பள்ளியில் நிகழ்ந்த அந்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சியில் திருமதி புஷ்பலதா தமிழன்பன் பாலியல் குற்றங்கள் பற்றி எடுத்துக்காட்டுகளோடு விளக்கியது கண்மணிக்கு அந்த நேரத்தில் மிகவும் தேவையான ஒன்றாகிப் போனது. இதைப் பற்றி யாரிடம் பகிர்வது யாரிடம் தெளிவு பெறுவது என்று புரியாமல் தவித்து வந்த குழந்தைக்கு ஏதோ கடவுளாகப் பார்த்து காட்டிக்கொடுத்த வழி போல் தற்செயலாக இந்த நிகழ்வு அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்த நிலை தான் மாறியிருக்கிறதே தவிர வேறு சில குழப்பங்கள் கண்மணிக்குள் ஓடத்துவங்கின. கண்ணன் செய்தது பாலியல் அத்துமீறல் என்பதை புஷ்பலதா சொன்னவைகளைக் கொண்டு ஆராய்ந்து சிந்தித்து கண்டறிந்துகொண்ட கண்மணிக்கு இனி இதை எப்படி அணுகுவது, எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியவில்லை. என்ன இருந்தாலும் குழந்தை தானே..
ஒரு மாதம் முன்னால் நடந்ததை இப்போதுசொன்னால் எடுபடுமா
நம்புவார்களா
கண்ணன் இதுவரை நல்லபெயர் எடுத்து வைத்திருப்பதால் இதைச் சொல்வது குடும்பத்தினர்களால் ஏற்கப்படுமா
மதிப்பெண் குறைந்ததற்கு சொல்லப்படும் வெற்றுக் காரணமாக இது பார்க்கப்பட்டுவிடுமா
திட்டுவார்களா
மிகவும் நெருங்கிய சொந்தம் என்பதால் குடும்பத்தில் குழப்பம் வந்துவிடுமே. அமைதியாய் இரு என்று அடித்துவிடுவார்களா
என் மேல் தான் ஏதோ தவறு என்று நினைத்துவிடுவார்களா
இப்படியெல்லாம் அந்தக் குழந்தை மனம் பாடுபட்டது. கண்ணன் எப்போதும் போல் ஜாலியாகத்தான் இருந்தான்.
நிறைய யோசித்து அவள் வயதுக்கேற்ற பக்குவ அளவுக்கான முடிவொன்றுக்கு வந்தாள்.
“நடந்ததை மறைத்து அமைதி காப்பது. அதே நேரம் கண்ணனிடமிருந்து தள்ளி இருப்பது. ஏற்கனவே நடந்துவிட்ட அசம்பாவிதத்தை மறந்து படிப்பில் கவனம் செலுத்துவது” என்ற முடிவுதான் அது.
ஆனால் இந்த முடிவு துளியும் ஒத்துவராத முடிவு என்பதை உணரும் சந்தர்ப்பம் வெகு விரைவில் வாய்க்கப் போகிறதென்பதைப் பாவம் அவள் உணரவில்லை..
இந்த முடிவுக்கு அவள் வந்த மறு வாரம், குடும்பத்தோடு திருப்பதி சென்றுவந்தனர். ஊர் திரும்பிய கையோடு திருப்பதி லட்டுகள் ராதிகா அத்தை வீட்டுக்கு ஏற்றுமதி ஆகுமென்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் உஷாராக திரும்பி வந்த அன்றே பள்ளியில் வர்ஷனைச் சந்தித்து லட்டு பிரசாதங்களை வாங்கிப்போக கமலம் பாட்டி வரச்சொன்னதாக அள்ளி விட்டாள். வர்ஷனும் வருவதாக வாக்களித்ததால் நிம்மதியடைந்தாள். வீட்டிலும் வர்ஷனே வந்து வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டான் என்று சொல்லிவைத்தாள்.
ஆனால் அவன் வராமல் காலை வாரிவிட மறுநாள் காலை பள்ளி செல்லும் முன்னர் கோவிந்தரின் பிரசாத லட்டுகளை ராதிகா அத்தை வீட்டில் டெலிவரி செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
வழக்கமாக ரகுராமன் தான் கண்மணியைத் தினமும் பள்ளிக்கு வண்டியில் அழைத்துப்போய் விடுவார். ‘அப்பாவோடு தானே போகிறோம்!’ என்ற தைரியத்தில் மறுநாள் காலை லட்டுகளோடு கிளம்பினாள் கண்மணி. பக்கத்துத் தெருவில் இருந்த ராதிகா அத்தை வீடு இரண்டாம் மாடியில் இருந்தது.
“இந்தப் பையைக் கொண்டு போய் மேல கொடுத்துட்டு வா கண்மணி” என்று ரகுராமன் கீழேயே நின்றுவிட, தயக்கத்தோடு அதை வாங்கிக்கொண்டு கண்மணி படிக்கட்டுகளில் ஏறினாள்.
ஐந்து நிமிடங்களில் அலறி அழுதுகொண்டு தலை தெறிக்க கண்மணி “அப்பா… அப்பா…” என்று கத்தியபடியே கீழே ஓடி வந்தாள். என்னவென்று புரியாமல் ரகுராமனும் பதறிக்கொண்டு “என்னாச்சு…” என்று கத்திக்கொண்டே வண்டியை நிறுத்திவிட்டு கண்மணி நோக்கி ஓடி வந்தார்.