ஆதவனையும் எதிர்பார்க்காமல் வேகமாய் வெளியே வந்தவளை,
“கமலி.. இரு.. இரு..” என்று கூப்பிட்டு அருகில் அவன் வந்து நிற்க,
“என்ன ஆதி.. சீக்கிரம் சொல்லு…”
என கேட்டவள் பார்வை அனிச்சையாக யாரும் நிற்கிறார்களா என்றபடி தங்கள் கடையின் மீது படிந்தது.
அவனும் அவளின் நிலை உணர்ந்து வேகமாய்,
“ஒன்னும் இல்ல.. நீ சொன்ன மாதிரி கடைசியில் உன் விருப்பம் தான் எல்லாம்.. அதில் நீ உறுதியா இரு.. போதும்.. உனக்கு எதிரா யார் இருந்தாலும் என்னோட சப்போர்ட் உனக்கு தான்..”
என்பதை மட்டும் வாஞ்சையோடு சொல்ல அதில் புன்னகை பூத்தவள்,
“ஆஹான்… அது உன் ப்ரெண்ட்டா இருந்தாலும் கூடவா..?”
என்று கேட்க,
“என்ன சொல்ற.. அவன் ஏன் உனக்கு எதிரா வரணும்..”
என்று அவன் யோசிக்கவும்,
“சும்மா சொன்னேன்.. சரி கிளம்புறேன்..” என கூறி சற்று தள்ளி நிறுத்தி இருந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
சுந்தரமூர்த்தி மாலை வந்தபின் வீட்டிற்கு கிளம்பி வெளியே வந்தபோது தான் ஆதவன் தினகரன் கடையில் இருந்து வருவதை பார்த்தாள். தன்னை கண்டதும் அவன் மீண்டும் பார்க்காதது போல் வேகமாய் உள்ளே சென்றதே அவளை கடுப்பாக்க யோசிக்காமல் உடனே அவனை பேசிவிடும் வேகத்தில் வந்துவிட்டாள்.
ஆனால் இப்போதோ கொஞ்சம் நஞ்சம் இருந்த நிம்மதியும் பறிபோனது தான் மிச்சம்..! தினகரனின் பேச்சும் நடவடிக்கையும் அவளை வேறு சிந்திக்க விடாமல் மண்டையை குடைந்தது. வழி நெடுக்க அதையே தான் யோசித்து வந்தாள்.
அவள் பார்த்தவரை தினகரன் பெண்களிடம் எல்லாம் இலகுவாக பேசும் ரகமே கிடையாது. விசேஷ வீடுகளில் கூட ஒட்டாமல் ஒரு ஓரமாய் இருப்பானே தவிர தன் சொந்த பெரியப்பா, அத்தை மகள்களிடம் கூட உரிமையாய் பேசி பார்த்தது இல்லை. அப்படி இருக்க இன்று அவன் தன்னிடம் பேசிய முறையில் ஒரு உரிமை தொனித்தது போல் தோன்ற அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தான் குழப்பமாக இருந்தது.
ஒருவேளை தாத்தாவின் செய்கையில் நம்பிக்கை கொண்டு உடமைப்பட்டவள் என்ற எண்ணத்தில் தன்னிடம் உரிமை கொள்கிறானோ என்று தோன்ற அதன் பொருட்டே இறுதியில் தினகரனிடம் தன் நிலையை கறாராய் சொல்லிவிட்டு வந்தாள். ஆனாலும் மனம் செக்காய் அங்கேயே சுற்றி சுற்றி வர அதற்குள் வீடும் வந்துவிட்டது.
தாத்தா வீட்டைவிட்டு சென்ற பின்னர் பாட்டிக்கு ஆறுதலாய் அத்தை தான் அடிக்கடி வருகை தருகிறார். இப்போதைக்கு எல்லார் பக்கமும் நின்று பேசி சமாதான புறாவாக செயல்படுவதும் அவரே..!!
கமலினி வருந்தியது எல்லாம் முதலில் சில நாட்கள் மட்டுமே.. தன்னை பார்த்து எல்லோரும் மேலும் கவலை படுவதை உணர்ந்தபின் தன் உணர்வுகளை பெரிதாக வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஒன்றும் நடக்காதது போல் தான் உண்டு தன் வேலையுண்டு என தன் இயல்பில் இருக்க பழகிக் கொண்டாள். அவ்வாறே இப்போதும் தன் சிந்தனை எல்லாம் தூர வைத்துவிட்டு,
“ஹாய் அத்தை..” என உற்சாகமாய் அழைப்போடு நுழைய,
“வா கமலி.. உன்னை பார்த்துட்டு போகலாம்னு தான் உட்கார்ந்து இருந்திருந்தோம்…..”
சிரிப்போடு அவர் சொல்ல,
“பார்றா.. சரி… பார்த்துட்டு மட்டும் ஏன் போகணும்.. இங்க இன்னைக்காவது ஸ்டே பண்லாம்ல..”
என்றபடி அவளும் தோள் பையை வைத்துவிட்டு அவர் அருகில் அமர்ந்தாள்.
“ஆமா என்னை தங்க விட்டுட்டு தான் சங்கவி அப்பா மறுவேலை பார்ப்பார்.. இன்னும் அரைமணி நேரம் ஆகிடுச்சுன்னா பார் எத்தனை ஃபோன் வரும்ன்னு..”
என்று சலிப்பாய் சொல்ல சிரித்தவள்,
“உன் மேல அவ்வளவு லவ்வூ அத்தை…” என்று கேலி செய்தாள்.
“ம்க்கும்… இருந்துட்டாலும்.. நான் ஆக்கி வைக்கிற சாப்பாடு மேல வேண்டா லவ்வு சொல்லலாம்…”
“அது என்னவோ உண்மை தான்.. சமையலில் உங்களை அடிச்சிக்க முடியுமா.. அம்பிகா எல்லாம் உங்களுக்கு அடுத்து தான்..”
என வேண்டுமென்றே அன்னையை வம்பிழுத்து சொல்ல சித்ரா பெருமையாக பார்த்தார் என்றால் அம்பிகாவோ,
“அம்மா தாயேன்னு தட்டை தூக்கிட்டு வா.. அப்போ இருக்கு..” என்று சொல்லிவிட்டு,
“முதல்ல எந்திரிச்சு போய்.. கை காலை சுத்தம் பண்ணிட்டு வா…” என்று விரட்ட எழுந்து விட்டாலும்,
நீ மட்டும் எங்க அப்பாவுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி ஒரு பையனை பெத்து இருந்தால் இந்நேரம் இந்த இடியாப்ப சிக்கல் எல்லாம் இல்லாம நான் உன்னோட மருமகளாவே வந்து ஜாலியா இருந்து இருப்பேன்… ம்ஹூம்… என் கெரகம்..” என்று போலியாய் சலித்துக் கொள்ளவும்,
“விதி வலியது மருமகளே…” என சித்ரா சிரிக்க அம்பிகாவும் சிரிப்போடே,
“வாய் பேசாம.. போடி..” என்று துரத்துவிட்டார்.
மாடியில் அறைக்கு வந்தபோது அனன்யாவும் சங்கவியும் ஏதோ கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருக்க அருகில் கடுகடுவென அமர்ந்து இருந்தாள் வைஷு.
கமலினியை கண்டதும் இருவரும் கப்பென்று வாயை மூடிவிட,
“ஜிமிக்கி கம்மல்.. இதான் வர்ற நேரமா..”
என்று சங்கவி சமாளித்து கேட்டாள்.
“நான் வர்றது இருக்கட்டும்.. என்ன என்னை பார்த்தும் சட்டுன்னு பேச்சை நிறுத்திட்டீங்க.. எதுவும் மறைக்கிறீங்களா டி..”
“உப்புக்கு பெறாத நாலு புரணிக்கு இம்புட்டு பில்டப்பு..!!”
என்று நக்கலாய் சொல்லிவிட்டு குளியலறையினுள் போய்விட்டாள்.
“தப்பிச்சோம்.. ஆனா எத்தனை நாலு டி கமலுக்கு தெரியாம மறைக்கிறது..”
“தெரியல கவி… ஆனா தெரியாம இருக்கிறது தான் நல்லது..” என்ற அனன்யா முகத்திலும் கவலையும் பயமும் படிந்து இருக்க இருவரும் பேசுவதை அமைதியாய் கேட்டிருந்த வைஷு மனதில் ஒரு முடிவோடு,
“நான் கீழ போறேன்..” என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். அவர்கள் பேச்சு மும்முரத்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வைஷ்ணவி எதிர்பார்த்தது போலவே சிறிது நேரத்தில் கமலினி இறங்கி வர தன் அன்னை பாட்டியோடு பேசிக் கொண்டிருந்த சமயம் அவள் அருகில் வந்து,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கமலி..”
என்று மெதுவாய் சொன்னாள்.
“என்னடி… சொல்லு..” என்றவள் கமலி என்ற அழைப்பில் ஆச்சரியமாய் அவள் முகத்தை ஏறிட அதில் என்ன தோன்றியதோ எதார்த்தமாய் நகர்வது போலவே அவ்விடத்தை விட்டு தனியே அழைத்து சென்றாள்.
“இப்ப சொல்லு வைஷு.. என்ன பேசணும்..?? அனு,கவி ஓடவும் பேசாம ஒரு மாதிரியே உட்கார்ந்து இருந்த..? உங்களுக்குள்ள சண்டையா..”
“ம்ஹும்.. பெரிய சண்டை இல்ல.. ஆனா கொஞ்ச சண்டை தான்.. அவளுக செய்யிறது எனக்கு பிடிக்கல.. நான் எதாவது சொல்ல போனால் அதையும் இதையும் சொல்லி என் வாயை அடைச்சுடுறாங்க.. எனக்கு ரொம்ப கடுப்பு அதான் பேச பிடிக்காம உட்கார்ந்து இருந்தேன்…”
“ஓஹோ… அப்படி என்ன நடந்துச்சு..”
என கமலி யோசனையுடன் கேட்க சட்டென்று சொல்ல வராமல்,
“உன்கிட்ட சொல்றதா வேண்டாமான்னு எனக்கும் பயமா இருக்கு.. ஆனால் சொல்லலன்னா பின்னாடி பிரச்சனை எதுவும் வந்தால்
நீ என்னையும் தானே கேட்ப.. அதான் சொல்ல வந்தேன்.. யாரையும் திட்ட மாட்ட தானே..”
என தயங்கி தயங்கி கேட்டாள்.
கமலினி எத்தனை தூரம் ஜாலியாக பழகுவாளோ அதே அளவு கண்டிப்பும் மிக்கவள்.. கேலி கிண்டல்களில் அவர்களோடு ஐக்கியமாகி விடுபவள் தப்பு செய்தால் சப்பென்று அடிக்கவும் தயங்க மாட்டாள். அதனாலே இந்த பயம்!!
“பிரச்சனை வர அளவு என்ன விஷயம்..?? உண்மையை சொல்ல தயங்கவே கூடாது வைஷு.. என்னன்னு சொல்லு..”
“அது வந்து… ஆபூர்வா லவ் பண்றா கமலி..”
என்று பட்டென்று போட்டு உடைக்க,
“ப்ளீஸ்… ப்ளீஸ் டென்ஷன் ஆகாம நான் சொல்றதை கேளேன்..”
என்று கைபற்றி வைஷூ கெஞ்சலாய் சொல்ல கமலி முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்தி நின்றாள்.
இப்போது தான் கல்லூரி முதல் வருடம் படிப்பவள் காதல் என்று சொல்வதை பொறுக்க முடியவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் கோபத்தை கையில் எடுப்பது மேலும் சிக்கலை தான் கொடுக்கும் என உணர்ந்து தன் நிதானத்தை மீட்டெடுத்தவளாய்,
“இது எப்போ இருந்து..?? யார் அந்த பையன்..?” என விசாரித்தாள்.
“எப்போ இருந்துன்னு எல்லாம் தெரியல.. ஆனா எங்களுக்கு இப்ப ஒரு மாசமா தான் தெரியும்.. யாரை லவ் பண்றான்னு எனக்கு தெரியல.. இந்த மாதிரின்னு சொல்லவும் எனக்கு ரொம்ப பயம் ஆகிடுச்சு.. நான் பயந்து திட்டவும் என்கிட்ட மேல எதுவும் சொல்லறது இல்ல.. எனக்கும் அந்த பேச்சே பிடிக்கல..
ஆனால் கொஞ்ச நாளா அபூர்வா சரியே இல்ல கம்மல்.. க்ளாஸ்ல இருந்தாலும் எங்கேயோ தான் நினைப்பு இருக்கு.. சைக்கிள் டெஸ்ட்ல மார்க் ரொம்ப கம்மி தெரியுமா..?? அதை பத்தி எல்லாம் கவலையே படறது இல்ல.. ஃபோன்ல தான் அவங்க கூட பேசுவா போல.. மூணு பேரும் எப்ப பாரு அதை பத்தி டிஸ்கஸ் பண்றதும் அபூவை ஓட்டிக்கிட்டு இருக்கிறதும் இதையே செஞ்சுட்டு இருக்காள்க..
இது எங்க போய் முடியுமோன்னு பயந்து தான் நான் உன்கிட்ட சொல்றேன்..”
என்று மடை திறந்த வெள்ளமாய் அவள் அறிந்த அத்தனையும் மொத்தமாய் ஒப்புவிக்க அனைத்தையும் கிரகித்து அமைதியாய் நின்றிருந்தாள் கமலினி.