“எல்லாரும் அருமையா பேசி முடிச்சிட்டிங்க. இப்ப நான் பேசலாமா..” என்று ஆரம்பித்த சாந்தியை வித்தியாசமாய்ப் பார்த்தனர் அனைவரும்.
சாந்திக்குச் சுவையாக சமைக்கத் தெரியாது. வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரியாது. அதனால் அவளுக்கு எதுவுமே தெரியாதென்ற தீர்மானத்துக்குள் அவள் குடும்பம் குதித்து காலங்கள் பல ஆகிவிட்டது. அவளை மட்டம் தட்டுவதே அவர்களின் பழக்கமாகிப் போய்விட்டது. அவளும் குடும்பத்தில் தன்னை நிரூபிக்க முயன்றதில்லை. பெரிதாக வாதாட மாட்டாள். எந்த முடிவெடுத்தலிலும் அவள் கருத்து கேட்கப்படாது. அவளும் மூக்கை நுழைக்க மாட்டாள். அவளிடமுள்ள அமைதி கடலினும் பெரிது. குறை சொன்னாலும் மதிக்காவிட்டாலும் தன் கணவன் உண்மையானவன், அவனின் பெற்றோர் நல்லவர்கள் என்று அவள் அறிந்திருந்தாள். அதனால் அத்தனை பேச்சுக்களையும் புறந்தள்ளியே பழகியிருந்தாள். பக்குவம் நிறைந்தவள் அவள்.
இவர்களெல்லாம் முடிவெடுத்த பின் சாந்தியின் குரல் முதன்முறையாய் ஒலித்ததும் அனைவருக்கும் ஆச்சரியம்.
“நீங்க இந்த பிரச்சினையை இப்படியே விட்டுடலாமின்னு எடுத்த முடிவுல எனக்கு உடன்பாடில்ல. நான் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கேன்” என்று தீர்க்கமாக தீர்மானமாக கம்பீரமாக அந்த வீட்டுக்குள் முதன்முறையாக ஒலித்தது சாந்தியின் குரல்.
“நடவடிக்கை எடுக்கப்போறியா… என்ன நடவடிக்கை எடுக்கப் போற?” என்று கேட்டார் ரகு.
“ கண்ணன் மேல போக்ஸோல கேஸ் கொடுக்கப்போறேன்.”
“என்ன விளையாடறியா..”
“விளையாடல்ல.. சொன்னேனே.. நடவடிக்கை எடுக்கப்போறேன்” என்றுவிட்டு அலைபேசியை எடுத்தாள். சிலரிடம் பேசினாள். பிறகு கண்மணியிடம் சில நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு தகவல்கள் திரட்டிக்கொண்டாள். வீட்டுக் கணினியில் ஏதோ டைப் செய்தாள். அதை யாருக்கோ அனுப்பினாள். அந்த நபர் சொன்ன திருத்தங்களைச் செய்து மீண்டும் சரியாக இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டாள். அதைப் பிரதி எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டாள். ரகுவிடம் “நம்ம மகளுக்கு செக்ஸுவல் அஸ்ஸால்ட் நடந்திருக்கு. அதுக்கு எதிரா ஒரு அம்மாவா நியாயம் கேட்டு நடவடிக்கை எடுக்கப் போறேன். நீங்க தான் அப்பா.. என் கூட வர்றீங்களா?” என்று ரகுவிடம் கேட்டாள். அதிர்ச்சியில் பதில் வரவில்லை. “ஃபைன்” என்றுவிட்டு “கண்மணி.. இங்கையே இரு மா.. அம்மா பொலீஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வர்றேன். நீ பயப்படாத. உன் மேல இவங்க எல்லாம் சொன்ன மாதிரி எந்த தப்பும் இல்ல. இதுல தப்பு செஞ்ச ஒரே ஆளு அந்த கண்ணன். இனி நான் இதைப் பாத்துக்கறேன். நீ ரெஸ்ட் எடு.” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியே சென்றாள்.
“பக்கத்துத் தெருவில தான் மகளிர் காவல் நிலையம் இருக்கு. அங்க தான் போறேன். ஒரு வேளை மனசு மாறினா வாங்க” என்று போகிற போக்கில் ரகுவிடம் சொல்லிச்சென்றாள் சாந்தி.
அதிர்ச்சியிலிருந்து முதலில் மீண்டுகொண்ட கமலம், “ரகு.. போப்பா.. அவளுக்கு ஒரு மண்ணும் தெரியாது. ஏதாவது ஏடாகூடமா பண்ணி குடும்ப மானத்தைக் கப்பலேத்திடப் போறா.. போய் அவளை இழுத்துக்கிட்டு வா” என்று ஏவினார். ரகுவும் வண்டியில் வேகமாகப் போனார்.
ஆனால் அதற்குள் சாந்தி காவல் நிலைய வாசலுக்குச் செனறுவிட்டாள்.
ரகு அவளைத் தடுப்பதற்காகப் அணுகவும் அந்த காவல் நிலைய பெண் ஆய்வாளர் அவர்களே சாந்தியை மிகுந்த மரியாதையோடு உள்ளே அழைக்கவும் சரியாய் இருந்தது. “நீங்களும் உள்ள வாங்க சார்” என்று ரகுராமனும் அழைக்கப்பட வேறுவழியின்றி அவரும் சாந்தியோடு இணைந்து உள்ளே போனார்.
அவர்களை அமர்த்திய ஆய்வாளர் புகாரினை வாங்கிப் படித்தார்.
“இல்ல மேடம். நான் பேங்க் ல வேலை செய்யுறேன். கமிஷ்னர் ஆஃபீஸ் உள்ள இருக்கற கிளையில தான். கமிஷ்னர் மேடம் என் கஸ்டமர். அவங்க இங்க பதவி ஏத்துக்கிட்டதிலேருந்து எனக்கு நல்ல பழக்கம். அவங்க தான் டிராஃப்ட் பண்ண வழிகாட்டினாங்க.”
“அதானே பாத்தேன். குழப்பத்துக்கு இடமில்லாம முன்னுக்குப் பின் முரணான தகவல் இல்லாம புகார் எழுதப்படனும். போக்ஸோ பொருத்த வரை அது ரொம்ப முக்கியம். இது சரியா இருக்கு” என்று ஆய்வாளர் பாராட்டியதும் வீட்டில் அவள் பேசியது கமிஷ்னரிடம் தான் என்று புரிந்து கொண்டார் ரகுராமன்.
“இப்போ அடுத்து என்ன நடக்கும் மேடம்?”
“அடுத்து நாங்க கண்மணியை நேர்ல வந்து தனியா விசாரிப்போம் மேடம். டெஸ்டிமொனின்னு பேரு இந்த ப்ரொசீஜருக்கு.கண்மணி மைனர் கறதினால அவ எங்க கம்ஃபர்டபிளா இருப்பாளோ அங்க சீருடை இல்லாம வந்து விசாரிச்சு குழந்தையோட வாக்குமூலத்தைப் பதிவு பண்ணி நீதிமன்றத்தில சமர்ப்பிப்போம். கோர்ட் அதை ஆராய்ந்து பார்த்திட்டு அதிகபட்சம் ஒரு மாசத்தில அந்த ஆளைக் குற்றவாளின்னு அறிவிச்சு தண்டனை விவரம் சொல்லிடுவாங்க. அவளோ தான்.”
“இதை நிரூபிக்க என்ன பண்ணனும் மேடம்”
“ஒன்னும் பண்ண வேண்டாம். நாங்க குழந்தைகிட்ட சேகரிக்கற வாக்குமூலம் தான் தவறு நடந்ததுக்கான நிரூபனம். 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தானே அனுபவித்தால் ஒழிய சில பாலியல் சீண்டல்கள், தொடுதல்கள் பத்தித் தெரிய வாய்ப்பில்ல. கற்பனையில இதைச் சொல்ல முடியாது. கண்மணி கிட்ட சொந்தமா ஃபோன் இல்ல. கூட்டுக்குடும்பத்தில இருக்கிங்க. இதெல்லாம் ஹைலைட்ஸ். அதுனால குழந்தை நடந்ததை துணிச்சலோட விவரிச்சாலே போதுமானது. கோர்ட் அதை ஏத்துக்கும்.”
“கண்ணன் அதை மறுத்தா..”
“கண்ணன் குற்றம் நடக்கல்லைன்னு நிரூபிக்கனும். அவர் இன்னைக்கு வெளியூர்ல இருந்ததா நிரூபிக்கலாம். அப்படி இல்லைன்னா குழந்தை கிட்ட தப்பா நடந்துக்கல்லைன்னு நிரூபிக்கனும். அது ரொம்ப கஷ்டம்.”
“இப்ப நாங்க அவங்க வீட்டுக்குப் போய் அவர் இருக்கறதை அவருக்குத் தெரியாம ஊர்ஜிதம் செய்துக்குவோம். அவர் பணி செய்யுற இடத்திலையும் அதுக்கான ஆதாரம் திரட்டிக்கலாம். ஒன்னும் பிரச்சினை இல்ல. அதுவும் இல்லாம உங்க கணவர் நேரடி சாட்சி இல்லையா. அவர் அப்போ கீழ தான் இருந்திருக்காரு.அவரும் கண்ணனை எச்சரிச்சிருக்காரு. இதெல்லாமே போதும்.”
“கண்மணிக்கு எதுவும் பிரச்சினை வருமா..”
“ஒன்னுமே இல்ல மேடம். குழ்ந்தையோட ஐடெண்டிட்டி நூறு சதவிகிதம் பாதுகாக்கப்படும். மீடியால வராது. அவ படிக்கற பள்ளிக்கும் தெரியப்படுத்த மாட்டோம். நீங்க எல்லாம் வெளிய பெருசா தம்பட்டம் அடிக்காம இருந்தா போதும்.”
“கண்மணியைத் தகாத கேள்விகள் கேட்டு நோகடிப்பாங்களா மேடம்.”
“நாங்க கேள்வியே கேட்க மாட்டோம். குழந்தை தான் நடந்ததை நரேட் பண்ணனும். நடுவில நிர்பந்தப்படுத்தினாரு வற்புறுத்தினாரு பலவந்தப்படுத்தினாருன்னு சேத்துக்கச் சொல்லுங்க. அது ரொம்ப முக்கியம். மத்தபடி விசாரிக்க வர பெண் போலீஸ் அதிகாரி எந்த விதத்திலையும் குழந்தையை நோகடிக்கமாட்டாங்க மேடம். கவலைப்படாதிங்க. இன்னும் குழந்தைக்கு உடல் பரிசோதனை, மனநல ஆலோசனை தேவைப்பட்டாலும் ஏற்பாடு பண்ணுவோம் ”
“ஆக்சுவலி உங்களைப் பாராட்டியே ஆகனும் மேடம். வழக்கமா நெருங்கின சொந்தக்காரன் நல்லா தெரிஞ்சவன் தான் அயோக்கியனாவே இருப்பான். அந்த மாதிரி ஆட்களாலதான் அதிக அளவு அப்யூஸ் நடக்குது. ஆனா ரிப்போர்ட்டிங் ரேட் பாத்திங்கன்னா ரொம்ப கம்மி. சொந்தக்காரனா போயிட்டானே தெரிஞ்சவனா போயிட்டானேன்னு மன்னிச்சு விட்டுட்றாங்க. எவனா இருந்தாலும் தப்பு பண்ணினா தண்டனை அனுபவிக்கனுமின்னு பாதிக்கப்பட்டவங்க நடவடிக்கையில இறங்கினாலொழிய இந்த அவலங்கள் நிக்காது. போக்ஸோ ஒரு அருமையான சட்டம். குழந்தைகளுக்காக போக்ஸோ இன்னுமே கடுமையா தண்டனைகள் கொடுக்கற சட்டமா இருக்கு. குழந்தைக்குத் தெரிஞ்ச நபர் பாலியல் குற்றம் செஞ்சா அவருக்கு இன்னும் தண்டனை கூட. அதாவது ஒரு பாலியல் குற்றத்துக்கு ரெண்டு வருஷம் தண்டனைன்னு வச்சுக்கோங்க அதே குற்றத்தைக் குழந்தைக்குத் தெரிஞ்சவன் செஞ்சா தண்டனையை மூனு வருஷமாக்குது போக்ஸோ. நீங்க போல்டா வெளிய வந்து புகாரளிக்கறது நிச்சியம் வரவேற்கத்தக்கது மேடம். இனி நாங்க பாத்துக்கறோம். நீங்க பாப்பாவுக்கு எமோஷனல் சப்போர்ட் குடுங்க. பாவம். இது நிச்சியம் ஒரு நைட்மேர். பெரிய trauma தான். பாஸிட்டிவ்வா அவளைத் தேத்துங்க. அவ இடம்கொடுத்துத்தான் இது நடந்துதுங்கற மாதிரியோ அவமேலையும் தப்பிருக்குங்கற மாதிரியோ எதுவும் சொல்லிடாதிங்க. இதுல தப்பு கண்ணன்மேல மட்டும் தான். பெத்தவங்க நீங்க முதல்ல அந்த தெளிவோட இருக்கனும். காயத்துக்கு மருந்து போடாட்டியும் மேற்கொண்டு கீறாம இருக்கனும்”
அந்த ஆய்வாளர் பேசி முடித்ததும் தான் சற்றுமுன் வீட்டில் நடந்த குற்றச்சாட்டுகள் எத்தனை தவறென்பதை ரகு உணர்ந்தார். இந்த விஷயத்தை இதுவரை தவறாகக் கையாண்டிருக்கிறோமென்று அவருக்குப் புரிந்தது.
“நன்றி மேடம். நிச்சியமா நீங்க சொன்னமாதிரி கண்மணியை நாங்க சமாதானம் செய்யுறோம். அவ பாதுகாப்பில நாங்க ஒரு பெத்தவங்களா கோட்டை விட்டிருக்கோம். அதான் குழந்தை இப்படி ஒன்னை அனுபவிச்சுட்டா. இனி கவனமா இருப்போம். நாங்க வர்றோம் மேடம்.” என்று கிளம்பினர் சாந்தி ரகு தம்பதியர்.
“மனசு மாறி கேஸ் வாபஸ் வாங்கிட மாட்டிங்களே.. எப்ப வேணுமின்னாலும் வாபஸ் வாங்க சட்டத்தில இடம் இருக்கு”
“நிச்சயமா வாங்க மாட்டேன் மேடம்” என்று தீர்மானமாகச் சொன்னாள் சாந்தி. இருவரும் கிளம்பினர்.