உணர்வெழுச்சியில் வர்ஷன் அருகிலிருப்பதை மறந்து அம்மாவிடம் விஷயத்தைக் கொட்டித்தீர்த்துவிட்டுத் திரும்பிய கண்மணி பேரதிர்ச்சியில் கலங்கியிருந்த வர்ஷனின் கண்களைச் சந்தித்தாள். அவளும் அதிர்ச்சியானாள். பிறகு சமாளித்துக்கொண்டு, “உனக்குத் தெரிய வேண்டாமின்னுதான் நினைச்சேன்.. சாரி வர்ஷன்..” என்று அவனிடம் சொல்லிவிட்டு அலைபேசியை அவன் கையில் திணித்துவிட்டுப் போனவள் பின்னாலையே அவன் கண்களும் போயின. கண்ணீர் வழிந்தது.அவள் மேல் பாலியல் தாக்குதல் நடந்திருக்கிறது என்பதே பேரிடியாய் விழுந்திருக்க, அதை நிகழ்த்தியது தன் அப்பா என்பது இடிமேல் விழுந்த இடியானது. கூனிக் குறுகிப் போனான் அந்தப்பிள்ளை.
வகுப்பறையில் இருந்தவளை பள்ளியின் பணிப்பெண் வந்தழைக்க கண்மணி அலுவலக அறைக்குப் போனாள். அங்கே காத்திருந்தது சாந்தி.
அம்மாவைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டி அணைத்து அழுதாள்.
“அழாத.. உனக்கு லீவ் சொல்லிட்டேன் இன்னைக்கு. வா வீட்டுக்குப் போகலாம். அப்பாவையும் வரச்சொல்லியிருக்கேன்.” என்று இறுக்க முகத்தோடு பேசினாள் சாந்தி. கண்மணிக்கு ஏதோ போல் இருந்தது.
வீடு வந்த சாந்தியையும் கண்மணியையும் பார்த்த கமலம், “என்னங்கடி.. இந்நேரம் வந்திருக்கீங்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று விசாரிக்க “கொஞ்சம் பொறுங்க அத்தை. உங்க பிள்ளை வந்து சொல்லுவாரு எதுக்கு வந்திருக்கோமின்னு” என்று பேச்சை முடித்தாள் சாந்தி.
ரகுராமன் வந்ததும் அனைத்தும் குடும்ப சபையில் கொட்டப்பட்டன. பெரியவர்களுக்குப் பேரதிர்ச்சி.
பிறந்தது முதலே தூக்கி வளர்த்த பேத்தி ஒருபுறம். மகளின் கணவர். வீட்டு மாப்பிள்ளை என்பது மறுபுறம்.
இடிந்து அமர்ந்துவிட்டனர். “நீங்க சொல்லுறது எல்லாம் நிஜமா..” என்று கமலம் கேட்டதும் “என்னை நம்புங்க பாட்டி. சத்தியமா தான் சொல்லுறேன்” என்று கண்மணி அழற்ற ஆரம்பித்தாள்..
நம்பாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தான் அவள் சென்ற முறை நடந்ததைப் பொறுத்துக்கொண்டாள். இப்போது நிஜமா என்று பாட்டி கேட்டதும் அதே பயம் மீண்டும் ஒட்டிக்கொண்டது.
பாட்டி கேட்டது அவநம்பிக்கையில் இல்லை அதிர்ச்சியில் தான் என்று குழந்தைக்குப் புரியுமா..
“மாமா வெளிய பாக்கத்தான் நல்லவரு பாட்டி.. ஆனா நிஜத்தில கெட்டவர் பாட்டி. என்னை நம்புங்க” என்று கெஞ்ச ஆரம்பித்ததும் அவளை வாரி அணைத்துக்கொண்டார் கமலம். “என் தங்கமே.. நான் உன்னை நம்பாம போயிடுவேனா டி.. நீ இப்படி கெஞ்சனுமா.. நீ எங்க உசுரு இல்லையாடி.. என் தெய்வத்தைத் தப்பா பாத்தானா அவன்.. கை வெளங்காம போகட்டும்” என்று பாட்டி அழுதுகொண்டே சாபமிட்டார்.
“எத்தனை தைரியம்.. சும்மாவா விட்ட ரகு அவனை.. “ என்று தாத்தா கோபப்பட, “ நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு தான் வந்தேன்” என்றார் ரகு.
“ராதிகாவுக்கு இது பத்தி தெரியுமான்னு தெரியல்லையே..”
“தெரியும் மா. நான் அந்தாளைக் கேட்டு முடிக்கும் போது தான் ராதிகா வந்தா.. என்ன விஷயமின்னு உன் புருஷனைக் கேட்டு தெரிஞ்சுக்கோன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.”
“அவன் அவகிட்ட என்ன சொன்னானோ.. இரு அவகிட்ட கேப்போம்.” என்ற கமலம் அலைபேசியில் ராதிகாவை அழைத்தாள்.
“என்ன.. உன் மகன் அவரை அந்த பேச்சு பேசிட்டு போயிருக்கான் !” என்று எடுத்த எடுப்பிலேயே ராதிகா கர்ஜித்தாள்.
“ஏய்.. என்ன காரியம் பண்ணியிருக்காரு.. ரகுங்கறதினால பேச்சோட போச்சு. இன்னொருத்தன்னா வெட்டிப் போட்டிருப்பான்”
“அவரு சின்ன வயசிலேருந்து கண்மணியைப் பாத்துக்கிட்டிருக்காரு. கேஷுவலா ஹக் பண்ணிருப்பாரு. அதுக்கு போய் எல்லாம் நாடகம் ஆடுறீங்க?”
“என்னை ஏன் அப்படி இன்னொருத்தன் பண்ணப்போறான். நான் ஜாக்கிரதையா இருந்துப்பேன். உன் பேத்திக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க சொல்லு. சின்ன வயசுலேருந்தே அவ நாடகக்காரி. கீழ விழுந்ததுக்கே கை கால் உடைஞ்ச ரேஞ்சுக்கு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவா. இதுவும் அப்படித்தான் இருக்கும். பதிமூனு வயசு மாதிரியா இருக்கா. நல்ல மாடு மாதிரி வளத்து வச்சிட்டு பேச்சா பேசுறீங்க? அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லுங்க அவளை”
“ஏய்.. நிறுத்து டி.. என்ன அநியாயமா பேசுற நீ.. நான் தான் உன்னைப் பெத்து வளத்தேனா.. பாவி.. உன் புருஷன் சின்னப் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டிருக்கான்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீ ஏதேதோ உளறிக்கிட்டு இருக்க மூளை இருக்கா உனக்கு?”
“நான் சரியாத்தான் பேசிக்கிட்டிருக்கேன். நீங்க எல்லாம் தான் சின்னப்பொண்ணு பேச்சைக் கேட்டுக்கிட்டு வீட்டு மாப்பிள்ளையைத் தப்பா பேசிக்கிட்டிருக்கிங்க. இனிமே என் மூஞ்சியிலையே முழிக்காதீங்க. உங்களோட இனி ஒட்டும் இல்ல உறவும் இல்ல.” என்று அழைப்பினைத் துண்டித்துவிட்டாள் ராதிகா.
“என்ன பேச்சு பேசறா இவ..” என்று அங்கலாய்த்த கமலம் “புருஷனை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?” என்று ராதிகா சொன்னவைகளுக்கு வக்காளத்தும் வாங்கிக்கொண்டார்.
“சரி.. முதல்தடவை ஏதோ நடந்து போச்சு. இதை இப்படியே விட்டுடலாம். இனி ஜாக்கிரதையா இருந்துக்கலாம்” என்று பாட்டி சொல்ல “இது முதல் தடவை இல்ல பாட்டி.. ரெண்டாவது தடவை” என்று கண்மணி அழுதுகொண்டே சொன்னதும் அனைவரும் உறைந்தனர்.
ஒரு மாதம் முன் நடந்த அந்த ஆரஞ்சு சுளை சம்பவத்தைச் சொன்னாள் கண்மணி.
இப்படிப்பட்ட ஆளா இத்தனை காலம் மாப்பிள்ளை என்று சகல மரியாதையோடு வலம் வந்திருக்கிறார் என நினைத்து நொந்து போனார்கள் அனைவரும்.
ஆனால் சிறிது நேரத்துக்கெல்லாம் கண்மணியைத் திருப்பிக்கொண்டனர். ‘ஏன் டி.. ஏற்கனவே நடந்த அப்பவே எங்க கிட்ட சொல்லியிருந்தா இப்ப இப்படி ஆயிருக்குமா. நீ அமைதியா இருந்துட்டதினால தான் அவனுக்கு இத்தனை தைரியம் வந்திருக்கு. உன் மேல தான் டி தப்பு” என்று ஆளாளுக்கு அந்த 13 வயது குழந்தையை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டனர். மிகவும் சுலபமல்லவா அது ! இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று பாடமெடுத்தனர். கண்ணன் அப்படிச் நடந்துகொண்ட போது இப்படிச் செய்திருக்கலாம் அப்படித் தடுத்திருக்கலாம் என்று இனி உதவாத ஐடியாக்களை வாரிவழங்கினர். அந்தக் குழந்தையைப் போட்டுப் பாடாய்ப் படுத்தினர்.
ஒரு மணி நேரம் இப்படியே உழன்று உழன்று பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒருவழியாக ஆரம்ப புள்ளிக்கே அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர். “நடந்தது நடந்து போச்சு. இனி அந்த ஆளோட கண்மணகயைத் தனியா விட வேண்டாம். இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம்” என்ற புத்திசாலித்தனமான முடிவு தான் அது.
அதுவரை ஒரு வார்த்தை பேசாமல் அமைதி காத்த சாந்தி வாயைத் திறந்தாள். அதைக் கேட்ட மற்றவர்கள் ஆடிப் போயினர்.