அவளின் மாற்றத்தையும் அவள் ஏதோ மன உளைச்சலில் இருக்கிறாள் என்பதையும் முதலில் முகர்ந்தவன் வர்ஷன். பத்தாம் வகுப்பில் இருப்பவன் தான் என்றாலும் கொஞ்சம் பக்குவமான பிள்ளை. நல்ல பிள்ளை. கண்மணியை விடவும் அவனுக்கு நிச்சயமாக முதிர்விருந்தது.
“ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்ட அவனிடம் தன் குழப்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா என்று ஒருகணம் தோன்றியது அவளுக்கு. ஆனால் அவள் சொல்லப்போவது வர்ஷனின் அப்பாவைப் பற்றி எனும் போது அவனிடம் “ஒன்னுமில்லையே” என்ற பதிலோடு தான் அவளால் முடிக்க முடிந்தது. நாட்கள் போராட்டங்களோடு நகர, அவளுக்குத் தேவைப்பட்ட தெளிவினை ஓரளவுக்கு அளித்தது அவள் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்வு.
அன்றொருநாள் மதிய உணவு முடிந்த பிறகான இரண்டாவது பாடவேளையின் போது ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அனைவரையும் ஒருசேர அழைத்துச்சென்று வழக்கமாக சிறிய விழாக்கள் நடக்கும் அந்தப் பள்ளியின் பெரிய அரங்குக்கு அழைத்துப்போனார்கள். அவள் பயிலும் பள்ளியில், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங்) என்ற செயல்பாடு உள்ளது. இப்போதெல்லாம் அனைத்து நடு, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த செயல்பாடு நடத்தப்படுகிறது. இதற்காக தனியாக நிதி அளிக்கிறார்கள். பள்ளியில் ஆர்வமுடைய ஆசிரியர் இதன் செயல்பாட்டாளராக நியமிக்கப்படுவார். அந்த ஆசிரியர் இந்த செயல்பாட்டுக்காக ஆண்டுத்திட்டம் ஒன்றினை வகுப்பார். அதன்படி மாணாக்கர்களுக்கு இந்தந்த தகவல்களைப் பற்றிய வழிகாட்டுதல் தேவையென்று கண்டறிந்து அந்தந்த துறை வல்லுநர்களைப் பள்ளிக்கு வரவழைத்து அவர்களையே மாணாக்கர்களோடு நேரடியாக உரையாட விடுவதன் மூலமாக சரியான வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடு செய்வார்கள். கண்மணி படிக்கும் பள்ளியில் அன்று அப்படி ஒரு நிகழ்வுக்கு தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சிறப்பு விருந்தினராய் அந்த ஊரின் அரசு இயன்மருத்துவக் கல்லூரியின் பேராசிரியையும் பயிற்சிபெற்ற குழந்தைகள் நல ஆலோசகருமான திருமதி. புஷ்பலதா தமிழன்பன் அழைக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ பேராசிரியராய் அல்லாமல் ஏழாம் வகுப்பு பெண் குழந்தைகளுக்கு ஏற்ப அவர் உரை நிகழ்த்த ஆரம்பித்தது கண்மணியைக் கவர்ந்தது. தன் குழப்பங்களைத் தள்ளிவைத்துவிட்டு அவருக்குச் செவி கொடுத்தாள். இரண்டு மணி நேர நிகழ்வு முடிவுக்கு வந்தபோது சில தெளிவுகள் அவளுக்குள் பிறப்பெடுத்தன. அவளின் குழப்பங்களுக்கு ஒரு வழியாய் முடிவுரை எழுதினாள். ஏனென்றால் திருமதி. புஷ்பலதா தமிழன்பன் பேசியது “பாலியல் குற்றங்கள்” பற்றித்தான். அவர் உரையிலிருந்து கண்மணி தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்டாள், கண்ணன் செய்தது பாலியல் சீண்டல் என்பதை. அம்மா ஊட்டிவிடுவதும் கண்ணண் ஊட்டிவிடுவதும் ஒன்றல்ல என்பதை. அப்பா முத்தமிடுவதும் கண்ணன் முத்தமிடுவதும் ஒன்றல்ல என்பதை.
அன்று அந்த நிகழ்வு அளப்பறிய விழிப்புணர்வினைக் கண்மணிக்கு வாரி வழங்கியது. நல்ல தொடுதல் கெட்ட தொடுதலில் துவங்கிய புஷ்பலதா, பாலியல் துன்புறுத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் முறைகேடு மற்றும் பாலியல் தாக்குதல் என்று அத்தனையைப் பற்றியும் எடுத்துக்காட்டுக்களோடு புட்டுப் புட்டு வைத்துவிட்டார்.
“உங்க வீட்டுல இருக்கறவங்களோ, சொந்தக்காரரோ, பள்ளியில இருக்கற யாராவதோ.. உங்களோட ப்ரைவேட் பார்ட்ஸ் பத்தி கமெண்ட் பண்ணறது, அவங்களோட ப்ரைவேட் பார்ட்ஸை உங்ககிட்ட காட்டுறது, உங்களைக் காட்ட சொல்லி கேட்கறது, தவறான படங்களை வீடியோக்களை உங்ககிட்ட காட்டுறது, நீ இப்படி எல்லாம் என்கிட்ட இருந்தீன்னா உனக்கு நான் இந்த சலுகைகள் தருவேன்னு சொல்லுறது, என்னோட பேட் டச்சை நீ சகிச்சுக்கிட்டு தான் ஆகனும் வேறவழி இல்லைன்னு சொல்லி மிரட்டுறது, தவறான பார்வை, உடல்மொழிகள் செய்யுறது, நீங்க குளிக்கறதை உடை மாத்துறதை வாஷ் ரூம் யூஸ் பண்ணுறதைப் பாக்குறது இதெல்லாம் செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட் – பாலியல் துன்புறுத்தல்.
உங்க சம்மதம் இல்லாம உங்களை பேட் டச் பண்ணுறது, அந்தரங்க உறுப்புகளைத் தொடுறது, தொட வைக்குறது, உங்க சம்மதம் இல்லாம முத்தம் கொடுக்குறது, உங்க ஆடைகளை விலக்குறது, இழுக்குறது, தூக்குறது, தவறான கோணத்தில உங்களைப் போஸ் குடுக்க சொல்லி புகைப்படம் எடுக்குறது, பாலியல் செயல்களை உங்க முன்னாடி செஞ்சு காட்டுறது இதெல்லாம் செக்ஸுவல் அப்யூஸ் – பாலியல் அத்துமீறல்
வலுக்கட்டாயமா உங்களை ஈடுபடுத்தி பாலியல் செயல்களைச் செய்யுறது, நிர்பந்தப்படுத்தி உங்க பிறப்புறுப்புல எதையாவது நுழைக்குறது, பாலியல் வன்புணர்வு செய்யுறது இதெல்லாம் செக்ஸூவல் அஸ்ஸால்ட் – பாலியல் தாக்குதல்.
கர்ப்பமாக்குறது, கட்டாயப்படுத்து கரு கலைப்பு செய்யுறது பாலியல் முறைகேடு.”
இப்படி தெளிவாக விளக்கிச் சொன்னார் புஷ்பலா. ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு எதற்கு இதெல்லாம் என்றில்லாமல், பாலியல் அத்துமீறல் பற்றிய முழுமையான விழிப்புணர்வினை அந்த வயது குழந்தைகளுக்குப் புரியும்படி பலப்பல எடுத்துக்காட்டுகள் சொல்லி, அவர் கையாண்ட சில கேஸ் பற்றியும் சொல்லி எடுத்துக்கூறினார்.
அங்கிருந்த சில ஆசிரியைகள் கூட “எதுக்கு இத்தனை விளக்கமா போறாங்க?! ஹராஸ்மெண்ட், அப்யூஸ், அஸால்ட் எல்லாம் இந்த வயசு பிள்ளைங்களுக்கு நடக்கப்போகுதா என்ன?” என்று பேசிக்கொண்டது கண்மணிக்குக் கேட்டது.
“அப்படி நினைக்காதீங்க மேம். எனக்கு சமீபத்தில நடந்துச்சு” என்று சொல்லிவிட அவள் உதடுகள் துடித்தன.
இவற்றைப் பற்றியெல்லாம் விளக்கிய புஷ்பலதா, இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டுமென்று அடுத்தபடியாக வழிகாட்டினார். உடனடியாக எதிர்ப்பைக் காட்டிவிடவேண்டிய அவசியத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார். பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் சொல்வது முக்கயமென்பதை விளக்கினார். இதில் எது நடந்தாலும் தவறு உங்கள் மேல் இல்லை அதனால் குற்ற உணர்வோ பயமோ தேவையில்லை என்று தெளிவுபடுத்தினார். இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை உண்டென்பதையும் மேம்போக்காகச் சொன்னார்.
அந்த நிகழ்வு முடிந்து எழுந்து போன போது தெளிவான மனநிலைக்கு வந்திருந்தாள் கண்மணி. இத்தகைய அனுபவம் இனி வாழ்வில் யாரால் நேரிட்டாலும் சரி, பொறுத்துக்கொள்ள மட்டும் கூடாது என்ற தெளிவுதான் அது.