4.4- கயலின் அறையில்
அரை மணியில் கயலின் அறைக்குத் திரும்பி வந்தார் கால்டன். அவளின் அறையில் நீண்ட சோஃபா ஒன்று இருந்தது. அதிலே ஆய்ந்து ஓய்ந்து பொத்தென்று சாய்ந்தமர்ந்தார்.
“BP எவ்வளவு இருக்கு?”
“190-120. ட்ரிப்ஸ் போகுது. ஊசி போட்டிருக்காங்க.”
“சாப்பிட வச்சிங்களா?”
“தங்கச்சி வந்துட்டா. இப்ப சாப்பிட ஆரம்பிச்சிருப்பாங்க. தனி அறைக்கு மாத்தியாச்சு. மத்தவங்க எல்லாருமே வந்துகிட்டிருக்காங்க.”
“பேசினிங்களா!”
“இல்ல. அவங்க எதுவுமே கேக்கல்ல. பேசவும் இல்ல.”
“நீங்க பேச வேண்டியது தானே!”
“நானா என்ன பேசுறது!? சர்ஜரி ஆரம்பிச்சாச்சுன்னு மட்டும் சொன்னேன்.”
“அழுதாங்களா?”
“எந்த ரியாக்ஷனுமே இல்ல..”
“…”
“நல்லா ஆகிடுவாரு தானே..”
“நிச்சியமா.. பயப்படுறீங்களா!!”
“அவரை நான் நேசிக்கவே இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்”
“பட் யூ டூ..”
“ஆமா! இப்பத்தான் புரியுது”
“எனக்கு முன்னமே தெரியும்!”
“எப்படி?”
“எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். நாம நினைச்சாலும், முயற்சி பண்ணினாலும் சில உறவுகளை விட்டுடவும் முடியாது அடியோட வெறுக்கவும் முடியாது. நீங்களும் உடம்பு சரியில்லாம இருந்தப்போ மயக்கத்தில சில விஷயங்கள் சொன்னிங்க. அதிலேருந்து நானும் புரிஞ்சுக்கிட்டேன். உங்க குடும்பத்துகிட்ட உங்களுக்கு இருக்கறது ஏக்கம் தானே தவிர வெறுப்பு இல்ல!”
கயல் சொன்னது கேட்டு இதயம் கனத்தது கால்டனுக்கு. தன் மன உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாகத் தனக்கே அவள் விளங்கவைத்தது போல் இருந்தது. இறுக்கமானார். கண்கள் கலங்கின.
“சாப்பிடலாம் வாங்க..”
“சரி.. வாஷ் ரூம் எங்க இருக்கு?”
கையால் சுட்டினாள்.
“5 நிமிஷம். சாப்பிடலாம். பசி கொல்லுது” என்று சொல்லிவிட்டுக் கழிப்பிடம் சென்றார்.
அவர் உள்ளே சென்ற சில நிமிடங்களில் கயலின் அறைக்கதவு தட்டப்பட்டது. உள்ளே வரச்சொன்னாள். வந்தவள் எவாஞ்சலின்.
“வெற்றிகரமா உன் நாடகத்தை நடத்திட்ட இல்ல?”
“என்ன உளர்ற?”
“இதோ பார். நீ என்ன செஞ்சாலும் சரி! கால்டனை நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். வீணா என்னோட மோதாத. இத்தனை நாள் போனா போகட்டுமின்னு உன்னை விட்டு வச்சிருந்தேன். இந்த விஷயத்துல அப்படி பாவம் பாக்க மாட்டேன். இந்தியாவுலேருந்து வந்த நாடோடி!. உனக்கு “கூப்பர்” குடும்ப வாரிசு கேக்குதா?” என்று சீறினாள்.
கயலுக்குக் கோபம் துளிர்விட்டது. அவளை முறைத்தாள். பதில் கொடுக்க வாயைத் திறக்கவும், “ஹனி..” என்று கால்டன் குரல் கேட்கவும் சரியாய் இருந்தது.
இரு பெண்களும் குரல் வந்த திசை நோக்கித் திரும்பினர். வாஷ் ரூம் வாசலில் சட்டையின்றி வெறும் பனியனோடு கட்டுடல் அழகனாய் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் திணித்தவாறு நின்றிருந்த கால்டன் இரு பெண்களையும் கவர்ந்தார். ஆனால் இரு பெண்களிடமும் அனேக வித்தியாசங்கள் இருந்தன. கயலிடம் காதலும் எவாஞ்சலினிடம் வெறியும் இருந்தது.
இருவரையும் நோக்கி வந்த கால்டன் நேராக கயலருகே சென்று அவளின் இடையினைச் சுற்றி வளைத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டு, “என்ன ஹனி! மேடம் என்ன சொல்லுறாங்க?” என்று கேட்டார்.
கயலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. முழித்தாள்.
“என்ன எவாஞ்சலின்.? என்னமோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துது” என்று நக்கலடித்தார்.
கால்டன் ஒன்றுமே சொல்லாமல் அவளுக்கு எதைப் புரியவைக்க வேண்டுமோ அதைப் புரிய வைத்துவிட்டார். கயலின் இடையைச் சுற்றி உரிமையோடு தவழ்ந்த கால்டனின் கையினைப் பார்த்தாள் எவாஞ்சலின். இருவரும் நெருங்கி நிற்கும் தோரணையையும் பார்த்தாள். அவளின் பூனைக் கண்கள் பாம்பினைப் போல் விஷம் கக்கின. கல்யாண விஷயம் இவரிடம் தெரிவிக்கப்பட்டதா என்று சந்தேகம் வந்தது அவளுக்கு.
“உங்க அப்பா நம்ம கல்யாண விஷயத்தைச் சொல்லல்லையா?”
“சொன்னாரே! முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன். அதை உன் அப்பாவுக்கு தெரிவிக்கறதுக்குள்ள தான் இப்படி விழுந்துட்டாரு. அம்மா கிட்ட போய் வேணுமின்னா முழு விவரத்தையும் கேட்டுக்கோயேன். ஆனா அம்மாவுக்கு உன்னை மாதிரி திறமையும் பொறுப்பும் இல்லாத அலட்சியமான ஆளுங்களைச் சுத்தமா பிடிக்காது. ஸோ இனிமே உன்னைத் திரும்பிக் கூட பாக்கமாட்டாங்களே!! உன் மேல கேஸ் போட்டாலும் போடுவாங்க. பத்திரமா இருந்துக்க” என்று செம்மையாகக் கிண்டலடித்தார்.
இருவரையும் மாறி மாறி முறைத்துவிட்டு வேக நடையில் வெளியேறினாள் எவாஞ்சலின். ஆத்திரத்தில் அழத் துவங்கினாள். கால்டன் தனக்கு இல்லை என்பதை விட கயலிடம் மீண்டும் தோற்றுவிட்டோமே என்று தான் அதிகமாய் ஆத்திரப்பட்டாள்.
எவாஞ்சலின் வெளியேறியதும், “இவளோட எனக்கு கல்யாணப் பேச்சு நடக்கறது உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று சற்று கோபமாய்க் கயலிடம் கேட்டார் கால்டன்.
கயல் தெரியும் என்று ஒப்புக்கொண்டதும் அவள் இடையைச் சுற்றி வளைத்திருந்த கை பின்வாங்கியது. சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டார். கோபமாகவும் வேதனையாகவும் இருந்தது அவர் முகம். கயலும் சென்று பக்கத்தில் அமர்ந்தாள். உணவு பரிமாரினாள். கால்டன் அவளை முறைத்தார்.
“சாப்பிடுங்க.. பசிக்கிதுன்னு சொன்னிங்கல்ல!”
“எப்ப தெரியும் உனக்கு?”
“அந்த கல்யாண நிகழ்வுல..”
“ஹோ! அதுனாலத்தான் என்னை வீட்டுக்கு போயிட்டு வரச் சொன்னியா?”
“…”
“இதை மனசுல வச்சுக்கிட்டு தான் அன்னைக்கு கல்யாணம் முடிவாயிருக்கும் அதுனால தான் குழந்தை வேண்டாமின்னு சொல்றீங்கன்னு சொன்னியா?”
“…”
“உன்னைத்தான் கேக்குறேன். பதில் சொல்லு”
“யூ ஆர் வெரி ஷார்ப்!!”
கோபம் தலைக்கேறியது கால்டனுக்கு. “நீ சாப்பிடு” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்தார்.
“எங்க போறீங்க?”
“எதுவும் போசாத!” என்று சொல்லிவிட்டு வாஷ் ரூம் போய் சட்டையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல நடந்தார்.
“என்கிட்ட எதுக்கு இப்ப இவ்வளவு கோபப்படுறீங்க?!!!”
“கிட்டத்தட்ட 3 வாரமா என் மேல இந்த சந்தேகத்தோடையே இருந்துருக்கல்ல நீ!”
“உங்க கேள்வி அபத்தமா இருக்கு!”
“என்ன அபத்தமா இருக்கு.?”
“இதுல நான் என்ன செஞ்சிருக்கனுமின்னு நீங்க எதிர்பார்க்குறீங்க?”
“என்கிட்ட ஓபனா கேட்டிருக்கனும்”
“என்னன்னு? எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களான்னா?”
“ஆமா”
“நான் எப்படி உங்ககிட்ட கேக்க முடியும்? நீங்க கல்யாணம் பண்ணிக்கறதுன்னு முடிவெடுத்தாலும் நான் என்ன செய்ய முடியும்?”
“ஓஹோ!”
“என்ன ஓஹோ? நான் உங்க சரோகேட். உங்க தனிப்பட்ட வாழ்க்கையில தலையிட எனக்கு உரிமை இல்ல. இந்த விஷயத்தை என்னால உங்ககிட்ட தெரிவிக்க முடியாது. அதனால வீட்டுக்குப் போனா நீங்களா தெரிஞ்சிக்க வாய்ப்பிருக்குன்னு போகச் சொன்னேன். இதுல நீங்க கோபப்படற அளவு என்ன தப்புன்னு எனக்கு புரியல்ல!”
“சரி. உன்மேல தப்பில்லைன்னே இருக்கட்டும். கல்யாண விஷயம் எனக்கு தெரிய வந்தா நான் என்ன பதில் சொல்லுவேன்னு நீ ஊகிச்சு வச்சுருந்த?”
“எனக்கு எந்த ஊகமும் இல்ல.”
“ஆ.. இதுக்கு தான் எனக்கு கோவம் வருது.”
“இதுல கோவப்பட என்ன இருக்கு?!! நிஜமா நீங்க என்ன பதில் சொல்லுவிங்கன்னு தெரியல்ல எனக்கு. எப்படி தெரியும்?”
“ஹோ.. அப்படின்னா பொழுது போக்குறீங்களான்னு மதியம் கேட்டியே! அது கோவத்துல கேக்கல்ல. நிஜமா மனசிலேருந்து தான் கேட்டிருக்க. அப்படித்தானே!”
“ஆமா.. நிஜமாத்தான் கேட்டேன்.”
“சூப்பர். ரொம்ப தேங்க்ஸ்” கோபமாகச் சட்டையை சோஃபாவில் விட்டெறிந்தார்.
“எதுக்கு இவளோ கோபப்படறீங்கன்னு சத்தியமா புரியவே இல்ல எனக்கு.”
“நீ நமக்குள்ள என்னதான் இருக்குன்னு நினைச்சுட்டிருக்க?”
“தெரியல்ல.. நீங்க தான் சொல்லனும். என்ன இருக்கு நமக்குள்ள?”
இப்படிப்பட்ட அழுத்தக்காரியா என்பது போல் கயலை முறைத்தார் கால்டன்.
4.5- ஒரு சோஃபாவில் இரு தூக்கம்
-வித்யாகுரு