‘இது அந்த அஞ்சு எலி தானா?’ என்ற கேள்வி ஜெய் மண்டைக்குள் ஓட,
“சேம் வொய்ஸ் தான்.. இன்னைக்கு கொஞ்சம் டவுனா இருக்கு.. சரி இல்லையே!” என முணுமுணுத்தவன்,
“கிளினிக் ஓபன் பண்ணனும்” என்றான் நேரத்தை பார்த்தபடி.
“பரவால்ல! நான் வெயிட் பண்றேன்! ஒரு மூணு மணிக்கு அப்புறம்னா கூட எனக்கு ஓகே தான்” அஞ்சலி கூற,
‘என்ன டா இது? சனி கிழமை காலையிலே சனி கூட மல்லுக்கு நிற்க வைக்குது?’ நினைத்துக் கொண்டவன்,
“ஓகே! பார்க்கலாம்.. டைம் இருந்தா…” என்று முடிப்பதற்குள்,
“தேங்க்ஸ் ஜெய்! தேங்க் யூ சோ மச்.. நான் வெயிட் பண்றேன்.. பை” என்றவள் பேச்சில் இவன் கொஞ்சம் யோசிக்க,
“ஒரு நிமிஷம்! ஒரு நிமிஷம்! ஜெய்! லைன்ல இருக்கீங்களா?” என்றாள்.
“ஹ்ம்! இருக்கேன்!” என்று கூற,
“அப்புறம்! நீங்க மட்டும் தனியா வாங்க! ப்ளீஸ்!” என்றவள் அவன் பேசும் முன் வைத்துவிட்டாள்.
குளித்து கிளம்பி கீழே வர, வெள்ளை சட்டையில் தயாராய் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சூர்யா.
“ப்பா! கண்ணு கூசுது டா!” என்று ஜெய் சிரிக்க,
“டேய்! கிண்டலா? எவ்வளவு அழகா இருக்கான் பாரு என் மகன்” என்று பிரேமா கூற,
“எனக்கே ஒரு மாதிரி இருக்குது ண்ணா! வெள்ள சொக்கா போட்டா ஒரு மாதிரி கெத்தா தான் இருக்கு.. ஆனாலும் நமக்கு இது தேவையான்னு மைண்ட்டு குறுக்கால ஓடுது” என்று சிரிக்க,
“ஹாஹா! பட் நைஸ் டா.. கீப் இட் அப்! இன்னைக்கு தான் வர சொன்னாரா அந்த சீனியர்?” ஜெய் கேட்டான்.
“ஹ்ம் ஆமா ஆமா! எனக்கு என்னவோ தமிழன் படத்துல விஜய்கிட்ட மாட்டின அந்த லாயர் தான் நியாபகம் வர்ரார்” என இன்னும் சிரித்தான் சூர்யா.
“அது சரி! வேலையை மட்டும் பார்க்கணும்.. எதுவும் வம்பை இழுத்துட்டு வர கூடாது” மல்லிகா கூற,
“அப்ப இந்த வேலைக்கு படிச்சுருக்கவே கூடாது.. இல்ல டா?” என்று கூறி சூர்யாவுடன் ஹைபை அடித்துக் கொண்டான் ஜெய்.
“ஜெய்! இன்னைக்கு அந்த சங்கர் டாக்டர் இருப்பாரா? நேத்து பஸ்ல காலை தொங்க விட்டுட்டி வந்தது கால் ரொம்ப வலிக்குது.. முட்டி வேற நாலு நாளா வலிக்குது” மல்லிகா கூற,
“அண்ணா தான் கிளினிக் கிளம்புது இல்ல.. நான் கூட்டிட்டு போறேன் மா.. சும்மா தானே இருக்கேன்” என்று வந்தாள் நிவி.
“அதுக்கு என்னை ட்ரெயின் முன்ன புடிச்சி தள்ளி விடலாம்.. ஐடியா கொடுக்குறான் பாரு!” என்ற நிவி,
“தெய்வங்களே! அப்படி ஒரு எண்ணம் இருந்தால் குழி தோண்டி புதைச்சுடுங்க.. நானெல்லாம் என் ரெண்டு அண்ணன்களுக்கும் கல்யாணம் ஆகி அதுங்க பசங்க கையா முய்யான்னு வீட்டுக்குள்ள ஒரே சத்தமா கேட்குற வரை இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்ற நிவி ஜெய்யின் முறைப்பில்,
“வேணும்னா நீ சொன்னா மாதிரி பிஜிக்கு ட்ரை பண்றேன்..” என்றாள் போனால் போகட்டும் என்பதை போல.
“சரி சரி! எத்தனை மணிக்கு ம்மா போலாம்? அப்பொய்ன்மெண்ட் வாங்கிடவா?” நிவி கேட்க,
“நிவி! நான் அம்மா கூட போறேன்..” என்றான் ஜெய்.
“இல்லை ண்ணா! கிளினிக்..” என்று கூற வர,
“முடிச்சிட்டு தான் கூட்டிட்டு போற மாதிரி அப்பொய்ன்மெண்ட் வாங்குவேன்..” என்று விட்டான்.
அஞ்சலியிடம் தப்பிக்க இது ஒரு நல்ல வழி என அவன் குறி பார்க்க,
“சரியான கேடி டா நீ!” என்று வந்த பிரேமா,
“தப்பிக்க பாக்குறியா? நியூஸ் வந்துடுச்சி.. நிவி அக்காவை கூட்டிட்டு போய்ட்டு வரட்டும்.. நீ அஞ்சலி கூட கிளம்பு” என்றார் பிரேமா.
“அந்தாளுக்கு வேற வேலையே இல்லையா? எது எதுக்கு தூது போகணும்ன்னு ஒரு விவஸ்தை இல்லை?” ஜெய் சட்டென மூண்ட கோபத்தில் கேட்க,
“ஜெய்!” என்று அதட்டினார் பிரேமா.
“திஸ் இஸ் டூ மச்!” என்றவன் பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்ள,
“இப்படி தான் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுவியா ஜெய்?” என்ற கேள்வியில் மீண்டும் அமர்ந்தவன் அமைதியாய் உண்டு முடித்து எழுந்து கொண்டான்.
“நானும் வரவா டா?” சூர்யா ஜெய்யிடம் கேட்க, திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் கூறாமல் கிளம்பிவிட்டான்.
“ஜெய்யை ரொம்ப டார்ச்சர் பண்றோம் ம்மா!” என்ற சூர்யாவிற்கு யாரிடமும் பதில் இல்லை.
“அவன் வருவானா ப்பா?” அஞ்சலி தன் தந்தையிடம் கேட்க,
“நிச்சயமா வருவான் பாரு. அதுவும் தனியா தான் வருவான்” என்று மகளுக்கு கூறிய குண சீலனை நினைத்து தலையில் அடித்துக் கொண்டார் காஞ்சனா.
“ஆனா என்னால டெய்லி எல்லாம் இப்படி ஒன்னொன்னுக்கும் அவன்கிட்ட நடிச்சிட்டு இருக்க முடியாது ப்பா.. இது தான் லாஸ்ட்.. அவன் என்னை தான் கல்யாணம் பண்ணி ஆகணும்” என்று அஞ்சலி கூற,
“சரி டா.. சரி டா.. அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்ற குணசீலன் காஞ்சனாவைப் பார்க்க, கணவனை முறைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
பைக் சத்தம் கேட்கவும் அஞ்சலியும் குணசீலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வாசலைப் பார்க்க, ஜெய் தான் வந்திருந்தான்.
“உங்களுக்கு என்ன பிரச்சனை? இல்ல தெரியாம தான் கேட்குறேன்.. உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று வீடதிர கேட்ட படியே வீட்டிற்குள் ஜெய் நுழைய, சத்தம் கேட்டு வேகமாய் வெளியே வந்தார் காஞ்சனா.
“ஒன்னு சொல்லவா? எனக்கு சுத்தமா உங்க பொண்ணை கட்டிக்கிறதுல இஷ்…டம் இல்ல.. சுத்தமா இல்லை” என்ற பேச்சில் குணசீலன் கோபம், அதிர்ச்சி, மகளை நினைத்து பயம் என கலந்து பார்க்க, கண்ணீரோடு நின்றார் காஞ்சனா.
“என்கிட்ட என் வீட்டுல கேட்கல சரி! பொண்ணு குடுக்கிற நீங்க கேட்க வேண்டாம்? உங்க பொண்ணுக்கு புடிச்சிருந்தா என்ன வேணா செய்விங்களா?” என்ற ஜெய்யின் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையாய் இறங்கியது காஞ்சனாவிற்கு மட்டும் தான்.
“ஜெய்!” என்று அஞ்சலி சத்தமிட,
“ஷ்ஷ்! இப்ப நான் உன்கிட்ட பேச வர்ல.. இதோ இவர்கிட்ட தான் பேசணும்” என்றவனை தடுக்க முடியவில்லை.
சாதாரணமாய் அவ்வளவு எளிதில் ஜெய் இவ்வளவு கோபம் கொள்பவன் அல்ல.
அதென்ன முதலில் அவள் அழைப்பது பின் பின்னாலேயே அவள் தந்தை தன் வீட்டினரை மிரட்டுவது? ஒரு அளவு தானே! என நினைத்த ஜெய்க்கு இதை இப்படியே விட விருப்பம் இல்லாமல் தான் கிளம்பி வந்துவிட்டான்.
“நிச்சயத்துக்கு நானோ என் சம்மதமோ தேவை இல்லாத உங்களுக்கு இப்ப மட்டும் ஏன் ஒவ்வொரு முறையும் தேவையா இருக்கேன்? புரியல எனக்கு?” என்றவன்,
“கல்யாணம் பண்ணிக்க போறது நாங்க.. முடிஞ்ச வரை வேற யாரும் மூக்கை நுழைக்காமல் இருக்குறது தான்…. எல்லாரு… க்கும் நல்லது” என்றவன் அழுத்தமாய் குணசீலனைப் பார்த்தான்.
“நான் என்ன சொன்னேன் உன்கிட்ட? பார்க்கலாம்ன்னு தானே சொன்னேன்? அதுக்குள்ள என்ன மிரட்டல் உன் அப்பாக்கு? எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. எதுவும் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டா என்னை இன்னும் வேற மாதிரி பார்க்க வேண்டியது வரும்” என்று அஞ்சலியிடம் கூறியவன், அழுதபடி சமையலறை வாசலில் நின்றவரை அப்பொழுது தான் கவனித்தான்.
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தவன் தலையை கோதிக் கொண்டான்.
“எனக்குன்னு கொஞ்சம் செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கு ஆண்ட்டி!” என தன்மையாய் அவரிடம் கூறியவன்,
“எல்லாருக்கும் புரியும்னு நினைக்குறேன்” என்று விட்டு வந்த வேகத்தில் வெளியேறிவிட்டான்.
“சொல்லுங்க ப்பா.. போன் பண்ணி அவரை மிரட்டினிங்களா?”
“இல்ல டா அஞ்சலி! நீ சொன்னதை ஜெய் மறந்துட கூடாதுல்ல? அதான் அவங்க அப்பாகிட்ட ஒருமுறை நியாபகப்படுத்த சொன்னேன்.. அதை தான் தப்பா…” என்று கூறி முடிக்கும் முன் தன் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள் அஞ்சலி.
“போதுமா? இப்ப நிம்மதியா உங்களுக்கு? சுய மரியாதை எனக்கும் இருக்குன்னு உங்க மரியாதையை காத்துல விட்டுட்டு போறான்.. யாரால? எல்லாம் உங்களால.. உங்களால மட்டும் தான்.. அவளை கெடுத்தது போதாதுன்னு இப்ப அவ வாழ்க்கையில கூட விளையாடிட்டு இருக்கீங்க நீங்க” என்று காஞ்சனா கதற, பதிலின்றி நின்றார் குணா.
பால நாதனிற்கு இந்த விஷயம் தெரியாமல் போக, வீட்டிற்கு வந்த ஜெய் அவனே அனைவரிடமும் தான் சென்று வந்ததை பேசி வந்ததை என கூறி விட்டான்.
அதற்கு பால நாதன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அதிர்ச்சி தான் அவருக்கு.
இப்படி செய்வான் என அவருமே எதிர்பார்க்கவில்லையே! ஆனாலும் ஒரு வகையில் இது தான் நல்லது என்று அவருக்கும் தோன்றியது.
சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழைத்து கட்டளை இட்டுக் கொண்டிருந்தால் என்ற எண்ணம் வரவும் பால நாதன் எதுவும் கூறாமல் அமைதியாய் சென்றுவிட்டார்.
மற்றவர்கள் யார் பக்கம் என்ன கூறுவது என்றே தெரியாமல் மௌனமாகிப் போயினர்.
சூர்யா வீடு வந்ததும் பிரேமா கூறியதைக் கேட்டு அண்ணனை சென்று பார்த்து நீ செய்தது தான் சரி என்று கூறி அவனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தான்.
அதன்பின் பெரிதான பேச்சுக்கள் எதுவும் இன்றி கழிய திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருந்தது.