கொற்கை துறைமுகத்தின் தென்மேற்கில்….. பரவி விரிந்த மேற்குமலைத்தொடர்….. பசுமை உடையுடுத்தி மேகங்கள் வெண்சாமரம் வீச, தென்னையும் பாக்கும் போட்டியிட்டு தென்றலை வீசி, மகிழ்ச்சி மெட்டு பாடும், வாழை,பலாவும், மாங்கனியும் பழுத்து மணம் பரப்ப, கோதையாற்று வெள்ளம் மணிமுத்தாற்றுடன் காதல் கலாபனை செய்யும் சேர தேசத்து காந்தளூர்சாலை…. தாமரை குளங்களும், தெவிட்டா தேனடைகளும், மலையில் மோதி நிலத்தில் பரவி, துளிர்த்து நனைக்கும் பெரு மழையும்…. கண்களின் குளர்ச்சிக்கு உயிர் கொடுக்கின்றன.
எத்தனையோ அரசியல் பாடங்கள் இங்குதான் பயிற்றுவிக்கப்பட்டன.எத்தனையோ சதிகள் இங்கிருந்து தான் உயிர் பெற்று உயிர் எடுத்தன…. வேத பாடத்துடன் வீரப்பாடமும் கற்பிக்கப்பட்ட சத்திரிய மண்…. திரண்டு வரும் கார்மேகம், என்றுமே பெய்யாது போனது இல்லை… நெல்லும், வாழையும் வருடமெல்லாம் விளையும் வசந்த சோலை….தொடர்ந்து ஓடும் புரவிகளின் குளம்படி ஓசைகள் இங்கு வாழ்பவர்களுக்கு தாலாட்டு… சேரத்து கோமகன்கள் வெட்டிவைத்த குளமேவும் மழைவெள்ளம்…பின் கோதையாற்றில் சங்கமித்து பாயும் அழகை காண கோடிக்கண் வேண்டும்….
வஞ்சியில் அரசன் விஞ்சி நின்றால்… காந்தளூரில் படை கிளம்பும்… ஒட்டுமொத்த சேர போர்வீரர்களும் கற்று தெளிவு பெறும், பெரும் படை பயிற்சிக்களம்…. யானைப்படை பயிற்சி அரங்கில் முரண்டு நிற்கும் யானைகளை குருங் குத்துக் கோள் கொண்டு அடக்கும் சாமானிய மனிதருக்கும் வீரம் என்பது வில்கொடி கண்டால் பொங்கியெழும்….
இந்த பயிற்சி பட்டறையின் தனித்த மாளிகையில் ஆழ்ந்த சிந்தனையில் வீற்றிருக்கும் சேரமா மன்னன் இரும்பொறை…. கனத்த மீசையை நிமிடத்திற்கு ஒருமுறை நீவிவிட்டு, முறுக்கியவன் கண்களில் மின்னல் போல திட்டங்கள் நிழலாடி மறைந்து கொண்டிருந்தன. பாண்டிய அரசன் நன்மாறன் இதுவரை மவுனம் காக்கின்றான். அனுப்பிய தூது ஓலைகள் எதற்குமே பதில் இல்லை… இதுகாறும் சேரத்து தோழமையில் நின்ற பாண்டியர் இன்று தாமரை இலை தண்ணீராய் இருப்பதற்குக் காரணம் நன்மாறன்….
நன்மாறன் முடிசூடிய நாள்முதலே சேரரின் உறவை புறம்தள்ளி வருகின்றான். எத்தனையோ முறை சொன்ன பிறகும் தனி ஆவர்த்தனம் செயகின்றான்… இவனுடைய எல்லைக்குள் நுழைந்து போர்முகாம் அமைக்க வேண்டும். அப்போதுதான் அன்னங்களை புகாருக்குள் பிரவேசிக்க செய்ய இயலும். புகாரும் நாகையும் அன்னங்கள் கொண்டால், உறையூர் முதல் நாகை எல்லை வரை நம்முடைய வணிக தாகம் தீர்க்கும் விளைபொருள் கிட்டும். பாண்டியனை குறுநில மன்னனாக சுருக்கி வீசி விடலாம்… ஆனால் ஒத்துவர மாட்டேன் என்கின்றானே மடையன் என்று கோபத்தில் நீந்தினான் சேரமான்….
வஞ்சித்தலைவன் வீரவேந்தன் வாழ்க… என்ற குரலொளி கேட்டு நிமிர்ந்தவன் முன் பச்சை உடையில் சிகப்பு கச்சை கட்டிய காவலன் நிற்க…
என்ன?…. என்று அதிகாரமுடன் கேட்டான் சேரமான்…!!??
தங்களை காண யவன வணிககலத்தின் தலைவர் மீர்காலீஸ் வந்துள்ளார் என்றான் காவலன்.
மீர்காலீஸ்… கிரேக்கர், சீனர், அராபியர், மற்றும் பல்வேறு நாடுகளின் அடிமைகள் கொண்ட கலப்பின வணிககலத்தின் தலைவன்… கிரேக்க நாட்டிற்கு மிளகு, யானை தந்தம், போன்ற பொருட்களை முசிறியில் இருந்து கொண்டு சென்று விற்பவன்…கிரேக்க பேரரசுக்கு மிகவும் நெருங்கியவன்… ஒற்றர்களின் ஒற்றன்… பிறப்பால் அராபியன் எனினும் வளர்ந்தது, கற்றது, எல்லாமே கிரேக்கத்து பேரரசில் தான்… வாள்வீச்சு தெரியாது என்றாலும், வலை வீசி ஆளை வீழ்த்துவத்தில் வில்லத்தனத்தின் உச்சம் இவன். இப்போதும் இவன் ஒற்று வேலைக்கு தான் இங்கு வந்துள்ளான்…
சேரத்து வில்லவனுக்கு யவன வணிகனின் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்…..!!???
வா.. மீர்காலீஸ்… எப்போது வந்தாய்? நீ அரபிக்கடலை தாண்டவே மாட்டாயா என்ன? என்று கேட்டுவிட்டு கொல்லென்று சிரித்தான் சேரமான்… மதுவின் வெறியை விட அவனுக்குள் சதியின் வெறி உச்சத்தில் இருந்தது…
சேரவேந்தே இங்கு என்ன நடக்கிறது? அன்னங்கள் ஏஜியன் கடலில் மிதக்க தொடங்கி விட்டது… மூன்று பிரிவுகள்… முப்பதாயிரம் அன்ன சேவர்கள் கொண்டுள்ள பொறிகள், மூன்று லட்சம் பேரை வீழ்த்தும்… பெரும் பொருட்செலவு செய்து வரும் கிரேக்க மணிமகுடத்திற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்… ஆனால் இங்கு மீன்கொடியோன் நிம்மதியாக உறங்கி எழுகின்றான்.. புலிப் பிள்ளைகள் கண்ணாம்மூச்சி விளையாடுகின்றனர்… நீங்களோ இங்கு சல்லாபத்தில் திளைத்து உள்ளீர்கள் என்று கடுமை காட்டி வார்த்தைகளை கொட்டினான்.
நிறுத்து மீர்காலீஸ் உன் பிதற்றலை…!!?? நீ பேசிக்கொண்டிருப்பது யாரிடம் தெரியுமா? தலை உன் உடலில் இருந்து தனியாக மரக்கலனில் ஏறிவிடும்… உனக்கு என்ன தெரியும் என்று கர்ஜித்தான் பனைப்பூ பேரழகன்….!!!!.
சேரவேந்தே கோபத்தை என்னிடம் காட்டும் முன் நீவீர் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பாரும்… நானாக உம்மிடம் வந்து யாசகம் கேட்கவில்லை… உம் பிரதம மந்திரி என்னிடம் கெஞ்சி கேட்டு, கொஞ்சி வாங்கிய பொற்குவியல் மறந்து விட்டதா? இல்லை தமிழகத்தின் மும்முடியும் உன் சிரசில் ஜொலிக்கும் கனவிற்கு இப்போது காய்ச்சல் வந்து விட்டதா? என்று சளைக்காமல் பதில் சீற்றம் காட்டினான் யவன வணிகன்….!!!??
மீர்காலீஸ்…!!மீர்காலீஸ்…!!! மறுக்கவில்லை எதையும், மறக்கவும் இல்லை நான். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் ஆண்மையின் வலிமையை விட, மூளையின் வலிமைக்கு வீரியம் அதிகமென்று உனக்குத் தெரியாதா? பாண்டியனை ஒருபுறமும், சோழனை மறுப்புறமும் வீழ்த்த நான் வகுத்துவரும் வியூகங்கள் உனக்குத் தெரியாது. சேரன் சொன்னால் சொன்னதுதான்.. திரும்ப பெறவே மாட்டான்… நீ என்ன இழப்பை சந்தித்து இருக்கின்றாய்? நான் சந்தித்த இழப்புகள், அவமானம் அத்தனையும் வெவ்வேறு ரகம். போகட்டும்…
அன்னங்கள் வருகையை நானும் எதிர்பார்த்து இருக்கின்றேன். நீ அமைதி கொள்… ஆட்டத்தை தொடங்கியவன் நான் முடிக்கவும் தெரியும் என்றான். அதன் பின் சற்று நேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. இருவரும் வெவேறு யோசனைகளில் மூழ்கி அமர்ந்து இருந்தனர்.
மீர்காலீஸ்… சற்று யோசித்துவிட்டு சொன்னான்… சேரவேந்தே.. உங்கள் யோசனைப்படி செய்யுங்கள்… உங்களை நம்புகின்றேன்.. என்னுடைய தவறுக்கு என்னை பொறுத்தருளுங்கள்… என்றான்.
மேலும் முசிறியின் துறையில் யவனப்பொறி வல்லுநர்கள் இருநூறு பேரை கொண்டு வந்து இறக்கி விட்டு வஞ்சிக்கு அனுப்பியுள்ளேன்… புத்தன் தலையில் நூறு பொறிகள் செய்ய ஆயத்த பணிகள் தொடங்கி விட்டது. அநேகமாக புத்தன் தலைக்கு இன்று செல்லும் ஒரு மரக்கலத்தில், சதுரங்க வேட்டைக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களும் உள்ளன என்றான்.
இரும்பொறையின் கண்கள் பிரகாசமானது…!!!..
மீர்காலீஸ் மித்ரா… உன்னைப்போல் என்னை புரிந்து செயல்படுவார் யாருண்டு…??!! நான் வாயால் சொல்வதை நீ தலையால் செய்து முடிப்பவன்…!!சமயங்களில் உன்னை அழுத்தும் கேள்விகளின் பால் பொங்கி விடுகிறாய்…!! ஆயினும் இப்போது நீ சொன்ன அத்தனை விபரங்களும் தித்திப்பானவை. எதிரியை வீழ்த்த எப்பக்கமும் வியூகம் தயாராகிறது.. என்று கூறி புளங்காகிதம் அடைந்தான்…
அது சரி அரசே ! தலைநகர் விடுத்து இங்கே நீங்கள் இருக்க காரணம் என்ன? என்றான் மீர்காலீஸ்…
மூஞ்சூரு ஒன்றும் காரணமின்றி மோவாயை தேய்க்காது மீர்காலீஸ்… விடியலில் வரப்போகும் சேதிக்காகவும், இங்கிருந்து படையை வடக்கு நோக்கி நகர்த்துவது குறித்து திட்டமிடவுமே இங்கு வந்தேன்… படையை இங்கிருந்து நடத்த போவது என் குலகுரு… அவரின் தகவல் வந்த பின்பு மற்ற ஏற்பாடுகளை முடிப்பேன் என்றான்..
மீர்காலீஸ் இதயத்துக்குள் சேரனை குறித்து தீர்க்கமானமான நம்பிக்கை வந்தது. பல வகையிலும் சேரன் போடும் சுருக்கில் இருந்து விலங்குகள் தப்பிக்க இயலாது. ஆயினும் அவர்கள் சளைத்தவர்கள் அல்ல… இந்த இருவர் மீதும் கண் வைக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டவன்… சேரனிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.
அறையில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்த சேரனுக்கு போதை முழுதும் தெளிந்து இருந்தது.. சற்று நேரம் காந்தளூர்சாலையின் காற்றை சுவாசிக்க மாளிகையை விட்டு வெளியே வந்தான்… ஆடியின் காற்றில் அம்மி நகரும் என்பார்கள்.. இங்கு வீசும் காற்று மேற்கு மலைத்தொடரில் மோதி மீண்டும் காந்தளூர் சாலை மீதே தென்றலாக திரும்பி வந்தது…வரும்போது மலையில் வளர்ந்த மூலிகைகள் குணத்தையும், முக்கனிகளின் மணத்தையும் ஒன்று சேர கொண்டு வந்து பனம்பூ பேரழகன் மீது வாஞ்சையுடன் வீசி சிற்றின்ப ஆசையை தூண்டி விட்டது…
இருட்டில் காலாற நடந்த சேரன் கண்ணில் அந்த குடிசையும், அதற்குள் நின்று கொண்டிருந்த புரவியும் தென்பட்டது. இவ்வளவு உயர் ஜாதி புரவி வைத்துள்ளவன் இல்லம் குடிசையாக இருக்க வாய்ப்பே இல்லை.. ஒருவேளை இங்கு யாரேனும் வந்துள்ளனரோ என்று எண்ணியபடி சற்று மறைந்திருந்து கவனிக்கத் தொடங்கினான்.
அப்போது குடிசையில் இருந்து வெளியே வந்த ஒரு பேரழகியை கண்டு இரும்பொறையின் இதயத்தில் இன்னிசை ராகம் பேரலையாக பாய்ந்தது…!!!
சுண்டினால் சிவந்துவிடும் மல்லிகை நிறத்தில் மேனியும், மாதுளையை பிழிந்து ரோஜா மொட்டுகளில் ஊற்றிய இதழ்களும், சறுக்கி பாய்ந்த உடல்வளைவு திரட்சிகளை தாங்கி நின்று, இசைபாடிய உடுக்கை இடையும், கருங்கூந்தலில் ஒரு பகுதி முன்கொண்டையாகவும், மீதி இடையில் புரண்டோடி பின்னழகை மறைத்துக் காக்கவும் நின்றிருந்த அந்த எந்திழையை கண்டு சொக்கி நின்ற சேரன் குரலை சற்று கணைத்துக் காட்டினான்..
குரல் கேட்டு திரும்பியவன் எதிரில் நிற்பவன் அரசன் என்று உணர்ந்து வணங்கினாள்… இருக்கட்டும் பெண்ணே… நீ யார்? இங்கு நீ மட்டும் தனியாகவா இருக்கின்றாய் என்று கேட்டான்…
மன்னிக்க வேண்டும் மாவேந்தனே… உங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை. தங்களிடம் காந்தளூர் படைபிரிவின் தலைவராக இருக்கும் மாரப்ப தேவனின் மகள் நான்..!! என்ற அந்தப்பெண் மிகவும் மரியாதையுடன் சேரமானை வணங்கி நின்றாள்.
ஓ… மாரப்ப தேவனின் மகளோ…?? உன் பெயர் என்ன பெண்ணே..!! என்று கேட்டான் சேரமான்….
என் பெயர் மணிமேகலை… என்றவளை மிகவும் நெருங்கி வந்த சேரன் பின் திடீரென தன்னை அடக்கிக் கொண்டு… பெண்ணே குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயோ..???!! என்றான்..
இதோ ஒரே நொடியில் கொண்டு வருகின்றேன்… என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றவள்… புதியதொரு மண் குவளையில் மணிமுத்தாறு நீரை நிறைத்து கொண்டு வந்து கொடுத்தாள்…
நீரை வாங்கிப் பருகிய சேரனுக்கு மணிமேகலை மீது தீராக் காதல் ஆழிப்பேரலையாக வந்து, அக்கினி குழம்பென கொதித்தது…
மணிமேகலை எவ்வளவு ரம்மியமான பெயர்… மணிமேகலை உன் தந்தை எங்கே…??!! இரவில் நீ தனியே வீட்டிற்கு வெளியே நிற்பதும் ஏனோ? என்றான் பனை பூவின் பெருமகன்.
அரசர்க்கு அரசே….!! இன்னும் தந்தை கொட்டாரத்தில் இருந்து திரும்பவில்லை… அவர் வருகைக்காக காத்து உள்ளேன் என்றாள் மணிமேகலை.
இந்தப் புரவி….!!?? என்று இழுத்தான் சேரன். இன்னும் அதன் மீதிருந்த சந்தேகம் விலகாமல்…!!??
அதை நான் தான் வளர்த்து வருகின்றேன் பேரரசே!!!. என்னுடைய மாமாவிற்காக..!! அவர் ஆண்டிற்கு ஒருமுறை இங்கு வருவார்… வரும்போது அவர் தன்னுடைய புரவியை இங்கே விட்டு விட்டு நான் பழக்கி வைத்திருக்கும் புரவியை தன்னோடு கூட்டிச் செல்வார்… அவருக்காகவே நான் எப்போதும் போல இந்த புரவியை வளர்த்து வருகின்றேன் என்றாள் மணிமேகலை…
ஓ… உன் மாமா என்றால்…!!!?? என்ற சேரனிடம் விளக்கினாள் மணிமேகலை…!!
என்னுடைய வருங்கால கணவர்…!! நாகை துறையின் பொருப்பாளரும், சோழத்து தனிப்படையின் தலைவருமான இளமாறன் சென்னித்தேவன்…..????!!!!…(வாசகர்களுக்கு கண்கள் விரிந்து ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டால் அடியேன் பொறுப்பல்ல)
சேரனின் தலையில் இடி விழுந்தது போல இருந்தது… இளமாறன்……!!!!!!???? அவனைப் பற்றி சிறிது அல்ல, நிறையவே தெரியும் இரும்பொறைக்கு… வெண்ணிப்போரில் தன் தலையில் இருந்த கவசம்!!!????……. அவன் கண்ணில் வந்து மறைந்தது.!!! அதே வேளையில் எதிரியின் உறவினர் எப்படி நம் படையில்…??? என்ற குழப்பமும், மணிமேகலையை அடைய இந்த சோழ நாட்டான் தனக்குப் போட்டியா?? என்ற உக்கிரமும் ஒன்று சேர கேட்டான் சேரன்…
மணிமேகலை… எதிரி தேசத்தில் உங்கள் உறவுகள் இருக்க இங்கே எப்படி நீங்கள் என் பிரஜைகளாக… அதுவும் என் படைபிரிவிற்கே தலைமையில்… எங்கோ கணக்கில் குளறுபடி தெரிகிறதே என்றான்…
பொருத்தருள வேண்டும் மன்னவா… எங்கள் குடும்பம் வழி வழியாக சேரத்தில் தான் உள்ளோம்… இங்கு தான் பிறந்தோம்… இங்கு தான் வாழ்ந்தோம்… எப்படி நான் என் மாமாவை திருமணம் செய்தபின் நாகைக்கு சென்று தீர வேண்டுமோ… அதே போல என் பாட்டி என் தாத்தனை திருமணம் செய்தபடியால் இங்கு வாழ்க்கைப் பட்டார். மற்றபடி சேரத்து குடி பிரஜைகள் தாம் நாங்கள். உறவுகள் அற்றுப் போகாதிருக்கவே இந்த திருமண ஏற்பாடு…..!!! இளவயதிலேயே தீர்மானிக்கப் பட்டுவிட்டது…என்று அழகாக, அதே வேளையில் தீர்க்கமாக எடுத்துரைத்தாள் மணிமேகலை.
மிக்க மகிழ்ச்சி மணிமேகலை… உன்னுடைய பதில் வாழையில் மலைத்தேனை ஊற்றி… ரோஜாவின் சாற்றில் தோய்த்து உண்பது போல இருந்தது… நம்புகின்றேன்.. உன் சொல்லில் கள்ளமில்லை… நீ உரைத்தது அத்தனையும் உண்மையென்றே கொள்கின்றேன். என்ற சேரன்…
உன் தந்தையை நாளை காலை என்னை சந்திக்க சொல்லி நான் கட்டளையிட்டதாக சொல்லிவிடு… மேலும்..என்னிடம் உள்ள சில புரவிகளுக்கு உன்னுடைய உதவி தேவை… கொஞ்சம் மனது வைப்பாயா? என்று கேட்டான்… உள்ளுக்குள் இருந்த வேட்கையில் மறைத்து பொருள் கொள்ள…..
ஆகட்டும் அரசே.. தங்கள் சொல்வரி மாறாது தந்தையிடம் உரைத்து விடுகின்றேன். ஆயினும் நான் என் சொந்தப் புரவியன்றி வேறு புரவிகளுக்கு இதுவரை பயிற்சி தந்ததில்லை… அது குறித்து நீங்கள் பொறுக்க வேண்டும் என்றாள்.
ஒன்றும் கடினமில்லை மணிமேகலை… நான் அது குறித்து உன் தந்தையிடம் பேசிக்கொள்கின்றேன் என்ற சேரன் விருட்டென்று திரும்பி மாளிகை நோக்கி நடந்தான்….
இரண்டாம் சாமம் முடியும் அதே இரவில் பல சம்பவங்கள் அரங்கேறப் போகின்றது. அதில் ஒன்று கொற்கையில் இருந்து அறுபது கடல்கல் தொலைவில் இருந்த இலங்கையின் கடலில், சென்று கொண்டிருந்த யவன வணிக மரக்கலம் ஓன்றில் திடீரென பதட்டம் தொற்றிக்கொண்டது…
விளக்கை அணை..!! சுக்கானை திருப்பிப் பிடி…!! உடனே பாய்களை சுருட்டுங்கள் என்று மரக்கலனின் தலைவன் கட்டளை இட்டுக் கொண்டிருக்க மீதமுள்ளோர் தங்கள் ஆயுதங்களை தயார் செய்து கொண்டு வரவுள்ள பயங்கரத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தனர்.
வரிசையாக வானிலிருந்து பாய்ந்து வந்த தீயம்புகள் மரக்கலனின் மீது விழுந்து எரியத் துவங்க…
சட்டென்று அந்த மரக்கலனை சுற்றி பிரகாசமான ஒளி வீசியது… மரக்கலனின் தலைவன் முகம் முழுதும் அச்ச ரேகைகள் பரவ உதடுகள் உதிர்த்த வார்த்தை… செத்தோம்… இனி வாழ்வில்லை!!!! என்று…
ஸ்கேட் மரக்கலனின் புறப்பாடு
அடுத்த ஐம்பது நாழிகைகளில் வணிக மரக்கலம் தீயில் எரிந்து கொண்டிருந்தது. நீலப் பெருங்கடலில் ஏற்றிவைத்த ஜோதியாய் அது எரியும் காட்சியை பேய்த்தீவில் இருந்த கலங்கரை கோபுரத்தின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன இருஜோடிக் கண்கள்…
ஆலிமா… அத்தனையும் செய்வது மீர்காலீஸ்…!! முசிறிக்கும் சென்றுள்ளது இதே போன்ற கலங்கள்… என்றான் பாஹ்லாஸ்….
சகோதரா…!!! அக்கோட்டஸ் ஏதோ ஒன்றை கடலின் மீதும் இந்த நிலங்கள் மீதும் நிறைவேற்ற திட்டமிட்டு காய்கள் நகர்த்துகின்றான். அவனின் எண்ணங்கள் எதையும் ஈடேற விடமாட்டேன்… என்ற ஆலிமா…
பேய்த்தீவில் நம் நான்கு போர்க்கலன்கள் தங்கி இருக்கட்டும். நாம் அதற்குள் ரினீவா வரை சென்று திரும்புவோம்… இப்போது கீழைக்காற்று வேகமாக ஏஜியன் நோக்கி வீசுகின்றது. இதுதான் சமயம் உடனே நங்கூரங்களை மேலே ஏற்றி மாலுமிகளை தயாராக சொல்லுங்கள்… என்ற ஆலிமா…
கலங்கரையின் மீதிருந்து வேகமாக தரையை நோக்கி இறங்கினாள்… அதற்குள் பாஹ்லாஸ் கோபுரத்தின் மீதிருந்து ஸ்கேட் மரக்கலம் நோக்கி ஒளியில் சமிக்ஞை செய்ய ஸ்கெட் மரக்கலம் மீண்டும் பயணிக்க ஆயத்தம் ஆனது….
அதே வேளையில் வெள்ளையில் சாம்பல் கலந்த சிறகுகளுடன் மருங்க மருங்க விழித்தபடி பறந்து வந்து ஆலிமாவின் தோள் மீது அமர்ந்தது “களவரம்” (களவரம் என்பது புறாவின் தமிழ் பெயர்களில் ஒன்று வாசகர்களுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுக்க சிறிய முயற்சி…..☺️☺️☺️)
தொடரும்…..