தங்கை வீட்டுக்குப்போன மகள் அலறிக்கொண்டு ஓடிவந்ததும் ஒன்றுமே விளங்கவில்லை அந்தத் தந்தைக்கு. “என்னாச்சு கண்மணி.. என்னாச்சு டா..” என்று பலமுறைகள் கேட்டார். ஆலறியபடி மிரட்சியாய் அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ரகுராமனுக்கு. ஊகிக்கக் கூட மூளை வேலை செய்யாமல் நிலைத்துப் போனது. “என்னம்மா.. சொல்லு..” என்று அவர் திரும்பத்திரும்ப கேட்டதும் கண்மணி கொஞ்சம் தன்னைத் திரட்டிக்கொண்டாள்.
“ப்பா…. அத்தை வீட்டுக்காரர்.. அந்த ஆளு… வந்து…” என்று அழுதுகொண்டே திக்கித்திக்கி ஆரம்பித்தாள். “என்ன டா… கண்ணனுக்கு என்ன?” என்று ரகுராமன் கேட்பதைத் தொடர,
“லட்டு பையை நீட்டினேன் பா… அந்த ஆளு என் கையைப் பிடிச்சு உள்ள இழுத்து கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டாரு பா.. இங்க எல்லாம் அழுத்திட்டாருப்பா..” என்று தன் மார்பகங்களைச் சுட்டிக்காட்டி ஓவென்று அழுதாள் குழந்தை.
அதிர்ச்சி என்ற உணர்வின் அத்தனை பரிமானங்களையும் சில நிமிடங்களில் அனுபவித்துவிட்டார் ரகுராமன். தன் காதுகளில் இப்போது என்ன கேட்டது! தன் கண்கள் இப்போது என்ன காண்கிறது என்று ஏற்கவும் புரிந்துகொள்ளவும் திராணி இல்லாதது போல் தோன்றியது. ஒரே மகள். தன் உயிரானவள். கண்மணி என்று பெயரிட்டவரே ரகுராமன் தான். அவளைத் திட்டுவார் தான். ஆனால் கண்மணியே அவரின் முன்னுரிமை. தன் பாசத்துக்குரிய மகள் தகாத முறையில் தீண்டப்பட்டு அழுது கொண்டு தன் முன்னால் நிற்கிறாள் என்பதை எந்த தந்தையால் சட்டென்று உள்வாங்க முடியும்?
“என்ன டா சொல்ற? அத்தை வீட்டுல இல்லையா?”
“இல்லப்பா.. மாமா மட்டும் தான் இருந்தாரு” என்று அழுகுரலில் சொன்னவளை அணைத்துக்கொண்டார். இதயம் படபடத்தது. வயிறு பிசைந்தது. அவள் தலையை வருடியவரின் உணர்வெழுச்சிகளோ ஆழியாய் ஆர்பரித்தன.
பெரும்பாடு பட்டு சட்டென்று நிதானித்துத் தன்னைத் திரட்டிக்கொண்டார். “இங்க இருக்க வேண்டாம். வா.. அப்பா பாத்துக்கறேன்” என்று சொல்லி அவளைக் கூட்டிக்கொண்டு பள்ளி நோக்கிப் புறப்பட்டார் ரகு.
பத்து நிமட பயணத்தில் இருந்த பள்ளியானது அன்று ஏனோ நீண்ட நேரப் பயணம் போல் தெரிந்தது இருவருக்குமே. Trauma என்பார்களே ஆங்கிலத்தில். அதை இருவருமே வெவ்வேறு விதங்களில் அந்தப் பத்து நிமிடங்களில் அனுபவித்தனர். தன் அன்பு மகளுக்கு இப்படி ஒரு அனுபவம் 13 வயதில் தேவைதானா என்று நொந்துபோனார் ரகு. கண்மணி என்ற பெண் குழந்தையின் சிந்தனைகளை வார்த்தைப்படுத்த முடியாமல் அனைத்து மொழிகளும் வரண்டு போயின.
அவளைப் பள்ளியில் இறக்கிவிட்டார் ரகு. தானும் இறங்கி அவள் கண்ணீர் துடைத்தார். “இங்க பாரு டா.. அழவே கூடாது.. நீ எந்த தப்பும் பண்ணல்ல.. தப்பு செய்யாதவங்க அழவே கூடாது. அப்பா பாத்துக்கறேன். நீ இதைப்பத்தி யோசிக்காத. யார் கிட்டையும் இப்போதைக்கு சொல்லாத. நான் கவனிச்சுக்கறேன் டா.. சரியா.. க்ளாஸுக்கு போ..” என்று அவளை ஆறுதல்படுத்தி உள்ளே அனுப்பிவிட்டார். ஆனால் இதைச் செய்ய ஒரு தந்தையாக அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அவள் கண்களை விட்டு மறைந்ததும் அலைபேசியை எடுத்தார். ராதிகாவை அழைத்தார்.
“அவனுக்கு ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னு காலையிலயே கிளம்பிட்டான்”
“நான் இப்ப உன் வீட்டுக்கு தான் போறேன். உன் புருஷனை நாலு கேள்வி கேக்கனும். வேணுமின்னா வந்து தடுத்துக்கோ” என்று சொல்லி வைத்துவிட்டார்.நேரே ராதிகா வீட்டுக்குப் போனார். கடுங்கோபத்தில் கண்ணனை விட்டு ஏறினார். சற்றும் இதை எதிர்பார்க்காத கண்ணன் நிலைத்துப் போனான்.
பாலியல் தாக்குதலுக்கு உள்ளான 13 வயது பெண் குழந்தையின் தந்தைக்கு வரவேண்டிய நியாயமான கோபத்தோடு கண்ணனைத் திட்டினார் ரகுராமன்.
இத்தனை காலமாய் நெருக்கமான உறவு செய்த நபர் இத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாரே என்ற அங்கலாய்ப்பில் திட்டினார்.
தான் பார்க்கப் பிறந்து வளர்ந்த குழந்தைமேல் கைவைக்கும் கேவலமானஆணாக இருக்ககறானே என்று ஒரு சக ஆண்மகனாகப் பொங்கி வந்த கோபத்தோடு கண்ணனைத் திட்டினார்.
தன் அன்புத்தங்கைக்கு இப்படியொரு கேடுகெட்ட சபலபுத்திக்காரனைக் கணவனாக்கிவிட்டோமே என்ற கோபத்தில் திட்டினார்.
ஐம்பது வயதில் சின்னப்பெண் தேடும் வக்கிரபுத்தியைக் கண்டு வந்த கோபத்தில் திட்டினார்.
உறவினர்கள் அனைவரிடமும் சொல்லி ராதிகாவிடமும் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தினார். “அய்யோ அப்படியெல்லாம் செய்துடாதிங்க” என்று கண்ணனும் அழுதான். கையெடுத்துக் கும்பிட்டான். காலில் விழுந்தான். ரகுவின் கோபம் குறையவில்லை. ஆனால் அத்தனை கோபத்திலும் கெட்ட வார்த்தைகள் பேசவில்லை; கண்ணனைக் கைநீட்டவுமில்லை கன்னியம் தவறாத ரகுராமன்.
கண்ணன் காலில் விழுந்து அழுத நேரம் பார்த்து உள்ளே நுழைந்த ராதிகா பதறிச் சென்று கண்ணனை எழுப்பி நிறுத்தி “என்ன.. என்ன இதெல்லாம்.. என்னாச்சு அண்ணே..” என்று தடுமாறிக் கேட்க “உன் புருஷனைக் கேளு. அவன் சொல்லல்லைன்னா எனக்கு கால் பண்ணு. நான் சொல்றேன்” என்றுவிட்டுக் கிளம்பிவிட்டார் ரகு.
பள்ளியில் கண்மணி அழுத விழிகளோடே இருக்க, ஆசிரியைகள் கவனித்து விசாரித்தனர். அவள் வாய் திறக்காதிருக்கவே வர்ஷனை அழைத்தனர் . இருவரும் ஒன்றாம் வகுப்பு முதல் அந்தப் பள்ளியில் படிப்பவர்கள் என்பதால் அனைவருக்கும் இவர்கள் நெருங்கின சொந்தக்காரர்கள் என்பது தெரியும். வர்ஷனும் என்னவென்று கேட்டான். அவளால் சொல்ல முடியவில்லை.
“அம்மா கிட்ட பேசனும். எனக்கு ஒரு ஃபோன் கேட்டு வாங்கித்தர்றியா?” என்று விசும்பல்களுக்கு இடையே கெஞ்சினாள். வர்ஷனும் கண்மணியின் வகுப்பாசிரியையிடம் வேண்டி அலைபேசியை வாங்கிக்கொடுத்தான்.
அதைப் பெற்றுக்கொண்ட கண்மணி அவனை விலகிப் போகச் சொன்னாள். வர்ஷன் கண்மணியைக் கிண்டல் பண்ணுவானே ஒழிய அவனுக்கு அவள் மேல் கொள்ளை பிரியம். பதின் பருவத்தில் இருக்கும் அவனுக்கு விவஸ்தையில்லாமல் வீட்டுப் பெரியவர்கள் “உனக்கு கண்மணி தான்” என்று அடிக்கடிச் சொல்லி வருவது கண்மணி மேல் ‘காதல் என்று சொல்லிவிட முடியாத’ ஏதோ ஒன்றை வளர்த்து வைத்திருந்தது. அதை வர்ஷன் ஒருபோதும் சின்ன அளவில் கூட வெளிக்காட்டியதில்லை. அந்த ஈர்ப்பு அவன் மட்டுமே அறிந்த ஒன்று. அவள் நன்றாக இருக்கிறாளா, மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று நிசப்தமாக அவன் கவனித்துக் கொண்டிருப்பான். அப்படியிருக்க கண்மணி கட்டுப்பாடின்றி இப்படி வேதனையோடு கண்ணீர் வடிப்பது அவனை என்ன பாடுபடுத்தும்? என்னவென்று தெரியாமல் அவன் தவித்துக் கிடக்கும் போது கண்மணி அவனைத் தள்ளிப்போகச் சொன்னால் எப்படிப் போவான்?
“முடியாது.. நீ பேசு”
“வர்ஷன்.. வேண்டாம்.. நான் கொஞ்சம் தனியா பேசனும் அம்மா கிட்ட.. ப்ளீஸ்..”
வேறு வழியின்றி அவன் விலகிப்போனான். அவள் கெஞ்சி சொல்லும்போது வேறென்ன செய்வது !?
சாந்திக்கு அழைத்தாள். வங்கி வேலையாய் இருந்தபடியால் அவள் எடுக்கவில்லை. ஏமாற்றத்தோடு அலைபேசியைத் திரும்ப கொடுப்பதற்காக வர்ஷனிடம் சென்ற பிறகு சாந்தியிடமிருந்து அழைப்பு வந்தது.
உடனே ஏற்று காதில் வைத்து அம்மா.. என்றழைத்துவிட்டு ஓவென்று அழுதாள். உணர்வெழுச்சியாகி பக்கத்தில் தான் வர்ஷன் இருக்கிறான் என்பதனை மறந்து நடந்த அசம்பாவிதத்தை, பாலியல் தாக்குதலை அம்மாவிடம் கொட்டி முடித்தாள். அழுது தீர்த்தாள். பிறகு அழைப்பினைத் துண்டித்துவிட்டுத் திரும்பினாள்.