அகோட்டஸ் துறைமுகத்தை நெருங்கிய நேரத்திற்குள், பல்வேறு நாட்டு வணிகர்களும், கிரேக்க போர்வீரர்களும் சேர்ந்து தீயை அணைத்து இருந்தனர். துறைமுகமெங்கும் பதட்ட நிலை காணப்பட்டது. துறைமுக அதிகாரிகள் அவசரமாக தீப்பிடித்திருந்த கிடங்குகள்,அதன் வணிகர்கள், மரக்கலங்களின் தலைவர்கள் ஆகியோரிடம் காவல் படை உதவியுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர்….
மாலுமிகள், விடுதியின் உரிமையாளர்கள், பவளதீவிற்கு வரும் பல்வேறு நாட்டினரையும் மகிழ்விக்கும் ஆடல் கூடங்களின் அழகிகள் அத்துணை பேரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தனர்….
எப்படி தீ பிடித்தது? என்ன செய்து கொண்டிக்கிறீர்கள்? என்று கோபமாக கத்தியபடியே வந்த அகோட்டஸை கண்டு கோட்டை தலைவன் முதல் துறைமுக அதிகாரிகள் வரை நடுங்கி நின்றனர்…. கோட்டை தலைவன் பதில் கூற முன்வந்தான்.
தலைவரே… சிகார் பிடித்துக் கொண்டிருந்த யாரோ ஒருவனின் தவறே தீ விபத்திற்கு காரணமாக இருக்கக் கூடும். விசாரித்து வருகின்றோம். மேலும் இன்று துறைமுக ஓய்வு நாளென்பதால் அனைத்து கிடங்குகளும் மாலை மங்கும் நேரத்திலேயே பூட்டப்பட்டு விட்டன. அனைவரும் களியாட்டங்களில் ஈடுபட்டு இருந்துள்ளனர். ஆயினும் எப்போதும் போல காவல் இருமடங்கு இருந்தது என்று விளக்கம் கூறினான்.
சமாதானம் அடையாத அக்கோட்டஸ் அனைவரையும் கடுமையாக சாடினான். சந்தேகப்படும் படி யார் இருந்தாலும் உடனே கைது செய்ய உத்தரவு இட்டவனின் கண்களில் அந்த காட்சி விரிந்தது… ஆம் அகோட்டஸ் வந்த போர் மரக்கலன் ஒன்றின் பாய்மரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கி இருக்க, அக்கோடஸின் கண்கள் கோபக் கனலில் புகைகக்க தொடங்கின.
இத்தனை கட்டுக் காவலையும் மீறி யார் போர் மரக்கலத்தில் தீவைத்து இருக்கக்கூடும்… என்று எண்ணிய அக்கோடஸிற்கு மிகப் பெரிய குழப்பமே மிஞ்சியது. ஆலிமாவின் ஆட்கள் பவளத்தீவு எங்கும் பிரவாகித்து இருக்கின்றார்கள் என்பதை அகோட்டஸ் தெளிவாக புரிந்து கொண்டான்…
உடனே போர் வீரர்களை அழைத்த அக்கோட்டஸ் விரைந்து சென்று பற்றியுள்ள தீயை அணைப்பதற்கு வேண்டியதை செய்யுமாறு உத்தரவுகளை பிறபித்தான். தானும் ஒரு சிறிய படகில் ஏறி மரக்கலத்தை நோக்கிப் பயணித்தான். துறைமுகத்தில் இருந்து போர்வீரர்களும், மற்ற மரக்கலண்களின் மாலுமிகளும் அணிஅணியாக புறப்பட்டனர்.
இவற்றையெல்லாம் அரண்மனை மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் கிரேக்க இளவரசன். அவனது உள்ளத்தில் பல்வேறு விதமான சிந்தனைகள் சூழ்ந்து கொண்டது. யாரிந்த ஆலிமா? கிரேக்கம் போற்றும் மாபெரும் படையின் பெரும் தலைவர், கேவலம் ஒரு பெண்ணிற்கு அஞ்சுவது ஏன்? என்று எண்ணிய டையோனிஸ், பெண் என்பவள் நுகர்வதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உரியவள்…என்ற அகந்தை கொண்டவனாகவே இவ்வளவு நாளும் வாழ்ந்து வந்துள்ளான்.
இயல்பிலேயே அரண்மனையின் செழிப்பில் தழைத்து, கர்வத்திலும், ஆணாதிக்க குணத்திலும் வளர்ந்த கிரேக்க இளவரசன் தன் இளைய சகோதரி ஒருத்தியுடைய குரலுக்கு மட்டுமே எப்போதும் அடங்கி நடக்கக்கூடியவனாக வளர்ந்திருந்தான். தாயையோ அல்லது மற்ற உறவுப் பெண்களின் வார்த்தைகளையோ அவன் ஒருபோதும் மதித்தது கிடையாது….இளவரசியிடம் மட்டும் எப்போதும், ஒரு அன்பு கலந்த பயம் அவனுக்கு உண்டு.
ஆனால் முதல்முறையாக கிரேக்க இளவரசனுக்கு ஒரு பெண்ணைப் பற்றிய அச்சமும், அதே வேளையில் அவளை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும் மேலோங்கியது. இருப்பினும் தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு இந்த ஆலிமா எந்த அளவுக்கு தடையாக இருப்பாள்? என்பதை உணர்ந்து கொள்ளவும், அதை குறித்த ரகசியத்தை தெரிந்து கொள்ளவும், டையோனிசின் உள்ளம் மிகுந்த ஆர்வம் காட்டியது….
நான்காம் ஜாமம் தொடங்கியிருந்த அந்த இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போர்க்கலணில் இருந்து ஒரு சிறிய படகு மட்டும் கரையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. கரையை எட்டிய அந்த படகில் இருந்து இறங்கிய வீரன் ஒருவன் அரண்மனையை நோக்கிச் சென்ற பாதையில் வேகமாக நடக்கத் தொடங்கினான்.
இளவரசனின் மாளிகையை அடைந்த அந்த வீரன், இளவரசன் முன்பாக பணிந்து நின்றான். பின் இளவரசன் டையோனிசிடம் முக்கிய தகவல் ஒன்றை கூறினான்.
கிரேக்கத்தின் வருங்கால அரசர் வாழ்க!!..படைத்தலைவர் தங்களிடம் கூறச் சொல்லிய முக்கிய தகவல் யாதெனில், படைத் தலைவரிடமிருந்து அறிவிப்பு வரும் வரை தாங்கள் இந்த அரண்மனையை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும், தலைவர் நாளை மறுநாள் நண்பகலுக்குள் அரண்மனை திரும்பிவிடுவார் என்பதும் செய்தி… மேலும் தங்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக அதிகரிக்கவும், தீவை முழுமையாக பாதுகாக்கவும் பத்து மரக்கலண்களில் உள்ள நம் கடற்படை வீரர்கள் உடனே இங்கு வந்தடைவார்கள், என்று நிறுத்தினான்….
மரக்கலண்களில் உள்ள போர்வீரர்களை துறைமுகத்திற்கு அனுப்பி தீவை பாதுகாக்க வேண்டிய அவசியம் இப்போது ஏன் வந்தது? என்பதும் அக்கோட்டஸ் தீவிற்கு திரும்பாதது ஏன்? என்பதும் இளவரசனுக்கு பெருத்த புதிராகவே இருந்தது…..
ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத டையோனிஸ், கோட்டை தலைவன் உடனே வந்து அவனை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.
கோட்டைத் தலைவன் வந்ததும் அவனிடம் சில முக்கிய உத்தரவுகளை இட்ட டையோனிஸ் உச்சி மாடத்து சொகுசு அறையில் தன் பொன் மஞ்சனையில் அப்படியே அயர்ந்து உறங்கிப் போனான்….
ஏஜியன் கடற்பரப்பை ஆதவன் ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தான்… மீன்களை தேடி கொக்குகளும், நாரைகளும் வானில் வெள்ளை போர்வை போர்த்தியது போல பறக்க, சாது கொண்ட குணத்தவளாய் ஏஜியன் கடல் அமைதியில் திளைத்திருந்தாள்… துறைமுகம் கடந்த இரவின் பரபரப்பு மாறி இயல்பாகக் காணப்பட்டாலும், எரிந்த கிடங்குகளும், அதன் தாக்கமும் இன்னமும் கண்களை உறுத்துவதாகவே இருந்தன. நள்ளிரவு தொடங்கி நான்காம் சாமம் வரை போர் வீரர்கள் மற்றும் காவல் படையினரால் தேக்கி வைக்கப் பட்டிருந்த அனைவரும் விசாரணைக்குப் பின் அவரவர் இல்லங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
துறைமுகத்தை சீரமைக்கும் பணி துவங்கி இருந்தது… பல்வேறு நாடுகளிருந்து வாங்கி வரப்பட்டிருந்த அடிமைகள் அந்த பணிகளை செய்யத் துவங்கி இருந்தனர். தீவை சுற்றிலும் கிரேக்க கடற்ப்படை போர்வீரர்கள் காவல் காத்தனர். இளவரசனின் மாளிகையை சுற்றிலும் காவல் மும்மடங்காக இருந்தது.
பவளத் தீவின் அருகில் அரணாக இருக்கும் மற்ற நான்கு தீவுகளில், ஒன்றில் வணிகர்கள், மற்றொன்றில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கடலோடிகள், அடுத்த இரண்டிலும் கிரேக்க போர்வீரர்கள் குடியமர்த்தப் பட்டிருந்தனர். அந்த நான்கு தீவுகளை ஒட்டித்தான் மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்… காலை வேளையில் பவளத்தீவின் அரண்மனை மாடத்தில் இருந்து பார்த்தால் அந்த காட்சி அவ்வளவு அற்புதமாக காண்போரை லயிக்கச் செய்யும்.
உச்சி மாடத்தில் இருந்து பார்த்தால், சுற்றியுள்ள எல்லா தீவுகளும், ஏஜியன் கடற்பரப்பில் பயணிக்கும் அத்தனை நாவாய்களும் பார்வையில் படும். உச்சி மாடத்து ஓய்வறையில்தான் டையோனிஸ் இப்போது அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான்….அந்த உச்சி மாடத்து ஓய்வறையின் கிழக்கு பகுதியில் இருக்கும் கடலோடிகள் வசிக்கும் தீவில் அகோட்டஸ் சிலரை சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கின்றான்…
பாலிதீவில் இருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டு அரபு நாட்டுக்கு செல்லும் மரக்கலங்களில் மாலுமிகளாக பயன்படுத்தப்படும் குள்ள மனிதர்கள் இங்கு நிறைய உண்டு…. இவர்கள் பாய்மரங்களை கையாளுவதிலும் வல்லவர்கள்… ஏஜியன் மற்றும் அரபுக்கடல் பரப்பின் எவ்விதமான கடல் வானிலையிலும் அற்புதமாக மரக்கலங்களை ஓட்டும் ஆற்றல் உள்ளவர்கள்…
மூன்று முதல் மூன்றரை அடி வரை மட்டுமே உயரம் உடைய இவர்கள் எல்லா மொழிகளும் அற்புதமாக பேசும் ஆற்றல் உள்ளவர்கள். இவர்களில் சிலர் கடந்த இரவில் ஒரு மரக்கலனை செலுத்தி வந்ததாகவும் அவர்களில் இருவர் இந்த தீவில் வசிக்கும் கருப்பின அடிமை பெண்கள் சிலருடன் களியாட்டத்தில் திளைத்து இருந்ததாகவும் போர்க்கலத்தில் இருந்த மாலுமி ஒருவன் அக்கோட்டஸிடம் கூறியிருந்தான். அதன் நிமித்தமே இந்த தேடுதல் வேட்டை இப்போது கடலோடிகள் வசிக்கும் முத்துத்தீவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த தீவுவாசிகளும் கடற்கரையில் ஒன்று கூட்டி நிறுத்தப்பட்டிருந்தனர்.. பாலிதீவின் குள்ளர்கள், அராபிய,கருப்பு இனத்து அடிமைகள் வேறு பல நாடுகளின் மரக்கலங்களை இயக்கும் மாலுமிகள், முத்துத் தீவின் குடிவாசிகள் என்று அனைவரும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரையும் அக்கோட்டஸ் கத்தி முனையில் நிறுத்தி இருந்தான்.
நேற்று இரவு கடற்கரையில் பாலித் தீவின் குள்ளர்கள் இருவருக்கும் விருந்து வைத்தது யார்? அவர்கள் வந்த மரக்கலம் எங்கே? என்று கர்ஜித்தான் அக்கோட்டஸ்….
ஒட்டு மொத்த கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் அவரவர் மொழிகளில் விவாதிக்க ஆரம்பித்தனர். அது அக்கோட்டசுக்கு எரிச்சலை ஏற்படுத்த…. ஏ…. நிறுத்துங்கள் உங்களின் பிதற்றலை… இங்கே நான் மட்டும் தான் பேசுவேன்.என் கேள்விக்கு மட்டுமே பதில் தேவை… மீறுபவர்கள் இந்த தீவில் உயிரோடு புதைக்கப்படுவர் என்று அதிகாரமாக கத்தினான்….
கூட்டத்தில் இருந்த அராபிய மாலுமி ஒருவன் பேசினான். கிரேக்கத்து படைதலைவர் ஒட்டுமொத்த கடலோடிகளையும் தனது நாட்டின் சொந்த பிரஜை போல நடத்துவது எந்தவிதத்திலும் நியாயமாக தோன்றவில்லை. நாங்கள் கடலோடிகள்… உலகமெங்கும் பயணிக்கும் நாங்கள் ஓய்வு எடுக்கவும் எங்களின் மரக்கலங்களுக்கு தேவையான குடிநீர், மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு என்று சுங்கம் செலுத்திவிட்டு இங்கே தற்காலிகமாக தங்குகின்றோம். நேற்று இங்கு நடந்த செயல்கள் பலவற்றில்,எங்களில் யாராவது தொடர்பில் இருப்பின் அவர்களை நீங்கள் சரியாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துக்கொள்ள உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாக எங்களை கட்டுப்படுத்தி குற்றவாளிகள் போல நீவிர் நடத்துவது எப்படி சரியாகும் என்று சற்று காட்டமாகவே கேட்டான் அந்த மாலுமி…
அவனை நோக்கி திரும்பிய அக்கோட்டஸ்… நீ சொல்வது உண்மைதான்…ஆனால் எப்போதும் நீ சொல்வது போல ஒரு அரசு நடந்துகொள்ள வேண்டுமென்று அவசியம் இல்லை. பதட்டமான நேரங்களில், அரசுக்கு எதிரான செயல்களில் உங்களில் சிலர் ஈடுபடும் போது அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதும் அவசியம்… உங்களில் உள்ள அந்த விஷபூண்டை வேரறுக்க உங்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை… ஆனால் இதற்கென்று உங்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்க அக்கோட்டஸ் ஒன்றும் சாது அல்ல…!!! கிரேக்கத்து சிம்மம்…!!!கடலையும், போர்ப்படையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் போர்க்கடவுள்….!!! இன்னொரு முறை நீ வாயை திறந்தாய் என்றால் உனது வாயில் நாவிருக்காது என்று ஆணவத்திலும் கோபத்திலும் வெறிகொண்டு பேசினான் அக்கோட்டஸ்….
அராபிய மாலுமி அதற்கு மேல் பேச துணியவில்லை… மாபெரும் நிசப்தம் நிலவியது…யாரும் பேச முன்வரவில்லை… எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கும் உண்மை தெரியவில்லை போலும்…. திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது… அராபிய மொழியும், கிரேக்கமும் கலந்து பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரி ஒரு கருப்பின பெண்… அவள் தானகவே அக்கோட்டஸ் முன்பு வந்து நின்றாள்….
போர்க்கடவுள் என்று கிரேக்கம் போற்றும் பெரும் வீரருக்கு வணக்கம். என் பெயர் சவ்ஜித்தா… இந்த தீவின் பிரஜையாக ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றேன்… நீங்கள் குறிப்பிடும் நபர்கள் குறித்து தகவல் எனக்குத் தெரியும். ஆனால் நேற்றைய இரவின் சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்று எனக்கு தெரியாது. என்றவள்…. தொடர்ந்தாள்…… அக்கோட்டஸ் சுறுசுறுப்பு அடைந்தான்.
நீங்கள் குறிப்பிடும் அந்த குள்ள மனிதர்கள் நேற்று இரவல்ல… நேற்று அந்திப்பொழுதிலேயே இங்கு வந்தனர். அதோ அந்த விடுதியில் வைத்து நான் தான் அவர்களுக்கு, பொரித்த மீன்களும் மதுவும் விற்றேன். அவர்கள் கீழைக் கடலில் இருந்து வந்திருந்த பொக்கிஷ மரக்கலன் ஒன்றில் மாலுமிகளாக இருப்பதாக அறிந்தேன். நிறைய பொற்காசுகள் அவர்களிடம் இருந்தது. இரண்டாம் சாமத்தில் குடிநீர் நிரப்பியவுடன் அவர்களின் நாவாய் புறப்பட உள்ளதாகவும் அதற்குள் மது அருந்தி இன்புற வந்ததாகவும் அவர்கள் கூறினர்… நன்றாக குடித்துவிட்டு சிறிய படகொன்றில் ஏறி அவர்கள் முதலாம் ஜாமத்திலேயே புறப்பட்டனர் என்றாள் சவ்ஜித்தா.
அக்கோட்டஸ் இதயத்தில் நேற்றைய காட்சிகள் நிழலாக ஓடின. இரவின் முதலாம் ஜாமத்தில் தான் இளவரசன் மீது குறு வாள்கள் வீசப்பட்டன. இரண்டாம் ஜாமம் துவங்குவதற்கு முன்பு தான் துறைமுகத்தில் தீப்பிடித்தது… இரண்டாம் ஜாமம் துவங்கிய சிறிது நேரத்தில் தான் போர்க்கலத்தின் பாய்கள் தீப்பிடித்து எரிந்தது… அப்படியென்றால் அவர்கள் மரக்கலத்தில் ஏறி தப்பி விட்டனர். போகும் போது போர்க்கலனை தீ அம்புகளை எய்து பற்றவைத்து உள்ளனர்… அக்கோட்டஸிற்கு எல்லாம் விளங்கியது… ஆனால் அவர்கள் சென்ற மரக்கலம் எந்த திசையை நோக்கி சென்றது?
பெண்ணே… நீ கூறியதை நான் நம்புகிறேன்.. ஆனால் அவர்களின் மரக்கலம் எங்கு செல்வதாக கூறினார்கள் என்று நினைவு உள்ளதா என்று சவ்ஜித்தாவிடம் அக்கோட்டஸ் கேட்டான்…
தலைவரே… தங்களின் கருணையின் மீது ஆணை… அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை… நானும் அவர்களிடம் கேட்கவில்லை என்று சவ்ஜித்தா பணிவுடன் பதில் கூறினாள்…
அனைத்து விதமான குழப்பங்களுக்கும் தீர்வு கிடைத்தது என்றாலும், துரோகிகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? எதற்கு இந்த சதிவலை என்பதில் அகோட்டஸ் தீவிரமாக ஆராய தொடங்கினான். மற்ற அனைவரையும் கலைந்து போக கூறிய பின்பு கடற்கரையில் இருந்த ஒரு ஈச்சமரத்தின் நிழலில் அமர்ந்து சிந்திக்க தொடங்கினான்.
களைந்து சென்ற கூட்டத்தில் சவ்ஜித்தாவும் தன் குடிசையை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அவளின் பின்னே ஒரு கிரேக்க போர்வீரன் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். தன் குடிசையை நெருங்கிய சவ்ஜித்தாவின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல… தன் நடையை திரும்பவும் விடுதி நோக்கி திருப்பினாள்…!!! அந்த கிரேக்க போர் வீரனும் தான்….!!???
தொடரும்…..