1.16 துணிச்சல்காரி
சாலை விபத்தில் சிக்கித் தலையில் அடிபட்டு வந்திருந்த ஒருவருக்கு அவசர அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகவும், உதவிக்கு வருமாறும் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வரவே, கயல் கால்டனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மருத்துவமனைக்குக் கிளம்பிப் போனாள்.
மூளையில் சுமார் 2 மணி நேர அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பின்பு, தையல் போடும் பணியை ஜூனியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதீத முதுகுவலியில் வெளியில் வந்தவள், ஸ்ரெட்ச் செய்துகொண்டிருக்கையில் கால்டனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள்.
ஏனெனில் அந்த இடத்தில் மருத்துவமனை பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. எப்படி இது வரை வந்தார் என்று வியந்தாள். பிறகு பணக்காரர்களுக்குச் சாத்தியப்படாததா என்று புரிந்து கொண்டாள்.
“இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டதற்குப் பட பட வெனப் பேசிவிட்டுக் கையைப் பிடித்து கால்டன் இழுத்ததும், கயலின் கோபம் எல்லைகடந்தது.
பிடித்த கையை ஒரு திருகு திருகிப் பின்னால் வளைத்துக் குப்புறக் கவிழ்த்திப்போட்டுப் புரடியில் முழங்கையால் அழுத்தி கால்டனை இறுக்கினாள் அந்த துணிச்சல்காரி. முதல் தொடுதலே மோதலாகிப் போனது.
தான் நினைத்ததை நடத்திக்காட்டுவதிலும், அனைத்தையும் கன்ட்ரோல் செய்வதிலும் இச்சை கொண்ட குணம்படைத்தவரான கால்டன், தன் பாணியில் அதிரடி காட்டிக் கயலை லேசாக மிரட்டி எளிதில் வழிக்குக்கொண்டு வந்து வீட்டுக்குக் கையோடு கூட்டிச்சென்றுவிடலாம் என்று நினைத்துத்தான் இப்படியெல்லாம் செய்தார். ஆனால் அவர் எதிரில் நிற்பது யார் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.
அவள் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றார். ஆனால் கயலின் பிடி கிடுக்கிப்பிடியாக, உடும்புப்பிடியாக இருந்தது. அவளின் தோற்றத்துக்கும் பலத்திற்கும் சம்பந்தமே இல்லாதிருப்பதைப் பற்றி வியந்தார். கால்டனும் ஒரு கட்டுமஸ்தானவர் தான். குத்துச்சண்டையில் கூடப் பயிற்சி உண்டு. இருப்பினும் கயலின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மிகவும் திணறினார்.
“சரி… கம்பல்பண்ணி இழுத்தது கெட்ட மேனர்ஸ் தான். சாரி. விடுங்க” என்று கோரினார்.
பிடியைத் தளர்த்தி விடுவித்தாள் கயல். துணிச்சலாய்த் திமிராய்ப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
கையை உதறி, கழுத்தை ஆட்டி ரிலாக்ஸ் செய்துகொண்ட கால்டன், தன் எதிரில் நிற்பவள் எப்படிப்பட்டவள் என்று நினைத்து ஆச்சரியமடைந்தார்.
“என்ன தைரியத்துல வேற நாட்டுல ஒரு பணக்காரன கையைத் திருகி கழுத்தைப் பிடிக்கிறீங்க?”
அலட்சியமாய்ப் பார்த்து ஏளனப் புன்னகை புரிந்துவிட்டுக் கையுறைகளைக் கழற்றி குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு கைகளைக் கழிவிக்கொண்டே “எந்த தைரியத்துல கையைப்பிடிச்சு இழுத்திங்களோ அதே தைரியத்துல தான்னு வச்சுக்கோங்களேன்” என்று பதில் சொன்னாள்.
“வீட்டுக்கு வர்றதை ஏன் தள்ளிப் போடறீங்கன்னு கேட்டது ஒரு தப்பா?”
“நீங்க கேட்டிங்களா?”
“சரி. கொஞ்சம் படபடன்னு பேசிட்டேன். அதுக்கு இப்படியா பண்றது?”
“நா ஒன்னுமே பண்ணலியே. ஜஸ்ட் தடுத்தேன். அவ்வளவு தான்”
“அது சரி”
“என்ன விஷயம்? ஒரு வளர்ந்த ஆள் மாதிரி சொல்லுங்க பாப்போம்.”
குழந்தைத்தனமாக நடந்துகொண்டதைத் தான் சுட்டுகிறாள் என்று தெரிந்திருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், பேசினார் கால்டன்.
“இன்னைக்கி உங்க வீட்டைக் காலி பண்ணிட்டு என் வீட்டுக்கு வறேன்னு சொன்னிங்கல்ல. இப்ப ஏன் கர்ப்பம் உறுதியான அப்பறம் வறேன்னு சொல்லுறீங்க?”
“சொன்னேன் உண்மை தான். அப்பறம் யோசிச்சு பாத்ததுல கர்ப்பம் உறுதியான பிறகு போகறது தான் சரின்னு தோணுச்சு. அதான்.”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“நீங்க ஏன் அவசரப்படறீங்க?”
“நீங்க டாக்டர். 10 நாள் இடைவெளியில எதாவது செஞ்சு கர்ப்பம் ஆகறதைத் தடுத்துட்டீங்கன்னா? அதுக்குதான் என் கூட வச்சுக்கனுமின்னு நினைக்கறேன்.”
நிலைத்த பார்வை வீசினாள் கயல்.
“அப்படி நான் செய்யனுமின்னு நினைச்சிருந்தா இந்நேரத்துக்குள்ள செஞ்சிருப்பேன். நீங்க கூடவே வச்சிருந்தாலும் என்னால செய்ய முடியும்” திட்டவட்டமாகச் சொன்னாள்.
கால்டனால் ஒன்றும் பேசமுடியவில்லை. ஏனென்றால் அவர் சொல்லும் இந்தக் காரணம் பொய்யென்று தான் அவருக்கே தெரியுமே!.
கயலே தொடர்ந்தாள்.
“10 நாள் கழிச்சு டெஸ்ட் எடுத்துட்டு கர்ப்பம் உறுதியாகிடுச்சுன்னா வறேன். அதுக்கு முன்னாடி நிச்சியமா வர முடியாது. உடன்படிக்கை நியாபகம் இருக்கு. பணம் வாங்கிட்டதும் மறக்கல்ல. மறக்கவும் மாட்டேன். ஏமாத்த எனக்கு தெரியாது.” நாக்கால் கத்தி வீசினாள். ஊமையானார் கால்டன்.
“வேற எதாவது இருக்கா? நான் போகலாமா?”
“ஏன் தீர்மானமா இப்ப வர முடியாதுங்குறீங்க?”
“இப்ப நான் இருக்கற வீட்ட விட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டு, 10 நாள் கழிச்சு சப்போஸ் கர்ப்பம் இல்லைன்னா என்ன ஆகும்?” என்று கேட்டாள்.
பதில் இல்லை கால்டனிடம். அவர் போட்ட உடன்படிக்கை நினைவுக்கு வந்தது. கயல் எப்படி சிந்திக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார். முகம் வாடிப்போனது. எதுவும் பேசாமல் ஒரு பார்வையும் புன்னகையும் வீசிவிட்டு மெளனமாய் விடைபெற்றார். அவர் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் கயல்.
சீசன் 1 முற்றும்.
-வித்யாகுரு
இனி என்ன ஆகும்??!!
கர்ப்பம் உறுதியாகுமா..
ஒரே வீட்டில் தொடர்வார்களா..
முளைவிட்டிருக்கும் காதலை இருவரும் என்ன செய்யப் போகிறார்கள்.
இருவரில் யார் முதலில் பூட்டைத் திறக்கப்போகிறார்கள்?
கயலில் தந்தை என்ன ஆவார்?
சீசன் 2 இல் தொடரலாம்.. நாளை..
கருத்துக்கள் தெரிவிக்கலாமே..