3.13- தாயும் பிள்ளையும்
தாயும் பிள்ளையும் ஆரத் தழுவிக்கொண்டனர். கால்டனை அமரச்சொல்லி அந்த அறையில் இருந்த ஒரு மேஜையின் இழுப்பறையில் இருந்த ஒரு காபிநிற உறையை எடுத்து வந்து கால்டனிடம் நீட்டினார் செலீனா. அதைக் கால்டன் வாங்கிக் கொண்டதும் அவர் அருகில் அமர்ந்துகொண்டார்.
ஏதேனும் புதிய சொத்துப் பத்திரமா அல்லது பங்குதாரர் ஒப்பந்தமா என்ற எண்ணத்துடன் அந்த உறைக்குள் கைவிட்ட கால்டன், உள்ளிருந்து வெளிப்பட்ட காகிதம் கண்டு ஆச்சரியப்பட்டார்.
சிறு வயதில் கால்டன் வரைந்த ஒரு படம் அது.
“இதை நீங்க இன்னும் வச்சுருக்கிங்களா!!!!”
“உனக்கு 10 வயசு இருக்கும்போது நான் ஒரு பிஸினஸ் விஷயமா லண்டன்-ல தங்கியிருந்தேன். அப்போ நீ இதை வரைஞ்சு எனக்கு அனுப்பின. அன்னிலேருந்து இதை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன்.”
“நீங்க என்னை ரொம்ப ஆச்சிரியப்படுத்திட்டீங்க!”
“பாரு. அப்பவே நீ இந்த வீட்டை என்ன அழகா டிசைன் பண்ணிருக்க!! இதைக் கவனிச்சு தான் உன்னை நான் ஆர்க்கிடெக்ட் ஆக்கினேன். நீயும் இப்ப ஒரு வெற்றிகரமான ஆர்க்கிடெக்டா இருக்க!!”
இதைக் கேட்டதும் கால்டன் ஆச்சரியப்படுவார், ஒரு அம்மாவாக தன் பொறுப்புணர்வை புரிந்து மெச்சுவார் என்ற எதிர்பார்ப்புடன் சொன்ன செலீனாவுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
“என் ஆர்க்கிடெக்சர் திறமையை நீங்க கவனிக்கறதுக்காக நான் இதை வரைஞ்சு அனுப்பல்ல. இந்தப் படத்தில ஒரு சாதாரண வீட்டு முகப்பு தோட்டத்தில அப்பா நீங்க அண்ணன் நான் தங்கச்சி தம்பி எல்லாரும் ஒன்னா விளையாட்டுற மாதிரி நான் வரைஞ்சிருக்கேன். இதுக்குத்தான் நான் ஏங்குறேங்கறதை நீங்க கவனிக்கனுமின்னு தான் இப்படி வரைஞ்சு உங்களுக்கு அனுப்பினேன். ஆனா பாருங்க!! இப்ப வரைக்கும் கூட நீங்க அதைக் கவனிக்கவே இல்ல!!”
கால்டன் இப்படிச் சொல்லிவிடுவார் என்று கற்பனையிலும் நினைத்திராத செலீனா, அதிர்ந்து போனார் ஒரு நொடி. எத்தனையோ முறை இந்த வரைபடத்தை அவர் பார்த்திருக்கிறார். உண்மையில் கால்டன் தற்போது சொல்லும் வரை இந்த அர்த்தத்தில் தான் இந்தப் படம் வரையப்பட்டிருக்கிறது என்பதை அவர் கவனித்ததே இல்லை. இப்படிப்பட்ட ஏக்கம் தன் மகனுக்குள்ளே இருந்திருக்கிறது என்பதே இப்போது தான் தெரிகிறது அவருக்கு. மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியாமல் வார்த்தைகள் வற்றிப்போயின.
கால்டனே தொடர்ந்தார்.
“10 வயசில நான் கற்பனை பண்ணி வரைஞ்சது இன்னைக்கு வரைக்கும் கற்பனையாத்தான் இருக்கு. எனிவே!! தேங்க்ஸ். இதை நானே எடுத்துக்கறேன்.. அப்பறம் நான் உடம்பு சரியில்லாம இருந்தபோது ஒரு டாக்டரை நீங்க அனுப்பிவச்சிங்கன்னு எல்க் சொன்னாங்க. அதுக்கும் நன்றி!!”
“உடம்பு பரவாயில்லையா?”
“ம்.. பாக்குறீங்களே.. நல்லா இருக்கேன்..”
“கல்யாண விஷயத்துல இன்னும் உனக்கு என்மேல கோவம் தீரல்லையா?”
“ச்ச ச்ச.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அதுலேருந்து நான் வெளியே வந்து ரொம்ப நாள் ஆகுது.”
“குட். நம்ம ஸ்டேடஸ்ஸுக்கு ஏத்த மாதிரி நாங்க நிச்சியம் வேற ஒரு பொண்ணைத் தேடிப்பிடிப்போம்.”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். திரும்பவும் நியாபகப்படுத்தறேன். நான் இந்த வீட்டை மட்டும் விட்டு வெளிய போகல்ல. உங்க ஸ்டேடஸ் வரைவுகளை விட்டும்தான் வெளியே போயிருக்கேன். சோ.. உங்களுக்கு பொண்ணு தேடுற சிரமம் எதுவும் வேண்டாம். உங்க பிஸி வாழ்க்கையை நீங்க தொடருங்க. என் வழியை நானே அமைச்சுக்கறேன். ஆனா இப்படி எப்பையாவது சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திங்கன்னா மட்டும் போதும்.”
“நீ இப்படி பேசுறது அதிர்ச்சியாவும் வேதனையாகவும் இருக்கு கால்டன்.”
“அதிர்ச்சிக்கும் அவசியம் இல்ல வேதனைக்கும் அவசியம் இல்ல. நான் கோவத்துல சொல்லல்ல.. சோகத்திலையும் இல்ல. நான் நிம்மதியா சந்தோஷமா இருக்கேன். இப்படியே இருக்கட்டும். ஹன்னாவைப் பார்க்கப்போறேன்..” என்று சொல்லி எழுந்தார்.
வேறு வழியின்றி செலீனாவும் எழுந்து கட்டியணைத்து விடையளித்தார். கால்டன் போனதும், தன் பிள்ளைகளுள் கால்டன் மட்டும் மாறுபட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டார். தன் பிள்ளையைப் பற்றி இதுவரை எதுவுமே தெரிந்துகொள்ளவில்லையோ என்று முதன்முறையாக நினைத்தார் ஹை சொசைட்டி அம்மாவான செலீனா. அது உண்மையும் கூட. கால்டனைப் பற்றி எல்க்குக்குத் தெரியும் அளவு கூட அம்மாவான அவருக்குத் தெரியாது. பிள்ளைகளுடன் அவர் அமர்ந்து பேசியதே இல்லை. அத்தனை பிஸியானவர்கள் அவரும் அவர் கணவரும். செலீனா 4 பிள்ளைகளுள் முதல் இரு பிள்ளைகளான நிக் மற்றும் கால்டனை மட்டும் தான் சுமந்து பெற்றெடுத்தார். ஹன்னாவும் கடைசி பிள்ளையும் வாடகைத் தாய் மூலம் ஈன்றெடுக்கப்பட்ட பிள்ளைகள். மொத்தத்தில் செலீனா கால்டனின் எந்த ஏக்கங்களைப் பற்றியும் அறியாதவர். 4 குழந்தைகளையும் நல்ல நிலையில் உயர்த்திவிட்டவர் தான் என்றாலும் அம்மாவாக இல்லாமல் மெண்டார் ஆக மட்டுமே தான் அவர் இருந்திருக்கிறார்.
அதை அவரிடம் சுட்டிக்காட்டும் துணிவினை ஒருவரும் பெற்றிருக்கவில்லை. கால்டனும் கூட முதன்முறையாக இப்போது தான் இதை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால் தான் கால்டனின் பேச்சு அதிர்ச்சியளித்தது அவருக்கு.
எவாஞ்சலினுடனான திருமணப் பேச்சுக்களைப் பற்றி கால்டனிடம் தெரியப்படுத்திவிடும் எண்ணத்தில் இருந்த செலீனா, கால்டன் விட்ட வார்த்தைகளில் ஸ்தம்பித்துப் போனார். இனி இது பற்றி கால்டனிடம் பேசும் பொறுப்பினைத் தன் கணவரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்.
ஆனால் செலீனாவுக்குக் கால்டன் வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டது போல் பட்டது. நின்று போன திருமணம், அதனால் ஏற்பட்ட அவமானம் இவற்றை மறப்பதற்காகவும் ஒரு ப்ரேக் வேண்டியும் கால்டன் தற்காலிகமாகத் தனிமையில் இருக்க முடிவெடுத்திருக்கிறார் என்று தான் அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கால்டன் நிரந்தரமாகத் தனிமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ என்ற சிறு ஐயப்பாடும் அவர் மனதில் தற்போது எழுந்துவிட்டது.
இதை வளர விடக் கூடாது, உடனடியாக திருமணப் பேச்சுக்களைத் துரிதப் படுத்த வேண்டும் என்றும் நினைத்தார். கால்டனிடம் அவரின் தந்தையே அறிவிக்கட்டும் என்றும் பிற ஏற்பாடுகளைத் தான் கவனிக்கலாமென்றும் கணக்கு போட்டார். திருமணத்திற்குப் பிறகு தன் குடும்ப சட்டப்படி கால்டன் குடும்பமும் இந்த மேன்ஷனில் வசிக்கத்துவங்கிவிடும் என்று நினைத்தார். கால்டன் வாழ்வில் நடந்துகொண்டிருப்பவைகளைப் பற்றி அவருக்கு எந்த ஐடியாவும் இல்லை.
-வித்யாகுரு