திருத்தப்பட்டு தன் கைகளுக்குள் இருந்த காலாண்டுத் தேர்வின் விடைத்தாள்களை முறைத்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்த கணமணியின் கண்மணிகளை கண்ணீர் கோர்த்து மறைத்திருந்தது. ஏழாம் வகுப்பில் இருக்கிறாள் அவள்.
நல்ல லட்சணமான முகம். ஏழாம் வகுப்புதான் ஆனாலும் கடைசி பென்ச்சில் அமர்த்தும் அளவுக்கு நன்றாக வளந்துவிட்ட கன்னிப்பெண் அவள். அவளின் சில ஆசிரியைகளை விடவும் உயரமானவள். ஆறாம் வகுப்பு முடித்த கையோடு பூப்பெய்திவிட்டவள். அதென்னவோ.. வாழக்கை முறையில் புகுந்துவிட்ட மாற்றத்தாலோ காலநிலையில் ஏற்பட்ட குழப்பத்தாலோ, யார் கண்டது?! பெண் குழந்தைகள் முன்கூட்டியே பூப்பெய்தி விடுவது பரவலாகிப் போனதென்னவோ நிஜம் தான்.
உடலியல் வளர்ச்சியிலுள்ள வேகம் மனதளவில் உள்ளதா என்பது விவாதப்பொருள் தான் ஆனாலும் கண்மணி பொருத்தமட்டில் அவள் ஏழாம் வகுப்பளவில் இருக்கும் குழந்தைதானென்று அடித்துச் சொல்லிவிடலாம். பெரியவள் ஆகிவிட்டாள் தான்; மாதாமாதம் தன் பிறப்புறுப்பு இரத்தம் வடிப்பதைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள் தான். ஆனாலும் அவள் குழந்தை! பட்டாம்பூச்சி போன்றவள்.
படிப்பில் கொஞ்சம் சுமார். ஆனால் இம்முறை, காலாண்டுத் தேர்வின் விடைத்தாள்கள் அவளின் தோல்வியை உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தன. அனைத்திலும் முப்பதைத் தாண்டினாளில்லை.
எப்போதும் ஐம்பதை நெருங்கிவிடுவாள். ஆனால் அதற்கே அவளின் மொத்த குடும்பமும் இடைவெளியற்ற இரண்டுமணி நேர கச்சேரி வைக்கும். இப்போது அனைத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண் கூட எடுக்கவில்லை என்றால் அவ்வளவுதான்.
“உன் அப்பா இத்தனை பணக்கஷ்டத்திலையும் உன்னை ப்ரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்குறான். பொறுப்பிருக்கா உனக்கு?” என்று அவளின் பாட்டி கமலம் அந்த பெரிய மூக்கு புடைக்க முட்டை கண்கள் உருள கேட்கும் காட்சியைக் கண்மணியின் கண்களை முந்திக்கொண்டு மனம் பார்த்துவிட்டது.
தாத்தா விஸ்வநாதன் ஒன்றும் சொல்லமாட்டார். அப்பா ரகுராமன் இறுக்க முகமாக ஒரு வாரம் இருப்பார். ராதிகா அத்தை, “சோத்தைக் குறைங்க. படிப்பு தன்னால வரும்” என்று நக்கலடிப்பார். ராதிகா அத்தையின் மகன் வர்ஷனோ கிண்டல் பண்ணியே கொன்றுவிடுவான். பத்தாம் வகுப்பில் இருக்கும் அவனும் கண்மணி படிக்கும் அதே பள்ளியில் தான் படிக்கிறான். அனைத்திலும் முதலாவதாக வருபவன் என்பதால் கண்மணியைக் கிண்டல் செய்ய அவனுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்.
ஒரே மகளான கண்மணிக்கும் ஒரே மகனான வர்ஷனுக்கும் மணமுடிக்கலாமென்று வெளிப்படையாகவே பேச்சு ஓடுவது ரொம்ப வழக்கம் அவர்கள் வீட்டில். இப்போது இந்த மதிப்பெண்களைப் பார்த்தால் “இந்த மக்கை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் பா..” என்று சொல்லி வர்ஷன் நகைப்பான் என்றறிவாள் அவள்.இப்படி அவள் கையிலிருக்கும் விடைத்தாள்கள் வீட்டுக்குப் போனால் நடக்கக்கூடியவற்றை அவள் மனம் படமாகவே ஓட்டிக் காட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் இவர்களெல்லாம் அவள் கண்ணீர் திரட்டக் காரணம் இல்லை. அவளின் அழுகையைத் தூண்டும் நிஜமான காரணம் அவளின் அம்மா சாந்தி.
அம்மாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். சாந்தி வங்கியில் பணி செய்யும் தாய். அவளுக்கு அவள் குடும்பத்தில் பெரிய ஆதரவொன்றும் கிடையாது. அவளும் ரகுராமனும் கருத்தொருமித்த தம்பதியர் என்று சொல்வதற்கில்லை. இருவருக்கும் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது அவ்வளவுதான். பாசமெல்லாம் உண்டு. ஆனாலும்…
ரகுவுக்குக் கொஞ்சம் கடன் பிரச்சினை இருப்பதால் சாந்தி வேலைக்குப் போக அனுமதிக்கப்படுகிறாள். மாமியார் கமலத்துக்கு சாந்தி ஆகாத மருமகள் தான். பக்கத்திலேயே இருக்கும் தன் மகள் ராதிகாவைக் காட்டிக்காட்டி சதா மட்டம் தட்டுவார். அவரைப் பொருத்தவரை இந்திரா காந்தி சுடப்பட்டதற்குக் கூட சாந்தி தான் காரணம்.
அடிப்படையில் நல்லவர் தான் என்றாலும் மருமகளிடம் மட்டும் மிகச்சராசரியான மாமியாராக நடக்கும் பெண்மணி கமலம். தாத்தா விஸ்வநாதனும் சாந்தியை மட்டம் தட்டுவதில் கமல ஜாடிக்கு ஏற்ற மூடியாகிவிடுவார். நாத்தனார் ராதிகா, சாந்தியின் முகத்துக்கு நேரே தேனொழுகப் பேசுவாள். ஆனால் முதுகுக்குப் பின்னே அவளும் சராசரி நாத்தனார் தானென்று சாந்திக்குத் தெரியும். சில மாதங்களாகத் தான் தன்குடும்பத்தில் அம்மாவுக்கு நன்மதிப்போ ஆதரவோ பெரிதாக இல்லையென்று கண்மணிக்குப் புரியவந்திருக்கிறது. இப்போது தேர்வில் தோற்றிருப்பதற்கும் அம்மாவைத் தான் அனைவரும் குறை சொல்வார்கள் என்று கண்மணி நினைத்தாள்.
“வேலைக்குப் போறேன் பேர்வழின்னு பொண்ணைத் துளியும் கவனிக்கறதில்ல. இருக்கறது ஒரு பொண்ணு. அவ படிப்பை எங்கையாச்சு பாத்துக்கறாளா.. ஊர் உலகத்தில யாரும் வேலைக்குப் போகல்ல? வீட்டுலையும் பொறுப்பா இருந்து பிள்ளைங்களை நல்லா மார்க் எடுக்க வைக்குறவங்க இல்ல? இவளுக்கு திறமை இல்ல.. வகை தெரியாம குடும்பம் பண்ணி என் பிள்ளையைக் கடன்காரன் ஆக்கிட்டா, பேத்தியை மக்காக்கிட்டா” இந்த ஏச்சு பேச்சுக்கள் தான் அம்மாவுக்குக் கிடைக்குமென்று கண்மணி நன்கறிவாள். ஏனென்றால் இப்படித்தான் ஆறாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் கணிதத்தில் மட்டும் ஜஸ்ட் பாஸ் ஆனபோது பேசப்பட்டது. அப்போது தான் கண்மணி கூட வைராக்கியம் பூண்டாள். இவர்களின் வாயடைப்பதற்காகவாவது இனி கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் வாங்கிவிட வேண்டுமென்று.
ஏனென்றால் சாந்தி கண்மணியை என்றைக்கும் கடிந்துகொண்டதில்லை. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், ஏமாற்றங்கள் இருந்தாலும், சலிப்புகள் இருந்தாலும், அம்மா தன்னிடம் காட்டிக்கொள்வதில்லையென்று அந்தக் குழந்தை புரிந்துகொண்டுவிட்டது. தன்னை இருப்பதுபோலவே அம்மா ஏற்கிறாள், தன்னைக் குறைவாக நினைப்பதில்லை, இப்படியெல்லாம் நீ இருந்தால் தான் என்ற நிபந்தனைகள் எதுவுமே இன்றி தன்னை நேசிக்கிறாள் என்பதைக் கண்மணி உணர்ந்துகொண்டாள். உன்னால் வேறு எனக்கு அவப்பெயர் என்று சொல்லிக்காட்டியதில்லை. அம்மாவின் முன்னுரிமை பட்டியலில் தனக்கே முதலிடம் என்று கண்மணி நன்றாகத் தெரிந்துகொண்டாள். நிச்சியம் மகள் தன்னைப் பெருமைப்பட வைப்பாள் என்ற நம்பிக்கை சாந்திக்கு உண்டு என்று கண்மணிக்குப் புரிந்துவிட்டபடியால் போனவரை போகட்டும் இனிமேல் நன்றாகப் படிக்கவேண்டுமென்று முடிவுகட்டி வைத்திருந்தாள் கண்மணி. பிறகு ஏன் இந்தத் தேர்வில் தோற்றாள்? அவளின் தீர்மானங்கள் அத்தனை சீக்கிரம் நீர்த்துவிட்டதா ! குழந்தை தானே.. அதனால் இரவின் தீர்மானங்கள் விடிந்ததும் வலுவிழந்துவிட்டனவா..
அல்ல அல்ல. கடந்த ஒரு மாதமாக அவள் பெருத்த மனப்போராட்டத்தில் சிக்கியிருந்தாள். 13வயதில் அப்படி என்ன மனப்போராட்டம்.?
ராதிகா அத்தையின் கணவர் கண்ணன். ஐம்பது வயதை நெருங்கும் அவர் ஒரு தனியார் கம்பெனியில் பணியில் உள்ளவர். இவர்களைப்போல் நடுத்தர வர்கம் தான். சிரிக்கச் சிரிக்க பேசுபவர். எப்போதும் கிண்டலும் கேலியும் என்றிருப்பார். நகைச்சுவயான மனிதர். எப்போதும் ஜாலியாக இருப்பார். கண்மணி வீட்டிலிருந்து ராதிகா அத்தை வீட்டுக்கு நடந்தே போய்விடலாம்.
ராதிகா வீட்டுக்கும் ரகுராமன் வீட்டுக்கும் தினசரி பண்டமாற்று நடந்துவிடும். அங்கிருந்து வர்ஷனும் இங்கிருந்து கண்மணியும் தான் பொருட்கள் எடுத்துப்போகும் குருவிகள். பெரும்பாலும் உணவுப் பொருட்களே அதிகம் பயணப்படும்.
ஒரு மாதத்துக்கு முன்னால் ராதிகா அத்தையின் கணவர் கண்ணன் பணி நிமித்தம் நாக்பூர் சென்று திரும்பியிருந்தார். அவர் வாங்கிவந்திருந்த நாக்பூரத்தின் ஆரஞ்சுகளில் சிலவற்றை ஒரு பையில் போட்டு அம்மா வீட்டுக்குக் கொடுத்தனுப்புவதற்காக வர்ஷனை ராதிகா தேட, “அவன் தான் டியூஷன் போயிருக்கானே.. கொடு.. நானே ஒரு எட்டு போய் கொடுத்துட்டு வர்றேன்” என்று கண்ணனே கிளம்பி கண்மணி வீட்டுக்கு வந்தார்.
“வாங்க மாமா..” என்று சிரித்த முகமாய்க் கண்மணி கதவைத்திறந்து அவரை உள்ளே அனுமதித்தாள்.
“எங்க.. வீட்டுல யாரும் இல்ல..”
“பாட்டி தாத்தா கோவில் போயிருக்காங்க. அப்பா இன்னும் வேலை விட்டு வரல்ல. அம்மா வேலை விட்டு வந்து உள்ள குளிக்குறாங்க.”
“அட.. அப்படியா.. அப்ப உடனே சாப்பிடலாமா..” என்று பைக்குள் கைவிட்டு ஒரு ஆரஞ்சை எடுத்துக்கொண்டு பையை மேசை மேல் வைத்துவிட்டு கண்மணியை இழுத்து சோபாவில் அமர்த்தி அவளை உரசியவாறு தானும் நெருக்கமாக அமர்ந்து கொண்டார் கண்ணன்.
இதை எதிர்பார்க்காத கண்மணிக்குக் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது. கண்ணண் அதுவரையில் அவளைத் தொட்டுப் பேசியதில்லை. அவள் கொஞ்சம் நகர முயன்றாள் ஆனால் சோபாவின் கைப்பிடிப் பகுதி தடுத்தது.
கண்ணன் ஆரஞ்சு பழத்தின் ஒரு சுளையை அவள் உதட்டருகே கொண்டுவர, கண்மணி தலையைப் பின்னால் இழுத்துக் கையில் அதை வாங்கப் பார்த்தாள். கண்ணண் விடாப்பிடியாக அவள் உதட்டுக்குள் சுளையைத் திணித்துவிட கண்மணிக்கு என்னவெல்லாமோ செய்யத் துவங்கியது.
இதயம் வேகமெடுத்தது. உடலெங்கும் குறுதி ஓடுவதை உணர்ந்தாள். தோலெங்கிலும் யாரோ குட்டிக்குட்டி ஊசி வைத்துக் குத்துவதைப் போல் இருந்தது. அடிவயிறு பிசைந்தது. கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கும் போது மூக்கில் ஒருவித இறுக்கம் தெரியுமே.. அந்த இறுக்கத்தைத் தன் உடல் முழுவதிலும் உணர்ந்தாள். வலுக்கட்டாயமாக வாய்க்குள் திணிக்கப்பட்டுவிட்ட அந்த ஆரஞ்சு சுளை முள்ளாகிப் போனது. ஏனோ அதை மெல்ல மிகவும் சிரமமாக இருந்தது. காரணம் அவள் மெல்லுவதை, அவளின் அதரங்களை, கண்ணன் பார்த்த அந்தப் பார்வை. வக்கிரத்தின் மொத்த அர்த்தத்தையும் விளக்கிய அந்தப் பார்வையில் கூசித்தான் போனாள் அந்தக் குழந்தை.
பாதி கூட மென்றிருக்காத நிலையில் படாரென்று அதை விழுங்கிவிட்டு அவ்விடம் விட்டு எழுந்திருக்க முயன்ற கண்மணியைத் தோளிலும் தொடையிலும் அழுத்தி கண்ணன் அமர்த்திவிட அதிர்ச்சியில் முகம் பார்த்தவளை நெருங்கி வந்தன அந்த அசிங்கம் ஏறிப்போன பார்வையும் முகமும். மறுநொடி அவளின் சின்னஞ்சறு இதழ்களைச் சட்டென்று சுவைபார்த்தும் விட்டான் கண்ணண். ஐம்பதை நெருங்குபவனாயினும் அவனுக்கென்ன இனி மரியாதை?
சில நொடிகள் நீடித்துவிட்ட நிர்பந்த முத்தத்தின் போது கண்மணி உறைந்தே போய்விட்டாள். விலகிய கண்ணன் “ம்.. நீயும் குடு..” என்று ரகசிய குரலில் சொல்லிவிட்டு மீண்டும் நெருங்க, அந்த நொடிப்பொழுது இடைவெளியில் கண்மணி துள்ளி எழுந்து விலகி நின்றாள். உடன்பாடில்லாத தீண்டல்களுக்காகவென்றே பெண்களின் தண்டுவடம் தாமதிக்காமல் நிகழ்த்திவிடும் தன்னிச்சையான எதிர்வினையை அந்தப் பெண் குழந்தையும் காட்டிவிட, அந்த நேரம் பார்த்து சாந்தி வெளியே வந்தாள். தொடந்து ரகுராமன் பணியிடத்திலிருந்தும் கமலம் விஸ்வநாதன் கோவிலிலிருந்தும் ஏக சமயம் உள்ளே நுழைய இப்போது எப்படி நினைப்பது என்ன செய்வது என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் கண்மணி என்னும் 13 வயது குழந்தை. தற்போது நடந்தது பாலியல் சீண்டல் என்பது பாவம் அவளுக்கு எப்படித் தெரியும்?