சந்தியா ஹால் சோபாவில் சாய்ந்திருக்க அவள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் சூரியாவும் ஆரியாவும். சுமித்ரா இவர்கள் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள் சமையலறையில்.
“நான் உனக்காக வெயிட் பண்ணுவேன் பிரவுனி… எவ்ளோ நாளானாலும் சரி… இதுல இனிமே நீ கவலைப்பட எதுவும் இல்லை… நான் ரேணு ஆன்ட்டி கிட்டப் பேசுறேன்… எல்லாருக்கும் புரிய வைக்கிறேன்… நீ பொறுமையா ஸ்டடீஸை கம்ப்ளீட் பண்ணு… பட் ஒன் கண்டிசன் அதுக்கு இடையில நானும் இருக்கேனு மறந்துடக் கூடாது” என்று பெரிதாக சொற்பொழிவாற்றிய சூரியாவின் தொண்டைக்கு இதமாக காபியுடன் வந்து சேர்ந்தாள் சுமித்ரா.
“அண்ணா அப்புறமா பேசிக்கலாம்! காபி எடுத்துக்கோங்க” என்று அனைவருக்கும் காபியை நீட்டியவள் தானும் ஒரு கோப்பையுடன் அமர்ந்தாள்.
சூரியா ஆவலுடன் காபியை பருகியவன் சந்தியாவின் முகத்தைக் கவனிக்க அதில் இப்போது கலக்கம் எல்லாம் அகன்று தெளிவான பாவம் தான் இருந்தது.
ஆரியாவோ வழக்கத்துக்கு மாறாக சோர்ந்து போய் தெரிந்த சுமித்ராவை ஒரு வித திகைப்புடன் பார்த்தவன் அவளிடம் எதுவும் கேட்காமல் அமைதியாகி விட்டான்.
சுமித்ராவுக்குத் திடீரென்று போன் வர, போனின் தொடுதிரையில் தெரிந்த எண்ணைக் கண்டதும் ஏதோ பூதத்தைக் கண்ட மாதிரி அவள் பயந்ததை மற்ற இருவரும் கவனிக்கவில்லை. ஆனால் ஆரம்பம் முதல் அவளைக் கவனித்திருந்த ஆரியா இதை எளிதில் கண்டுகொண்டான்.
போனை எடுத்துக் கொண்டு அவள் தனியே சென்று விட இதற்கு மேல் தன்னால் அவளைக் கண்காணிக்க முடியாதே என்ற பெருமூச்சுடன் கோப்பையைக் காலி செய்தவன் அதை மேஜையில் வைத்துவிட்டு
“ஜெகன்மோகினிக்கு என்னாச்சு தியா? ஏதோ பேயறைஞ்ச மாதிரி அவ முகம் இருண்டுப் போயிருக்கு?” என்று யோசனையுடன் விசாரிக்க
“ரெண்டு வாரமா சுமிக்கா இப்பிடி தான் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கா பாஸ்… நானும் கேட்டுப் பார்த்தேன்… பட் நோ ரிப்ளை” என்று சந்தியா தோளைக் குலுக்கிவிட்டு இருவரின் கோப்பைகளையும் கையோடு கொண்டு சென்று அலம்பிவைத்துவிட்டு வந்தாள்.
[the_ad id=”6605″]
சூரியாவிடம் “நீ எனக்காக வெயிட் பண்னுவேனு சொல்லுறதெல்லாம் நல்லா இருக்கு மார்ஸ்மாலோ… ஆனா வார்த்தை மாறக் கூடாது” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்க
சூரியா “உன் மேல சத்தியமா நான் பேச்சு மாற மாட்டேன் பிரவுனி… அதே மாதிரி நீயும் ஒரே நிலையில இருக்கணும்… மாத்தி மாத்தி பேசுனா நான் ஒன்னும் பண்ண மாட்டேன்… இதோ பாரு” என்று அவளிடம் ஒரு வீடியோவைக் காட்டினான்.
அது ஏதோ திரைப்படத்திலுள்ள காட்சி… அதில் கதாநாயகன் யாருமே எதிர்பாராவிதமாய் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறான்… அதைக் கண்டதும் சந்தியாவுக்கு வந்த எரிச்சலில் அந்த ஆப்பிள் போனைச் சுக்குநூறாக உடைத்துவிடலாமா என்னுமளவுக்கு கோபம் வர அதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
கோபத்தை மறைத்தபடி “அது என்ன மூதேவி… க்கும்… சாரி மூவி?” என்று கேட்க
ஆரியா அதைக் கேட்டு குபீர் சிரிப்பில் மூழ்க ஆரம்பிக்கவும் சூரியா “என்ன மூவினு தெரியலை பிரவுனி… பட் ஹீரோ செஞ்ச காரியம் சூப்பர்ல…” என்று சிலாகிக்க
சந்தியா கடுப்புடன் “எது? இவன் ஹீரோவா? டேய் ஒரு பொண்ணுக்கு இஷ்டமில்லாம தாலி கட்டுறான், அவனைப் போய் ஹீரோனு சொல்லி மெச்சிக்கிற… நிஜவாழ்க்கையில ஒருத்தன் இப்பிடி பண்ணுனா அவனை இந்த சொசைட்டி எப்பிடி கழுவி ஊத்தும்னு தெரியுமா? அவன் ஹீரோ இல்லடா, வில்லன்… இந்த லெட்சணத்துல நீ இதை டிரை பண்ணி வேற பார்க்கப் போறியா? நீ தைரியமான ஆளா இருந்தா பண்ணித் தான் பாரேன்” என்று எகிறி ஏகத்துக்கும் அவனைத் திட்டி வைக்க
சூரியா “ஒரு காமெடி சொன்னா கூட சீரியஸா எடுத்துகிட்டா எப்பிடி பிரவுனி?” என்று இறங்கிவந்த பிறகு தான் அவள் அமைதியானாள்.
“நான் இது வரைக்கும் உன் ஃபீலிங்குக்கு மரியாதை குடுத்தேனா இல்லையானு எனக்கு நியாபகம் இல்லை… இனிமே உன் இஷ்டம் இல்லாம நான் எதையும் பண்ணப் போறதில்லை… உன்னை லவ் பண்ணுறதை தவிர” என்று ஆழ்ந்தகுரலில் உரைத்தவனை கண்ணில் அளவற்றக் காதலுடன் எதிர்கொண்டபடி அவன் எதிர் இருக்கையில் அமர்ந்தாள் சந்தியா.
ஆரியா இருவருக்கும் இடையே கையை மேலும் கீழுமாக ஆட்டியவன் “எக்ஸ்யூஸ் மீ! மை டியர் லவ் பேர்ட்ஸ்… ஒரு சிங்கிள் பையனை வச்சுகிட்டு கண்ணாலயே ரொமான்ஸ் பண்ணுனா என்ன அர்த்தம்?” என்று கேலி செய்ய
சூரியாவோ “நீ இடத்தைக் காலி பண்ணுனு அர்த்தம்” என்றான் அசராமல். ஆனால் அப்போதும் அவன் கண்கள் சந்தியாவிடமிருந்து விலகினால் தானே!
ஆரியா இவர்கள் எப்போதுமே இப்படி சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எண்ணியவனாய் அங்கிருந்து எழுந்து வராண்டாவுக்குச் செல்லத் தொடங்கியவனின் செவிகளில் விழுந்தது சுமித்ராவின் பதற்றம் நிறைந்த் குரல்.
“வினோத் நீ இப்பிடியே பண்ணிட்டிருந்தேனா நான் கோவத்துல என்ன செய்வேனு எனக்கெ தெரியாது… சும்மா டார்ச்சர் பண்ணாதே ஓகே… நான் உன்னை நல்ல ஃப்ரெண்டா தான் நினைச்சேன்… இதுக்கு மேலேயும் நீ என்னை டிஸ்டர்ப் பண்ணுனா நான் போலீஸ் கம்ப்ளெயிண்ட் தான் குடுக்க வேண்டியதா இருக்கும்” என்று கடினமான குரலில் உரைத்துவிட்டுப் போனை வைத்தாள்.
தலையைக் கவிழ்ந்தபடி ஏதோ சிந்தனையுடன் வந்தவள் ஆரியாவின் மீது மோதிக்கொண்டாள்.
“ஓரமா நிக்க மாட்டியா நீ?” என்று அவனிடம் சீறியவளின் குரலில் இருந்த எரிச்சலை அவன் கிஞ்சித்தும் மதிக்கவில்லை என்பது அவனது முகபாவத்திலேயே தெரிய சுமித்ரா வேறு வழியின்றி அவனிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.
“அது…வந்து….” என்றபடி தடுமாறியவளைக் கிண்டலாகப் பார்த்த ஆரியா
“அதான் நான் வந்துட்டேன்ல… இன்னும் நீ என்ன வந்து போயினு இழுக்கிற? ஒரு வேளை இன்னும் பக்கத்துல வரணுமோ?” என்றபடி அவளை நெருங்கவும் சுமித்ரா பதறியபடி அவன் மார்பில் கை வைத்துத் தள்ளி நிறுத்தினாள்.
“ஹேய்! அங்கேயே நில்லு… கிட்ட வந்தேனா அவ்ளோ தான்” என்று கண்ணாலேயே மிரட்டுபவளைப் பார்த்து அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது தான் மிச்சம். அவளது கோபத்தையோ பதற்றத்தையோ ஆரியா ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.
சுமித்ரா அவன் சிரிப்பதைக் கண்டு முகம் சுளித்தவள் “நீ கேக்கவே வேண்டாம்டா… கிளம்பு” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல முயல ஆரியா பதறிப்போய் அவள் கரம் பற்றி நிறுத்தினான்.
“உள்ளே போகாதேம்மா… அங்கே கமிட்டட் அட்ராசிட்டி ஓவரா இருக்கு… நம்மளை மாதிரி முரட்டு சிங்கிளுக்கு அதுலாம் ப்ரொகிபிட்டட் ஏரியா” என்று சொல்ல
சுமித்ரா “உன்னை விட எனக்குச் சந்துவைப் பத்தியும், சூரியா அண்ணாவைப் பத்தியும் நல்லாவே தெரியும்… அங்கே வெறும் கண்ணும் கண்ணும் நோகியா தான் ஓடும்… நீ பதறுற அளவுக்கு ஒன்னும் சீரியஸா இருக்காது” என்று அவனைக் கேலி செய்தவாறே சந்தியா மற்றும் சூரியாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் ஒரே வார்த்தையில் கூறிவிட ஆரியாவுமே இதை அறியாமல் ஒன்றுமில்லை.
இருந்தாலும் அவளைப் பேச்சில் வீழ்த்தும் ஆர்வத்துடன் “அஹான்! அவ்ளோ நம்பிக்கையா? ஒரு சிங்கிளான பெண் சிங்கத்துக்கு இவ்ளோ நம்பிக்கை இருக்கிறது சாத்தியமில்லையே” என்று பதிலுக்கு அவளைக் கலாய்க்க
சுமித்ரா “யாரு சொன்னாங்க நான் சிங்கிள்னு? நானும் கமிட்டட் தான்” என்றாள் அமர்த்தலாக.
ஆரியா அது என்னவோ பெரிய நகைச்சுவை என்பது போல விழுந்து விழுந்து சிரித்தவன் “எது? நீ கமிட்டட்டா? சரி! உன் ஆளு எந்த ஊருல மந்திரவாதியா இருக்கான்?” என்று கேட்கவும்
சுமித்ரா “போடா! அவன் எங்க ஆபிஸ்ல தான் ஒர்க் பண்ணுறான்.. பேரு வினோத்… இப்போ பேசுனது கூட அவன் தான்… என் டார்லிங்குக்கு என் கிட்ட பேசாம இருக்கவே முடியலையாம்… இன்னைக்கு நாள் ஃபுல்லா இருட்டுன மாதிரி இருந்துச்சுனு சொன்னான்” என்று சொல்லிப் பொய்யாய் வெட்கப்பட்டு வைத்தாள்.
ஆரியாவுக்கு அந்த அறிமுகமற்ற வினோத் என்பவனின் மீது காரணமேயின்றி இப்போது கொலை செய்யுமளவுக்குக் கோபம் வந்தது. அது ஏன் என்று அவன் மனம் ஆராயவில்லை. தன் எதிரே குறும்பு வழியும் கண்களுடன் நீண்டக்கூந்தல் காற்றிலாட நின்றவளின் புன்சிரிப்பு இதயத்தில் இனம்புரியா இலயத்தை உண்டு பண்ணுவதை அவனால் தடுக்க இயலவில்லை. இது வாழ்க்கை முழுவதற்கும் தனக்கு மட்டுமே காணக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தவனுக்குத் தன் யோசனை விபரீதமாகச் செல்வது மட்டும் புரிந்தது.
[the_ad id=”6605″]
சுமித்ரா அவன் முகம் போன போக்கைப் பார்த்தபடி நின்றிருந்தவள் “மூஞ்சி ஜிஞ்சர் ஈட்டிங் மங்கியாட்டம் மாறுதே! இது தான் எனக்கு வேணும்… எப்போ பாரு ஜெகன்மோகினி, பிளாக் மேஜிக், மந்திரவாதினு சொல்லி என்னை கடுப்பாக்க வேண்டியது… நல்லா அனுபவிடா மகனே” என்று எண்ணிக் கொண்டாள்.
சுமித்ராவுக்கும் ஏனோ அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரியும் அந்தக் குமுறலைக் காணப் பிடித்திருந்தது. அது ஏன் என்று அவளது மனமும் ஆராயவில்லை. அவளைக் கண்டாலே எதாவது சொல்லி கேலி செய்யும் அவனைக் காரணமின்றி அவளுக்குப் பிடித்துவிட்டது.
சந்தியாவைக் காண வரும் நேரங்களில் என்றாவது ஒரு நாள் அவன் தன்னைக் கேலி செய்யாவிடில் சுமித்ராவுக்கு ஏதோ ஒன்று குறைந்தது போன்று மனதில் தோன்ற ஆரம்பித்துவிடும். அதனால் சில நேரங்களில் தானே முன்வந்து அவனிடம் கேலிப்பேச்சை வாங்கிச் சென்ற நாட்களும் உண்டு.
அவன் ஒவ்வொரு முறையும் கிண்டல் செய்யும் போது கழுத்தை நெறித்துக் கொள்ளலாமா என்னுமளவுக்கு வரும் ஆத்திரம், அவன் சென்றபிறகு உட்கார்ந்து யோசித்தால் சிரிப்பாய் மாறிவிடும் மாயத்தை அவள் ஏன் என்று இது வரை அறியாள்.
ஆனால் இருவருக்குமிடையே மறைந்திருக்கும் உணர்வுகள் வெளிப்படும் நாளும் அருகில் வந்துவிட்டது.
******************