சுமித்ரா வாட்சப்பில் சந்தியா அனுப்பிய புகைப்படங்களை ரசித்தபடியே கேபில் பயணித்தவள் திடீரென்று கேப் நிற்கவும் “பாலாண்ணா! என்னாச்சு? ஏன் கேப் நின்னுடுச்சு?” என்று கேட்க
ஓட்டுனரான பாலா “தெரியலையே மேடம்! இந்த வண்டி கொஞ்சநாளா இப்பிடி தான் மக்கர் பண்ணுது….நான் என்னன்னு வெளியே போய்ப் பார்க்கிறேன்… நீங்க உள்ளேயே இருங்க..” என்று அவளுக்குக் கவனம் சொல்லிவிட்டு வெளியேறியவர் முன்னே சென்று பானெட்டைத் திறந்துப் பார்த்து எதையோ ஆராய ஆரம்பித்தார்.
சுமித்ரா சிறிதுநேரம் பொறுத்தவள் காரை விட்டு இறங்கி அவர் வேலை செய்வதைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த நேரம் பார்த்து ஆரியா தனது காரில் அப்பகுதியைக் கடந்தவன் பாலாவின் காரைக் கண்டதும் சுமித்ராவும் அங்கே தான் இருப்பாள் என்ற எண்ணத்துடன் காரை நிறுத்திவிட்டு இறங்கி அவர்களை நோக்கி முன்னேறினான்.
பாலா சுமித்ராவிடம் “மேடம் நீங்க உள்ளே போய் உக்காருங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று அக்கறையுடன் கூற
அதைக் கேட்டபடி அவர்கள் அருகில் வந்துவிட்ட ஆரியா சுமித்ரா பதிலளிக்கும் முன் முந்திக் கொண்டு “இந்தம்மா வெளியே நின்னா போற வர்ற கார்ல இருக்கிறவங்க நைட் டைம் ரோடு ஓரமா மோகினிப்பிசாசு நிக்குதுனு நினைச்சு பயந்துடுவாங்கனு தானே உள்ளே போய் உக்கார சொல்லுறிங்க டிரைவர் அண்ணா” என்று அவளைக் கேலி செய்ய இருவரும் திரும்பி அவனைப் பார்த்தனர். சுமித்ரா அவனை எரிச்சலுடன் முறைக்க அதை பொருட்படுத்தாமல் அவன் பாலாவிடம் சென்று என்ன பிரச்சனை என்று விசாரிக்க ஆரம்பித்தான்.
பாலா அவனிடம் “சார்! கார் இஞ்சின்ல ஒரு மேஜர் ஃபால்ட்… இப்போதைக்கு ஸ்டார்ட் ஆகுமானு தெரியலை…” என்று கவலையுடன் கூற ஆரியா தனக்கு தெரிந்த கார் சர்வீஸ் சென்டரின் எண்ணை அவருக்குக் கொடுத்தவன் “இவங்களுக்கு கால் பண்ணுனா அவங்க வண்டியில வந்து உங்க காரை அதோட கனெக்ட் பண்ணி எடுத்துட்டுப் போவாங்க…நீங்களும் கூடவே போய் என்ன பிரச்சனைனு சொல்லி ஃபுல்லா சரி பண்ணிடுங்க” என்று கூற பாலாவும் சரியென்றவன் தயக்கத்துடன் சுமித்ராவை எப்படி வீட்டுக்கு அழைத்துச் செல்வது என்று சங்கடத்துடன் பார்த்தார்.
சுமித்ரா “பாலாண்ணா நான் ஊபர்ல போய்க்கிறேன்” என்று சொல்ல ஆரியா “ஒன்னும் தேவை இல்லை. நான் உங்க ஏரியா கிராஸ் பண்ணி தான் போகணும். ஒழுங்கா என் கூட வந்து கார்ல உக்காரு…நான் டிராப் பண்ணுறேன்…” என்று புருவத்தை உயர்த்திக் கூற
பாலாவும் “சாரை உங்களுக்குத் தெரியும்னா அவரோடவே போலாமே மேடம்… ஏன் தெரியாத யாரோ ஒருத்தரோட கார்ல போகணும்?” என்று சொல்லவும் சுமித்ராவுக்கும் அதுவே சரியென்று பட மேற்கொண்டு எதுவும் விவாதிக்காமல் அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
இருவரும் காரில் அமர ஆரியா எதுவும் பேசாமல் காரை ஓட்ட ஆரம்பித்தவன் சிறிது தூரம் செல்லவும் அவனால் நாவை அடக்க முடியாமல் சுமித்ராவை கேலி செய்ய ஆரம்பித்தான்.
[the_ad id=”6605″]
“மிஸ் ஜெகன்மோகினி! நீங்க சின்ன வயசுல கரகாட்டக்காரன்னு ஒரு தமிழ் மூவி பார்த்திருக்கிங்களா?” என்று கேட்க சுமித்ரா இவன் ஏன் திடீரென்று இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கிறான் என்ற யோசனையுடன் பார்த்திருப்பதாகக் கூறினாள்.
ஆரியா அதைக் கேட்டு நக்கலாகச் சிரித்தவன் “அதுல சொப்பனசுந்தரியோட கார் வருமே… உன்னையும் அந்த டிரைவரையும் அந்தக் காரோட எப்போ பார்த்தாலும் அந்தக் காமெடி தான் நியாபகம் வருது… சரியான டப்பா கார்” என்று கேலி செய்ய
சுமித்ரா “ரொம்ப ஓவரா கலாய்க்காதே மேன்! அந்தக் காருக்கு என்னவாம்? அப்பப்போ ரிப்பேர் ஆயிடுது… அதுக்கு என்ன பண்ண முடியும்? ஏன் உன்னோட இந்தச் சோப்புடப்பா ரிப்பேரே ஆகாதா என்ன?” என்று அவனுக்கு பதிலடி கொடுக்க
ஆரியா பக்கவாட்டு கண்ணாடியில் கண் பதித்தபடி “ஓ! அந்த டப்பா காருக்கு இவ்ளோ சப்போர்ட்டா? அது என்னமோ சொல்லுவாங்களே…ஹான்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுனு…அந்த மாதிரி சொல்ல வர்றிங்களா?” என்று கேட்க
சுமித்ரா பொய்யாய் ஆச்சரியம் காட்டியபடி “நாட் பேட்! சார் பழமொழிலாம் சொல்லுறிங்க! லாஸ்ட் டைம் நான் சொன்னதுக்கு அர்த்தம் புரியாம நீ முழிச்சதை சந்து என் கிட்ட சொல்லிட்டா” என்று அவனை கேலி செய்தபடி பார்வையை வெளியே திருப்பியவள் சிரிக்கிறாள் என்பதை அவளது பக்கவாட்டுத் தோற்றம் மூலம் கண்டுகொண்டான் ஆரியா.
“ஏன் நாங்கலாம் பழமொழி சொல்லக் கூடாதா? தலைமுடியை கால் வரைக்கும் வளர்த்திருக்கிறவங்க மட்டும் தான் பழமொழி சொல்லணும்னு ஏதாவது ரூல் இருக்கா?” என்று நக்கலடித்தபடியே காரை ஓட்டியவன் சிறிது நேரத்தில் அவளை வீட்டின் முன் இறக்கிவிட்டான்.
சுமித்ரா காரிலிருந்து இறங்கியவள் போனில் எதையோ பார்த்துவிட்டு தனது ஹேண்ட்பேகிலிருந்து பணத்தை எடுத்து ஆரியாவிடம் நீட்ட அவன் என்ன இது என்பது போல அவளைப் பார்த்து வைத்தான்.
“நான் ஊபர்ல இங்கே வந்திருந்தா எவ்ளோ சார்ஜ் ஆகியிருக்கும்னு செக் பண்ணுனேன்… இதை வச்சுக்கோங்க” என்று விளக்கிவிட்டு அவனிடம் மீண்டும் நீட்ட ஆரியா அதை வாங்காமல் அவளைப் பார்க்கவும்
“எனக்கு யாரு கிட்டவும் எதையும் ஃப்ரீயா வாங்குறது பிடிக்காது… இவ்ளோ தூரம் வந்து என்னை டிராப் பண்ணுனதுக்கு தேங்க்ஸ்..” என்று கூறவே
ஆரியா “நான் இதை வாங்கிக்க மாட்டேனு சொன்னா நீ என்ன பண்ணுவ?” என்று அலட்சியமாகக் கேட்க
சுமித்ரா சளைக்காமல் “உன் கிட்ட குடுக்கணும்னு சொல்லி சந்து கிட்ட குடுத்து விடுவேன்” என்று கூற ஆரியா தலையை இடவலமாக அசைத்தவன் “இம்பாஸிபிள்” என்று கூறவும் அவன் சொன்ன விதத்தில் சுமித்ரா பக்கென்று நகைக்க ஆரம்பித்தாள்.
இத்தனை நாட்கள் தன்னிடம் சண்டை மட்டுமே பிடிக்கும் அந்த ஜெகன்மோகினி முதல் முறையாகச் சிரிப்பதைப் பார்த்த ஆரியாவுக்கு இதழோடு கண்ணும் சேர்ந்து புன்னகைக்கும் அவளின் புன்முறுவல் தனக்குள் ஏதோ மாற்றத்தை உண்டுபண்ணுவதாகத் தோணவும் அவனுமே அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டான்.
[the_ad id=”6605″]
சுமித்ரா அவனது கையில் ரூபாய் நோட்டைத் திணித்தவள் “வச்சுக்கோங்க சார்! பெட்ரோல் என்ன விலை விக்குது! உங்க காரும் பெட்ரோல்ல தானே ஓடுது! தண்ணியில ஓடலையே” என்று தலையைச் சரித்துச் சொன்ன அழகில் அவளது நீண்ட போனிடெயிலில் இருக்கும் குழற்கற்றைகள் அசைய ஆரியா மெய் மறந்தவனாய் அவள் கொடுத்த ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டான்.
அவனை அறியாமல் உதடுகள் “குட் நைட்” என்று உச்சரிக்கச் சுமித்ராவும் “குட் நைட்” என்று இன்முகத்தோடு சொல்லிவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே சென்றுவிட ஆரியா அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தன் தலையில் செல்லமாகத் தட்டிக் கொண்டான். புன்னகையுடன் காரை ஸ்டார்ட் செய்தவன் சுமித்ராவின் புன்னகை எழுப்பிய இனிய உணர்வுகளுடன் வீடு போய்ச் சேர்ந்தான்.
***********
மார்க்கின் அலுவலகத்தில் அன்றைய வேலை முடிந்து சூரியாவும் சந்தியாவும் ரிவர் ஓக்ஸ் திரும்ப இரவாகிவிட்டது. வீடு திரும்பியதும் முதல் வேலையாக அவன் செய்தது ஆன்லைனில் நல்ல இந்தியன் ஸ்டோராகத் தேடிப் பிடித்து மளிகை சாமான்களை ஆர்டர் செய்தது தான். அவர்களிடம் இருபத்து நான்கு மணிநேர டோர் டெலிவரி வசதி இருப்பதால் இன்னும் சிறிது நேரத்தில் பொருள் அனைத்தும் வீட்டுக்கே வந்துவிடும் என்று சந்தியாவிடம் தெரிவித்தவன் உடையை மாற்றச் சென்றுவிட சந்தியாவும் அவளது அறைக்குள் சென்றாள்.
முகம் கழுவி உடை மாற்றியவள் அறையை விட்டு வெளியேறி அங்கிருந்த ஃப்ரெஞ்ச் விண்டோக்களில் ஒன்றின் அருகில் கிடந்த சிறிய மோடாவில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தபடியே இப்போது இந்தியாவில் என்ன நேரம் என்று போனில் ஆராய்ந்தவள் காலை நேரம் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு சுமித்ராவுக்கு அழைத்தாள்.
சுமித்ரா போனை எடுக்கவும் “ஹலோ சுமிக்கா! உன் கிட்ட ஒரு முக்கியமான ஆளைப் பத்தி சொல்லணும்” என்று உற்சாகமாக ஆரம்பித்தவள் மார்க்கின் அருமை பெருமை அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு “அந்த வில் ஸ்மித்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா” என்று சொல்லவும் மறுமுனையில் சுமித்ரா நகைக்க ஆரம்பித்தாள்.
அந்த நடிகர் என்றால் தங்கைக்கு மிகவும் விருப்பம் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஏன் சுமித்ராவும் தான் வில் ஸ்மித்துக்காகவே மென் இன் பிளாக் படங்களை அடிக்கடி சந்தியாவுடன் சேர்ந்து பார்த்ததுண்டு. அதிலும் ‘பர்ஸ்யூட் ஆஃப் லைஃப்’ படத்தைப் பார்த்ததும் இருவருக்குமே அவரை மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்தச் சாயலில் மார்க் இருப்பதே சந்தியாவின் இந்த வினோதமானச் சந்தோசத்துக்குக் காரணம் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
இரு சகோதரிகளும் பேசிவிட்டு போனை வைக்க அங்கே சூரியா சந்தியா போனில் பேசியது அனைத்தையும் கேட்டுவிட்டு கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்று கொண்டிருந்தான்.
சந்தியா ஆச்சரியத்துடன் “நீ எப்போ வந்தடா? நான் உன்னைக் கவனிக்கவே இல்லை” என்றுக் கூறிவிட்டு அவன் அமர இன்னொரு மோடாவை நகர்த்த
சூரியா அவளைப் பார்வையால் ஆராய்ந்தபடி அமர்ந்தவன் “உனக்கு எப்பிடி தெரியும் பிரவுனி? நீ தான் மார்க்கோட மயக்கத்துல இருக்கியே” என்றான் உணர்ச்சியற்றக்குரலில்.
அந்தக் குரலில் எதையும் கண்டுபிடிக்க முடியாத சந்தியா உற்சாகமாக அவனது கருத்தை ஆமோதித்தவள் “வெறும் மயக்கம் மட்டும் இல்லை மார்ஸ்மாலோ… எனக்கு மார்க் மேல ஒரு க்ரஷ் வந்துடுச்சுடா” என்று ஆர்வத்துடன் கூறவும் சூரியா வெளிப்படையாகவே தனது எரிச்சலைக் காட்டிவிட்டான்.
[the_ad id=”6605″]
“க்ரஷ்ஷா? நீ இன்னும் அதே பதினெட்டு வயசுல இம்மெச்சூர்ட் சந்தியாவா தான் இருக்கே போல… அப்போ என் மேல லவ்னு குழம்புன, இப்போ மார்க் மேல க்ரஷ்னு குழம்பியிருக்கே… அவ்ளோ தான் வித்தியாசம்” என்றான் கடுப்புடன்.
சந்தியா அவனது பேச்சின் முன்பாதி ஏற்படுத்திய பாதிப்பில் அமைதியானவள் பின்னர் “எதை வச்சு நான் குழம்பியிருக்கேனு நீ சொல்லுற? நான் தெளிவா தான் இருக்கேன் சூரியா… உனக்கு அது தெரியலை” என்று தெளிவான குரலில் கூற சூரியா நம்ப இயலாதவன் போலத் தோளைக் குலுக்கிக் கொண்டான்
“நான் உனக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணுறேன் சூரியா… முதல்ல நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்… லவ் வேற, ஃப்ரெண்ட்ஷிப் வேற, க்ரஷ் வேற… மூனையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது” என்று அவள் கண்ணை விரித்து பாவனையுடன் கூற
சூரியா கேலியாக “அப்போ மேடம் தெளிவா தான் இருக்கிங்கனு சொல்லுங்க” என்று சொல்ல
சந்தியா ஆமென்று தலையாட்டியவள் “உனக்கு இன்னும் புரியுற மாதிரி என்னை வச்சே சொல்லுறேன்…. மூனு வருசத்துக்கு முன்னாடி உன்னை முதல் தடவை பார்த்தப்போவே எனக்கு உன்னோட ஸ்மைல் ரொம்ப பிடிச்சுப் போச்சு… அதுக்கு அப்புறம் நீ ரொம்ப டவுன் டு எர்த்தா பழகவும் எனக்கு உன்னோட சிம்ப்ளிசிட்டி, கேரிங் எல்லாமே பிடிச்சிருந்துச்சு…. எல்லாரை மாதிரி எனக்குள்ளவும் காதல் வந்துச்சு…
உன் கிட்ட அதைச் சொன்னப்போ அது காதல் இல்லைனு நீ சொன்னே! எனக்கு அப்போ கஷ்டமா இருந்துச்சு.. கொஞ்ச நாள்ல நீயும் கிளம்பி போயிட்ட.. நீ சொன்ன மாதிரி இன்ஃபாக்சுவேசனா இருந்திருந்தா என் கவனம் வேற யாரு மேலயாச்சும் போயிருக்கணும். பட் அப்பிடி எனக்கு யார் மேலயும் பெருசா எந்த ஃபீலிங்கும் வரலை… ஆனா சுமிக்கா சொன்னபடி ஒருத்தவங்களை நம்ம காதலிக்கிறது நம்மளோட உரிமைங்கிற மாதிரி, அவங்க நம்ம காதலை வேண்டானு சொல்லுறது அவங்களோட உரிமை.. சோ உன்னோட உரிமையில நான் தலையிட விரும்பலை…
அப்புறம் சென்னை வந்து உன்னை மறுபடி மீட் பண்ணதும் எனக்கு எங்கே மறுபடியும் நான் செஞ்ச தப்பையே செஞ்சிடுவேனோனு குழப்பம்… ஆனா சுமிக்கா தான் உன்னோட படிப்புல மட்டும் கவனத்தை வை, சூரியா உனக்கு வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தான்னு சொல்லி என்னை சென்னையிலயே இருக்க வச்சா. அக்கா சொன்னபடி நீயும் என்னை ஒரு ஃப்ரெண்டா தான் நடத்துன…சோ நீயும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ங்கிற விஷயத்துல நான் தெளிவாயிட்டேன்.. இப்போ என் கண்ணு முன்னாடி நிக்கிற சூரியா என்னோட ஃப்ரெண்ட் மட்டும் தான்…
பட் க்ரஷ்ங்கிறது வேற… அவங்களை தூரத்துல பார்த்து சந்தோசப் பட்டுக்கலாம். அட்மயர் பண்ணிக்கலாம்.. அவ்ளோ தான்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டுச் செல்ல
சூரியா தன்னைக் கடந்துச் சென்றவளின் கரம் பற்றி நிறுத்தியவன் “எல்லாம் சரி தான்… பட் முதல் காதலை யாராலயும் மறக்க முடியாதுனு சொல்லுவாங்க பிரவுனி” என்றுக் கூறிவிட்டு அவளைக் கூரிய பார்வையால் அளவிட
சந்தியா “ஆனா பெரும்பாலான முதல் காதல் தோல்வியில தான் முடிஞ்சிருக்கு சூரியா… நீ சொன்ன மாதிரி அதை மறக்க முடியாது…. ஆனா முதல் காதலை கடந்து போக முடியும்.. ஐ மீன் மூவ் ஆன் ஆக முடியும்… புரிஞ்சுதா?” என்று புன்னகைமுகமாகக் கேட்கவும் சூரியா யோசனையுடன் தலையாட்டினான்.
[the_ad id=”6605″]
அப்போது அழைப்புமணி அடிப்பது கேட்கவும் சந்தியா “ப்ரொவிசன்ஸ்லாம் கொண்டு வந்துட்டாங்கனு நினைக்கிறேன்… நான் போய் பார்க்கிறேன்” என்றுச் சொல்லிவிட்டு வாயில் கதவைத் திறக்கச் செல்ல
சூரியா தொப்பென்று மோடாவில் அமர்ந்தவன் அவளது “முதல் காதலை கடந்து போக முடியும்… ஐ மீன் மூவ் ஆன் ஆக முடியும்” என்ற வார்த்தையை மட்டும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
சாரல் வீசும்….