3.24- எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்கனும்
மறுநாள் இருவரும் அவரவர் பணியிடம் சென்றனர். கயல் வழக்கம்போல் பிஸியாகிப்போனாள். கால்டன் முன் தினம் கயல் பின்னால் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் சுற்றியதால் பல வேலைகள் பாதியில் நின்றுபோய் இருந்தன. அவை அனைத்தையும் கேத்தரின், ரேச்சல் உதவியுடன் படு வேகத்தில் செயல்பட்டு முடித்தார். ஒரு கட்டுமான சைட்டுக்குச் சென்றுவிட்டு மதியம் தெரெக் திரும்பிவந்தார்.
“நேத்து எங்க தான் இருந்த நீ? அம்யூஸ்மெண்ட் பார்க்ல கயலோடவா இருந்த?”
“நீ சொல்லித் தான் அவங்க அங்க இருக்கறதே தெரிஞ்சிது. அப்பறம் தான் போனேன்.”
“ஏன் ஏதாவது சண்டையா?”
“ஆமா.. பட் சமாதானம் பண்ணியாச்சு.”
“என்ன கிறுக்குத்தனம் பண்ணிவச்ச?”
“குழந்தை வேண்டாம். ப்ரெக்னன்ஸியை முடிச்சுக்கலாமின்னு சொன்னேன்”
“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா.? காதலைச் சொல்லுவன்னு பாத்தா இப்படி சொல்லி வச்சுருக்க!!”
“பின்ன கயல் வாந்தி எடுத்து எவளோ சிரமப்படுறா!. என்னால தாங்கிக்கவே முடியல்ல.”
“இந்த காரணம் எனக்கு தெரியும். கயலுக்கு தெரியுமா? தப்பா இல்ல நினைச்சிருப்பாங்க?!!”
“ஆமா ஆமா. அப்பறம் ஒரு வழியா சமாதானம் பண்ணிட்டேன். இப்ப ஒன்னும் பிரச்சினை இல்ல.”
“எப்படி சமாதானம் பண்ண? காதலைச் சொல்லிட்டியா?”
“நேரடியா சொல்லல்ல.. நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் அப்படின்னு சொன்னேன்.”
“மொரான். ஐ லவ் யூ அப்படின்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே?”
“நாங்க என்ன டீன் ஏஜ்-லையா காதலிக்குறோம்? எனக்கு 32 வயசாச்சு. அவளுக்கு 30. ரெண்டு பேரும் ப்ரொஃபஷனல்ஸ். நான் ஒரு கம்பெனியோட சி.ஈ.ஓ, அவ மூளை அறுவை சிகிச்சை நிபுணர். சின்னப்புள்ளத்தனமா ஐ லவ் யூன்னெல்லாமா சொல்லிப்பாங்க! நான் அவளைக் காதலிக்குறேன்னு அவளுக்குப் புரியுது. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்கும் புரியுது. அப்பறம் என்ன?”
“இந்த பேச்செல்லாம் வேலைக்கே ஆகாது. அதுக்கு நானும் ரேச்சலுமே உதாரணம். ஒன்பது வருஷமா காதலிக்குறோம். ஆனா வெளிப்படையா பேசாம, வயசு தான் போகுது. இப்ப சந்தர்ப்பமும் அமையமாட்டேங்குது, எப்படி ஆரம்பிக்கறதுன்னும் புரியல்ல. அதுனால வெளிப்படையா கயல்கிட்ட சொல்லிடு. உங்களுக்குள்ள பல வித்தியாசங்கள் இருக்கு. அதை எல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு பேசினா தான் தெளிவு வரும். தள்ளிப்போடாத.”
“அவ அப்பா உடம்பு சரி இல்லாம இருக்குற இந்த நிலமையில காதலைச் சொல்லுறது தப்பு தெரெக். அவரு முதல்ல சரி ஆகட்டும். இன்னும் 2 வருஷம் அவ என் கூடத்தான் இருக்கப்போறா.. அதுக்குள்ள கொஞ்ச கொஞ்சமா என் மனசைப் புரியவச்சுருவேன். நீ சொல்லுறமாதிரி ஐ லவ் யூ, அப்படியெல்லாம் நான் என்னைக்கும் பேசவே மாட்டேன்.”
“இன்னிக்கு சொல்றேன் எழுதி வச்சுக்கோ. டீன் ஏஜ் ஆள் மாதிரி ஐ லவ் யூ மட்டும் இல்ல.. இன்னும் பைத்தியக்காரத்தனமான எல்லா காதல் வசனங்களையும் கயல் முன்னாடி நின்னு நீ ஒரு நாள் சொல்லத்தான் போற. அப்ப உன்னைப்பாத்து நான் கைக்கொட்டி ஹ ஹ ஹா…ன்னு சிரிப்பேன்” என்று சாபம் விட்டுவிட்டு எழுந்து போனார் தெரெக்.
கால்டன் பேக் செய்துகொண்டு மருத்துவமனை கிளம்பினார். செல்லும் வழியில் தெரெக் சொல்வதிலும் ஒரு பாயிண்ட் இருக்கிறது என்று தோன்றியது. காதலை வெளிப்படுத்த ஏதேனும் சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்லிவிடுவது என்று நினைத்தார்.
வழக்கமான இடத்தில் கயலுக்காகக் காத்திருக்கையில், எவாஞ்சலின் கால்டனின் காரைப் பார்த்தாள். பேச்சுக்கொடுக்கலாமென்று பூனை நடையைத் துவங்கி வந்துகொண்டிருந்தபோது கயல் கால்டனின் காரில் ஏறுவதைக் கண்டாள். அதிர்ச்சியானாள். கார் கிளம்பியது. ட்ரைவர் சீட்டில் இருந்த கால்டனையும் பார்த்துவிட்டாள். அவளின் பூனைக்கண்கள் புலியினைப் போல் குறிவைத்தன. உடனடியாகச் செயல்பட்டாள். தன் தந்தையின் மூலம் கால்டனின் பெற்றோரை விட்டு “எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்கனும்” என்று கால்டனிடம் சொல்ல வைக்க ஏற்பாடுகள் செய்தாள்.
கயலும் கால்டனும் வீடு சென்று சேரவும், கால்டனின் தந்தையிடமிருந்து “நாளை மாலை 6 மணிக்கு வந்து என்னைச் சந்திக்கவும். இடம் நாளை தெரிவிக்கிறேன்” என்று குறுஞ்செய்தியில் உத்தரவு வரவும் சரியாக இருந்தது.
எதற்கு 2 ஆண்டுகள் கழித்து அப்பா அழைக்கிறாரென்று வியந்தார் கால்டன். அவர் முகம் சிந்தனையில் ஆழ்ந்ததைக் கவனித்த கயல், “என்னாச்சு!!” என்று கேட்க அவளிடம் சொல்லாமல் மறைத்தார்.
“ஸ்கேன் பண்ண 5 மணிக்கு வரசொல்லி நினைவூட்டியிருக்காங்க அவளோதான்”
“ஓக்கே. 15 நிமிஷத்துல கிளம்பலாம்” என்று கயல் சொல்லிச்சென்றாள்.
அதே போல் இருவரும் மூன்றாம் மாதம் செய்யப்படும் குழந்தையின் முழு உடல் உறுப்புகளை ஆராயும், மரபணு குறைபாடுகளைக் கண்டறியும் அனாமலி ஸ்கேன் செய்யக் கிளம்பினர்.
வழக்கம்போல் கயல் மட்டும் ஸ்கேன் அறைக்குப் போக, கால்டன் வெளியே காத்திருந்தார். அரை மணியில் ஸ்கேன் அறையில் இருந்து கால்டனுக்கு அழைப்பு வந்தது. ஏன் அழைக்கிறார்களென்று புரியாமல் உள்ளே போனார் கால்டன்.
முப்பரிமானத்தில், ஸ்கேன் இயந்திர திரையில், குழந்தையின் முகம் தெரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அசைவற்றுப் போனார்.
“என்ன நின்னுட்டிங்க? வாங்க. உங்க வாரிசு தான். கிட்ட வாங்க” என்று மருத்துவர் அழைக்க, மேகத்தில் மிதப்பது போல் நடந்து படுக்கையில் கயலின் பக்கத்தில் போய் அமர்ந்தார்.
மருத்துவர், இது குழந்தையின் முகம், காதுகள், மார்பு, வயிறு, கைகள், கால்கள் என்று காண்பித்தார். இடது கையால் இடது காதினைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையினை வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு, ஒரு காலை நீட்டியும் மற்றொரு காலை மடக்கியும் வைத்துக்கொண்டு குழந்தை கயலின் கருவறையில் நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தது. முப்பரிமானத்தில் தெளிவாகத் தெரிந்த தன் குழந்தையைப் பார்த்துக் கால்டன் பேரானந்தத்தில் ஸ்தம்பித்தார்.
பிறகு மருத்துவர் ஸ்பீக்கரின் வால்யூமினை அதிகரித்துக் குழந்தையின் இதயத்துடிப்பினைப் ப்ளே செய்தார்.
கால்டன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. சிறு பிள்ளையென அழுதார் தன் குழந்தையின் இதயத் துடிப்பினைக் கேட்டு!. எந்தத் தந்தையால் இந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியும்.?
கால்டன் அழுவது கண்டு கயல் அவரின் விரல்களின் இடைவெளியைத் தன் விரல்களால் நிரப்பினாள். இதே போன்ற உணர்வுகளைச் சற்று முன்னர்தான் அவளும் அனுபவித்து முடித்திருந்தாள். மேற்படிப்புக்கு அமெரிக்கா வருவதற்கு முன் இந்தியாவில் மருத்துவராய்ப் பணியாற்றிய நாட்களில் எத்தனையோ கர்பினிப் பெண்களை அவள் பார்த்திருக்கிறாள். பிரசவம் கூடப் பார்த்திருக்கிறாள். இந்த மொத்த விஷயங்களும் அவளுக்கு அத்துப்படி தான். ஆனால் தனக்குள்ளே இந்த உயிர் உடல்பெற்றிருக்கிறது என்பதை உணரும்போது அவளும் மகிழ்ந்தாள். அதுவும் இக்கருவின் காரணமானவன் மீது அன்பும் நம்பிக்கையும் தற்போது அரும்பியிருப்பது, இதற்கு முன்பு செய்த ஸ்கேன்களின் போது தோன்றாத உணர்ச்சிகளை உண்டுபண்ணியது.
தலைவனின் கரம் கூடி நானும் இருக்கிறேன் பார் என்று நினைவூட்டினாள். கால்டனின் அழுத விழிகள் திரையிலிருந்து திரும்பி கயலுடன் கலந்தன. நன்றியுணர்வோடு அவளைப் பார்த்தன.
“புல் யுவர்செல்ஃப்” என்று கயல் சொன்னாள்.
“சந்தோஷமா..” என்று மருத்துவர் கேட்டுவிட்டு, மரபணுப் பரிசோதனைக்காகக் கயலின் இரத்த மாதிரி சேகரித்துக்கொண்டு அனுப்புவதாகவும் வெளியில் காத்திருக்கும்படியும் சொல்லிக் கால்டனை வெளியே அனுப்பினார்.
நெகிழ்ச்சி அடங்காத நிலையில் கால்டன் மனசே இல்லாமல் எழுத்து வெளியில் போனார்.
3.25- முதல் முத்தம்
-வித்யாகுரு