மறு நாளே கண்மணியின் வாக்குமூலத்தைப் பெறுவதற்குச் சீருடை அணியாத காவல் துறை பெண் அதிகாரி வருவார் என்ற உறுதியைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்டாள் சாந்தி. கண்மணியை வீட்டில் அவர்களின் அறையில் வைத்தே விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டாள். அதன்படியே மறுநாள் மாலை விசாரணை நடக்குமென்று கண்காணிப்பாளரும் உறுதியளித்தார்.
அடுத்து கண்மணிக்கு எப்படிப் பேசவேண்டுமென்று சில நுணுக்கங்களைக் கற்றுத்தந்தாள்.
“இங்க பாரு டா.. நாளைக்கு ஒரு ஆண்டி வருவாங்க. அவங்க கிட்ட என்ன நடந்துச்சோ அதை அப்படியே சொல்லனும் சரியா..”
“நீங்க கூட இருப்பிங்களா அம்மா..”
“இல்ல டா.. அவங்க உன்கிட்ட தனியா தான் பேசுவாங்க. நீ பேசும்போது வீடியோ எடுத்துப்பாங்க. அவளோ தான்..”
“ம்…”
“பலவந்தமா இழுத்தாரு. வற்புறுத்தினாரு. நிர்பந்தப்படுத்தினாருங்கற வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசனும் டா.. அதை மட்டும் கவனத்தில வச்சுக்கோ. மத்தபடி எதுவும் இல்ல. முதல் முறை நடந்ததையும் இன்னைக்கு நடந்ததையும் வரிசையா சொல்லிடு. அவங்க எதாவது கேள்வி கேட்டா பயப்படாம என்ன நடந்துச்சோ அதைச் சொல்லு. கூட்டியும் சொல்லாத குறைச்சும் சொல்லாத”
“என்ன நடந்தாலும் அது மட்டும் என்னைக்குமே நடக்காது டா” என்று சாந்தியை முந்திக்கொண்டு ரகுவிடமிருந்து பதில் பறந்து வந்தது.
“இதெல்லாம் போட்டு நீ குழப்பிக்காத. இப்ப… உன் ஸ்கூல்ல யாராச்சு தப்பு பண்ணினாங்கன்னா என்ன பண்ணுவாங்க..”
“பனிஷ் பண்ணுவாங்க..”
“அதே தான் இதுவும். சரியா.. தூங்கு” என்று கண்மணியை ஆசுவாசப்படுத்தி உறங்கவைத்தாள் சாந்தி. விரைவிலேயே உறங்கியும் போனாள்.
ஆனால் ரகுவுக்கு உறக்கம் வருவேனாவென்று வித்தை காட்டிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் போராடின. சாந்தியைப் பற்றி அதுகாறும் அவருக்கிருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைபட்டிருந்தது. மகளைப் பாதுகாக்கத் திராணி இல்லாத அப்பாவா நாம் என்று வெட்கமாக இருந்தது. மகள்மீது பாலியல் தாக்குதல் நடந்துவிட்டது அவரை உலுக்கத்தான் செய்தது. அதற்கு நடவடிக்கை எடுக்க ஏன் நான் முந்திக்கொள்ளவில்லையென்று பல முறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.
சாந்தி எடுக்கும் நடவடிக்கைகளால் என்னென்ன விபரீதங்கள் வரப்போகிறதோ என்று ஒரு நடுத்தர குடும்பத் தலைவனாக பயப்பட்டார். மகளின் பெயர் இதனால் களங்கப்பட்டுவிடுமா.. ஆய்வாளர் சொன்னவைகள் சட்ட புத்தக பக்கங்களில் இருக்கலாம். நடைமுறையில் இருக்குமா.. இப்படியெல்லாம் சிந்தனைகள் ஓடின. அம்மாவை எப்படிச் சமாளிப்பது, கண்ணன் சிறை சென்றால் தங்கை நிலைமையும் வர்ஷன் நிலைமையும் என்னவாகுமென்று கவலைப்பட்டார். மனப்போராட்டம் ஆட்டிப்படைத்தது.
இரவில் கண்மணி எழுந்து மார்பகங்களைக் கட்டிக்கொண்டு வலியில் வேதனைப்பட்டதைப் பார்த்ததும் இதயத்தில் ரத்தம் வழிந்தது. மகளுக்கொன்று என்றதும் கொலை செய்யும் அளவுக்குக் கூடப் போகும் தந்தைகள் இருக்க வெறும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூட இத்தனை தயங்குகிறோமே என்றும் தன்மீதே கோபம் வந்தது. ஆனாலும் குடும்பத்தைப் பற்றி யோசிக்காமலும் இருக்க முடியவில்லை. நம் குடும்ப அமைப்பும் உறவுகளை அறவனைத்து வாழும் வாழ்க்கை முறையும் எத்தனை சிக்கலானது என்று நன்றாகவே உணர்ந்தார் ரகுராமன். தவறு செய்த மாப்பிள்ளைக்குத் தகுந்த தண்டனை பெற்றுத்தருவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவரின் மனம் பட்டியலிட்டது. பள்ளிப்படிப்பில் இருக்கும் வர்ஷனின் வாழ்வு இதனால் நிச்சயம் பாதிக்கப்படத்தானே செய்யும். தகாதபடி நடந்து சிறை சென்றவனின் பிள்ளை என்று தானே இனி அவனுக்கு அடையாளம் தரப்படும்! ராதிகாவின் வாழ்வு என்ன ஆகும்? அவள் இல்லத்தரசி. கண்ணன் சிறை சென்றால் கருணை அடிப்படையில் அவளுக்கா அந்த வேலையைக் கொடுப்பார்கள்? கணண்னின் ஒற்றை வருமானமும் இல்லை என்றானால்.. கண்ணனுக்கு இந்த நடவடிக்கையால் இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் அதன் பிறகு.. அவன் வெளியில் வந்த பிற்பாடு அவனுக்கு யார் வேலை தருவார்கள்? வெளியில் வந்த பிறகு அவன் சும்மா இருப்பானா.. வஞ்சம் வளர்த்து வம்பு செய்தால்.. சம்மந்திகளும் ராதிகாவின் புகுந்த வீட்டினரும் எப்படி இதை எடுத்துக்கொள்வார்கள்? ராதிகாவின் அண்ணி எடுத்த நடவடிக்கையால் கண்ணன் சிறை சென்றான் என்றால் ராதிகாவுக்கு அந்த வீட்டில் இடம் நிலைக்குமா? அம்மாவும் அப்பாவும் இதற்குத் துணை நிற்பார்களா? பேத்திக்கு நடந்த பாலியல் சீண்டலா மகளின் வாழ்வா என்று வரும்போது அவர்கள் எந்தப்பக்கம் சாய்வார்கள்? பிரச்சினை இல்லாமல் போனால் சரி என்று தவறுகளைச் சகித்து சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்ட சமூகத்தில், சாந்தி எடுக்கும் நியாயமான நடவடிக்கை நிச்சயமாக நல்லவிதமாய்ப் பார்க்கப்படாது என்று அவருக்கு ஐயந்திரிபின்றித் தெரிந்தது.
ஆனால் கண்மணி.. அவளை எப்படி இதிலிருந்து சமாதானப்படுத்துவதென்றே அவருக்கு விளங்கவில்லை. நடவடிக்கை எடுத்துவிட்டால் மட்டும் இந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீண்டுவிடுவாளா என்று சந்தேகித்தார். சாந்தி நினைப்பது போல் நமக்கு வாழ்வில் பிழையொன்று நேர்ந்தால் தட்டிக்கேட்க நம் பெற்றோர் வருவர் என்ற நம்பிக்கையை அவளிடம் ஊன்ற வேண்டியதும் அவசியம் என்றே பட்டது அவருக்கு. இத்தனை பெரிய சம்பவத்தை “இதோட விட்டுடு.. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கலாம்” என்று மிகச்சுலபமாய்ச் சொல்லி அமிழ்த்திவிட மனம் வரவும் இல்லை. இத்தனை காலங்களாய் சாந்தியை மட்டம் தட்டிய போதெல்லாம் பொறுத்திருந்தவள் தன் மகளுக்கொன்று என்றதும் நிமிர்ந்து நிற்கையில் அவளை ஆதிக்கம் செலுத்தி அடக்கி வைப்பது பிழை என்றே பட்டது. இருதலைக்கொள்ளி எறும்பாய் இச்சம்பவம் அவரைப் பாடாய்ப் படுத்தி வைத்து நிம்மதி கெடுத்தது. கண்ணன் கொஞ்சம் யோசித்திருக்கக் கூடாதா, சுய கட்டுப்பாடோடு சுய ஒழுக்கத்தோடு இருந்திருக்கக் கூடாதா என்று அங்கலாய்த்தார்.
இப்படி இந்த குடும்பமும் கண்மணியும் துன்பப்பட்டிருக்க அந்தப்பக்கம் ராதிகா வீட்டில் சண்டை மண்டை உடைந்தது. ராதிகா, அம்மா கமலத்திடம் கண்ணனுக்குப் பரிந்துகொண்டாலும் கண்ணனின் சபல புத்தியால் ஏற்கனவே பல முறை பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவமானப்பட்டிருக்கிறாள். ஆனால் இதைப்பற்றி அவள் தன் பெற்றோரிடமும் சகோதரனிடமும் கூடப் பகிர்ந்துகொண்டாள் இல்லை. சகித்துப் பொறுத்து வாழ்ந்துவந்தாள். திருமணம் ஆன பிறகு கணவன் சபலப்படுகிறான் என்றால் அது மனைவியின் தவறென்று கைகாட்டிவிடும் சமூகத்தில் அவள் எப்படி இதை வெளியில் சொல்வாள்? மனைவி திருப்திப்படுத்தவில்லை என்று தானே கணவனின் வக்கிர புத்திக்குப் பெயர் சூட்டிவிடுகிறார்கள்! கண்ணனின் இப்படிப்பட்ட நடத்தை அவனது வீட்டாருக்குத் தெரியுமோ தெரியாதோ. தெரிந்தாலும் இதை அவள் சொன்னால் அவர்கள் ஆமாம் அவன் இந்த விஷயத்தில் அப்படித்தான் என்று ஒப்புக்கொள்ளவா போகிறார்கள்? மகன் இருக்கிறான். தந்தை குடிகாரன் என்பதைக் கூட சமாளித்து வளர்த்துவிடலாம். தந்தை இப்படி ஒரு சபலபுத்திக்காரன் என்பது தெரிந்துவிட்ட பிறகு ஒரு மகனை வளர்ப்பது எவ்வளவு சிக்கலானதாகிவிடும்! இவற்றையெல்லாம் உத்தேசித்து தான் ராதிகா பொறுத்திருந்தாள். அனால் மனதால் அவள் கண்ணனிடமிருந்து விலகி ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் வர்ஷனுக்காக அவள் கண்ணனை யாரிடமும் காட்டிக்கொடுக்காமல் விட்டும் கொடுக்காமல் இழுத்துப்பிடித்து வைத்திருந்தாள். இம்முறை அண்ணன் மகள் மீதே கைவைத்துப் பெரிய அளவில் அசிங்கமாக்கிவிட்டாயே என்று கண்ணனைக் கடிந்து கொண்டாள் ராதிகா.
வர்ஷனின் நிலைமை பரிதாபமாய் இருந்தது. அப்பாவை நினைத்து அசிங்கமாய் இருந்தது. அம்மாவை நினைத்து வருத்தமாய் இருந்தது. கண்மணியை நினைத்து மனமெல்லாம் டன் கணக்கில் பாரமேறிப் போனது. இனி அவளை எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஏறெடுத்துப் பார்ப்பதென்று தவித்தான்.
இப்படி ஒரு கேடுகெட்ட ஆணின் ஒரு நிமிட சபலம் இரு குடும்பங்களை தலை குப்புறக் கவிழ்த்துப்போட்டது.
இப்படிப்பட்ட ஆண்களுக்குப் பஞ்சமில்லை தான். இந்த ஆண்களைப் பின்னின்று காவந்து பண்ணும் ராதிகா போன்ற மனைவிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை.
வெளியில் சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியத்தில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலகாலமாக நடக்கின்றன. மறைமுகமாக ஆரம்பிக்கும் இவ்வகை சீண்டல்கள், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பார்வைகள், உடல்மொழிகள், வார்த்தை வலைவிரிப்புகள் என்று பயணித்து, தானாக வாய்க்கும் சந்தர்ப்பங்களில் தவறான தொடுதலாக வளர்ந்து, பின்னர் பாலியல் துன்புறுத்தலாகத் தொடர்ந்து கடைசியாகப் பாலியல் தாக்குதலில் சென்று முடிகிறது. பாலியல் தாக்குதல் உள்நுழைத்தல் இல்லாததாகவோ, உள்நுழைத்தல் இருப்பதாகவோ இருக்கலாம். கண்மணிக்கு நடந்தது இந்த அமைப்பில் பொருந்துகிறது தானே. அவளுக்கு நடந்தது உள்நுழைத்தல் இல்லாத பாலியல் தாக்குதல். (Non penetrative sexual assault)
பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் இதில் எந்த இடத்தில் எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்கிறார்களோ அங்கே இது பெரும்பாலும் முடிந்துவிடும். பாலியல் வன்கொடுமை வேறு வகை. கண்மணிக்கு நிகழ்ந்தது போன்ற நன்றாகத் தெரிந்தவர்களால் ஏற்படுத்தப்படும் பாலியல் தொந்தரவுகள் பெருவாரியாக மேல் சொன்ன கட்டத்துக்குள் சிக்கிவிடும்.
பெண்கள் பொறுமை காத்து சில சீண்டல்கள் தொடர்கின்றன.
எதிர்ப்பு செல்லுபடியாகாமல் சில சீண்டல்கள் வளர்கின்றன.
எப்படி கையாள்வது என்ற விழிப்புணர்வில்லாமல் பாதி பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன.
நடவடிக்கை எடுத்தால் நமக்கே ஆபத்தாகி விடுமோ என்ற பயத்தில் காக்கப்படும் அமைதியினால் மீதி பாதி குற்றங்கள் வளர்கின்றன.
இவ்வகையிலான பாலியல் சீண்டல்களில் சட்ட நடைமுறைகள் பற்றிய தவறான தகவல்கள் தான் பலரைச் சென்றடைந்திருக்கிறது. உதாரணமாக பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண் தான் குற்றம் நடந்ததை நிரூபிக்க வேண்டும் என்பது உண்மையல்ல; குற்றம் சாட்டப்பட்ட நபர் தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது.
நம் தேசிய நோய்களில் ஒன்று விக்டிம் ஷேமிங். பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவது. நிர்பயா வழக்கில் கேட்டோமே.. அவளுக்கென்ன இரவில் வெளியில் வேலை? ஆண் நண்பனோடு என்ன சினிமா கேட்கிறது என்றெல்லாம் பேசினார்கள் தானே.. வெளியில் சொன்னால் ‘ஊசி இடம்கொடுத்து நூல் நுழைந்த பின் நூலை மட்டும் குற்றம் சொல்கிறது ஊசி’ என்பதே பெரும்பாலும் முதல் விமர்சனமாக வைக்கப்படுகிறதென்பது எதார்த்தம் தானே! இதுவே பெண்கள் பொறுத்துப் போவதற்கான முதல் காரணமாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ.. எந்த மாதிரியான பாலியல் குற்றமாயினும் அதற்கெதிராய்க் குரலை உயர்த்தும் தைரியம் பெண்களிடம் வரும் வரை வெறும் விக்டிம்களாகத் தான் அவர்கள் இருக்கப்போகிறார்கள் என்பது மட்டும் திண்ணம்.
சாந்திக்கு அந்த தைரியம் இருப்பதால் கண்மணிக்கும் அவளால் அந்த தைரியத்தை எளிதாகக் கடத்த முடிந்தது. மறுநாள் விசாரனைக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெண் அதிகாரி.