4.20- அதே இடத்தில்
பணியிடத்துக்குள் நுழைந்துவிட்டால் கயல் உலகையே மறந்துவிடுவாள். தன் சொந்த பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு தன்னைத்தானே அர்ப்பணித்துப் பணிசெய்யும் பண்பு கொண்டவள் அவள்.
ஆனால் அன்று கால்டன் அவளை இறக்கிவிட்டுப்போனதும் பிரிவின் வலி அவளை மிகவும் சிதற அடித்துவிட்டது. ஆரம்பம் முதலே தயங்கித் தயங்கி வந்ததினால் தான் இந்த அளவு இது குழம்பிவிட்டது என்று நினைத்தாள் அவள். அவர் தன் காதலை வெளிப்படுத்திய அன்றே தன் தரப்பினை அவருக்கு விளங்க வைக்காமல் தவறவிட்டுவிட்டோம் என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.
ஒருபுறம் அவளின் இயலாமையைக் கடிந்த அவள் மனம் மறுபுறம் அதற்கு நியாயமும் சொன்னது.
“அவர் ஒரு பெரும் பணக்கார அமெரிக்கர். வாடகைத்தாயாக்கி ஒப்பந்தம் செய்தவர். அவர் தான் தெளிவாகப் பேசவேண்டும். காதலை மட்டும் சொன்னாரே தவிர உனக்கு சம்மதமா, உன் கருத்து என்ன, வேறுபட்டவர்களாக இருக்கிறோமே எப்படிச் சமாளிக்கலாம், என் எதிர்பார்ப்புகள் இவை – உன் எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்று அவரல்லவா கேட்டிருக்க வேண்டும்! இப்போது கரு கலைந்த பிறகு இடைவெளியினைத் தானே உண்டாக்கியிருக்கிறார்! இதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? அவர் தாய் தந்தையர் உடல் நலன் குன்றியிருந்த சமயம் காதலை வெளிப்படுத்தினார். அந்த நேரத்தில் எப்படி திருமணம் பற்றி கேட்டிருக்க முடியும்??!! அதன்பிறகு கிடைத்த 4 முழு நாள் இடைவெளியில் அதைப் பற்றி அவர் பேச்சே எடுக்கவில்லையே! காதலிப்பது என்று இருவரும் முடிவெடுக்கும் பட்சத்தில் நாம் சாதாரண ஜோடி இல்லை. மேற்கொண்டு சுமூக வாழ்வினைத் தொடர கலந்துரையாடுவது அவசியமல்லவா! இப்படி எதுவும் பேசாமல் கேட்காமல் அவ்வப்போது சிறிய உரசல்களும் கன்னத்து முத்தங்களும் செய்தால் மட்டும் போதுமா?!” என்றெல்லாம் பலவாறாக சிந்தனைகள் ஓடின கயலுக்குள்.
எப்படியாயினும் தன் தரப்பு எண்ணங்களை அவர் வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னர் நிச்சியம் தெரியப்படுத்திவிடுவதென்று முடிவு செய்தாள். கால்டனின் காதல் உண்மையென்றால் அவர் புரிந்துகொள்வார் என்று எண்ணினாள். அதற்கு மேல் இக்காதல் கைகூடுவது விதியில் கையில் தானென்று நொந்துகொண்டாள்.
மருத்துவமனை மருத்துவர் குடியிருப்பு பற்றி விசாரித்தாள். காலியாய் இருப்பதாகவும் எந்நேரத்திலும் மாறிக்கொள்ளலாம் என்றும் தெரிந்து கொண்டாள். கஷ்டமாக இருந்தது. ஆனால் கால்டனுடனான காதல் தொடருமானாலும் அவர் வீட்டில் இருக்க அவள் மனம் இடம்கொடவில்லை. வீட்டை விட்டு வெளியேறுவதில் எந்த ஐயமும் இல்லை அவளுக்கு.
அதே நேரம் கால்டனை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை. தவித்தாள். மேற்கொண்டு என்ன செய்வதென்று விளங்கவில்லை. அனைத்தையும் தாண்டிய பெருத்த சந்தேகம் ஒன்றும் புதிதாய் அவள் மனதில் குடியேறியது. குழந்தை தவறிப்போனது பற்றிக் கால்டன் தன் மேல் வருத்தம் கொண்டிருப்பாரோ, அதனால் உருவான காதல் உருமாற்றம் பெற்றிருக்குமோ என்பதே அவளை உள்ளுக்குள் பயங்கரமாகக் குடைந்துகொண்டிருந்தது. மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். கவனம் சிதறியது.
இதைக் கவனித்த அலி அவளை எதிரே இருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்தார். அவளும் அலியோடு கிளம்பினாள்.
***
கயலை இறக்கிவிட்டு அலுவலகம் சென்ற கால்டன் தெரெக்கிடம் குதித்தார். புலம்பித் தீர்த்தார்.
“எதுக்கு இப்ப இப்படி குதிக்குற? என்ன ஆகிடுச்சு??!!”
“உனக்கு காது கேக்குதா இல்லையா? கயல் என்னை விட்டு பிரியுற முடிவுக்கு வந்துட்டா. கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமா ஒரு ரோபாட் மாதிரி அந்த பெரிய பெரிய கண்ணை வச்சுக்கிட்டு என் முகத்தைப் பாத்துக்கிட்டே வீட்டை விட்டுப் போறேன்னு சொல்லுறா. ராத்திரியெல்லாம் நான் தூங்கவே இல்ல தெரியுமா! இப்படி ஒரு அழுத்தக்காரியை நான் பாத்ததே இல்ல.”
“இதுக்குத் தான் நான் அன்னிக்கே உன்ன தெளிவா பேசுன்னு சொன்னேன். நீ தான் 2 வருஷம் டைம் இருக்கு பாத்துக்கலாமின்னு சொன்ன.”
“அந்த 2 வருஷ டைம் இப்படி பாதியில முடிஞ்சு போயிருமின்னு எனக்கு தெரியல்லையே தெரெக்!”
“நாம திட்டமிட்டுக்கிட்டு இருக்கும் போது நிதர்சனத்தில என்ன நடக்குதோ அது தானே வாழ்க்கை கால்டன்!”
“உண்மை தான் தெரெக்.”
“இப்ப கூட ஒன்னும் இல்ல. அவகிட்ட பேசு..”
“மாட்டேன் தெரெக். அவளுக்கு என்ன அத்தனை ஈகோ!? நான் என் காதலை சொல்லிட்டேன். ஆனா அதுக்கு ஆமா இல்லன்னு இன்னிவரைக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லல்ல அவ. 4 முழு நாள் அவ கூடவே தான் இருந்தேன். பேச்சே எடுக்கல்ல. இனிமே நான் பேசமாட்டேன். காதல் வேணுமின்னா கால்டன் வேணுமின்னா அவ தான் வரனும்.”
“நீ பேசுறது அநியாயம் கால்டன். நீ வெளிப்படுத்திட்ட ரைட்டு. அவ கிட்ட சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டியா!?”
“சம்மதம் இல்லைன்னா அவளை நெருங்கிட முடியாது. கையைத் திருகி கழுத்தைப் பிடிப்பா!”
“நீயா நினைச்சுக்கிறதெல்லாம் வேலைக்கே ஆகாது. அவ இந்திய பொண்ணு. அவங்க கலாச்சாரமே வேற. நாம பாக்குற பொண்ணுங்க போல அவங்க வெளிப்படை கிடையாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த குழப்பங்களுக்கு நீ தான் காரணம். நீ ஒரு முறை அவகிட்ட பேசினா…”
“மாட்டேன் தெரெக். முடியாது!”
“ஏன்? ஒரு முறை உன் ஈகோவையும் திமிரையும் விட்டுக்கொடுத்து அவகிட்ட பேசிட்டா உயிர் போயிடுமா?!”
“நான் சொல்லிட்டேன் தெரெக். அவளுக்கு நல்லா தெரியும். இனிமே அவ தான் பேசனும்.”
“உன்னெல்லாம் மாத்த முடியாது கால்டன். இப்பவும் சொல்றேன். ஒரு நாள் நீ அவ முன்னாடி மண்டியிட்டு உன் காதலைச் சொல்லி கெஞ்சத்தான் போற. அன்னைக்கி உன்னைப்பாத்து நான் சிரிக்கத்தான் போறேன். சரி நியூ யார்க் ஹோட்டல் புராஜெக்ட் பாதி முடிஞ்சிது. கண்ணாடிகள் பதிக்கனும். எல்லாம் ரெடி பண்ணியாச்சு. ஷோ ரூம் போனா ஒப்பந்தம் கையெழுத்து வாங்கி ஆர்டர் கொடுத்துட்டு வந்திடலாம். முகப்பு டிசைன்-ல கண்ணாடி வேலை மட்டும் தான் பாக்கி.”
“போகலாம்.”
இருவரும் கிளம்பினர்.
பொதுவாக செம்டம்பர் மாதம் லெக்ஸிங்டனில் கோடைக்காலம். பகலில் 25-27 டிகிரி வெப்பநிலை இருக்கும். தெரெக்கும் கால்டனும் ஒரே காரில் கிளம்பி அந்த கண்ணாடி ஷோரூமுக்குப் போயினர். உள்ளே உரிமையாளரைச் சந்தித்தனர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 20நிமிட மீட்டிங் நடந்த போது அங்கே கோடை மழை தூரியது.
இருவரும் மீட்டிங் முடித்து வெளியே வந்த போது மீண்டும் வானவில்..
தெரெக்குடன் காரில் ஏறிய கால்டனுக்கு அதே இடத்தில், அதே போன்ற வானவில் ஒன்றின் விளிம்பில் கயலை முதன்முதலாய்ப் பார்த்தது நினைப்புக்கு வந்தது. ஏங்கினார். கயலைப் பிரிவது சாத்தியமே இல்லை என்பது அவருக்கு நன்றாய்ப் புரிந்திருந்தது.
அப்போது சரியாக கயலும் அலியும் சாலையினைக் கடக்க நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தார். கயலைப் பார்த்ததும் கோபமும் காதலும் பற்றி எரிந்தது கால்டனுக்குள்ளே. தெரெக்கிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் காரிலிருந்து இறங்கி கயலிடம் ஓடினார்.
சாலையில் நின்றிருந்த கயல், வானவில்லை மெதுவாய்ப் பார்த்துக்கொண்டே வந்தாள். வானவில்லின் மேலேயே ஓட்டிவந்த பார்வையின் முடிவில் கால்டனைச் சந்தித்தாள். கண்கள் குப்பென்று வியர்த்தன.
கடுப்புடன் கயலிடம் வந்தார் கால்டன்! முகத்தில் ஒரு பிடி கடுகை வீசினால் மறுநொடி வெடித்துவிடும் போல் இருந்தது.
காதல் நாடகமொன்று அரங்கேற்றம் பெறப்போகிறது என்று அலியும் தெரெக்கும் கவனிக்கத் தயாராகினர். வானவில்லும் அவர்களின் வாழ்க்கையில் வண்ணங்களைக் கொட்டத் தயாரானது!
4.21- முடியாது கால்டன்!
-வித்யாகுரு