கண்மணி அறையில் காணொலிக் காட்சிப் பதிவுக்காக கேமிரா தயாரானது. இந்த வாக்குமூலப் பதிவின் போது இடையில் விசாரணை அதிகாரியின் குறுக்கீடோ பெற்றவர்களின் குறுக்கீடோ இருக்கக்கூடாது. “அவன் இப்படி செஞ்சானா? அங்க தொட்டானா? கட்டிப்பிடிச்சானே அதைச்சொல்லு” போன்ற பின்குரல்கள் காணொலியில் பதிவானால் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்காது. குழந்தையாகவே தான் வாக்கூமூலம் அளிக்க வேண்டுமென்று சட்டம் எதிர்பார்க்கிறது.
சாந்தி சொல்லிக்கொடுத்ததைக் கச்சிதமாய்ப் புரிந்து கொண்டு துணிச்சலாய்க் கண்மணி நடந்தவைகளை விவரித்தாள். வெற்றிகரமாக வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் அந்த அதிகாரி.
“பக்காவா வந்திருக்கு மேடம். குழந்தை விவரிச்சது சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாலியல் தாக்குதல். குழந்தை அனுமதி இல்லாம தனிப்பட்ட உறுப்புக்களைத் தொடறதும் தொடவைப்பதும் நான்-பெனிட்ரேட்டிவ் செக்ஸுவல் அஸ்ஸால்ட். நிச்சியம் கன்விக்ட் ஆகிடுவாரு. குறைந்தது மூனுலேந்து அதிகபட்சம் அஞ்சு வருஷம் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு. ரொம்ப நெருங்கின சொந்தம்கறதால இன்னும் கூட தண்டனை அதிகமாகலாம். பொக்ஸோ கேஸ் ஒரு மாதத்துக்குள்ள முடிச்சு தீர்ப்பு, தண்டனை விவரம் எல்லாம் சொல்லி முடிச்சிடுவாங்க. அபராதமும் விதிப்பாங்க. அப்ப நான் கிளம்பறேன் மேடம். உங்க தைரியத்துக்கும் பாப்பாவோட துணிச்சலுக்கும் பெரிய ஸல்யூட்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அந்த விசாரனை அதிகாரி.
இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த கமலம், ராதிகாவிடம் கச்சிதமாக போட்டுக்கொடுத்துவிட்டார். என்ன இருந்தாலும் மகளின் வாழ்க்கை அல்லவா..
ராதிகா பேரதிர்ச்சி ஆனாள். கண்ணனும் தான். எத்தனையோ பெண்களைச் சீண்டியிருக்கிறான். இப்படி யாரும் நடவடிக்கை எடுத்ததில்லை. அதனால் அல்லு பிடிங்கியது அவனுக்கு. என்ன செய்வது, எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று விளங்கவில்லை.
இந்த விசாரணை வெற்றிகரமாய் முடிந்துவிட்டதும் குடும்பத்துக்குள் சூறாவளிகளும் பூகம்பங்களும் சுனாமியும் நிகழ்ந்தன. ஆளாளுக்கு சாந்தியை நெருக்கினர். கமலம் – விஸ்வநாதன் தம்பதியர் ஒருபுறம் என்றால் ராதிகா மறுபுறம். இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்காய் பிரும்ம பிரயத்தனம் செய்தனர். ரகுராமன் தலையைப் போட்டு உருட்டினர். “அவ வீட்டைச் சேர்ந்த ஒருத்தர் இதே தப்பைச் செஞ்சிருந்திருந்தா இதே நடவடிக்கை எடுப்பாளா?” என்ற கேள்வியை விஸ்வரூபமாய் எழுப்பினாள் ராதிகா. “இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா கண்மணிக்கு தான் கெட்ட பேரு. நாளைக்கு யார் அவளைக் கல்யாணம் பண்ணிப்பா?” என்ற அக்கறைப் பேச்சுகள் வேறு வந்தன. கண்ணன் ஒரு வார்த்தையும் பேசவில்லை; மன்னிப்பும் கோரவில்லை. ராதிகாவைத் தூண்டிவிட்டு பின்னால் பதுங்கிக்கொண்டான். சாந்தியைத் தூற்றினர். சாபமிட்டனர். ரகுவுக்கு தர்மசங்கடமாய் இருந்தது. நடவடிக்கையை நிறுத்தவில்லையானால் இந்த வீட்டில் இடமில்லை என்பதில் கடைசியாக வந்து நின்றனர். சாந்தி எதிர்பார்த்தவை தான் இவை எல்லாம். அவள் துளியும் கலங்கினாள் இல்லை; பின்வாங்கினாள் இல்லை.
“இதோ பாருங்க. என்மகள் மேல பாலியல் தாக்குதல் நடந்திருக்கு. செஞ்சவன் மேல சட்ட நடவடிக்கை எடுக்கறேன். அவ்வளவுதான். இதனால என் மகள் பேரு கெட்டுப் போகறதுக்கோ அவளுக்கு கல்யாணம் ஆகாம போகறதுக்கோ வாய்ப்பே இல்ல. அப்படி ஆனா அது என் பிரச்சினை. நான் சமாளிச்சுக்கறேன். என்கிட்ட மல்லுக்கு நிக்காம கண்ணனை ஏன் இப்படி செஞ்சன்னு போய் கேளுங்க. உங்க மாப்பிள்ளை என்னால சிறைக்குப் போகல்ல. அவனோட கெட்டபுத்தியால தான் தண்டனை அனுபவிக்கப்போறான். இதனால எனக்கு இந்த வீட்டுல இடம் இல்லைன்னா பரவாயில்ல. எல்லாத்துக்கும் நான் தயார் தான். கண்ணன்னு இல்ல. என் பொண்ணு மேல தகாதபடி கை வச்சவன் எவனா இருந்தாலும் நான் இப்படித்தான் நடவடிக்கை எடுப்பேன். என் சொந்தக்காரனா இருந்தா நடவடிக்கை எடுப்பேனான்னு கேக்குறீங்க. இப்படி செஞ்சது கண்ணனா இல்லாம வேற மூனாவது மனுஷனா இருந்திருந்தா அப்ப என் நடவடிக்கைகளுக்கு நீங்க எல்லாம் குறுக்க நின்னுருப்பீங்களான்னு நானும் திருப்பி கேக்கலாம். அப்ப நடவடிக்கை பிரச்சினை இல்ல.. கண்ணன் மேல நடவடிக்கை தான் உங்களுக்கெல்லாம் பிரச்சினை. பரவாயில்ல. என்னை நீங்க இதுக்காக வெறுத்தாலும் எனக்கு கவலை இல்ல. கண்மணிக்கு நியாயம் கிடைக்கனும். அது போதும் எனக்கு.” என்று சாந்தி வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் முடித்துவிட்டதும் அனைவருக்கும் முகத்தில் ஈயாடவில்லை. குறிப்பாக ரகுவுக்கு.
பள்ளியில் வர்ஷன் கண்மணியைத் தவிர்த்துவந்தான். மதிய உணவு இடைவேளையில் அவனைச் சந்தித்த கண்மணி, “என் மேல கோவமா இருக்கன்னு தெரியும் வர்ஷன். அம்மா தான்….” என்று ஆரம்பிக்க, அவளை நிறுத்தியவன் “உன் மேல கோவப்பட எதுவுமே இல்ல கண்மணி. என்னால உன்னை ஃபேஸ் பண்ண முடியல. தைரியம் இல்ல எனக்கு. உன் அம்மா எடுக்குற நடவடிக்கை ரொம்ப சரி. தப்பு செஞ்ச அப்பா தண்டனை அனுபவிக்குறது தான் நியாயம். மத்தவங்க எல்லாரும் அவரைக் காப்பாத்த நினைக்குறது தான் அநியாயம். தப்பு செய்ய பயப்படாம இருந்துட்டு அதோட விளைவுகளை ஃபேஸ் பண்ண மட்டும் பயப்படறாங்க. ஒவ்வொருத்தரும் தன்னோட தோல்வியை மறைக்க டிஃபன்ட் கேம் ஆடுறாங்க. அதனாலதான் நடவடிக்கை எடுக்கவிடாம மாமியை நெருக்குறாங்க. நீ தெளிவா இரு. மாமி சொல்லுறபடி செய். அப்பாவாவே இருந்தாலும் நியாயம்னு ஒன்னு இருக்கு.” என்றான்.
“உனக்கு இதெல்லாம் ஓக்கே வா?”
“ஓக்கே இல்ல.. இதெல்லாம் ஏன் நடக்குது… அப்பா ஏன் நல்லவரா இல்லாம போய்ட்டாருன்னு லட்சம் முறை என்னை நானே கேட்டுக்கறேன்” என்று கண்கள் கலங்க தொண்டை அடைக்கச் சொல்லிச் சென்றான் அந்தப் பிள்ளை.
கண்மணியும் அதையே தான் தனக்குள்ளும் கேட்டுக்கொண்டிருந்தாள். குழப்பங்களில் சிக்கித் தவித்தாள் குழந்தை. பாலியல் தாக்குதலை விட சாந்தி எடுக்கும் நடவடிக்கைக்குக் குடும்பத்தினர் தரும் ரியாக்ஷன்கள் தான் அவளை இன்னும் பயப்பட வைத்தது. “அன்று புஷ்பலதா இப்படி ஏதாவது நடந்தால் குடும்பத்திடம் சொல்ல வேண்டுமென்று அறிவுறுத்தியதைக் கேட்டு சொல்லிவிட்டோம். ஆனால் சொல்லாமலேயே இருந்திருக்கலாம். அவர் சொன்னதைப்போல் குடும்பம் இதில் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை” என்று அவள் நினைத்தாள். குழந்தைக்கே முன்னுரிமை என்று பொருமைபீற்றும் நம் குடும்பங்கள் உண்மையில் அப்படி இல்லை என்ற நிதர்சனம் 13வயதிலேயே அவளின் முகத்தில் அறைந்துவிட்டது. இந்த நடவடிக்கையால் குடும்பம் பிரிவது நிச்சயம் என்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தவறு செய்பவர்களை விட்டுவிட்டு நியாயம் கேட்பவர்களை அடக்கும் சமூகப்பழக்கத்தைக் கண்டு பயம் கொண்டாள் கண்மணி. தவறு தவறில்லை; நடவடிக்கை தான் தவறு என்று சொல்வதைக் கண்டு நொந்து போனாள்.
இப்படி அவள் மனப்போராட்டத்தில் தவித்திருக்க மறுநாள் காலை வந்த தகவல், சாந்தியின் நடவடிக்கைகளை கேள்விக்குறி ஆக்கியது.
“ராதிகாவின் தற்கொலை முயற்சி” அனைவரையும் திடுக்கிட வைத்தது.
அவமானம் தாங்காமல் ராதிகா தற்கொலைக்கு முயல, வர்ஷனும் கண்ணனும் காப்பாற்றி அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கமலத்துக்குத் தகவல் அளித்தனர்.
இப்போது குற்றவாளிக் கூண்டு சாந்தியை வரவேற்றது. அவள் எடுத்த நடவடிக்கையால் தான் ஒரு உயிர் ஊசலாடுகிறதென்பது போல் ஆகிவிட்டது. புகாரை வாபஸ் வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற நிர்பந்தம் சாந்தி மேல் பலமாக திணிக்கப்பட்டது. இம்முறை ரகுவும் அவள் பக்கம் நிற்கவில்லை.
கண்ணனின் கேடுகெட்ட செயலால் தான் இத்தனையும் நிகழ்கிறதே தவிர ஒரு அம்மாவாக சாந்தி எடுத்த நடவடிக்கையால் அல்ல என்பதை அங்கே யாரும் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. பிரச்சினை, குற்றச்சாட்டுகள், அழுகை, சாபங்கள், என்று அத்தனை தாக்குதல்களும் சாந்தி மேல் திரும்பின.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கண்மணி குற்ற உணர்வு கொண்டாள். எந்த தப்பும் செய்யாதவர்களைக் குற்றவாளி ஆக்கி அழகு பார்ப்பது நம் குடும்ப அமைப்பில், நம் சமூகத்தில் ஒன்றும் புதிதல்லவே.
இந்த பிரச்சினைகள் அவளுக்கு அவளின் புரிதலுக்குப் பெரிதல்லவா. நேரே அம்மாவிடம் சென்று புகாரைத் திரும்பப் பெற மன்றாடினாள்.
“நான் தான் மா தப்பு பண்ணிட்டேன். நான் பொறுத்துப் போகாம வெளியில சொன்னது தான் தப்பு. நான் பிறந்திருக்கவே கூடாது” என்ற மிகப்பெரிய வார்த்தை அந்தக் குழந்தை வாயிலிருந்து வெற்றிகரமாக வரவழைக்கப்பட்டுவிட்டது.
அவளுக்குக் குடும்ப அமைப்பின் மீதும், சமுதாயம் நிச்சியமாய் நியாயம் கேட்கும் என்பதிலும் நம்பிக்கை வருவதற்காக எடுத்த நடவடிக்கை அவளை இன்னும் மன உளைச்சல் படுத்துவதை நன்குணர்ந்தாள் சாந்தி. எதையும் யோசிக்காமல் புகாரைத் திரும்பப் பெற்றாள். மற்றவர்கள் எதிர்ப்புக்கெல்லாம் அசையாதவள், கணவனைக் கூடப் பிரியத் தயாரானவள், கண்மணியே மன்றாடியதும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டாள். நிறுத்தச் சொல்வது கண்மணி எனும்போது என்ன செய்வது!
ஆயிரத்தில் இதுவும் ஒன்று தான். போலீஸ் அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இதே பிழைப்பென்று அலுத்துக்கொண்டனர். எத்தனை வழக்குகளைப் பார்த்திருப்பார்கள்! அவர்கள் அறியாத எதார்த்தமா.. நடுத்தர வர்க்க குடும்பத்தின் இயலாமைகளுள் இதுவும் ஒன்று என்று அவர்கள் அறியமாட்டார்களா என்ன! அவர்களிடம் வரும் பெரும்பான்மையான “நெருங்கிய உறவினரால் நடக்கும் பாலியல் அத்துமீறல் வழக்குகள்” இங்கு தான் முடிகின்றன. “அப்படியா விஷயம். சரி இனிமே அங்க போகாத” என்பது தானே இது போன்ற சூழலில் நம் குடும்பங்கள் எடுக்கும் உச்சகட்ட நடவடிக்கை!? சட்டம் என்ன தான் பாதிக்கப்பட்டவர்களுக்காக உறுதியாக நின்றாலும் எங்கோ பெரிய இடைவெளி விழத்தான் செய்கிறது. இடைவெளி நம்மால் தானோ என்னவோ.
கொஞ்ச நாட்களில் ராதிகா நலமாகிவிட்டாள். வர்ஷன் பள்ளியில் தொடர்ந்தான். கண்ணன் பணியில் தொடர்ந்தான். சுதந்திரமாக உலவிக்கொண்டு. கமலம் மகளோடு மருமகனோடு உறவினைத் தொடர்ந்தார்.
ஆனால் சாந்திக்கும் ரகுவுக்கும் பெரிய விரிசல் ஏற்பட்டது. அவளால் ஒரு தோல்வியுற்ற தந்தையாகத்தான் ரகுவை அதற்குப்பிறகு பார்க்கமுடிந்தது. கமலத்தால் சாந்தியை மன்னிக்கவே முடியவில்லை. தன் பேத்திக்காக நடவடிக்கை எடுத்தவள் என்று புரியாமல் தன் மகளைக் கொல்லப் பார்த்தவளாகத் தான் கமலத்துக்கு சாந்தி தெரிந்தாள். அதன்பிறகு அவர்களால் ஒரே வீட்டில் தொடர முடியவில்லை. ரகு சாந்தி கண்மணி மூவரும் தனியாகச் சென்றுவிட்டனர். ரகுவால் சாந்தியோடு சகஜமாக இருக்க முடியவில்லை. மகளுக்காக இயந்திரத்தனமாக வாழத் துவங்கினர் இருவரும்.
கண்மணி….. உலகத்தைப் பார்த்தே மிரண்டு போனாள். செய்யாத தப்புக்குப் குற்ற உணர்வினைச் சுமந்தாள். ஏற்கனவே இருக்கும் ஆயிரக்கணக்கான கண்மணிகளோடு அவளும் சேர்ந்து கொண்டாள். குழந்தைப் பருவத்தில் அவளுக்கு ஏற்பட்ட இந்த ரணங்களுக்கு எப்படி மருந்து பூசுவதென்று தெரியாமல் நாட்களைத் தள்ளினாள் சாந்தி.
அவள் எடுக்க நினைத்த நடவடிக்கை.. பலன் தரும் முன்னாலேயே புயலில் சிக்கிச் சாய்ந்துவிட்ட பழமரமாகிப்போனது.
நாட்கள் மாதங்களாகி வருடங்களாகின. கண்மணி ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பினாள். படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் வாங்கத்துவங்கினாள். அனைவரையும் சந்தேகக் கண்ணோடேயே பார்க்கப் பழகியிருந்தாள். தனிமையை எப்போதும் தேர்ந்தெடுத்தாள். தன்னை இறுக்கிச் சுருக்கிக் கொண்டாள். பேச்சுக்களைத் தன்னுடன் மட்டுமே நிறுத்திக்கொண்டாள். ஆண்கள் மீது அவநம்பிக்கை வளர்த்தாள். இன்டிரோவர்ட்டானாள். சகஜமாகப் பழகுதல் என்ற ஒன்றை மறந்தேவிட்டாள். இவை எதுவும் ஆரோக்கியமானவை இல்லை என்றாலும் எதையும் தடுக்கவும் மாற்றவும் சாந்தியால் முடியவில்லை. அழகான அந்த சிறிய குடும்பம் தனித்தனியாக இருக்கும் மூவர் ஒரே வீட்டில் வாழ்ந்தால் எப்படியோ அப்படி ஆனது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கண்ணனைச் சாலையில் சிலர் இழுத்துப் போட்டு மிதித்துக்கொண்டிருந்ததை கண்மணியும் சாந்தியும் ரகுவும் பார்த்தனர். பலர் அவனை இழுத்துக்கொண்டு காவல் நிலையம் செல்லத்துவங்கியதும் மூவரும் வீடு நோக்கி நடந்தனர், வறண்ட உணர்வுகளோடு.
நடவடிக்கை.. என்றேனும் ஒருநாள் எடுக்கப்பட்டே தீரும். நடவடிக்கைகளின் எண்ணிக்கை பெரிதாகும் போது நிச்சயம் சமுக மாற்றத்தைக் காணலாம்.
சுபம்.
ஆசிரியர் உரை:
துளியும் உடன்பாடில்லாமல் இந்த முடிவினை எழுதியிருக்கிறேன். என் நாயகிகளை என்றும் நான் தோற்கவிட்டதே இல்லை. ஆனால் எதார்த்தத்துக்குப் புறம்பாய் சாந்தியை ஜெயிக்க வைக்க எனக்கு மனமில்லை. நம் குடும்பங்கள் இத்தகைய சூழலை அணுகும் மனப்பான்மை பெரிய அளவில் மாற வேண்டியுள்ளது. மாறிய பிற்பாடு இதே கதையை சாந்தி வெல்லும்படியும் கண்மணிக்கு நியாயம் கிடைக்கும்படியும் மீண்டும் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கண்ணன் வேறு ஒருவரால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான் என்பது சின்ன ஆறுதலுக்காகத் தான். இதுபோன்ற கண்மணிகளையும் சாந்திகளையும் என் பணி நிமித்தம் நிறைய பார்த்துவிட்டேன். சமூகம் பாதிக்கப்பட்டவரோடு நிற்கும் நாளை இப்பிறவியிலேயே கண்டுவிட வேண்டும் என்ற பேராசையோடு இக்குறுந்தொடரை நிறைவு செய்கிறேன்.