4.2- பிரும்மாண்டமானவள்
பளு அதிகமான அந்த கான்கிரீட் துண்டு கீழ் நோக்கி இறங்கியது. கெல்லி கூப்பரைத் துளைத்துக்கொண்டிருந்த அந்த இரும்புக் கம்பியும் உருவிக்கொண்டு துளைத்த வழியிலேயே வெளியேறியது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
எவாஞ்சலின் அவரின் வயிற்றுக்கு மேல் நீண்டிருந்த கம்பி பின்னோக்கி உருவிக்கொண்டு போவதைப் பார்த்தாள். அதிர்ச்சியானாள். கையை நீட்டி அதைப் பிடிக்கவும் போனாள். ஆனால் ஒரு நொடியில் முழு கம்பியும் உருவிக்கொண்டு கீழே விழுந்தது. இரத்தம் பீறிட்டுத் தெரித்தது. எவாஞ்சலினின் வெள்ளை மருத்துவக் கோட் முழுவதும் கால்டன் தந்தையாரின் இரத்தத்தால் நனைந்தது.
மறு நொடி மானிட்டர் அலறியது. BP கடகடவெனச் சரிந்தது. இரத்தப்போக்கு ஆறெனப் பெருகியது. அங்கிருந்த அத்தனை மருத்துவர்களும் செவிலியர்களும் எவாஞ்சலின் அலட்சியப் போக்கினால் கோபப்பட்டு அவளை மட்டமாகப் பார்த்தனர். அறிவற்றவள் என்று வாய்விட்டே சிலர் சொன்னார்கள்.
கால்டனும் செலீனாவும் அசைவற்றுப் போயினர். அதிர்ச்சியில் உறைந்தனர். எவாஞ்சலின் பதட்டத்தில் செய்த முட்டாள்தனத்தினால் கால்டனின் தந்தையார் உயிர் ஆபத்தில் சிக்கியது. அந்த நேரம் பார்த்து Prof.Dr.செலிம் தொடர்புகொண்டார். மற்றொரு மருத்துவர் அழைப்பினை எடுத்தார்.
“எவாஞ்சலின்.. எனக்கு சர்ஜரி முடிஞ்சிருச்சு. நீ தியேட்டருக்கு பேஷண்ட்டைக் கொண்டு வந்துரு. நான் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன். X ray பண்ணியாச்சா?” என்று அவசரமாகக் கேட்டார். ஆனால் எவாஞ்சலின் ஒன்றுமே பேசவில்லை. உறைந்தாள். செலிம் மீண்டும் குரல் கொடுக்க, அழைப்பினை எடுத்த மருத்துவரே, கம்பி வெளியேறிவிட்டதையும் இரத்தப்போக்கு அதிகரித்திருப்பதையும் சொல்ல, கடுப்பான செலிம் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார். அப்போதும் எவாஞ்சலின் பேசவில்லை. செலிம் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி அறிவுறுத்துவதற்காக “எவாஞ்சலின்” என்று பல முறை கத்திக் கூப்பிட்டும் அவள் பேசவில்லை. ஏனென்றால் அவள் ஸ்தம்பித்துப் போய்விட்டாள். இப்படிப்பட்ட இக்கட்டினைச் சமாளிக்கும் அளவுக்கு அவளிடம் பக்குவமோ தைரியமோ சமயோஜித புத்தியோ இருக்கவில்லை. மற்ற மருத்துவர்கள் உந்தியும் எவாஞ்சலின் சுயநிலைக்கு வந்தாளில்லை. அதுவரை அமைதிகாத்த கயல் களமிறங்கினாள்.
“சொல்லுங்க Prof. நான் கயல். இங்க தான் இருக்கேன். நிலைமை மோசமடையுது. என்ன பண்ணட்டும்?”
“கயல்.. நீ இருக்கியா!! நல்ல வேளை! 10 மினிட்ஸ் சமாளி. ஆஸ்பிரேட் பண்ணு. ஏதாவது பண்ணு. உன் பொறுப்பு. தியேட்டருக்கு கொண்டு வா. நான் வந்துடறேன். நம்ம ஹாஸ்பிடலுக்கு அவரு எவளவோ செஞ்சிருக்காரு. இப்ப நாம திருப்பி செய்யுற நேரம். புரிஞ்சு நடந்துக்கோ. டூ யுவர் பெஸ்ட்”
“சரி Prof. என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யுறேன்” என்று சொல்லி இணைப்பினைத் துண்டித்தாள்.
சர்ஜிக்கல் கையுறை கேட்டுப்பெற்று அணிந்தாள். பஞ்சுகளை வைத்து அழுத்தி இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்தப் பார்த்தாள். ஆனால் பீறிட்டுக்கொண்டு வந்தது. இரத்தமளிக்க உத்தரவிட்டாள். அடுத்து யோசித்தாள். சரசரவென்று பச்சைக் கவுனை மாட்டினாள். கம்பி குத்தியிருந்த இடத்தைச் சுற்றி கடகடவெனச் சுத்தம் செய்துவிட்டு ஒரு பச்சை ஷீட்டினை விரித்துக் கத்தியைக் கேட்டாள்.
மற்றொரு மருத்துவர் குறுக்கிட்டார்.
“என்ன பண்ணப்போறீங்க?. இவரை ஆப்பரேட் பண்ணப் போறீங்களா? இங்க எப்படி பண்ணலாம்? இவரு எவளோ பெரிய ஆள் தெரியுமா? Prof தியேட்டர் கொண்டு வர தானே சொன்னாரு. அதைச் செய்யுங்க போதும்” என்றார்.
பாம்பினைப் போல் சீறும் பார்வை ஒன்றை அவர் மேல் வீசினாள். “இப்போ, இங்க, இவரை நான் ஆப்பரேட் பண்ணுவேன். இல்லைன்னா இரத்தக்கசிவால இவரு ரெண்டே நிமிஷத்துல செத்துடுவாரு. எனக்கு இவர் ஒரு பேஷண்ட். அவ்வளவு தான். Prof சொன்னது எனக்கும் கேட்டுது. தியேட்டர் போகற வரைக்கும் என் பொறுப்பு. ஸோ வாயை மூடிக்கிட்டு இருங்க. இல்லைன்னா உங்களை கட் பண்ணிடுவேன். புரிஞ்சிதா?” என்று ஒரு மிரட்டி மிரட்டினாள். அவளின் ஆளுமைக்கு முன்னால், பேசிய வாய் மூடிக்கொண்டது.
மறுநொடி கெல்லி கூப்பரின் வயிற்றினை அறுத்தாள். உள்ளே கை விட்டுத் துழாவினாள். எமெர்ஜென்ஸி பின் டிராப் ஸைலண்ட் ஆனது. கண்களை மூடிக்கொண்டு கெல்லி கூப்பரின் வயிற்றில் எதையோ தேடினாள். இரண்டொரு நொடிகளில் தேடியது கிடைத்துவிட்டது போல் கண்களைத் திறந்தாள்.
அடுத்த சில நொடிகளில் அலறிக்கொண்டிருந்த மானிட்டர் அமைதியானது. வேகமாகக் குறைந்து வந்த இரத்த அழுத்தம் ஓரளவு கட்டுப்பட்டது. இதயத்துடிப்பு சீரானது. இரத்தப்போக்கு நின்றது.
“யு டிட் இட் டாக்டர்! யு ஆர் அமேஸிங்!” என்று சுற்றியிருந்த அத்தனை வாய்களும் முனுமுனுத்தன. என்ன செய்தாள் என்பது பலருக்கும் விளங்கவில்லை. மேஜிக் பார்ப்பது போல் வாயைப் பிளந்தனர்.
அனைத்தும் இயல்புக்குத் திரும்பியதைப் பார்த்ததும் தான் கயல் அடக்கி வைத்திருந்த மூச்சினை விட்டாள். இரைத்தது அவளுக்கு. அதனூடே, prof.Dr.செலிமுக்குக் கால் செய்யச் சொன்னாள்.
“என்னாச்சு கயல்?”
“Prof, ப்ளீடிங்கை நிறுத்திட்டேன். தியேட்டருக்குக் கொண்டு வர்றேன்”
“ப்ளீடிங்கை நிறுத்திட்டியா!!!!!! எப்படி?”
“கம்பி குத்தின இடம் ஸ்ப்ளீன் கிட்ட. அதுனால கட் பண்ணி தமணிய தேடினேன். கண்டுபிடிச்சுட்டேன்.”
“எப்படி ப்ளீடிங்கை நிறுத்தி வச்சுருக்க?!!!”
“என் நடுவிரலால ஆர்டரிய அழுத்தி பிடிச்சுட்டிருக்கேன்”
“க்ரேஸி கேர்ள்!!!! உன்னத்தவிர யாருக்கும் இந்த ஐடியா தோணவே தோணாது.! பெருமையா இருக்கு! ஓகே தியேட்டருக்கு கொண்டுவா” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் Prof.Dr.செலிம்.
அழைப்பினைத் துண்டிக்கச்சொன்னாள். பிறகு சுற்றி இருந்த மருத்துவர்கள் செவிலியர்களில் 3 பேரை அழைத்தாள்.
“பாருங்க. நான் 3 எண்ணுவேன். என்னைத் தூக்கிவிடனும். நான் இந்த ட்ராலி மேல ஏறி உக்காரனும். என் கை ஆடக்கூடாது. ஒரே அட்டெம்ண்ட் தான்.” என்று உத்தரவிட்டாள். அவளின் இன்னொரு கையை ஒருவர் பிடித்தார். தொடையை ஒருவர் பிடிக்க, பின்புறத்தில் ஒருவர் தயாராக இருந்தார்.
கயல் நீண்ட மூச்சு இழுத்துவிட்டுக்கொண்டாள். மூன்று எண்ணியதும் மூவரும் கயல் சொன்னது போல் செய்து அவளை ட்ராலியில் ஏற்றிவிட்டனர்.
மேலே ஏறிய கயல் கெல்லி கூப்பர் என்ற பெரும் பணக்காரர் மேல், கெண்டக்கியில் அதிக செல்வாக்கானவர் மேல் வாட்டமாக அமர்ந்துகொண்டாள்.
அடுத்த உத்தரவுகள் இட்டாள். வழியையும் மின்தூக்கியையும் காலி செய்ய இருவரை ஏவினாள். சிறிதும் கை அசையாதவண்ணம் பதமாக அதே நேரம் விரைவாக முதல் தளத்தில் உள்ள ஐந்தாவது அறுவை சிகிச்சை அரங்குக்குத் தள்ளிக்கொண்டு போக ஆணையிட்டாள்.
அதே போல் நடந்தது. ட்ராலி நகரத் துவங்கியதும் செலீனாவைப் பார்த்தாள். இருவர் கண்களும் சந்தித்துக்கொண்டன முதல் முறையாக.
“இவங்க பல்ஸ் செக் பண்ணுங்க. BP கு சிகிச்சை துவங்குங்க” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாள்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் பேரதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருந்த செலீனாவின் கண்களுக்குக் கயல் பிரும்மாண்டமானவளாய்த் தெரிந்தாள்.
4.3- ஆறுதலாய்..
-வித்யாகுரு