மறுநாள் விடியலில் எழுந்தச் சந்தியா முகத்தை அலம்பி பல் துலக்கிவிட்டு மொபைலை எடுத்தவள் சுமித்ராவுக்கு அந்த வீட்டின் அமைப்பைப் பற்றி வாட்சப்பில் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கையில் வாயில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத் தனது அறையைத் திறந்துப் பார்க்கவும், சூரியா உடற்பயிற்சியில் இருந்தவன் யார் இவ்வளவு காலையில் வந்திருப்பது என்ற கேள்வியுடன் வேகமாகச் சென்றுக் கதவைத் திறக்க அங்கே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.
சந்தியா சூரியாவைத் தொடர்ந்துச் சென்றவள் அங்கே ஐந்தடி உயரத்தை குதிகால் உயர்ந்த பூட்ச் அதிகரித்துக் காட்ட, அங்கே நிலவிய குளிருக்காக கனத்த கோட்டும், ஜீன்ஸும் அணிந்து, தலையில் ஒரு உல்லன் கேப்புடன் தனது பிரதிபிம்பமாய் நின்ற அந்த இளம்பெண்ணைக் கண்டதும் ஆச்சரியத்தில் உறைந்துப் போனாள். உயரம், உருவம் எல்லாவற்றிலும் அவளைப் போலவே இருந்தவள் முகத்தோற்றத்தில் மட்டும் சந்தியாவிடம் இருந்து வேறுபட்டாள்.
வந்தவள் சூரியாவைப் பார்த்து “எனக்காக வெயிட் பண்ணுறேனு சொன்னல்ல.. அதான் ஓடி வந்துட்டேன்” என்று சிரித்த முகமாய் கூறிவிட்டு அவனை அணைத்துக் கொள்ள சந்தியாவுக்குள் மெதுவாக புகைய ஆரம்பித்தது. உதட்டுச்சுழிப்புடன் உள்ளே செல்ல விழைந்தவளை சூரியாவின் “பிரவுனி” என்ற அழைப்பு தடுத்து நிறுத்தவே “இப்போ என்னடா?” என்று எண்ணியபடி ஒரு முறைப்புடன் திரும்பினாள் அவள்.
சூரியா அந்த இளம்பெண்ணின் தோளை அணைத்திருந்தவன் சந்தியாவிடம் “நான் உன் கிட்டச் சொன்னேன்ல என்னோட ஃப்ரெண்டுனு, அது இவ தான்” என்றுச் சொல்ல அந்த இளம்பெண் அவளிடம் கையைக் குலுக்குவதற்காக
நீட்ட சந்தியாவும் நாகரிகம் கருதி அவளது கையை நீட்டினாள்.
அவள் சந்தியாவிடம் “ஹாய்! ஐ அம் சாயா!” என்று கூற
“ஐ அம் சந்தியா” என்றாள் சந்தியா மொட்டையாக.
அந்தச் சாயா அதோடு நிறுத்தாமல் “சூரியா உன்னைப் பத்தி நிறையச் சொல்லிருக்கான்… நீ பார்க்கிறதுக்கு என்னை மாதிரியே இருக்க… ஐ திங் இதனால தான் சூரியா உன்னையும் ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ணுனானோ என்னவோ?” என்று கேலி போல் கூற
அவளது பேச்சிலிருந்தே அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சந்தியா மனதுக்குள் “இவளுக்கு என்னைப் பிடிச்சா என்ன? பிடிக்காம போனா எனக்கு என்ன?” என்றுச் சொல்லிக் கொண்டவள் இருந்தாலும் விடாமல் அவளுக்குப் பதிலடி கொடுக்க எண்ணினாள்.
புன்னகையுடன் “ஒன் ஸ்மால் கரெக்சன்! உங்க பேரு சாயா தானே! அதோட அர்த்தம் நிழல், அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமே. அதுப்படி பார்த்தா நீங்க வேணும்னா என்னை மாதிரி இருக்க சான்ஸ் இருக்கு…. பட் நான் உங்களை மாதிரியும் இல்லை… வேற யாரை மாதிரியும் இல்லை… நான் வெறும் சந்தியா மட்டும் தான்… யாரோட ரிஃப்லக்சனும் இல்லை” என்றாள் அவளைப் போலவே கேலியாக.
[the_ad id=”6605″]
சாயாவுக்கும் அவள் மறைமுகமாகத் தனக்குப் பதிலடி கொடுத்த விஷயம் புரிந்தாலும் தன் அருகில் நின்றவன் இந்தப் பெண்ணை ஏதோ தேவதையைப் போல் பார்க்கிறானே! தான் ஏதாவது சொல்லி இவனுக்குத் தன் மீது கோபம் வந்துவிடுமோ என்று எண்ணிச் சிரிப்பதோடு விட்டுவிட்டாள்.
சூரியாவுக்கோ அவர்களின் பேச்சு சாதாரணமாகவே தோன்ற அவன் எதுவும் பேசவில்லை. சாயா சூரியாவிடம் “சூரியா எனக்கு டீ போட்டுக் குடுக்கிறியா பிளீஸ்?” என்று கேட்க அவனும் சரியென்று தலையாட்டிவிட்டுச் சமையலறையில் நுழைந்தான்.
அவன் சென்றதும் சாயா சோஃபாவில் அமர்ந்து கொள்ள சந்தியாவும் அவளைக் கண்டுகொள்ளாமல் அமர்ந்து போனை நோண்ட ஆரம்பித்தாள். சூரியா சமையலறையிலிருந்து கையில் தேநீர் நிரம்பிய ஜக் மற்றும் கோப்பைகளுடன் திரும்பியவன் தேநீரை சாயாவிடம் நீட்ட அவள் மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அருந்த ஆரம்பித்தாள்.
சூரியா இன்னொரு கோப்பையைச் சந்தியாவிடம் நீட்ட அவளோ “நான் உன் கிட்ட டீ கேக்கவே இல்லையே!” என்று புருவம் உயர்த்தி சொல்லிவிட்டு எழுந்து அவளது அறையை நோக்கிச் சென்றாள். சூரியாவுக்கு நேற்று இரவிலிருந்து அவள் வினோதமாக நடந்து கொள்வதாகத் தோன்ற என்ன விஷயம் என்று புரியாமல் தேநீரை அருந்தியபடி சாயாவுடன் பேச ஆரம்பித்தான்.
சந்தியா தனது அறைக்குள் சென்றவள் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திடம் “நான் பார்க்க அவளை மாதிரி இருக்கேனா? ஹ்ம்… நான் சந்தியா, நான் தான் ஒரிஜினல் வெர்ஸன், அந்தச் சாயா என்னோட பைரேட்டட் வெர்சன்…. நானும் அவளும் ஒன்னா?” என்று கடுப்புடன் கேட்டுவிட்டு மார்க்கின் அலுவகம் செல்லத் தயாராக ஆரம்பித்தாள்.
அங்கே சாயா தேநீர் அருந்திவிட்டுக் கிளம்ப எத்தனித்த போது “சூரியா இன்னைக்கு நைட் அவுட்டிங் போவோமா?” என்று கேட்க சூரியா இல்லையென்று மறுத்தவன் “இந்த எம்.ஓ.ஏ சைன் ஆகுற வரைக்கும் என்னால எங்கேயும் வர முடியாது…” என்று கூறிவிட அவளும் அதற்கு மேல் வற்புறுத்தாமல் கிளம்பிவிட்டாள்.
சூரியா அதற்கு மேல் நேரத்தை வீணாக்காமல் மார்க்கின் அலுவலகத்துக்குக் கிளம்பத் தயாரானான்.
[the_ad id=”6605″]
சந்தியாவும் குளித்துத் தயாராகித் தன் அறையிலிருந்து வெளியே வர, அவளைக் கண்ட சூரியா அவள் அணிந்திருந்த உடையைக் கண்டதும் “பிரவுனி வெளியே மேகமூட்டமா இருக்கு… சோ ஒயிட் கலர் டிரஸ் போடாதே… அப்பிடி போட்டா ரெயின்கோட் வச்சுக்கோ… பிகாஸ் இன்னைக்கு கண்டிப்பா மழை வரும்” என்று அறிவுரை கூற அவளோ அவன் என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்கிற பிடிவாத மனநிலையில் இருந்தாள்.
அவனது அக்கறையை கறிவேப்பிலையாக ஒதுக்கியவள் “நான் என்ன டிரஸ் பண்ணனும், எப்பிடி டிரஸ் பண்ணனும்னு நீ எனக்கு ஆர்டர் போடாதே மார்ஸ்மாலோ… எனக்கு இது தான் கம்ஃபர்டபிளா இருக்கு… ரெயின்கோட்டுலாம் எனக்கு செட் ஆகாது… ஒருநாள் மழையில நனைஞ்சா நான் ஒன்னும் செடி மாதிரி முளைச்சிட மாட்டேன்” என்று அதற்கும் குதர்க்கமாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.
சூரியா வேகமாக அவள் கரம் பற்றித் தடுத்து நிறுத்தியவன் “என்னாச்சு பிரவுனி உனக்கு? நான் என்ன சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியா ஏன் பேசுற? உனக்கு எதுவும் பிரச்சனைனா டேரக்டா சொல்லு… நீ நடந்துக்கிறதைப் பார்த்தா ஏதோ தேர்ட் பெர்சன் கிட்ட பிஹேவ் பண்ணுற மாதிரி இருக்கு… இட்ஸ் ஹர்ட்டிங்” என்று வேகமாகக் கூற
சந்தியா பொறுமையாக அவனது கரத்தை விலக்கியவள் “பொதுவா எல்லாரும் புது மனுசங்களைப் பார்த்தா பழைய மனுசங்களை மறந்துடுவாங்கனு எங்க அம்மா சொல்லுவாங்க…. ஆனா அது தப்பு. மனுசங்க பழைய ஆட்களைப் பார்த்துட்டா புதுசா வந்தவங்களை கண்டுக்கிறதே இல்லை. அதான் உண்மை” என்று மட்டும் கூறிவிட்டு அவனைப் பார்க்கச் சூரியாவுக்கு விஷயம் பிடிப்பட்டது.
தான் சாயாவிடம் பேசிக் கொண்டிருந்ததில் சந்தியா பசிக்கிறது என்று சொன்னதை மறந்துவிட்டதால் அவளுக்கு வந்த கோபம் தான் இது என்பதைப் புரிந்து கொண்டவன் சந்தியாவின் கன்னத்தைப் பற்றிக் கொண்டு “ஓ மை பிரவுனி! இதுக்கு தான் கோவமா இருக்கியா? ஓகே! நேத்து நீ பசிக்குதுனு சொன்னதை நான் மறந்ததுக்கு சாரி… வேணும்னா நான் தோப்புக்கரணம் போடவா?” என்று கேட்க
சந்தியா தன் கன்னத்தைப் பற்றியிருக்கும் அவன் கரத்தைத் தட்டிவிட்டு “தேவை இல்லை! ஒரு விஷயத்தை நீ நியாபகம் வச்சுக்கோ… இது வரைக்கும் என்னை சார்ந்த எல்லாருக்கும் நான் பிரையாரிட்டியா இருந்து தான் பழக்கம்…. யாருக்கும் சப்ஸ்டிடியூட்டா நான் இருந்தது இல்லை… சோ உன்னோட பழைய ஃப்ரெண்டை மாதிரி நான் இருக்கேனு நினைச்சு தான் நீ என்னோட ஃப்ரெண்டா பழகுறேனா, பிளீஸ் ஸ்டே அவே ஃப்ரம் மீ. எனக்கு அது சுத்தமா பிடிக்காது” என்று தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்திவிட்டாள்.
[the_ad id=”6605″]
சூரியா இவளுக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுகிறது என்று மனதிற்குள் அதிசயித்தவன் அவளிடம் வேறு எதுவும் சொல்லாமல் “ஓகே! சால் வீ கோ?” என்று மட்டும் கேட்க
சந்தியாவுக்கோ “இப்போ கூட நான் இன்னும் பிரேக்பாஸ்ட் சாப்பிடலைனு உனக்கு நியாபகம் இல்லை தானே! இனிமே நீ என்னச் சொன்னாலும் நான் அதைக் கேக்கப் போறது இல்லை” என்று மனதிற்குள் எரிச்சல் மூளச் சூளுரைத்தவள் மனதின் எரிச்சலைக் கச்சிதமாய் மறைக்க முயன்றாள்.
தலையைக் குனிந்து கையிலிருந்த டேபை பார்த்தபடி அவன் பார்வையைத் தவிர்த்தவள் “போகலாம்” என்றுச் சொல்ல சூரியா அவளுடன் போகும் வழியில் ஏதாவது புட்கோர்ட்டில் காலையுணவை முடித்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்துடன் தான் அவளை அழைத்துச் சென்றான். அதை அவளிடம் முன்னரே சொல்லியிருக்கலாம் என்று எண்ணி இன்னும் சிறிது நேரத்தில் அவன் வருந்தப் போகிறான் என்பதை சூரியா அப்போது அறியவில்லை.
சாரல் வீசும்….