சியது. தலை வேறு சுற்றுவது போல் இருக்க, தண்ணீர் கூட எடுத்து வராத தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள். சற்று தூரத்தில், வளைவில் சிறு ‘வியூ பாயிண்ட்’டும், கல் திண்டும் இருக்க அதில் அமர்ந்து விட்டாள்.
அங்கிருந்து பார்க்க, மொத்த இடமும் பச்சைப் போர்வை போர்த்தியது போல் அவ்வளவு அழகாக இருந்தது. பரவாயில்லை, இதைப் பார்க்கும் போது இவ்வளவு நேரம் பட்ட கஷ்டம் ஒன்றும் இல்லை தான் என நினைத்துக் கொண்டாள்.
வெகு தொலைவு வந்து விட்டோமோ என்பது போல் நேரத்தைப் பார்க்க, முக்கால் மணி நேரம் ஆகி இருந்தது. என்னவோ பல மணி நேரங்கள் ஆனது போல் இருந்ததே என யோசித்தவள், நேரம் பெரிதாக ஆகவில்லை என்றாலும், இதற்கு மேல் உடலில் தெம்பில்லை, திரும்பி விடுவதே மேல் என்று முடிவெடுத்து வண்டியை எடுத்து கிளம்பினாள்.
ஏறுவது தானே கஷ்டம், இறங்குவது எளிது தானே என ஒரு சிறு சந்தோசமும், உற்சாகமும் தொற்றிக் கொண்டது. சிறிது தூரம் சமதளமான பாதையில் ஓட்டியவள், செங்குத்தான சரிவில் இறங்க ஆரம்பித்தாள்.
அவள் பெடலை அழுத்தாமலே, மிதிவண்டி படு வேகமாக கீழிறங்கியது. கியரை ஏதோ தவறான விதத்தில் இயக்கி விட, பிரேக்கை அழுத்தினாலும் வண்டியின் வேகம் குறையாமல் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது.
மிருதுளாவுக்கு பயத்தில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. பயத்தில் கண்ணை இருக மூடிக் கொண்டவள், கண்ணைத் திறந்த போது உடம்பு முழுவதும் அப்படி ஒரு வலி.
ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியாமல் தலை குப்புற கீழே விழுந்திருந்தாள். சரிவில் இறங்கி சமதளத்தை அடைந்தும், வேகம் குறையாமல் வந்த வண்டி அங்கிருந்த சிறிய பாறையில் இடறி ஒரு பக்கம் விழ, மிருதுளா இன்னொரு பக்கம் விழுந்தாள்.
தெய்வாதீனமாக தலைக்கவசம் இருந்ததால் தலை தப்பியது. உடல் முழுவதும் உடை மறைத்திருக்க, முகத்திலும் உள்ளங்கையிலும் சிறு சிராய்ப்பு. மற்றபடி அதிர்ச்சியும், விழுந்த வேகத்தின் அதிர்வினால் பெரும் வலி, அவ்வளவே.
எல்லாம் சில நிமிடங்களில் நடந்திருக்க, சற்று நேரம் கழித்தே சுதாரித்தவள், மெல்ல எழ முயன்றாள். அதற்குள்,
“ஆர் யூ ஓகே?” என குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள்.
பதட்டத்துடன் அலெக்ஸ் நின்றிருந்தான்.
சில நொடிகள் கண் சுருக்கி அவனைப் பார்த்தவள், ‘இவன் யார்’ என்பது போல் பார்த்தாள்.
தலைக்கவசத்துடன் இருந்தவளை அலெக்ஸூக்கும் தெரியவில்லை. அவள் எழ சிரமப்படுவது கண்டு தன் வலக் கையை அவள்புறம் நீட்ட, சில வினாடிகள் யோசித்தவள், மெதுவாக அவன் கையைப் பற்றிக் கொண்டு எழுந்து நின்றாள்.
தலை முதல் கால் வரை விண்விண்ணென்று வலி எடுக்க, வெளிக்காட்ட முடியாமல் நின்றாள். அவள் தலைக்கவசத்தை சிரமத்துடன் எடுக்க, அப்பொழுது தான் முழுதாக அவள் முகம் பார்த்தான்.
பார்த்தவன் கண்கள் ஆச்சரியத்தில் லேசாக விரிந்து, பின் இயல்பானது. அடி பலமோ என மெதுவாக ஆராய்ந்தவன், அவனது மிதிவண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.
நன்றியுடன் அதை வாங்கி பருகியவள், நிற்க முடியாமல், அங்கிருந்த சிறு பாறையில் உட்கார்ந்து விட்டாள். அதிர்ச்சியிலும், பயத்திலும் இருக்கிறாள் என உணர்ந்தவன், அவனது மிதிவண்டியை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு, அவளதையும் நிமிர்த்தி வைத்து விட்டு அவளருகில் வந்தான்.
“ஆர் யூ ஓகே?” என மீண்டும் கேட்க, இந்த முறை ஆமென்பது போல் ஒரு தலையசைப்பு மிருதுளாவிடம்.
“எங்கயும் அடிபட்டிருக்கா?
“இல்ல்…ல” தடுமாற்றமாய் வந்தது வார்த்தைகள்.
“குட்”, என்றவனுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. அவள் விழுந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தவன், சத்தம் கேட்டு திரும்பி வேகமாக வந்திருந்தான்.
பெரிய அளவுக்கு இது ஒன்றும் ஆபத்தான பாதை அல்ல. பொழுது போக்கிற்காக எல்லாரும் மிதிவண்டி எடுத்து சுற்றும் ஒரு இடம் தான். அப்படி இருக்க, இவள் எப்படி விழுந்தாள் என்று அவனுக்கு தெரியவில்லை.
அவளிடமே அதைக் கேட்டான்.
“வாட் ஹேப்பண்ட்?”
“ஐ திங்க் ஐ லாஸ்ட் கண்ட்ரோல் இன் த ஸ்லோப்”
“ம்ம்ம், இது தான் முதல் தடவையா நீங்க சைக்கிள் ஓட்டுறது?”
“இல்ல, சின்ன வயசில ஓட்டிருக்கேன். பட், இந்த மாதிரி கியர் வைச்ச சைக்கிள் ஓட்டினதில்ல.”
“கொஞ்சம் ப்ராக்டிஸ் இருந்தா ஈசி தான். இப்ப திருப்பி ஓட்டிட்டு போக முடியுமா? இன்னொரு ஸ்லோப் இருக்கு.” என்றவனை,
‘என்னது, திருப்பி இன்னொரு ஸ்லோப்ல ஓட்றதா’ என பீதியுடன் பார்த்தாள்.
அவளது பார்வையை படித்தவனுக்கு லேசாக சிரிப்பு வரும் போல் இருந்தது. ஏனோ ஊசி வேண்டாம் என கெஞ்சும் குழந்தையின் பார்வை போல் இருந்த அவள் முகம், அவன் மனதில் ஆழமாக பதிந்த தருணம்.
“நா மெதுவா உருட்டிட்டு நடந்து போயிடுவேன்”
“ஆர் யூ ஸ்யூர்?” என்றவனுக்கு அவளை தனியே அனுப்ப மனம் வரவில்லை.
வரவேற்பு குழுவிற்கு அழைப்பு விடுத்தவன், யாரையாவது அனுப்ப முடியுமா எனக் கேட்க, அவர்களிடமும் உடனே யாரும் இல்லை.
அவளுக்காக தான் பேசுகிறான் என்பதை உணர்ந்தவள்,
“இட்ஸ் ஃபைன், தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப். நானே போயிடுறேன்” என்று எழுந்தாள்.
“நோ ப்ராப்ளம், நான் உங்க கூட வர்றேன்” என்றவன் அவளது வண்டியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அவனது வண்டியையும் எடுத்து வந்தவன், அவள் புறம் கை நீட்டி,
“பை தி வே, ஐ ஆம் அலெக்ஸ் ஸ்டோன். ஐ ஆம் ஆல்சோ ஃபிரம் லண்டன்” என்றான்.