சந்தியா அன்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் ரேணுகா மகளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார். சுமித்ரா அவரைச் சாப்பிடுமாறு அழைத்தும் செல்ல மறுத்தவர் சிறிது நேரத்தில் அவள் ஆட்டோவில் வந்து இறங்கவும், ரேணுகாவுக்கு அவளது ஸ்கூட்டி என்னவாயிற்று என்ற கேள்வி தான் மனதில் எழுந்தது.
சந்தியா ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தவள் வராண்டாவில் அவளுக்காகக் காத்திருந்த அன்னையைக் கண்டதும் சற்று நிதானித்தாள்.
“ஏன் இவ்ளோ லேட் ஆயிடுச்சு சந்தியா? உன் ஸ்கூட்டியை எங்கே?”
“ஸ்கூட்டி ஆபிஸ்ல நிக்குதும்மா… சூரியா கூட ரெஸ்ட்ராண்ட் போயிட்டு வந்தேன்… அதான் லேட்”
தனது கேள்விக்குப் பிசிறடித்த குரலில் பதிலுரைத்துவிட்டு நகர்ந்த மகளைத் தொடர்ந்தவர் அவளுக்கு போனில் அழைப்பு வரவும் நெற்றியைச் சுருக்கி யோசித்தபடி ஹாலுக்குள் வந்தார்.
சந்தியா போனை எடுத்தவள் அழைத்தது சூரியா என்று அறிந்ததும் அழைப்பை ஏற்றவள், அவன் எதுவும் பேசும் முன்னரே முந்திக்கொண்டாள்.
“லிசன் சூரியா! நான் சொன்னது சொன்னது தான்… எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல துளி கூட இஷ்டம் இல்லை… அந்தப் பேச்சையே மறந்துடு… இனிமே நீ என்னோட பாஸ், நான் உன்னோட ஸ்டாஃப்… அவ்ளோ தான் நம்ம ரிலேஷன்ஷிப்… எவ்ரிதிங்க் இஸ் ஓவர்” என்று சத்தமாக உரைத்துவிட்டுப் போனை சோபாவில் எறியவும், ரேணுகாவுக்கு ஏற்கெனவே அவள் சூரியாவிடம் கன்னாபின்னாவென்று பேசியதில் ஏறியிருந்த கோபம் அவளது செய்கையில் இன்னும் அதிகரித்தது.
“இது என்ன புதுப்பழக்கம் சந்தியா? கையில கிடைச்சதை தூக்கி எறியுற?”
“ஓ! நீங்களா? வாங்கம்மா! இப்போ என்ன என்கொயரி பண்ணப் போறிங்க? நான் ஏன் சூரியா கிட்ட கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனுதானே கேக்கப் போறிங்க?”
“ஆமா! இன்னைக்குக் காலையிலேயே பெரியவங்களா பேசி முடிவெடுத்த விஷயத்தை நீ உன் இஷ்டத்துக்கு வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லைனு அர்த்தம்… அதுவும் சூரியாவைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எப்போவுமே இல்லைனு அர்த்தம்”
இருவரும் கோபத்தில் பேசும் சத்தம் கேட்டு அனைவரும் ஹாலுக்கு வந்துவிட, தேவராஜ் இது வரைக்கும் மகள் கோபப்படுவாள் என்பதைக் கூட அறியாதவர் அவள் முகம் சிவக்க நின்ற கோலத்தைக் கண்டு அதிர்ந்தார்.
சதாசிவம் இளையமகளிடம் “சந்தும்மா! நீ இப்பிடி பொறுமையில்லாம கத்துறது உன் அம்மா கிட்ட. அதை மறந்துடாதே… அவளுக்கும் தன்னோட பொண்ணு வாழ்க்கையைப் பத்தி நிறையக் கனவுகள் இருக்கும்… அதைப் புரிஞ்சுக்கோ” என்று கடிந்துகொள்ள
சந்தியா “அவங்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா பெரியப்பா? எனக்கு என் வாழ்க்கையைப் பத்தி எந்தக் கனவும் இருக்கக் கூடாதா? நான் அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டேனு இவங்க நேத்து அந்தப் பேச்சு பேசுனாங்க? நான் சூரியாவைக் காதலிச்சேன் தான்… ஆனா அது டீனேஜ்ல ஏதோ அறியாபருவத்துல வந்த இன்ஃபாக்சுவேசன்…
அது லவ் இல்லைனு அவனே எனக்குப் புரியவச்சிட்டான்… மூனு வருசம் கழிச்சு நாங்கச் சந்திப்போம்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை… பட் மீட் பண்ணுனோம், அவனுக்கு எப்போ என் மேல லவ் வந்துச்சுனு எனக்குத் தெரியலை… யூ.எஸ்ல வச்சு அவன் பிரபோஸ் பண்ணுறப்போ என்னால எதுவும் பேச முடியலை…
பட் இந்தியா வந்ததும் நான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் எனக்கு இப்போதைக்கு என்னோட ஸ்டடீஸ் தான் முக்கியம்னு. அவன் கிட்ட சொன்னதுக்கு அப்புறமும் அவன் உங்களைக் கூப்பிட்டுப் பேசுனா என்ன அர்த்தம்? அவன் தான் மூனுவருசக் காதல்னு ஒரு வார்த்தையைச் சொன்னான்னா அதைக் கேட்டுட்டு நீங்களும் நான் ஏதோ செய்யக் கூடாத விஷயத்தைச் செஞ்சுட்ட மாதிரி ரியாக்ட் பண்ணுறிங்க…
[the_ad id=”6605″]
பேசக்கூடாத பேச்செல்லாம் பேசிட்டு ஏதோ போனா போகுதுங்கிற மாதிரி கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னிங்க… ஆனா யாராவது என்னோட சம்மதத்தைக் கேட்டிங்களா? என்னைப் பத்தி கவலைப்படாதவங்களை நினைச்சு இனிமே நானும் கவலைப்படப் போறது இல்லை.. அது சூரியாவா இருந்தாலும் சரி, என்னோட அம்மாவா இருந்தாலும் சரி..” என்று தீர்மானமாகக் கூறிவிட்டாள்.
அதோடு “நாளைக்கு ஈவினிங் டிரெயின்ல எல்லாரும் ஊருக்குப் போயிடுங்க பிளீஸ்… நான் என்னோட கோர்ஸை கம்ப்ளீட் பண்ணுற வரைக்கும் அந்த மண்ணுல காலடி எடுத்து வைக்கமாட்டேன்” என்று பிடிவாதமாய் உரைத்துவிட்டுத் தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்.
சுமித்ரா தட்டியும் கதவைத் திறக்காதவள், தான் பேசிய அவசரத்தில் சூரியாவின் அழைப்பைத் துண்டிக்காததைக் கவனிக்கவில்லை. மறுமுனையில் சூரியா அவள் பேசிய அனைத்தையும் கேட்டு நொறுங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவளாய் அறைக்குள் சென்று தன்னை அடைத்துக் கொண்டாள் அவள்.
அதே நேரம் ஆரியாவுடன் வீடு திரும்பிய சூரியா எப்பாடு பட்டேனும் சந்தியாவைச் சமாதானம் செய்துவிடவேண்டுமென்று முயன்றவன், அம்முயற்சிகள் அனைத்தும் சந்தியாவின் கோபம் என்னும் வெடிகுண்டு தூள் தூளாக்கிவிட்ட ஏமாற்றத்தில் வீட்டின் முன்னே இருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் நொறுங்கிப் போய் அமர்ந்தான்.
வானம் இதற்காகத் தான் காத்திருந்ததோ என்னவோ, அவனது மனக்குமுறல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மின்னல்கள் மின்ன, இடி முழங்க, மழையைக் கொட்டத் தொடங்கியது. தாரை தாரையாய் ஊற்றிய மழையில் நனைந்தபடி உடைந்து போய் அமர்ந்திருந்தவனுக்குச் சந்தியாவின் வார்த்தை ஒவ்வொன்றும் நெஞ்சுக்குள் கத்தியை இறக்கிக் கொண்டிருந்தது.
சந்தியா காதலைச் சொன்ன சமயத்தில் தான் கூறிய அதே வார்த்தைகளை இன்று சந்தியாவின் வாயிலிருந்து கேட்பதற்கு அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவளுக்குத் தன் மீது வந்த காதலுக்கு வயது மூன்று என்ற இறுமாப்பில் இருந்தவனைத் தலைகுப்புறத் தள்ளிவிட்டன சந்தியா சற்று முன்னர் பேசிய வார்த்தைகள்.
அதை நினைத்து நொந்தவாறு வருந்தியிருந்தவனை நனைத்து நிலம் நோக்கி விழுந்தன மழைத்துளிகள். அடித்துக்கொண்டு பெய்யும் மழையோ, செவியைக் கிழிக்கும் இடியோசையோ அவனது கவனத்தைக் கவரவில்லை. உணர்விழந்தவனாய் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தவன் அந்நேரம் வீடு திரும்பிய ஹேமாவின் பார்வையில் பட்டுவிட்டான்.
காரிலிருந்து இறங்கிய ஹேமா மனதுக்குள் “என்னாச்சு இந்தப் பையனுக்கு? காலையில அவ்ளோ சந்தோசமா போனான்? இப்போ இடிஞ்சு போய் மழையில நனைஞ்சிட்டிருக்கானே” என்று உள்ளம் பதபதைக்க அவனை நோக்கி ஓடினார். இது தான் தாய்ப்பாசம், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்!
ஹேமா மழை தன்னை நனைப்பதை பொருட்படுத்தாது மகன் முன்னே நின்றவர் “ஏன் நனைஞ்சிட்டிருக்க சூரியா? முதல்ல எழுந்திரி” என்றபடி அவன கரத்தைப் பற்றி எழுப்பினார். எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு புதல்வனின் கரத்தைத் தொட்டிருக்கிறோம் என்ற நெகிழ்ச்சியில் கண் கலங்க எப்போதும் போல மனவுணர்வுகளை வெளிக்காட்டாத அவரது தோற்றத்துக்கு அன்றைக்கு மழையும் ஒத்துழைத்தது. மழைநீர் முகத்தில் வழிந்ததால் மகனது கரம் பற்றிய உணர்ச்சிப்பெருக்கில் ஹேமாவின் கண்ணில் பெருகிய நீரை யாராலும் கவனிக்க முடியாதல்லவா…
ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாராயணனும் ஆரியாவும் உடையெல்லாம் நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்த ஹேமாவையும் சூரியாவையும் கண்டு திகைத்தவர்களாய் எழும்ப, ஹேமா ஆரியாவிடம் “நீ ஒரு டவல் எடுத்துட்டு வாடா” என்று கட்டளையிடவும் அவன் டவலை எடுக்க ஓடினான்.
அதற்குள் “லெட்சுமி சூடா காபி போட்டுக் கொண்டு வா” என்று லெட்சுமிம்மாவுக்கும் ஒரு ஆணை ஹாலில் இருந்து பறந்தது. நாராயணனுக்கு இவையெல்லாம் கனவா நிஜமா என்ற ஆச்சரியத்தில் பேச்சே எழவில்லை.
சில நிமிடத்தில் ஆரியா டவலுடனும் லெட்சுமிம்மா சூடான காபியுடனும் திரும்ப, ஹேமா டவலால் சூரியாவின் தலையைத் துவட்டியவர் அவனிடம் காபி கோப்பையை நீட்டவும் அவன் அந்த நிலையிலும் காபியை வேண்டாமென்று கூறாமல் பருகத் தொடங்கினான். அப்போது அவனது காபி பழக்கத்தைப் பற்றி சந்தியாவின் பேச்சு நினைவுக்கு வந்தது.
அதை நினைத்து பெருமூச்சு விட்டபடி ஆரியாவிடம் அவனை அறைக்குக் கூட்டிச் செல்லுமாறு பணித்தவர், தானும் உடையை மாற்றச் சென்றார். சிறிது நேரத்தில் இரவுணவுக்கு அனைவரும் கூட, யாருமே ஒருவரோடுவர் பேசிக்கொள்ளவில்லை.
அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் அறையை நோக்கி நகருகையில் சூரியா ஹேமாவிடம் “மா! உங்க கூட கொஞ்சம் பேசணும்” என்று கூறவும் ஹேமா மறுபேச்சின்றி மகனுடன் சென்றார்.
மாடிக்குச் சென்றவன் அவரை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு நிற்க, அவர்களைத் தொடர்ந்து மேலே வந்தனர் நாராயணனும், ஆரியாவும்.
சூரியா சலனமின்றி ஹேமாவைப் பார்த்துக் கொண்டிருந்தவன், சந்தியாவின் சொற்கள் ஒவ்வொன்றும் காதில் ஒலிக்க எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் சட்டென்று அவரருகில் அமர்ந்தவன், அவரது மடியில் படுத்துக்கொள்ள ஹேமாவுடன் சேர்ந்து இக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த நாராயணனும், ஆரியாவுமே அதிர்ந்து போயினர்.
நாராயணன் ஒரு படி மேலே சென்று “டேய் அப்பாவோட கையில கொஞ்சம் கிள்ளு… என்னால இதை நம்ப முடியலைடா… இந்த அதிர்ச்சியைப் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம்… சப்போஸ் ஹார்ட் அரெஸ்ட் வந்து நான் மயங்கிட்டேனா, என்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடுடா” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டபடி கூற
ஆரியா “இனாஃப் டாட்! நீங்க டிராமா கிங்க்னு மதர் இந்தியா அடிக்கடி சொல்லுவாங்க… இப்போ தான் உங்க லைவ் பெர்ஃபார்மன்சை பார்க்கிறேன்… அவங்க சொன்னதுல தப்பே இல்லை… அங்கே ஒரு பாசப்போராட்டம் நடக்குது.. அதை இப்பிடி கேலி பண்ணுறிங்களே” என்று அவரது காலை வாரிவிட்டுச் சந்தோசப்பட்டுக்கொண்டான்.
நாராயணன் “என்னைச் சொல்லிட்டு நீ மட்டும் அவங்களை பாராட்டவா செய்யுற மை சன்? நீயும் தானேடா கேலி பண்ணுற!” என்று இளையமகனுக்குச் சளைக்காமல் பதிலடி கொடுத்தார்.
இவர்களால் இக்காட்சியை நம்ப முடியாதது போலவே ஹேமாவாலும் மகன் தன் மடியில் படுத்திருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியா சந்தோசமா என்று வரையறுக்க முடியாத உணர்வால் கைகள் நடுங்க மகனது சிகையைக் கோதிக்கொடுத்தவர் மெதுவாக “என்னாச்சு சூரியா? நீ ஏன் இன்னைக்கு அப்நார்மலா பிஹேவ் பண்ணுற?” என்று கேட்டார்.
அவர் கேட்டது தான் தாமதம், சூரியா ஒன்று விடாமல் அனைத்தையும் அன்னையிடம் ஒப்பித்துமுடித்தான்.
சொல்லிவிட்டு எழுந்தவன் “என்னால பிரவுனியை மறக்கவே முடியாதும்மா… பட் அவளுக்கு என்னைப் பிடிக்காமலே போயிடுச்சே” என்று நைந்தகுரலில் கூற
ஹேமா “அவளுக்கு உன்னைப் போயிடுச்சானு எனக்குத் தெரியாது… ஆனா அந்தப் பொண்ணுக்கு அவளோட புரஃபசன் மேல தான் இப்போ கவனம் எல்லாம் இருக்கு… இந்த டைம்ல கல்யாணப்பேச்சு வர்றதை அவ விரும்பலை… ஆனா நீயோ அவளோட பேரண்ட்ஸோ அவ சொல்ல வர்றதை காது குடுத்துக் கூட கேட்டிருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்… நான் உனக்குச் சொல்லுறது ஒன்னே ஒன்னு தான்… நீ அவளை உண்மையாவே லவ் பண்ணுறேனா அவளோட ஆம்பிசனைப் புரிஞ்சிக்க டிரை பண்ணு… அவளுக்குனு இருக்கிற கனவுகளை அடையுறதுக்கு அவளுக்கு ஸ்பேஸ் குடு… இதுக்கு மேல சொல்லுறதுக்கு எதுவும் இல்லை” என்று மட்டும் கூறிவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.
சூரியா ஏதோ புரிந்தவனைப் போல எழுந்து தனது அறைக்குச் சென்றுவிட்டான். அவர்கள் இடத்தைக் காலி செய்தபின்னர் எங்களுக்கு இனி இங்கே என்ன வேலை என்பது போல ஆரியாவும் நாராயணனும் அவரவர் அறையை அடைந்தனர்.
[the_ad id=”6605″]
சூரியா தனது அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தவனனின் மனம் முழுவதும் ஹேமாவின் அறிவுரை தான் ஓடிக்கொண்டிருந்தது. அதை எண்ணியபடி உறங்கிப் போனவனை அதிகாலையில் அவனது போனின் ரிங்க்டோன் எழுப்பிவிட்டது.
அது அவன் வழக்கமாக விழிக்கும் நேரம் தான் என்பதால் போனை எடுத்தவன் அழைத்தது மார்க் என்று அறிந்ததும் வருவித்துக் கொண்ட உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான்.
மார்க் முதலில் நண்பனை நலம் விசாரித்தவன் பின்னர் சந்தியாவைப் பற்றி கேட்கவும் தவறவில்லை. அதன் பின்னர் தொழில்முறை பேச்சுக்களில் நேரம் நீண்டது.
மார்க் அவர்கள் ஏற்கெனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் முக்கியமான மாற்றம் ஒன்று செய்யவேண்டியிருப்பதால் உடனடியாக அவனை அமெரிக்கா வரும்படி அழைக்க, சூரியாவும் தான் இப்போது இருக்கும் மனநிலையில் தனக்கு இடமாற்றம் மிகவும் தேவையான ஒன்று என்ற முடிவுக்கு வந்தான்.
தான் அன்று மாலையே சென்னையில் இருந்து விமானம் ஏறுவதாகக் கூறி போனை வைத்தவன், நேரே ஆரியாவின் அறையை அடைந்தான். ஆரியா சந்தியாவின் பேச்சும் சூரியாவின் நிலையும் ஒருசேர ஏற்படுத்திய குழப்பத்துடன் அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவன் டிசர்ட்டில் தனது அறைக்கு வந்த அண்ணனைக் கண்டு திகைத்தான்.
“டேய் அண்ணா! இன்னுமா ரெடியாகாம இருக்க? டைம் ஆச்சே”
“நோ ஆரியா! நான் இன்னைக்கு ஈவினிங் ஃப்ளைட்ல யூ.எஸ் போகணும்… சோ ஆபிசோட ஃபுல் கண்ட்ரோலும் உன் கிட்ட தான் இருக்கும்… கொஞ்சம் கவனமா இருடா… மேக்ஸிமம் ஒன் மன்த்ல திரும்பிடுவேனு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் செல்லத் திரும்பியவனைத் தடுத்து நிறுத்தினான் ஆரியா.
“நேத்து அவ்ளோ பிராப்ளம் நடந்திருக்கு… நீ பாதியிலேயே அப்ராட் கிளம்புனா என்ன அர்த்தம்டா? தியா உன்னைப் பத்தி என்ன நினைப்பானு யோசிச்சியா?”
“எப்போவும் அவளைப் பத்தியே நினைச்சிட்டிருந்தா பிஸ்னஸை யாரு பார்க்கிறது ஆரியா? அவளுக்கு அவளோட புரஃபசன் முக்கியம்னா எனக்கு என்னோட கம்பெனி முக்கியம்டா… அவ கூட இருக்கிற பிரச்சனை எனக்கு வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும்… அதை இப்போதைக்கு ஆறப் போடுறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது… நான் சென்னை திரும்பினதுக்கு அப்புறமா அவ கிட்ட பேசிக்கிறேன்” என்று முடிவாய் உரைத்துவிட்டு அகன்றான்.
ஆரியா தன்னிடம் இவ்வளவு பிடிவாதமாக உரைத்துவிட்டுச் செல்பவனைக் கண்டு பெருமூச்சு விட்டபடி அலுவலகம் செல்லத் தயாரானான்.
****************