கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -3
மெதுவாக விழிகளை திறந்தவள் நேரத்தைப் பார்க்க நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்து அவசரமாக எழுந்து உட்கார்ந்தாள்.
யாரோ கதவை வேகமாக தட்ட எழுந்துப் போய் கதவை திறந்தாள்.அங்கே ஹீன் நின்றுக் கொண்டிருந்தான்.அவளைப் பார்த்து “நல்லா இருக்கீங்கல்ல திரும்பவும் உடம்பு முடியலைன்னு நினைச்சேன்” என்றான்.
அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த அஜ்ஜுமா “பாவை நைட் ஒரே வாந்தி எடுத்தேன்னு இப்போத் தான் சொன்னான் நீ குளிச்சு ரெடியாகிட்டு வா டாக்டர்கிட்ட போய் காட்டலாம் அப்படியே உனக்கு தேவையான திங்ஸ் வாங்கிட்டு வரலாம்” என்று கையில் சின்னதாக ஒரு மில்க் ஷேக் மற்றும் ஸ்டாபெர்ரி பழங்களை கொடுத்து விட்டுச் சென்றவர் ஹுனிடம் “அவ நல்லாத் தான் இருக்கா ப்ரெக்னென்ஸி டைம்ல இதெல்லாம் சகஜம் தான்” என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றார்.
அவனோ “சாரி பாவை இவ்வளவு நேரம் நீங்க எழுந்திருக்கலைன்னு தெரிஞ்சு ரொம்ப முடியலைன்னு தப்பா நினைச்சுட்டேன் அதான் நான் எழுந்த உடனே இங்கே வந்தேன்” என்று தான் வந்ததற்கான காரணத்தைச் சொன்னான்.
பாவையோ நடந்த நிகழ்வினில் அப்படியே அமைதியாக நின்றாள்.என்னச் சொல்வதென்று தெரியாமல் நிற்க அவனோ “பாய்” என்று சைகைக் காட்டி விட்டுச் சென்றான்.
அஜ்ஜீமா கொடுத்ததை அங்கிருந்த மேசையில் மேல் வைத்து விட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றாள்.
நாளையிலிருந்து எதற்கும் நேரம் இருக்காது.அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். தேவையானவற்றை எல்லாம் இன்றே சரியாக வைக்க வேண்டும் என்று மனதினுள் நினைத்து தன் வேலையைத் தொடர்ந்தாள்.
மளிகைப் பொருட்களை எடுத்து ஒவ்வொன்றையும் டப்பாவில் தட்டி வைத்தாள்.வயிற்றில் லேசாக ஏதோ உருள மேசையின் மேல் இருந்த மில்க் ஷேக் மீது கவனம் சென்றது.
அதை பாதி வரை குடித்து விட்டு வேலையைத் தொடர்ந்தாள்.இன்னும் மற்ற பொருட்களையும் அடுக்கி வைத்தாள். சில மளிகைகைப் பொருட்கள் மிச்சமாகிப் போனது.அதனால் இன்னும் சில காலி டப்பாக்களை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
மீதம் இருந்த மில்க் ஷேக்கை உட்கார்ந்து குடித்து முடிக்கவும் ஹீன் உள்ளே வந்தான்.குடித்த மில்க்ஷேக்கினால் உதட்டின் மேல் சின்னதாய் மீசை முளைத்து இருந்தது. அதைக் கண்டுக் கொண்டவன் எதுவும் சொல்லாமல் நிற்க பின்னால் வந்த ஏரா பாவையைப் பார்த்தவள் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு உதட்டின் மேல் கையை வைத்து சைகை செய்தாள்.
அது புரியாதோ பாவையோ எழுந்து உடையை சரி செய்துக் கொண்டு உடன் வர ஹீன் தன் பாக்கெட்டில் இருந்த திசு காகிதத்தை எடுத்து அவள் கையில் கொடுத்து “உதட்டை துடைச்சுட்டு வாங்க” என்றான்.
எதிரே இருந்த கண்ணாடியில் முகம் தெரிய அதில் தெரிந்த சிறிய மீசையைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு துடைத்தைக் கொண்டாள்.
நேற்று வாங்கிய அவனுடைய கோர்ட்டை ஒரு பையில் வைத்து ஹீனிடம் “ரொம்ப தாங்ஸ் மிஸ்டர் ஹுன் “ என்று அவனிடம் கொடுத்தாள்.ஹுனும் அதை வாங்கிக் கொடுத்தான்.
அதற்கிடையில் உள்ளே வந்து சுற்றிப் பார்த்த ஏரா அங்கே பாவை எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டவள் சமையலறையில் இந்திய நாட்டின் உணவு தானியங்ளை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு “இந்திய உணவு சமைக்கத் தெரியுமா? – இந்தோ இம்சிங் யூபிபீப் உல் அசினாயோ”
அதற்கு பாவை “இந்திய உணவுகள் சமைக்க தெரியாது ஆனால் தமிழ்நாட்டு உணவுகள் நல்ல சமைப்பேன் முடிஞ்ச வரைக்கும் கூடிய சீக்கிரம் சமைச்சு தரேன்” என்றாள்.
அவளின் பதிலில் திருப்தியான ஏரா சிரித்துக் கொண்டே “முதல் தடவை இந்த மாதிரி வெளிநாட்டவர்கள்கிட்ட ரொம்ப சகஜமாக பேசுறேன்” என்றாள்.
இதை எல்லாம் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ஹுன் தொண்டையை செ
ருமிக் கொண்டு “அம்மா வெளியே கார்கிட்ட வெயிட் பண்றாங்க டைம் ஆகுது போகலாமா?” என்றதற்கு பாவையும் ஏராவும் உடன் வந்தனர்.
ஹீன் காரை ஓட்ட அருகில் அஜ்ஜீமாவும் பின்னால் ஏராவும் பாவையும் அமர்ந்தார்கள்.அஜ்ஜீமா பாவையிடம் “பாவை கோர்ட் போட்டு வரலையா? வெளியே ரொம்ப குளிரா இருக்குமே” என்றார்.
பாவையோ “அஜ்ஜீமா இன்னைக்கு கடையில் போய் வாங்கி போட்டுக்கிறேன்” என்றாள்.
அவரோ கவலையோடு “பாவை கொரியாவுடைய குளிரைப் பற்றி உனக்கு தெரியாது உன்னோட நாடு மாதிரி வெப்பமான நாடு கிடையாது இன்னும் சில நாட்கள்ல ஸ்னோ வர ஆரம்பிச்சிடும் அதோடு குழந்தை வேற வயிற்றுல இருக்கு ரொம்ப கவனமாக இருக்கனும்” என்றார்.
ஏராவிடம் அஜ்ஜீமா “இன்னைக்கு நீ லீவு போட முடியாதா? பாவையோடு கொஞ்சம் சேர்ந்து ஷாப்பிங் போனால் நல்லா இருக்கும்” என்றார்.
அதற்கு ஏராவோ “ஒம்மா இன்னைக்கு ப்ராக்டிக்கல் இருக்கு அதனால லீவு போட முடியாதே” என்று பாவையின் புறம் திரும்பி “என்னை தப்பா நினைச்சுக்காதீங்க நுனா (அக்கா) இன்னைக்கு மட்டும் என்னால வர முடியாது இன்னொரு தடவை நிச்சயம் நாம கொரியாவையே சுற்றிப் பார்க்கலாம்” என்றாள்.
பாவை ஏராவிடம் சரியென்பது போல் புன்னகையோடு தலையசைத்தாள்.இதை எல்லாம் எதிரே இருந்த கண்ணாடி வழியே பார்த்தப்படி காரை ஓட்டிக் கொண்டு வந்தான் ஹீன்.
பாவையின் செயல்பாடுகள் ஹீனுக்கு வித்தியாசமாக இருந்தது.எப்பொழுதும் கைப்பேசியே உலகம் என்றும் புன்னகை என்றால் என்ன விலை? என்று இருக்கும் அவன் பார்த்த பெண்களுக்கு மத்தியில் காரின் கண்ணாடியின் வழியே விழிகளை அகலத் திறந்து ஒவ்வொன்றையும் உத்து உத்துப் பார்த்துக் கொண்டு தாயும், சகோதரியும் கேட்கும் கேள்விகளுக்கு புன்னகை மாறா முகத்தோடு பதில் சொல்லும் பாவை வித்தியாசமாகத் தெரிந்தாள்.
அஜ்ஜீமா கவலையோடு ‘என்ன செய்யலாம்?’ என்ற யோசனையோடு பாவையிடம் “பாவை எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு இல்லைன்னா யாரையும் எதிர்பார்க்காமல் நானே உன்னோடு வந்துடுவேன் நீ ஷாப்பிங் போகனும் அடுத்து ஹாஸ்பிட்டல் போகனும் யாராவது உன்கூட துணைக்கு வந்தால் தானே நல்லது” என்று சொல்லியபடி ஹீனைப் பார்த்தார்.
அவனோ எதுவும் தெரியாதது போல் கவனமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
பாவையோ “பரவாயில்லை அஜ்ஜீமா சேகர் அங்கிள் சொன்னாங்கன்னு என்னை ரொம்ப நல்லாவே பார்த்துகிட்டீங்க நானே போறேன் எனக்கு அட்ரஸ் மட்டும் அனுப்புங்க” என்று அவர் வாங்கி கொடுத்த புதிய சிம் எண்ணிற்கு சொன்னாள் பாவை.
உடனே அவரோ “அதுக்காக இல்லை பாவை புதிய இடம் எல்லோரும் உன்னைப் பார்த்து விலையை ஏத்தி சொல்லக் கூடாதுல்ல அதோடு ஹாஸ்பிட்டலுக்கு நாங்க யாராவது வந்தால் பேசவும் வசதியா இருக்கும்ல ஏன்னா நாங்க நீ பேசுறதை புரிஞ்சுக்கிற மாதிரி மற்றவங்களால் சரியாக ஆங்கிலமும் கொரியன் மொழியும் சேர்ந்து பேசினால் புரிந்துக் கொள்ள முடியாது அதுக்காகத் தான்” என்றார்.
அவளோ “எதுக்கு அஜ்ஜீமா உங்களுக்கு தேவையில்லாத சிரமம் நானே பார்த்துக்கிறேன்”என்றார்.
இதற்கிடையில் ஏராவை அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறக்கி விட்டான் ஹீன்.
அஜ்ஜீமா ஹீனிடம் “ஹீன் இப்போ நீ ப்ரீயா இருந்தால் பாவையோடு போப்பா ப்ளீஸ்” என்று கெஞ்சினார்.
அவனோ அவரைப் பார்த்து முறைத்தான்.இதைக் கவனித்த பாவை “அஜ்ஜீமா” என்று பேச வரும் பொழுது ஹீனின் கைப்பேசி அழைக்க அவன் அதில் உரையாடிக் கொண்டிருந்தான்.பொதுவாக பாவை இதுபோல் அவள் பெற்றோருடன் செல்லும் போது கைப்பேசி அழைத்தால் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்து பின்னர் தான் தன் பேச்சை தொடர்வார்கள்.அதே வழக்கம் போல் அவள் அமைதியாக இருந்தாள்.
அவன் கைப்பேசியில் பேசி முடிக்கும் வரை காத்திருந்து அஜ்ஜீமாவை அழைக்கும் போது ஹுன் அவனது அம்மாவை அழைத்து “நாநேனும் பிப்பாங் உல் ஜிஜ்ஜாப் மோசாயே நாகாந்தா- பாவையை நானே வெளியே கூடிட்டு போறேன்” என்றான்.
அவன் சொன்ன பதிலைக் கேட்டு புன்னகையோடு அஜ்ஜீமா “ரொம்ப தாங்ஸ் ஹீன்” என்றார்.உடனே அதை மறுத்தவளாய் பாவை “வேண்டாம் ஹுன் நானே பார்த்துக்கிறேன் நீங்க எதுக்காக தேவையில்லாமல் கஷ்டப்படுறீங்க” என்றதும் ஹீன் அவளை ஒரு பார்வை பார்த்து “பாவை இப்போ நான் வர்றது உங்க நல்ல பழக்கத்துக்காக” என்றதும் பாவையும் அஜ்ஜீமாவும் புரியாமல் பார்த்தாள்.
ஹீன் “நான் போன் பேசுறேன்னு நீங்க ஒம்மாகிட்ட பேசாமல் அமைதியாக இருந்தது அந்த மரியாதை கொடுத்தீங்கல்ல அதுக்காகத் தான்” என்றான்.
உடனே அஜ்ஜுமா சிரித்துக் கொண்டே தன் கைப்பையில் இருந்த சில வான் (ரூபாய்) தாள்களை எடுத்து ஹுன் பாக்கெட்டில் வைத்து “உனக்கு தேவையானதையும் வாங்கிக்கோ” என்றார்.
உடனே ஹுன் “ஹ்ஹா…. இது நல்லா இருக்கே எப்போ பணம் கேட்டாலும் தர்றாதவங்க இப்போ அவங்களாகவே தர்றது நல்லா இருக்கு இனிமேல் அடிக்கடி கிடைக்கும் போலயே” என்று பாவையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.
பாவையால் இதற்கு மேல் எதுவும் மறுத்து பேச முடியவில்லை.இப்பொழுது தனிமையில் இருப்பவளுக்கு இவர்களின் துணை முக்கியமாக இருந்தது.அதோடு ஹீன் அவர்களாகவே வருவதாகச் சொன்னதால் சரியென்று அமர்ந்து விட்டாள்.அஜ்ஜீமா இறங்க வேண்டிய இடம் வரவும் அவரும் இறங்கி விட்டு இருவரிடமும் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி விட்டுச் சென்றார்.
ஹீன் முன்னால் காரை ஓட்டிக் கொண்டிருக்க பாவை பின்னால் அமர்ந்திருந்தாள்.முதலில் ஹுனே பேச்சை ஆரம்பித்தான்.
“பாவை உங்களைப் பற்றி எதுவுமே சொல்லலை நானும் என்னைப் பத்தி சொல்லலை நாம இரண்டு பேரும் இன்ட்ரோ பண்ணிக்கலாமே பயணமும் நல்லா இருக்குமே” என்றான்.
இவளோ என்னச் சொல்வதென்று தெரியாமல் எச்சிலை விழுங்கியபடி சரியென்பது போல் தலையாட்டினாள்.உடனே காரை ஓரமாக நிறுத்தியவன் பின்னால் திரும்பி பாவையிடம் “முன்னால் வந்து உட்காருங்க பாவை நாம ரெண்டுபேரும் பேசுறதுக்கும் ஈஸியாக இருக்கும்” என்றான்.
அவளோ தயங்கியபடி மெதுவாக இறங்கி வந்து முன்னால் உட்காருவதற்கு முன் இருக்கையை கொஞ்சம் பின்னால் தள்ளி சாய்வாக அமரும் படி வைத்தான் ஹீன்.
அதைப் பார்த்து அவனைப் பற்றி இன்னும் கொஞ்சம் நல்ல எண்ணம் அவன் மீது வர அவனைப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தாள்.
“நாம முதல்ல டாக்டர்கிட்ட போகலாம் இங்கே இருந்து அதுதான் பக்கத்தில் இருக்கு” என்றான்.அவளும் சரியென்பது போல் தலையசைத்தாள்.
வண்டி பயணித்தாலும் பாவையின் மனமோ அதை விட வேகமாய் பயந்தது.எங்கே தன்னை பற்றிய விவரங்களை கேட்டால் என்னசொல்ல? என்ற யோசனையில் இருந்தாள்.
அவளின் முகமாற்றத்தை கவனித்துக் கொண்டே வந்த ஹுன் நிச்சயம் ஏதோ ஒன்றை மறைக்க தான் செய்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான்.
“என்னோட முழுப் பெயர் ஹீன் டே ஹி ஐடில மெயின் வொர்க்கர இருந்து இப்போ ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு கொஞ்சம் பிரேக் எடுக்கலாமேன்னு வீட்ல இருக்கேன் மற்றபடி என் குடும்பத்தைப் பற்றித் தான் உங்களுக்கு தெரியுமே அப்பா இறந்து விட்டார்” என்றான்.
அவன் அமைதியைத் தொடர இப்பொழுது இவள் முறையாகி விட்டது நிச்சயம் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும் என்ற நினைவோடு “என் பெயர் பாவை மதி ஆட்டோமொபைல்ஸ் படிச்சு இந்தியாவில் இருக்கிற கொரியன் கம்பெனில வொர்க் பண்ணேன் இப்போ இங்கே உள்ள கம்பெனிக்கு வந்து ஜாயின் பண்ணப் போறேன்” என்றாள்.
“ஓ… உன் பேமிலி பத்தி எதுவும் சொல்லலையே?” என்றான் கேள்வியோடு…
அது “என் அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க”
“டொங்கினின் இன் இப்ஸானயோ -அப்போ உடன்பிறந்தவங்க யாரும் இல்லையா?”
அதைக் கேட்டதும் சில விநாடிகள் அமைதியாக இருந்தவள் விழிகளில் நீர் திரண்டு வர இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “அதனாலத் தான் இங்கே சியோலுக்கு தனியாக வந்து இருக்கீங்களா?”
ஆமாம் என்று தலையசைக்கவும் “உங்க பேபியோட அப்பா எங்கே?” என்று கேட்கவும் அதுவரை இருந்த பொறுமையை இழந்து விட அவளோ கோபமாய் “மிஸ்டர் ஹீன் காரை நிறுத்துறீங்களா? நீங்க அஜ்ஜீமா சொன்னதற்காக என்கூட வரலைப் போல என்னைப் பற்றி துப்பறிய வர்றீங்கன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் வண்டியை நிறுத்துங்க என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்” என்றாள் வேகமாய்…
நிலைமையை ஓரளவு புரிந்துக் கொண்ட ஹுன் “பாவை ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?
உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம் அது விட்டுட்டு ஏன் என் மேல டென்ஷன் ஆகுறீங்க?”
அவளோ முறைத்துக் கொண்டு “மிஸ்டர் ஹீன் தப்பு என் மேல இல்லை”
“புரியுது நேத்து நீங்க தனியாக கஷ்டப்பட்டதினால் தான் உங்களோடு இருக்க யாரும் இல்லையான்னு அக்கறை கேட்டேன்” என்று பேசி முடிக்கும் முன் பாவையோ “எனக்கு யாருடைய அக்கறையும் வேண்டாம் சர்க்கரையும் வேண்டாம்”என்று தலையை திருப்பிக் கொண்டாள்.
அவளின் பதிலைக் கேட்டு சிரித்தவன் “ப்ச்சு ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு வாங்க பாவை நம்ம சண்டையை அப்புறம் வைச்சுக்கலாம்” என்று மருத்துவமனையின் வாசலில் நிறுத்தி விட்டான்.
பாவை வேறு வழியில்லாமல் அவனிடம் மறுத்துப் பேசாமல் காரை விட்டு இறங்கினாள்.அவனோ வண்டியை வாகன நிறுத்திமிடத்தில் நிறுத்தச் சென்றான்.
அவன் சென்றதும் பாவைக்கு அவள் ஹீனிடம் நடந்துக் கொண்ட முறை அதிகம் என்பது போல் தோன்ற யோசனையில் நின்றாள்.
காரை நிறுத்தி விட்டு வரும் வரை காத்திருந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் ஹுன் முன்னே செல்ல அவன் பின்னாலேயே சென்றாள்.
வரவேற்பறையில் பாவையின் விவரங்களைச் சொல்லி விட்டு அவள் புறம் திரும்பி “பாவை ஏற்கனவே எடுத்த ரிப்போர்ட்ஸ் கொடுங்க” என்றதும் இவளும் எடுத்துக் கொடுத்தாள்.
இதற்கிடையில் அஜ்ஜீமாவும் கைப்பேசியில் அழைத்து இருவரும் வந்து விட்டார்களா? என விசாரித்துக் கொண்டார்.
(தொடரும்)