ஆரியாவிடம் சுமித்ரா பேசிய சம்பவம் முடிந்து சரியாக ஒரு வாரத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சாலையோரம். நேரமோ கிட்டத்தட்ட இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆரியா அவனது அன்னை ஹேமாவின் தளிர் அலுவலகத்துக்கு மாலை நேரம் செல்வதை வாடிக்கையாக்கி விட்டதால் அன்றும் அவ்வாறு சென்றுவிட்டுத் திரும்பும் நேரத்தில் தான் சுமித்ராவைச் சாலையோரம் ஒரு வாலிபனுடன் காண நேர்ந்தது. காரை மெதுவாக ரிவர்ஸில் கொண்டு வந்து அவர்கள் நிற்குமிடத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தியவன் அவர்களைக் கவனிக்கத் தொடங்கினான்.
ஒரு வேளை அந்த வாலிபன் தான் சுமித்ரா சொன்ன வினோத்தாக இருக்குமோ என்று எண்ணியவன், அவர்கள் இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு சந்தேகத்துடன் பார்த்தபடி நிற்க, சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் முற்றி அவ்வாலிபன் சுமித்ராவை வலுக்கட்டாயமாகக் கரம் பற்றுவதைப் பார்த்த ஆரியாவுக்கு உள்ளுக்குள் எரிமலை வெடித்து அக்னிக்குழம்பு ஓட ஆரம்பித்தது.
சுமித்ரா அவனிடம் இருந்து கரத்தை விலக்கப் போராடும் போதே அந்த வாலிபன் அவளது முகத்தை நெருங்க இதற்கு மேல் தாமதிப்பது முட்டாள்தனம் என்று எண்ணியவன் விறுவிறுவென்று அவர்களை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
சாலையை அவசரமாகக் கடந்தவன் அவர்களிடம் வந்த போது சுமித்ரா அவனைப் பிடித்துத் தள்ள கடும்முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஆரியா ஒரே எட்டில் அவளைத் தன் பக்கம் வலுவாகப் பிடித்து இழுக்க திடீரென்று யாரோ ஒருவன் வந்தததும் திடுக்கிட்ட அவ்வாலிபன் அவளது கரத்தை நழுவ விட்டான்.
சுமித்ரா யாரோ தன்னைப் பின்புறமாய் இழுப்பதை உணர்ந்தவள் திரும்பியபோது அவள் ஆரியாவின் மீது மோதி நின்றாள். நடுங்கிய தேகத்துடன் முகமெல்லாம் பயத்தினால் வேர்வை அரும்பியிருக்க நின்றவளின் கோலத்தில் ஆரியாவுக்கு அதற்கு காரணமானவனைக் கொலை செய்யுமளவுக்கு ஆத்திரம் வந்தாலும் காதலர்களின் பிரச்சனையில் தலையிடுவது முட்டாள்தனம் என்பதால் பொறுமையைக் கடைபிடிக்க எண்ணினான்.
சுமித்ராவோ ஆபத்பாந்தவனாய் வந்து தன்னைக் காப்பாற்றியவனை பயத்துடன் அணைத்துக் கொண்டவள் “ஆரியா! ப்ளீஸ் என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்து” என்று நடுங்கியபடி உரைக்கவும் தான் அவனுக்கு இங்கே ஏதோ தப்பாக உள்ளது போல என்று புரிய ஆரம்பித்தது.
“என்னாச்சு? நீங்க யாரு சார்? ஏன் சுமி கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண பார்த்திங்க?” என்று கேட்டவனிடம்
“என் பேரு வினோத்…. நானும் அவளும் ரொம்ப நாளா லவ் பண்ணுறோம்… நீ யாருடா இடையில வந்து பஞ்சாயத்து பண்ணுறதுக்கு?” என்றவனின் ஏளனம் தெறிக்கப் பதிலளித்தான் அவ்வாலிபன்.
இவ்வளவு நேரம் நடுங்கிக் கொண்டிருந்த சுமித்ரா ஆவேசத்துடன் அவனை நோக்கி “நான் எப்போடா உன்னை லவ் பண்ணுனேன்? நீ தான் என்னை லவ் பண்ணு, லவ் பண்ணுனு சொல்லி டார்ச்சர் பண்ணிட்டிருக்க… இதால என் வேலையில கூட கவனம் செலுத்த முடியலை… நீ பிரபோஸ் பண்ணுனதுக்கு நான் முடியாதுனு சொல்லிட்டேன் தானே… ரிஜெக்ட் பண்ணுனவ பின்னாடி சுத்தினா மனசு மாறி உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சிடுவானு உனக்கு எவன்டா சொன்னான்?
ஒரு பொண்ணோட விருப்பமே இல்லாம அவ பின்னாடி சுத்துறது, அவளைக் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறது, அவளை மனரீதியா துன்புறுத்துறது தான் காதல்னு உனக்கு எந்த மாங்கா மடையன் சொன்னான்? கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஏதோ சொன்னியே… நீ என்னை டச் பண்ணிட்டா நான் ஃப்ளாட் ஆயிடுவேனா? இப்பிடி சொல்ல உனக்கு அசிங்கமா இல்லை? ஒரு பொண்ணு ஆம்பிளையோட மனசைப் பார்த்து தான் அவனைக் காதலிக்கணுமே தவிர அவன் பண்ணுற பொறுக்கித்தனத்தைப் பார்த்து இல்லை” என்று மூச்சுவாங்க அவனைக் கடிக்காத குறையாகத் திட்டினாள் அவள்.
ஆரியா மனதிற்குள் “வாவ்! நீண்ட நாளுக்குப் பின்னர் ஜெகன்மோகினி ரிலீஸ் ஆயிடுச்சு” என்று சிலாகித்தவன் தனது கரத்தால் சுமித்ராவை விலக்கிவிட்டு அந்த வினோத்திடம் நெருங்கினான்.
அவனது சட்டைக்காலரைப் பிடித்தவன் அதன் பட்டனைக் கழற்றி கழற்றி மாட்டியவாறு “ஆளு பனைமரத்துக்குப் பாதி வளர்ந்தா மட்டும் பத்தாது ப்ரோ… ஒரு பொண்ணோட ஃபீலிங்குக்கு மரியாதை குடுக்கத் தெரியணும்… நீ பண்ணுனியே இதுக்குப் பேரு லவ் இல்லைடா செல்லம்… இதுக்குப் பேரு ஸ்டாக்கிங்(STALKING),.. இனிமேயாச்சும் காதலை நான் தான் கண்டுபிடிச்சேங்கிற ரேஞ்சுல உங்க இஷ்ட மண்ணாங்கட்டிக்குக் காதலுக்கு டெஃபனிசன் குடுக்கக் கூடாது… கண்ட கருமத்தையெல்லாம் காதல்ங்கிற பேருல பண்ணிட்டு துரைக்குக் கோவம் வேற வருதோ?” என்று அவன் கழுத்தை நெறிக்க முயல, வினோத்துக்கு எமதர்மன் எருமை வாகனத்தில் வலம் வருவது கண்ணுக்கு தெரிந்தது.
சிறுவயதில் யாரோ “சாகப்போற நேரத்துல எமன் கண்ணுக்குத் தெரிவான்டா” என்று சொன்னது வேறு தவறான சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைக்க, கிட்டத்தட்ட கெஞ்சத் தொடங்கினான் வினோத். ஆரியாவின் பிடி அப்படி.. அவனது கரத்தால் விலக்க முயன்று தோற்றவன் சுமித்ராவிடம் இறைஞ்ச ஆரம்பித்தான்.
“ப்ரோ கிட்ட சொல்லு சுமித்ரா.. இனிமே நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்…. எங்கம்மா மேல சத்தியம்” என்று சொல்லிமுடிக்கும் முன்னரே இறுகிய தொண்டை இருமலை வெளியிட ஆரியா பாவப்பட்டு அவனது கழுத்தை விடுவித்தான்.
“ஒழுங்கா ஓடிப் போயிடு… இப்போ நான் இரக்கப்படுற மூடுல இருக்கேன்… இன்னும் ட்வென்ட்டி செகண்ட்ல அந்த மூடு வயலண்டுக்கு போறதுக்குள்ள இந்த இடத்தைக் காலி பண்ணிடு” என்று எச்சரித்தவனின் குரலே சொல்லியது நான் சொன்னதை செய்வேன் என்று.
அதன் தீவிரத்தை உணர்ந்த வினோத் விட்டால் போதுமென்று பின்னங்கால் பிடறியில் பட ஓடவே, அவனைச் சுமித்ராவிடம் காட்டி “உன் டார்லிங் உசேன் போல்டுக்கு ஒன்னுவிட்டச் சித்தப்பா பையனா இருப்பான் போலயே… என்ன ஸ்பீடா ஓடுறான்யா! இவன் மட்டும் ஒலிம்பிக்குக்குப் போனானு வையேன் கண்டிப்பா கோல்ட் மெடல் வாங்கிடுவான்” என்று சொல்லி சுமித்ராவுக்கும் ஒரு குட்டு வைத்தான்.
சுமித்ராவுக்கு வினோத் சென்று விட்டாலும் இன்னும் பயம் கொஞ்சம் ஒட்டியிருந்தது.
ஆரியாவிடம் “நீ மட்டும் வரலைனா அவன் என்ன செஞ்சிருப்பான்? அதை நினைச்சாலே அருவருப்பா இருக்கு ஆரியா” என்று சொன்னவளை விழியகலாமல் பார்த்தவன்
[the_ad id=”6605″]
“உன்னோட கேப் என்னாச்சு?” என்று வினவ
“இன்னைக்கு பாலா அண்ணாக்கு உடம்பு முடியலை… எனக்கும் இன்னைக்கு ஒர்க் முடிய டைம் ஆயிடுச்சு… சோ நான் ஆட்டோல வந்தேன்… இவன் என்னை பைக்ல ஃபாலோ பண்ணிட்டு வந்து ஆட்டோவுக்கு முன்னாடி பைக்கை நிறுத்திட்டான்… ஆட்டோ டிரைவர் கிட்ட நான் அவனோட லவ்வர்னு சொன்னதும் அவரும் கிளம்பிட்டாரு… அப்புறம் தான்…” என்று சொல்ல விரும்பாமல் அருவருப்புடன் நிறுத்தினாள்.
ஆரியா அவளைக் கூர்ந்து கவனித்தவன் “கார்ல ஏறு… நான் டிராப் பண்ணுறேன்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட சுமித்ரா அவன் திட்டுவான், எச்சரிப்பான் என்று எண்ணியிருந்தவள் ஏமாற்றத்துடன் அவனைத் தொடர்ந்தாள்.
இருவரும் காருக்குள் அமர்ந்ததும் கார் சாலையில் சீறிப் பாய்ந்தது. ஆரியா காரை ஓட்டிக்கொண்டே சுமித்ராவுடன் உரையாட ஆரம்பித்தான்.
“நீ முன்னாடியே இந்த விஷயத்தை தியா கிட்ட சொல்லிருக்கணும் சுமி… அவ இந்த வினோத்தை கரப்பான்பூச்சியை நசுக்கிற மாதிரி நசுக்கி எறிஞ்சிருப்பா”
“அவளே ஆயிரம் டென்சன்ல இருக்கா… அவ கிட்ட ஏன் சொல்லணும்னு விட்டுட்டேன்… வினோத் இவ்ளோ கீழ்த்தரமா நடந்துப்பானு நான் நினைக்கலை”
“அட்லீஸ்ட் அன்னைக்கு உன் கிட்ட கேட்ட எனக்காச்சும் இந்த பிரச்சனையை சொல்லிருக்கலாம்” என்றான் ஆரியா பட்டும் படாமலும்.
சுமித்ரா “நீ எங்க என்னை சொல்ல விட்ட? நான் சொல்ல வர்றதுக்கு முன்னாடி சிங்கிள், கமிட்டட்னு பேசி என்னை டைவர்ட் பண்ணிட்ட” என்று அவன் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.
ஆரியாவும் அதை ஆமோதிக்கவே உரையாடல் போர் முடிந்து அங்கே மௌனம் ஆட்சி செய்யத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் வீடும் வந்துவிட சுமித்ரா இறங்கியவள் ஆரியாவிடம் “தேங்க்யூ சோ மச் ஆரியா” என்று சொல்லி மனதாற புன்னகைக்க, ஆரியா வழக்கம் போல அவளது புன்னகையில் புதையத் தொடங்கியபடி தலையசைத்தான்.
அவனுக்கு குட் நைட் சொல்லிவிட்டு சாட்டைப் போன்ற பின்னல் அசைய அவள் வீட்டினுள் செல்லும் வரை காத்திருந்தவன் அவளது புன்னகை தந்த இதத்தை நினைத்தபடியே வீட்டை அடைந்தான்.
அதே நேரம் சுமித்ரா ஏன் தாமதம் என்று தன்னைக் கேள்விகளால் குடைந்த தங்கையிடம் ஏதோ காரணம் சொல்லிச் சமாளித்தவள் தனது அறைக்குள் சென்று படுக்கையில் வீழ்ந்தாள். கண்ணை மூடியவளுக்கு மனத்திரையில் ஆரியாவின் குறும்புப்பார்வையுடன் கூடிய முகம் வரவே அவனை அணைத்துக் கொண்டு நின்ற தருணம் நினைவுக்கு வந்தது. அந்த நினைவில் முகம் சிவந்தவளுக்கு தன் மனம் ஆராய மறந்த உணர்வுக்கு என்ன பெயர் என்பது புரிந்து விட்டது.
அதே நேரம் ஆரியா வழக்கம் போல தன்னைக் கேலி செய்யாமல் ‘சுமி’ என்று அழைத்ததை எண்ணியபடியே நித்திரையில் கரையத் தொடங்கினாள் சுமித்ரா.
*************
சந்தியாவும் சூரியாவும் தங்கள் மனநிலையைக் குடும்பத்தாருக்குத் தெரிவித்து ஒரு மாதம் ஓடிவிட்டது. சந்தியா தனது ஆர்டிக்கிள்ஷிப்பில் கண்ணாகி விட, சூரியா மார்க்குடன் போட்ட ஒப்பந்தத்துக்குப் பலன் கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் புதுவகைத் துணியை உற்பத்தி செய்யும் வேலைக்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் மூழ்கிவிட்டான்.
ஆரியாவும் அவனுக்குத் துணையாக இருக்கவே ஒரு நன்னாளில் இனிதே அந்த உற்பத்தி யூனிட் செயல்பட ஆரம்பித்துவிட்டது. இரு சகோதரர்களும் வேலையில் கண்ணாய் இருந்தாலும் அன்னையின் தளிர் அலுவலகத்துக்குச் செல்வதை நிறுத்தவில்லை.
ஹேமாவும் மகன்களின் வருகையைத் தடுக்கவில்லை. வழக்கம் போல அன்றும் சென்றவர்கள் அங்கே புத்தங்கள் லாரியிலிருந்து இறக்கப்படுவதைப் பார்த்தபடி நின்றிருந்தனர். புத்தகங்களை எடுத்துச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தபடி சூரியாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த ஆரியாவுக்கு அதிசயத்திலும் அதிசயமாகச் சுமித்ராவிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது.
இவள் ஏன் தன்னை அழைக்கிறாள் என்ற யோசனையுடன் சூரியாவை விட்டு சில அடிகள் தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தவனை சுமித்ரா ஒரு ரெஸ்ட்ராண்டின் பெயரைக் குறிப்பிட்டு அங்கே வருமாறு கூறவே
“ஹலோ! எங்கம்மா ஆறு மணிக்கு மேல வயசுப்பசங்க வெளியில சுத்தக் கூடாதுனு சொல்லிருக்காங்கம்மா” என்று வழக்கம் போல அமர்த்தலாக மொழிந்தவன் மறுமுனையில் அவள் என்ன சொன்னாலோ தெரியவில்லை, விறுவிறுவென்று சூரியாவிடம் சென்றவன் தான் கிளம்புவதாகச் சொல்லிக் காரை எடுத்தான்.
[the_ad id=”6605″]
சூரியா அவன் கிளம்புவதை வேடிக்கை பார்த்தவாறே நின்றிருந்தவன் எதேச்சையாக லாரியின் பக்கம் திரும்ப அங்கே ஹேமா ஒரு பெரிய பண்டிலைச் சிரமத்துடன் தூக்கிக் கொண்டிருந்தார்.
“மா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றபடி அவரிடம் சென்றவன் அந்தப் பண்டிலை அனாயசமாகத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டான்.
“இவ்ளோ வெயிட்டை ஏன் தூக்குறிங்க? என்னைக் கூப்பிட்டா நான் வரமாட்டேனா? (Alprazolam) ” என்று அக்கறையுடன் கடிந்தவாறு உள்ளே கொண்டு வந்து மற்றப் பண்டில்களுடன் வைத்தான்.
ஹேமாவுக்கு மகன்களின் அக்கறையில் மனம் பூரித்துவிட்டது. தினந்தோறும் இருவரும் மாலையில் அலுவலகம் வரும் நேரத்துக்காக அவர் காத்திருக்க ஆரம்பித்தார் எனலாம். ஆரியாவின் அரட்டையும் சூரியாவின் அக்கறையான விசாரிப்புகளும் அவருக்கு அளவில்லா ஆனந்தத்தைக் கொடுக்க அதைக் கணவரிடமும் கர்வத்துடன் பகிர்ந்து கொள்வார்.
“இன்னைக்கு ஆரியா ஒரு ஜோக் சொன்னான் பாருங்க… அதை கேட்டு மேரி வீட்டுக்குப் போற வரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருந்தா” என்று தன்னிடம் சகஜமாக உரையாடும் மனைவியை ஆதுரத்துடன் பார்த்தபடி உரையாடலில் கலந்து கொள்வார் நாராயணன். முன்பு தான் வேலை வேலை என்று ஓடினோம் இப்போதாவது மனைவியிடம் மனம் விட்டுப் பேசினால் என்று காலம் கடந்து ஞானம் வந்திருந்தது அவருக்கு.
அதையெல்லாம் எண்ணிய ஹேமா இன்று கணவரிடம் சூரியாவின் அன்புச்செய்கையைப் பற்றி குறைந்து ஒரு மணி நேரமாவது சொற்பொழிவாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
சாரல் வீசும்……