இவ்வாறு இருக்கையில் ஜே.கே,ஆர் நிறுவனத்தில் அந்த வருடத்தின் முதல் போர்ட் மீட்டிங்குக்கான வேலைகள் ஆரம்பித்திருந்தது. சந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்துக்கு முன்னரே நோட்டிஸ் அனுப்பி ஆவன செய்துவிட்டாள். மீட்டிங் வேலைகளை அவள் கவனித்துக் கொண்டதால் சூரியா கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டான்.
ஆனால் அவனது அந்த இனிய மனநிலை மீட்டிங் அன்று காலை அவனது அன்னை செய்த காரியத்தால் துணி கொண்டு துடைத்தாற்போன்று மறைந்தது. அந்த நிறுவனத்தின் டைரக்டர்களில் அவனது அன்னை ஹேமாவும் ஒருவர். மீட்டிங் ஆரம்பிக்கும் முன்னர் நாராயணனுடன் வந்தவர் அவருக்கான அறையில் சென்று அமர்ந்துவிட நாராயணன் மகனிடம் இன்றைய மீட்டிங்கிற்கான முக்கியமான காரணத்தை மகனிடம் கேட்க அவனும் தந்தையிடம் அதை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.
அனைத்து டைரக்டர்களும் வந்துவிட மீட்டிங் நடக்கும் கான்பரன்ஸ் அறையில் அனைவரும் ஒன்று கூடினர். சூரியாவின் உதவியாளர் மற்றும் செயலாளர் என்ற முறையில் சந்தியாவும் அவனுடன் இருக்க மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் அரைமணி நேரம் இருந்த நிலையில் ஹேமா சூரியாவுடன் நின்று கொண்டிருந்த சந்தியாவை தன் அருகில் வருமாறு அழைத்தவர் அவள் வந்ததும் “மீட்டிங் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியல. எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நீ என்ன பண்ணுற, நேரா போய் எனக்கு சூடா ஒரு கப் காபி கொண்டு வா” என்று ஆணையிட சந்தியாவும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர எத்தனித்தாள்.
திரும்பி செல்ல முயன்றவளின் கரத்தை யாரோ பற்றியிருப்பது உணர்ந்து அவள் திரும்பி பார்க்க அங்கே சூரியா பெயருக்கேற்றவாறு சுட்டெரிக்கும் விழிகளுடன் நின்று கொண்டிருக்க ஹேமாவோ மகன் ஏன் போயும் போயும் இந்த செகரட்டரி பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டபடி நிற்கிறான் என்ற ஆத்திரம் கலந்த குழப்பத்துடன் சந்தியாவையும் அவனையும் உறுத்து விழித்துக் கொண்டிருந்தார்.
சூரியா உஷ்ணம் கலந்த குரலில் “யாருக்கும் சேவை பண்ணுறதுக்காக உங்களுக்கு நான் சேலரி குடுக்கலை மிஸ் சந்தியா. போய் மீட்டிங்குக்கான வேலையை பாருங்க” என்று கூறி அவளை அனுப்பி வைத்துவிட்டு அன்னையிடம் திரும்பினான்.
[the_ad id=”6605″]
“உங்களுக்கு காபி வேணும்னா அதோ பாருங்க எர்ராண்ட் ஸ்டாஃப் நிக்கிறாங்க. அவங்க கிட்ட கேட்டா கொண்டு வந்து குடுப்பாங்க. அதை விட்டுட்டு என்னோட செகரட்டரியை உங்க பெர்சனல் வேலையை செய்ய சொல்லாதிங்க” என்றான் குரலில் சிறிது கடுமை காட்டி.
ஹேமா அவருடன் ஒட்டிப்பிறந்த அலட்சியத்துடன் “ஒரு செகரட்டரிக்கும் எர்ராண்ட் ஸ்டாஃபுக்கும் பெருசா ஒரு வித்தியாசமும் இல்லையே சூரியா. அவ நீ சொன்ன வேலையை செய்ய தானே இருக்கா, உன்னோட அம்மாங்கிற பட்சத்துல அவ எனக்கு காபி கொண்டு வந்தா அவளோட கவுரம் ஒன்னும் குறைஞ்சு போகாது” என்று கூற
சூரியா “அவங்க ஆபிஸ் ஒர்க்கை பார்க்க மட்டும் தான் இருக்காங்களே தவிர யாருக்கும் சேவை பண்ணுறதுக்காக நான் அவங்களை அப்பாயிண்ட் பண்ணலை. அண்ட் இன்னொரு விஷயம் அடுத்தவங்களுக்கு எது கவுரம், எது கவுரவக்குறைச்சல்னு முடிவு எடுக்கிற உரிமை எப்போவுமே நமக்கு கிடையாது. சோ இன்னொரு தடவை என் செகரட்டரி கிட்ட இதே மாதிரி பிஹேவ் பண்ணாதிங்க” என்று எச்சரித்துவிட்டு அகன்றான்.
ஹேமாவின் மனதில் இதைக் கேட்டு எரிச்சல் மூள அதே சமயம் மகனுக்கு ஏன் அந்த செகரட்டரி பெண்ணின் கவுரம் மீது இவ்வளவு அக்கறை என்று எண்ணம் அவரது மூளையை தின்னத் தொடங்கியது. இதே மனநிலையில் இருந்தவர் மீட்டிங் முக்கிய விவாதப்பொருளை சிறிதும் கவனிக்கவில்லை. அந்த மீட்டிங் முழுவதும் அவனது எதிர்கால திட்டங்களை விளக்கிக் கொண்டிருந்த மகனும், அவன் பேசுவதற்கேற்ப புரொஜெக்டர் திரையில் பவர்பாயிண்ட் பிரசண்டேசனை ஓடவிட்டுக் கொண்டிருந்த சந்தியாவுமே நிறைந்திருந்தனர்.
சூரியா அன்று கம்பெனியின் டைரக்டர்கள் அனைவரிடமும் ஜே.கே,ஆர் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஒரு அமெரிக்க கம்பெனியுடன் போடப் போகிற புரிந்துணர்வு ஒப்பந்தம் (MEMORANDUM OF AGREEMENT) பற்றி தான் விளக்கி கொண்டிருந்தான்.
“இந்த எம்.ஓ.ஏ (MEMORANDUM OF AGREEMENT) மட்டும் சைன் ஆச்சுனா நம்ம கம்பெனி நேம் இண்டர்நேசனல் லெவல்ல ரீச் ஆகும். இதோட பிளஸ் அண்ட் மைனஸ் எல்லாமே நீங்களும் பிரசண்டேசன் மூலமா பார்த்துட்டிங்க. இப்போ உங்க எல்லாரோட முடிவோட அடிப்படையில தான் நான் அடுத்த ஸ்டெப் எடுக்கிறதா வேண்டாமானு டிசைட் பண்ணனும். என்னை கேட்டா நாம் மைனஸ் பாயிண்ட்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுக்கி வச்சிட்டு இந்த எம்.ஓ.ஏவை கண்டினியூ பண்ணனும்னு தான் சொல்லுவேன். பிகாஸ் பிஸினஸ்ல எவ்ளோ அதிகமா ரிஸ்க் எடுக்கிறமோ அவ்ளோ அதிகமா இலாபமும் அடைய முடியும்” என்று தனது உரையை முடிக்க அனைவரும் தலையசைத்துவிட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
பின்னர் அனைவரும் அதற்கு ஒப்புக்கொள்ள அதன் பின் கம்பெனி செகரட்டரி பேச்சுடன் ஒரு வழியாக மீட்டிங் முடிவுக்கு வந்தது. மீட்டிங் முடிந்து அனைவரும் கலைய நாராயணன் சூரியாவுடன் நடந்தவர் அவர்களைத் தொடர்ந்து கையில் டேபோடு வந்த சந்தியாவை பார்த்து புன்னகை முகமாய் அவளுடன் பேச்சு கொடுத்தபடியே மகனது அலுவலக அறைக்குள் இருவருடனும் நுழைந்தார்.
“என்னம்மா! ஆடிட்டர் ஆகணும்னு பிடிவாதமா இருக்கியாமே..இவன் சொன்னான்” என்று கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்தார் அவர்.
சந்தியா பணிவாக “ஆமா சார். அதுக்காக தான் எங்க ஊரை விட்டு இங்கே வந்ததே” என்று கூற
[the_ad id=”6605″]
“சாரா? என்னம்மா நீ? இவன் என்னடானா பிரவுனி பிரவுனினு வார்த்தைக்கு வார்த்தை உன் புராணத்தை பாடுனதும் நான் என்னவோ ஏதோனு கற்பனைக்கோட்டை கட்டிட்டேன்..அது எல்லாத்தையும் சார்னு ஒரு வார்த்தையில இடிச்சு தரைமட்டமா ஆக்கிட்ட போ” என்று கேலி போல அவளிடம் மகனுக்கும் அவளுக்குமான உறவை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க
சந்தியா அது புரியாமல் “ஓ! அதுவா..நான் ஊருல இருந்தப்போ பண்ணுன சேட்டை எல்லாத்தையும் சார் உங்க கிட்ட சொல்லிட்டாரு போல இருக்கு. இப்போவும் அதே குணம் உள்ளுக்குள்ள தூங்கிட்டு இருக்கு. ஆனா என்ன பண்ண சார்? டெய்லி ஆபிஸ், ஆபிஸ் முடிச்சு கிளாஸ்னு என் உலகம் இந்த ரெண்டு இடத்தை மட்டும் தான் சுத்தி வருது. சோ முன்னமாதிரி குறும்புத்தனம் பண்ணவோ, ஊர் சுத்தவோ நேரமே கிடைக்கிறது இல்ல” என்று அவள் ஏக்கத்தோடு குறைபட்டுக் கொண்டாள். ஆனால் நாராயணனின் வார்த்தையில் இருந்த மறைபொருள் அவளுக்கும் சூரியாவுக்கும் விளங்கவில்லை.
நாராயணன் ஒரு பெருமூச்சோடு இருவரையும் பார்த்தவர் சூரியாவிடம் “மை சன்! உன் ஃப்ரெண்ட் ஊர் சுத்தவே முடியலைனு வருத்தப்படுறா. அவ்ளோ வேலை வாங்குறியா நீ?” என்று அவனை பொய்யாய் மிரட்ட
சூரியா பயந்தவன் போல நடித்து “ஐயோ டாட்! அவ நாலு பேப்பரை கிளியர் பண்ணுனு நான் படிச்சு படிச்சு சொல்லியும் கேக்காம கிளியர் பண்ணுனா எட்டு பேப்பரா தான் கிளியர் பண்ணுவேனு பிடிவாதம் பிடிச்சா. அதுக்கு தான் அனுபவிக்கிறா.. அவளை சாதாரணமா நினைச்சிடாதிங்க. சரியான கேடி” என்று கேலி செய்ய
சந்தியா அவனது கேலியில் முகத்தைச் சுருக்கியபடி “பாருங்க சார்..நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்குனு இவன் ஆ ஊனா அந்த எட்டு பேப்பரை காரணம் காட்டுறான்” என்று கூற
சூரியா அவளின் கடைசி வார்த்தையில் குழம்பியவனாய் “ஏய் பிரவுனி! இப்போ நீ ஒரு வார்த்தை சொன்னியே அதுக்கு என்ன மீனிங்?” என்று புரியாமல் விழிக்க நாராயணன் அந்த பழமொழிக்கான அர்த்தத்தை மகனுக்கு விளக்க முன்வரவும் அவரை சொல்லக் கூடாது என்று கண்ணை காட்டி அமைதியாக்கினாள் சந்தியா.
பின்னர் சூரியாவை கேலியாக நோக்கியவள் “என்னை கிண்டலா பண்ணுற?.. அதுக்கு நான் உனக்கு அர்த்தம் சொல்லவே மாட்டேனாக்கும். சார் நீங்களும் அவனுக்கு சொல்லக் கூடாது. இது என் மேல பிராமிஸ்” என்று நாராயணனின் வாய்க்கும் பூட்டு போட்டுவிட
சூரியா “ஏய் பிரவுனி! பிளீஸ் உனக்கே தெரியும் தானே, என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. சொல்லிடு பிளீஸ்” என்று அவன் நச்சரிக்க
சந்தியா தோளை குலுக்கிக் கொண்டபடி “நான் சொல்ல மாட்டேன்பா. நீ ஒரு நாலு நாளைக்கு அர்த்தம் புரியாம சுத்து. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்புறேன். சார் நான் போயிட்டு வர்றேன்” என்று நாராயணனிடம் விடைபெற்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
நாராயணசாமி கள்ளம் கபடமின்றி பேசி சிரித்து செல்லும் சந்தியாவையும், அவளது பழமொழிக்கு அர்த்தம் புரியாமல் விழிக்கும் மகனையும் கண்டு நகைத்துக் கொண்டார். எங்கே இந்த பிஸினஸ் உலகம் தன்னை போல் மகனையும் தனது இயந்திரத்தனமான செயல்பாட்டுக்குள் இழுத்துக் கொள்ளுமோ என்று அவர் பயந்த நாட்கள் ஏராளம். வருங்காலத்தில் மகனும் தன்னைப் போல குடும்பத்தை துறந்து, மனைவி குழந்தைகளின் முகம் மறந்தவனாய் தொழிலில் மூழ்கிவிடுவானோ என்று அவர் நினைக்காத நாளில்லை. ஏனெனில் தொழில் மீதான அவனது ஆர்வம் அவரை அப்படி சிந்திக்க வைத்திருந்தது.
ஆனால் ஆரியா சந்தியாவை பற்றி சொன்ன நாளிலிருந்து அவருக்கு சிறு நிம்மதி. ஏனென்றால் சூரியா அடிக்கடி கூறுவான் சந்தியா மட்டும் எடுத்து கூறவில்லை என்றால் தான் என்றுமே தந்தையிடம் விலகி தான் இருந்திருப்பேன் என்று.. மகனை சுற்றி அவனே எழுப்பிருந்த தனிமை என்னும் சுவரை உடைத்து இன்று அவன் கலகலப்பாக மற்ற மனிதர்களை போல நடமாட வைத்தது அவளது வார்த்தைகளே.. அப்படி பட்ட ஒருத்தி தன் மகனுடன் இருக்கும் போது அவன் கண் மண் தெரியாமல் வெற்றியின் பின்னால் ஓடி தன்னைப் போல அவனது குடும்பவாழ்வை அழித்துக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு.
நாராயணன் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்க ஹேமாவோ மூத்த மகனின் செய்கைகள் வரவழைத்த குழப்பங்கள் சூழ மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தார். ஆரியா தனது போனை அங்கே மறந்துவிட்டு சென்றிருந்தவன் அதை எடுக்க வருகையில் அன்னையின் குழம்பிப் போன முகத்தைக் கண்டு யோசனையுடன் அவர் அருகில் வந்தான்.
“என்ன மிசஸ் நாராயணன் இப்பிடி கன்பியூசனோட உக்காந்திருக்கிங்க?” என்றபடி மொபைல் போனை கையில் சுழற்றியபடி கேட்டவனை ஏறிட்டு விழித்தார் ஹேமா. அவன் எப்போதுமே அவரை அவ்வாறு தான் அழைப்பான் என்பது வேறு விஷயம்.
[the_ad id=”6605″]
“இங்கே பாரு ஆரியா, ஆல்ரெடி நான் குழம்பிப் போயிருக்கேன். என்னை டென்சன் ஆக்காம போயிடு” என்று ஆணையிட்ட அன்னையை கேலியாக பார்த்தான் அவன்.
“வழக்கமா அடுத்தவங்களை குழம்ப வச்சு தான் உங்களுக்கு பழக்கம்” என்றபடி அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் இருக்கும் மேஜையில் சாய்ந்தபடி கூற
ஹேமா “ஆமாடா! நான் அப்பிடி தான்.. ஆனா உன் அண்ணன் என்னையவே குழப்பிட்டு போயிட்டான்” என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பிக்க
ஆரியா “அவன் உங்களை என்ன பண்ணுனான்?” என்று தீவிரமான குரலில் கேட்டான்.
“அவன் ஏன் அந்த செகரட்டரி மேல இவ்ளோ கேர் எடுத்துக்கிறான்? என்ன நடக்குது அவனோட லைஃப்ல? நான் அவனை பெத்தவ ஆரியா. ஆனா என் பையன் வாழ்க்கையில என்ன நடக்குதுனு எனக்கு சத்தியமா புரியலை”
அவர் புலம்புவதை கேட்டவன் “ஓ! அது தான் விஷயமா? அதான் மதர் இந்தியா இடிஞ்சு போய் உக்காந்திருக்கு போல.. இவ்ளோ நேரம் நீங்க குழம்பி தானே போயிருந்திங்க.. நான் சொல்ல போற விஷயத்துல நீங்க இன்னும் ஆறு மாசத்துக்கு இந்தியாவை விட்டு வெளியே போக மாட்டிங்க” என்று குறும்பாக மனதிற்குள் கூறிக் கொண்டான்.
பின்னர் தொண்டையை செறுமியபடி “க்கும்.. அவன் கேர்ள் ஃப்ரெண்ட் மேல அவன் கேர் எடுத்துக்கிறான். இதுல உங்களுக்கு என்ன கன்பியூசன்?” என்று சாதாரணமாக கேட்க
ஹேமா அந்த ‘கேர்ள் ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையில் அதிர்ச்சியுற்று “வாட்? அந்த பொண்ணு அவனோட கேர்ள் ஃப்ரெண்டா? இது எப்போ இருந்து? நம்ம கிட்ட வேலை பார்க்கிற பொண்ணா அவனுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்? நினைக்கவே அசிங்கமா இருக்கு ஆரியா. முதல்ல இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்று கோபத்தோடு படபடக்க ஆரியாவுக்கோ சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
ஆனால் இப்போது சிரித்தால் காரியம் கெட்டுவிடும் என்று எண்ணியவன் அவரது பதற்றத்தை ரசித்தவாறே “சுமார் ஒரு மூனு வருசமா அவங்க ரிலேசன்ஷிப் போயிட்டிருக்கு. இருங்க இருங்க! அவசரப்பட்டு இதுக்கும் ஷாக் ஆகாதிங்க. நான் சொல்லுறது எல்லாம் கேட்டுட்டு மொத்தமா ஷாக் ஆகுங்க” என்று கூறிவிட்டு அவர் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“அவங்க இந்த மூனு வருசமா அண்ணாவோட கேர்ள் ஃப்ரெண்டா இருந்ததுக்கே இவ்ளோ ஷாக் ஆகுறிங்களே அவன் அவங்களை இன்னும் கொஞ்சநாள்ல மேரேஜ் பண்ணிக்கிற ஐடியால இருக்கிறானு தெரிஞ்சா நீங்க என்ன பண்ணுவிங்க?” என்று கண்ணை விரித்து பாவனையுடன் கேட்டுவிட்டு எழுந்தான்.
அன்னையின் முகத்தில் தான் சொன்ன செய்தியால் அவர் அடைந்த அதிர்ச்சி அவனுக்கு சிரிப்பை வரவழைக்க “ஆனா ஒரு விஷயம். சந்தியா கண்டிப்பா எங்களை பெத்த தெய்வம் மாதிரி யாருக்கு என்ன ஆனா எனக்கென்னனு ஜாலியா ஷாப்பிங், சோஷியல் சர்வீஸ், ஃபாரின் டிரிப்னு பொறுப்பில்லாம போற டைப் இல்ல, ஷீ இஸ் ரியலி அ கேரிங் அண்ட் லவ்வபிள் கேர்ள். சோ கண்டிப்பா அண்ணாவுக்கு நல்ல ஒயிஃபாவும், அவங்க பசங்களுக்கு நல்ல அம்மாவாவும் இருப்பாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்” என்று குத்தலாக மொழிந்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
[the_ad id=”6605″]
ஹேமா இளையமகன் கூறிய செய்தியைக் கேட்டு உள்ளுக்குள் குமுறியபடியே பக்கத்தில் இருந்த மேஜையில் குத்தி தனது ஆத்திரத்தை தணித்துக் கொண்டார். தங்களிடம் கை நீட்டி சம்பளம் பெறும் ஒருத்தியை அவரால் என்றுமே மருமகளாக ஏற்றுக் கொள்ள இயலாது என்று சூளுரைத்தவருக்கு இனி வரும் நாட்களில் அவரது சூளுரையை எல்லாம் அவரது மகன் சூரியா தவிடுபொடியாக்கி விடுவான் என்பது அப்போது புரியவில்லை.
சாரல் வீசும்….